பழைய தமிழ்த்திரைப்படங்களான எம்.ஜி.ஆர் நடித்த வேட்டைக்காரன், சிவாஜி நடித்த ‘திருவிளையாடல்’ படங்களைப்
பார்த்திருக்கிறீரா? இவ்விரு படங்களிலும் ‘சாவித்திரி’தான்
கதாநாயகி இப்படங்களில் நடிக்கிற போது சாவித்திரி சதைபோட்டு பூசிய உடம்பாய் பார்க்க
சற்று எடை கூடியவராய்த் தெரிவார். எனினும் ரசிகர்கள் இவற்றையெல்லாம் பொருட்படுத்தவேயில்லை. இப்படங்களை பெருத்த வெற்றி பெறச்செய்தனர்.
அதேபோல், 70களில் வெளியான கே.ஆர்.விஜயா
நடித்த படங்களும் இப்படித்தான். சிவாஜியுடன் நடித்த ‘பாரதவிலாஸ்’,எம்.ஜி.ஆருடன்
நடித்த ‘நல்லநேரம்’ இவற்றிலிலெல்லாம் கே.ஆர்.விஜயா, இரட்டைநாடி
உடம்புள்ளவராய் சற்று எடைகூடியவராய்த்தான் தெரிவார். பாரதவிலாஸ் படத்தில் தம்பதியரான
சிவாஜி-கே.ஆர்.விஜயாவுக்குள் பலத்த வாக்குவாதம் நடப்பதாக ஒரு காட்சி;அதில் இப்படி
ஒரு வசனம் வரும். சண்டையின் உச்சக்கட்டத்தில் கே.ஆர்.விஜயா, “மொத்தத்துல என்னை உங்க
ளுக்குப் பிடிக்கல அவ்வளவுதானே?” என்று கத்துவார். பதிலுக்கு சிவாஜி அவரை ஏறஇறங்கப்
பார்த்துவிட்டு கைகளால் அவர் உருவத்தை பாவனை செய்து காட்டியபடி, “ஆமாம் மொத்தத்துல
உன்னைப்பிடிக்கல!” என்பார். தியேட்டர் முழுதும் ’கொல்’லெனச் சிரிக்கும்.
அவரது உருவத்தை கிண்டல் செய்கிற மாதிரி காட்சிகள் இருந்தாலும்கூட மக்கள் அத்திரைப்படங்களில்
கே.ஆர்.விஜயாவை ரசித்தனர்.
சாவித்திரிக்கும் கே.ஆர்.விஜயாவுக்கும்
அந்தக்காலத்தில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே
உண்டு. நான் கல்லூரியில் படிக்கிறபோது எங்களுக்கு ஆங்கில ஆசிரியர் ஒருவர் இருந்தார்,
அவர் ஓர் ஆங்கிலோ இந்தியர். தமிழை தட்டுத்தடுமாறித்தான் பேசுவார். உலக சினிமாவைப் பற்றி
கொஞ்சம் ஞானம் உள்ளவர் அவர். வகுப்பறையில் அத்திரைப்படங்களைப் பற்றியெல்லாம் பேசுவார்.
எப்போதாவது தமிழ்ப்படங்களைப்பற்றி பேசினால் சாவித்திரியைப் பற்றி தான் அதிகம் பேசுவார்.
சாவித்திரியின் தீவிர ரசிகர் அவர். சாவித்திரி நடிக்கிற படங்களையெல்லாம் மூன்று நான்கு
முறை பார்த்துவிடுவாராம். சாவித்திரியை அந்தக்காலத்து ஹாலிவுட் நடிகை ‘கேத்தரின் ஹெப்பர்ன்’னோடு ஒப்பிட்டுப்பேசுவார். இந்தக் கதைகளையெல்லாம் அவர் எங்களிடம்
பேசுகிறபோது சாவித்திரி ஃபீல்டிலேயே இல்லை என்பது வேறு விஷயம். அது ஸ்ரீதேவி ஸ்ரீப்ரியா
காலம்.
இன்று சாவித்திரி போலவோ, கே.ஆர்.விஜயா
போலவோ தோற்றமுள்ள ஒருவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்துவிட முடியுமா? இந்தக்
கேள்வியே பலருக்கு நகைப்புக்கிடமாகத் தோன்றலாம். ஏனெனில் காலம் அப்படி மாறிவிட்டது.
அழகு பற்றிய கருத்தாக்கங்களும் மாறிவிட்டன. பென்சில் போன்ற குச்சியான உடல்வாகு, இடுப்பு
எலும்புகள் தெரிய ஒட்டிய வயிறு, காலர் எலும்புகள் துருத்திக்கொண்டிருக்கும் கழுத்து,
தேவையான இடங்களில் மட்டும் மிதமான சதைப்பிடிப்பு.. இவைதாம் இன்று அழகிய பெண்ணின் இலக்கணங்கள்
என்றாகிவிட்டது. ’ஒல்லிப்பிச்சான்’, ’எலும்பி’ என்று சொல்வதெல்லாம் பழைய கதை. இன்று இவைதாம் அழகிய பெண்ணின் லட்சணங்கள்.
சற்று பருமனாக இருந்துவிட்டாலோ லேசாக
கொஞ்சம் வயிற்றில் சதை போட்டு விட்டாலோ பெண்கள்! அதுவும் படித்த நடுத்தரவர்க்கத்துப்
பெண்கள் என்னமாய்த் தவித்துப் போகிறார்கள் தெரியுமா? ஹெல்த் கிளப்பிற்குப் போவது, ஃபிட்னஸ்
கிளப்பிற்கு போவது, மருத்துவ ஆலோசனைகள் பெறுவது, டயட்டில் இருக்கிறேனென்று பட்டினி
கிடப்பது எனப் பலவிதமான சாகஸங்களில் ஈடுபடுகிறார்கள். உடல் நலத்தைப் பேணுவது என்பது
இங்கு தோற்றத்தைப் பேணுவது என்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. இது ஒருபக்கம், மறுபக்கத்தில், தனது
உடல் பருமன் பற்றி கவலைப்படாமல் பொருட்படுத்தாமல் இருக்கும் பெண்கள்மீது சோம்பேறி!,
உடல்நலம் பேணுவதில் அக்கறையற்றவள்! தின்னுங்கூலி
என்றெல்லாம் சுலபமான தீர்ப்புகள் எழுதப்பட்டு விடுகின்றன.
வேலைக்குப்போகிற பெண்கள், ‘கேரீர்’ பெண்கள், சமூக ஏணியில்
வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறத்துடிக்கும் பெண்கள் இவர்களுக்கெல்லாம் ‘உடல்
பருமன்’ என்பது மிகப்பெரும் “தடைக்கல்” என்றே
அறிவுறுத்தப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கும், தாழ்வுணர்ச்சிக்கும் உடல் பருமன் கொண்ட
பெண்கள் ஆளாக்கப்படுகின்றனர். உண்மையில் இந்த ‘உடல் பெருக்கம்’ (obesity) என்பது ஆரோக்கியக்கேடுதானா என்பதே சர்ச்சைக்குரிய விஷயம்.
ஒருவர் அவரது உயரத்திற்கும் வயதிற்கும்
ஏற்ப இருக்கவேண்டிய எடையைவிட இருபது சதம் கூடுதலாக எடை கொண்டிருப்போரை உடல் பெருத்தவர்
என்று சொல்லலாம். ‘டயாப்படீஸ் - டைப் -2’ என்கிற நீரிழிவுக் குறைபாடு, மற்றும் உயர்
ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இக்கூடுதலான எடை ஆபத்தை உண்டாக்கலாம்.
முறையான மருத்துவ ஆலோசனைகளும் சிகிச்சையும்
பெற்று, உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை கொண்டுவந்து உடல் எடையை குறைக்கமுடியும்.
உடல் நலத்தைப் பேண முடியும். அதுவும் உடல் எடையை குறைக்கலாமே தவிர தனது தோற்றத்தை முழுவதுமாக
மாற்றிக்கொள்ள எல்லோராலும் இயலாது. இது அவரவர் உடல்வாகைப் பொருத்தது. ஆனால் என்ன நடக்கிறது?
உயர் ரத்தஅழுத்தமோ நீரிழிவுக்குறைபாடோ
இல்லாத பெண்கள் கூட ‘உடல் பருமனை’ பெரிய பிரச்சினையாக கருதுகிறார்கள்.
டயட்டில் இருக்கிறெனென்று பட்டினி கிடந்து உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்வது மட்டுமல்ல,
ஃபிட்னஸ்கிளப், ஹெல்த் கிளப், என்று எந்திரங்களோடு எந்திரங்களாக தேகப்பயிற்சியில் இறங்குகிறார்கள்.
உடலை மெலிய வைப்பதற்கான ‘டயட்’ ஆலோசனைகளில் பல ஆபத்தானவை. உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது “1000 கலோரிகளுக்கு
கீழாக உணவு உட்கொள்ளுவது அரைப்பட்டினிக்குச் சமம்.” என்று. குறிப்பாக பெண்களை இது
பலவிதமான உடல்நலக் குறைபாட்டிற்கு இட்டுச் செல்லும்.”
என்றும் சொல்கிறது. ஆனால் பல டயட் ஆலோசனைகள் 1000 கலோரிகளுக்கு குறைவான உணவையே பரிந்துரை
செய்கின்றன.
பலவிதமான ஆய்வுமுடிவுகள் தெரிவிப்பது
என்னவெனில், உடல் பெருக்கம் கொண்டவரனைவருமே டயட் மற்றும் தேகப்பயிற்சிகள் மூலம் உடலை
மெலியவைத்துவிட முடியாது. அவரவர் உடல்வாகைப்பொருத்தே இது அமையும் என்பதையே. ஆனால்
இந்த உண்மையை ‘மெலிந்த தேகப்பண்பாடு’ வசதியாக மறந்துவிடுகிறது.
பெண்களின் உடலமைப்பு ஆண்களைவிடக்கூடுதலாக
கொழுப்பைச் சேமித்து வைக்கிற இயல்பு கொண்டது. மாதவிடாய் காலங்களில் நிகழ்கிற உதிரப்போக்கினால்
ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பெண்ணுடல் கொண்டிருக்கிற தற்காப்பு அம்சம் இது. ஆனால் பெண்களை தங்களது உடல்பருமனை ஓர் அவமானமாகவும் தனது ஆளுமையின்
தோல்வியாகவும் கருதச்செய்கிறது இம்மெலிந்த தேகப் பண்பாடு. அதனால் உடல்மெலிவு முயற்சிகளில்
இறங்கி, தனது உடற்கூற்றின் இயல்புக்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்த பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
மேட்டிமை நாகரீகமும்,நடுத்தரவர்க்க மனோபாவமும்
இப்படியிருந்தாலும் கூட இன்றும் பெரும்பாலான மக்கள் குண்டாயிருப்பதைதான் அழகு என்று
கருதுகிறார்கள். என்னதான் தொழில்வளர்ச்சி, பெருநகரங்களின் வளர்ச்சியென்று ஏற்பட்டிருந்தாலும்
இந்திய மக்களின் உளம் ‘விவசாய உளம்’தான் என்கின்றனர் சமூகவியலாளர்கள். விவசாய உளம், செழிப்பை, வளமையைத்தான்
அழகெனக் கருதும். நமது பண்டைய சிற்பங்கள், ஓவியங்களில் வடிக்கப் பட்டிருக்கிற பெண்ணின்
தோற்றம் பருத்த உடலமைப்பைத் தான் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின்
பல நாடுகளிலும் இப்படித்தான். ஐரோப்பிய நாடுகளிலும் கூட இப்படித்தான்.
16ம் நூற்றாண்டைச்சேர்ந்த இத்தாலிய மறுமலர்ச்சி
யுகத்தின் ஓவியங்கள் சிற்பங்களைப் பாருங்கள். அவை மெலிந்த தேகமுடையவராக பெண்ணைச் சித்தரிக்கவில்லை.
’ரெம்பிராண்டின்’ புகழ்பெற்ற ஓவியமான ‘குளிக்கும் அழகி’ (Bathsheba at her bath) குச்சியான உடல்வாகைக்
கொண்டிருக்கவில்லை. வாளிப்பான சதைப்பிடிப்புள்ள பெண்ணாகத்தான் அவள் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள்.
செழிப்பும் வளமையும்தான் அவர்களுக்கும் ‘அழகு’. நடிகை ‘குஷ்பு’, மெலிந்த தேகம் உள்ளவரென்று சொல்லமுடியாது. ஆனால் இவருக்குத்தான்
தமிழ்நாட்டில் கோவில் கட்டப் பட்டது. இதெல்லாம் இன்று மறக்கடிக்கப்படுகிறது.
சதைப்பிடிப்பற்ற மெலிந்த தேகம் எனும்
அழகுக்கோட்பாடு இன்று ஒரு மதம் போல் மட்டுமல்ல “மெலிந்த தேகமில்லாப் பெண்களுக்கு இவ்வுலகமில்லை” என்று ‘மத அடிப்படைவாதம்’ போலக் கோலோச்சத்
தொடங்கிவிட்டது.
உண்மையில் ஃபேஷன் தொழிலும், அட்வர்டைஸிங்
தொழிலும் சேர்ந்து பெற்றெடுத்த ’கார்ப்பரேட்
குழந்தை தான்’ இந்த ‘அழகுக்கோட்பாடு’.
விளம்பரங்களும், ஃபேஷன் உலகும் ஊட்டி வளர்த்த ‘இந்த தரப்படுத்தப்பட்ட அழகைப்’ பேணுவதற்கு, சந்தையில் நிறைய பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்தப்பொருட்களைத் தயாரிக்கும்
பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆண்டொன்றிற்கான டர்ன் - ஓவர் எவ்வளவு தெரியுமா? டயட் இண்டஸ்ட்ரி - 3,300 கோடி டாலர்,
காஸ்மடிக் (அழகுச்சாதனங்கள்) இண்டஸ்ட்ரி - 30,000 கோடி டாலர், காஸ்மடிக் சர்ஜரி இண்டஸ்ட்ரி - 300 கோடி டாலர். இது அமெரிக்காவிற்கு மட்டும்.
இந்தியக்கணக்கு என்ன தெரியுமா? 2008ம் ஆண்டு 12,000 கோடி ரூபாயாக இருந்த இத்தொழில்
2012ம் ஆண்டில் 64,000 கோடியாக வளரும் என்று சொல்லப்படுகிறது. பெண்கள் தாங்கள் குண்டாயிருந்தாலென்ன ஒல்லியாயிருந்தாலென்ன என்று அலட்டிக் கொள்ளாமலிருந்துவிட்டால் என்னவாகும்?
இந்த கார்ப்பரேட் நிறுவனங்களெல்லாம் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு போய்விடவேண்டியதுதான்.
ஆனால் பெண்கள் அலட்டிகொள்ளாமல் இருந்துவிடுவதில்லை.
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. மதியம் மூன்று
மணி இருக்கும். ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டிலுள்ள அனை வரும் கொர்கொர்ரென்று குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள். நண்பனின் தங்கை மட்டும் தூங்காமல்
டி.வி. முன்னால் உட்கார்ந்திருந்தார். என்னம்மா எல்லாரும் தூங்கறாங்க! உனக்கு தூக்கம்
வரல்லியா என்றேன். அவர் பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே எழுந்து போய்விட்டார். உறக்கம்
கலைந்த நண்பனின் தாய்தான் பதில் சொன்னார்
‘பகலில் தூங்கினா வெயிட் போட்டுடுமில்லியா, அதான் எப்பவுமே பகல்ல தூங்கமாட்டா’ என்று.
நண்பனின் தங்கை ஒரு தனியார் நிறுவனத்தில்
நல்ல வேலையில் இருக்கிறவர். தினமும் பகலில் நிச்சயமாய் அவரால் தூங்கமுடியாது. ஏதோ ஞாயிற்றுக்கிழமையில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கினால்
என்ன பெரிய பிரச்சினை வந்து உடம்பு வெயிட் போட்டுவிடப் போகிறது.? எனது நண்பனின் தங்கையைப்போல்
பல பெண்கள் இருக்கி றார்கள். பகலிலே தூங்கமாட்டார்கள். மனசுக்கு பிடித்ததை சாப்பிடமாட்டார்கள்.
அது எண்ணெய், இது கொலஸ்ட் ரால் என்று வயதானவர்கள் பத்தியம் பேணுவதைப்போல பலதை ஒதுக்குவார்கள்.
உடலைச்சீராக வைத்திருக்க பல தியாகங்களைச் செய்வார்கள். உண்மையில் இது ஒரு பண்பாடு.
இந்தப் பண்பாடு பெண்களை மறுபடியும் தியாகம் செய்யச் சொல்லுகிறது. ஏற்கனவே குடும்பத்திற்காக, கணவனுக்காக, பிள்ளைகளுக்காக தியாகங்களை செய்தவர்கள் நவீனகாலத்தில் செய்கிற
நவீன தியாகம் இது.
இந்த மெலிந்த தேகப்பண்பாட்டிற்கு இன்னொரு
பரிமாணமும் உண்டு. உண்மையில் இந்த அழகுக்கோட்பாடுகள் பெண்கள் மீதாகத் தொடுக்கப்படுகிற
புதியதோர் வன்முறை என்கிறார்கள் பெண்ணியவாதிகள். அழகு என்பது சார்புடையது. அவரவர்
மனப்பாங்கை பொருத்தது. ஒருவருக்கு அழகாகப்படுவது மற்றொருவருக்கு படாமல் போகலாம், அழகென்பது
அவரவர் மட்டத்தில் வித்தியாசப்படுவது. இதில் எல்லோருக்கும் பொதுவான அளவுகோல்களை உருவாக்க
முடியாது. அப்படி உருவாக்குவது ஒரு வித பாசிஸத்திற்குத்தான் வழிவகுக்கும் என்கின்றனர்
இவர்கள்.
மேலும் இம்மெலிந்த தேகப்பண்பாடு உயர்த்திப்பிடிக்கும்
அழகின் இலக்கணங்களை தோற்றப்பொலிவை எல்லாப் பெண்களும் அடைவது என்பது சாத்தியமே இல்லை. மாறாக பருமனாக தோற்றமளிக்கும்
பெண்கள் பாரபட்சத்திற்கும் ஓரவஞ்சனைக்கும் ஆளாக்கப் படுவதுதான் நிகழும்! என்கின்றனர்
இப்பெண்ணியவாதிகள். இவர்கள் சொன்னது போலவே அமெரிக்காவில் பணியிடங்களில் பருமனான பெண்கள்
பாரபட்சத்திற்கு உள்ளாக்கப் படுகிறார்கள். தனது உடல் எடையைக் குறைக்காததால் ஒரு பெண்அலுவலரின் பதவி உயர்வு மறுக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து கலிஃபோர்னியாவின் உயர் நீதிமன்றத்தில்
வழக்கு தொடுத்து மறுக்கப்பட்ட பதவிஉயர்வை திரும்ப பெற்றுக் கொடுத்திருக்கின்றனர் இப்பெண்ணியவாதிகள்.
மருத்துவரிடம் ஆலோசனை பெறச்செல்லும்போது,பொது
இடங்களில் க்யூவில் காத்திருக்கும் போது, வேலைக்காக, உயர்கல்விக்காக நேர்முகத் தேர்விற்குச்
செல்லும்போது எனப் பல தருணங்களில் பருமனான பெண்கள் மீது பாரபட்சங்கள் இழைக்கப்படுவது
தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தோற்றத்தை அடிப்படையாகக்கொண்ட பாரபட்சங்களில் (Size discrimination) தலையிடுவதற்காகவே பல பெண்ணிய அமைப்புக்கள்
அமெரிக்காவில் செயல்படுகின்றன.
தொடக்கக்காலத்தில் பெண்ணியவாதிகள், தோற்றம்
குறித்த பாரபட்சங்களை, தரப்படுத்தப் பட்ட அழகு பற்றிய கருத்தாக்கங்களை ஒரு பிரச்சினையாக
கருதியதில்லை. 1970களின் மத்தியிலிருந்துதான் இப்பிரச்சினைகளை கையிலெடுக்கத் தொடங்கினர்.
அதுமட்டுமல்ல, காலங்காலமாக பெண்ணுடலை தனது கட்டுக்குள் வைத்திருக்க ஆணாதிக்கம் செய்த
வன்செயல்களின் நீட்சியாகத்தான் இவற்றைக் காணமுடியும் என்கின்றனர்.
16ம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பா மற்றும்
மேற்கு நாடுகளின் பிரபுத்துவ குடும்பங்களின் பெண்கள் ‘கார்சட்’ (corset) என்கிற இரும்பு அங்கியை அணிந்திருந்தார்கள். மத்திய கால வரலாற்றுப் பின்னணியுள்ள கதையம்சம்
கொண்ட ஹாலிவுட் திரைப்படங்களில் இப்படியொரு அங்கியை பெண்கள் அணிவதை நீங்கள் பார்த்திருக்க
முடியும். கிட்டத் தட்ட 15 முதல் 20 கிலோ வரை எடையுள்ள இரும்பிலான இவ்வங்கி, இடுப்பையும்
அடிவயிற்றையும் இறுக்கமாக அழுத்திப்பிடித்து
குட்டைப்பாவாடை போல் கால்முட்டி வரை விரிந்திருக்கும். மேலே அணியும் பாவாடை குடை போல் விரிந்து தரையில்
தவழ இந்த அங்கிதான் உதவுகிறது. வசதியாக உட்காரவோ, மூச்சுவிடவோ கூட சிலநேரத்தில் இவ்வங்கி
அணிந்தவர்கள் சிரமப்படுவர். சிறுநீர் மற்றும்
உபாதைகளை கழிப்பதெல்லாம் கூட இவர்களுக்கு பெரும் பாடுதான். தங்களது இடுப்பையும், வயிற்றையும்
கவர்ச்சிகரமாக வைத்திருக்கவே பெண்கள் இந்த அங்கிகளை அணியக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
அதேபோன்று, சீனாவில் பண்டைய காலத்தில்
அரச குடும்பத்தினரின், பிரபுக்கள் குடும்பத்தினரின் பெண்களது கால்களை சிறுவயதிலிருந்தே
கட்டைகளால் இறுக்கிக் கட்டி வைத்துவிடுவார்கள். இதனால் பெண்களது பாதங்கள் குறுகிச் சிறுத்துவிடும்.
சரியாக நடக்கக்கூட முடியாமல் போய்விடும். ஐரோப்பிய பிரபுத்துவ குடும்பத்து ஆண்களுக்கு
குறுகிய இடையும் ஒட்டிய வயிறும் எப்படி பாலுறவு வேட்கையைத் தூண்டியதோ அதேபோல குறுகிச்சிறுத்த
பெண்களின் பாதங்கள்தாம் பிரபுக்கள்குலச் சீனர்களுக்கு கிளர்ச்சியைத் தருமாம். குறுகிச்சிறுத்த
பாதங்கள் அமையாத சீனத்துப் பெண்களின் திருமணம் நடப்பது அவ்வளவு கடினமாம்.
இது இப்படியெனில், மத்திய ஆப்பிரிக்க
நாடுகளில் பூப்ப டைந்த பெண்களின் பிறப்புறுப்பில் உள்ள ’கிளிடோரிஸ்’ எனும் பகுதியை அறுவை சிகிச்சை செய்து எடுத்துவிடுவார் கள். பெண்களது
பிறப்புறுப்பில் விறைப்புத்தன்மையடை கிற உணர்ச்சியை வெளிப்படுத்துகிற பகுதி அதுவே.
அதனைத்தான் நீக்கிவிடுவார்கள். இது இன்றும்கூட நடக்கி றது. ஐரோப்பிய யூனியனில், மத்திய
ஆப்ரிக்க நாட்டு தூத ரகத்தில் பணியாற்றும் உயரதிகாரியொருவரின் மகளுக்கு இப்படிப்பட்ட
அறுவைச்சிகிச்சையை நடத்தியதாக ஐரோப் பாவின் புகழ்பெற்ற மருத்துவமனையொன்றின் மீது பெண்
ணியவாதிகள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.
இப்படி காலங்காலமாக பெண்ணுடம்பின்மீது
செலுத்தப்படுகிற ஆதிக்கத்தின் வன்முறையின் நீட்சிதான் இந்தப்புதிய அழகுக்கோட்பாடு
என்கின்றனர் இப்பெண்ணியவாதிகள். சுருங்கச் சொல்லவேண்டுமெனில் பெண் ஒரு போகப்பொருள்;
காட்சிப்பொருள்! என்கிற பழைய கள்ளை புதிய மொந்தையில் விற்பதுதான் இந்த மெலிந்த தேகப்பண்பாடு.
தற்போது பழையகாலம் போல கட்டாயப்படுத்தியெல்லாம் பெண்ணுடம்பை தனது பார்வைக்கினியதாக
வைத்திருக்க முடியுமா? இது ஜனநாயக யுகமல்லவா! அதனால் இந்த ஆணாதிக்கச் சமூகம், பெண்களின்
ஒப்புதலோடு இச்செயல்களைத் தொடர சில வழிமுறைகளை
கண்டுபிடிக்கிறது. அதில் ஒன்றுதான் ‘பார்பி
கேர்ள்’ பொம்மைகள்.
மெலிந்த தேகப்பண்பாட்டை சிறுவயதிலேயே
பெண்களது மனதில் விதைக்கிற ஒரு ஏற்பாட்டை “பார்பி கேர்ள்” பொம்மைகள் சுலபமாகச்செய்து விடுகின்றன. மெலிந்த தேகப் பண்பாடு லட்சியமாய்க் கருதுகிற
“36 - 18 -38’’ விகித உடலமைப்பை பெற்றிருக்கிற இந்த ‘பார்பி கேர்ள்’ பொம்மைகள் இன்று பள்ளிச்சிறுமிகள் மத்தியில் மிகவும் பிரபலம்.
ஆங்கிலவழிக்கல்வி பயிலுகிற சிறுமிகளிடத்தில் மட்டுமல்ல, தமிழ் வழிக்கல்வி பயிலுகிற
அரசுப்பள்ளிகளின் சிறுமிகள் மத்தியிலும் இது பிரபலமாயிருக்கிறது. இந்த ‘பார்பி கேர்ள்’ பொம்மையை வடிவமைத்தவர்
யார் தெரியுமா? அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பெண்டகனில்’ ஏவுகணைகளை
வடிவமைத்துக் கொண்டிருந்த “ஜாக் ரியான்” என்கிற டிஸைன் எஞ்சினீயர்!.
“ஐயம் எ பார்பி
கேர்ள்” என்கிற ஆங்கிலப் பாடலைத் தெரியாத பள்ளிச்சிறுமிகளை
அதுவும் ஆங்கிலவழிக்கல்வி பயிலும், வளரிளம் பருவத்துப் பெண்களை, டீன் ஏஜ் பெண்களை காண்பது
அபூர்வம். “அக்குவாரியம்” (Aquarium) என்கிற இசைக்குழு
உருவாக்கிய பாடல் இது. பார்பி கேர்ள் பொம்மையை பற்றிய பாடல் என்பதால் மட்டுமல்ல, இப்
பாடல் இப்படி செல்வாக்கு பெற்றதற்கு வேறு ஒரு காரண மும் உண்டு. டீன் ஏஜ் பெண்கள் பார்ட்டிகளில்
கலந்து கொள்வதையும், டேட்டிங் வைத்துக் கொள்வதையும் கொண்டாடுகிற பாடல் இது. மில்லியன்
கணக்கில் இப்பாடல் சிடிக்கள் விற்பனையாயின. ஆனால் இப்பாடலை உருவாக்கிய ’அக்குவாரியம்’ இசைக்குழு மீது ‘பார்பி கேர்ள்’ பொம்மையை
தயாரிக்கும் ‘மேட்டல் இங்க்’ (Mattel.Inc) நிறுவனம்
வழக்கொன்றை தொடர்ந்தது. தனது ‘காப்பிரைட்’ உரிமையினை ‘பேட்டண்ட்’ உரிமையினை “அக்குவா” இசைக்குழு அத்துமீறியதாக
‘மேட்டெல்’ குற்றஞ்சாட்டியது.
முதலில் கீழ்கோர்ட்டில் தொடரப்பட்ட இவ்வழக்கு
தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்தடுத்து மேல்முறையீட்டுக்குச் சென்ற ஹைக்கோர்ட், சுப்ரீம்
கோர்ட் என எல்லாவற்றிலும் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வழக்கை தள்ளுபடி செய்து
அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு மிகவும் முக்கியமானது. “பார்பிகேர்ள்” பொம்மை சமூகத்தில் பிரபலமாகிவிட்ட ஒன்று.! பிரபலமாயிருக்கிற ஒன்றை
`பதிவு’செய்வதும், ‘பகடி’ செய்வதும்
கலை-இலக்கியங் களின் இயல்பு ஆகும். இதில் தலையிடுவதா னது கருத்துச் சுதந்திரத்தில்
தலையிடுவதாகி விடும். எனவே வழக்கைத் தொடர்ந்தவர்கள் இதனை பெரிது படுத்தாமல் இருப்பதே
நல்லது.!” என்று வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல் ‘மேட்டெல்’ நிறுவனத்திற்கு அறிவுரையும் கூறியது. இன்றும்கூட ‘காப்பிரைட்’ மற்றும் ‘பேடண்ட் உரிமை’ தொடர்பான வழக்குகளில்
‘மேட்டெல் இங்க், ‘அக்குவா’ வழக்கு தொடர்பாக அமெரிக்க சுப்ரீம்
கோர்ட் அளித்த தீர்ப்பு ஒரு முக்கிய முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது. இவ்வழக்கு விவரங்கள்
எதைக் குறிக்கிற தென்றால், `பார்பி கேர்ள்’ பொம்மைகள் மேற்கத்திய
சமூகத்தின், பண்பாட்டின் பிரிக்க முடியாத அம்சமாக மாறிவிட் டது என்பதைத்தான்.
நமது வாண்டுகள் மத்தியில் மிகவும் பிரபலமாயிருக்கிற
‘ஹாட் வீல்ஸ்’ கார் பொம்மைகளும் இந்த ‘மேட்டெல் இங்க்’ நிறுவனத்தின் தயாரிப்புகள்தாம்.
பார்பிகேர்ள் பொம்மைகள் உருவான வரலாறு
மிகவும் சுவாரஸ்யமானது. மேட்டெல்’ நிறுவனத்தின் மூன்று பங்குதாரர்களில் ஒருவரான ‘ரூத் ஹேண்ட்லர்’ என்ற பெண்மணி, தான் டென்மார்க்
சென்றிருந்தபோது தனது மகள் பார்பராவுக்காக பொம்மையொன்றை வாங்கி வந்தார். ‘பில்டி லில்லி’ எனும்
அப்பொம்மை ஒருஜெர்மானிய தயாரிப்பு. ஜெர்மனியில் பிரபலமாயிருந்த ‘காமிக்’ ஒன்றின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப் பட்ட பொம்மை
இது. இப்பொம்மை குழந்தைகள் விளையாடுவதற்கானதல்ல. வயது வந்தோர்களுக்கான பொம்மை இது.
7 இன்ச் முதல் 12 இன்ச் அளவுவரை உள்ள பொம்மை யின் உடலமைப்பு மற்றும் அதன் விகிதாச்சாரம்
டீன் ஏஜ் பெண்களை மிகவும் கவரவே பிரபலமானது இது.
தன் மகளுக்காக இதனை வாங்கி வந்த ரூத்
ஹேண்ட்லரின் கவனத்தை இப்பொம்மை மிகவும் ஈர்க்கவே, இப்படியொரு பொம்மையை தமது நிறுவனமே
தயாரித்தாலென்ன என்ற முடிவுக்கு வந்தார் அவர்.
மேட்டெல்’ நிறுவனத்திடம் தனது ஆலோசனையைச் சொன்னார் அவர். மேட்டெல்
நிறுவனம் இதுவரை பொம்மைகளை தயாரித்ததுஇல்லை. வீட்டு உபயோகத்திற்கான ஃபர்னீச்சர்கள்,
உள்ளலங்காரத் திற்கான பொருட்கள் மற்றும் தட்டுமுட்டு சாமான்கள் இவற்றையே அது தயாரித்து
வந்தது. எனவே ரூத் ஹேண்ட் லரின் ஆலோசனையை ஏற்க முதலில் தயங்கிய மேட்டெல் பின்னர் இசைவு
தெரிவித்தது. பொம்மை தயாரிப்பை மேற்பார்வையிடும் பணியை ரூத் ஹேண்ட்லரிடமே ஒப்படைத்தது.
ரூத் ஹேண்ட்லர், அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான
பெண்டகனில் ‘ஸ்பேர்ரோ’,
‘ஹாவ்க்’ (Sparrow, Hawk) போன்ற ஏவுகணைகளை
வடிவமைத்துக் கொண்டிருந்த டிஸைன் என்ஜினீயரான ‘ஜாக் ரியான்’ என்ப
வரை அழைத்து இந்த பொம்மையை வடிவமைக்குமாறு கூறுகிறார். அவரும் பொம்மையை உருவாக்குகிறார்.
அப்பொம்மைக்கு தன் மகள் பார்பராவின் பெயரைச் சூட்டுகிறார்கள். இப்படிபிறந்ததுதான் `பார்பி கேர்ள்’.
பிறகு மூன்று வருடம் கழித்து பிலடெல்பியாவில்
நடக்கிற மிகப்பெரும் பொம்மைக் கண்காட்சிக்கு ‘பார்பியை’ அனுப்புகிறது
மேட்டெல். கண்காட்சியில் பலத்த வரவேற்பைப் பெறுகிறது ‘பார்பி’.
பார்பியை அறிமுகப்படுத்திய பத்தே ஆண்டுகளில், உலகத்தின் முன்னணியில் இருக்கிற கார்ப்பரேட்
நிறுவனங்களில் ஒன்றாக’மேட்டெல்’ வளர்ந்தது.
இன்றும் உலகின் ஏதேனும் ஒரு மூலையில் நொடிக்கு இரண்டு பார்பி பொம்மைகள் விற்பனையாகிக்
கொண்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பார்பியை உருவாக்குகிறபோது மேட்டெல்
நிறுவனத்தின் ரூத் ஹேண்ட்லருக்கு இப்படியொரு நோக்கம் இருந்ததோ என்னவோ! ஆனால் ஃபேஷன்
உலகமும் விளம்பர உலகமும் உருவாக்கிய மெலிந்த தேகப்பண்பாட்டின் ‘கொடிக்கப்பலாக’ பார்பி கேர்ள் பொம்மைகள் பரிணாமம் கொண்டன. பெரும்பாலான பெண்களுக்கு
இயற்கையாக கைவரப் பெறாத, அமையச் சாத்தியமில்லாத “அழகின் அளவுகோல்களை” பார்பி பொம்மைகள் உயர்த்திப் பிடித்தன. 36-18-33 என்ற விகிதத்தில்
பார்பி பொம்மைக்கு இருப்பது போன்ற உடலமைப்பு ஒரு பெண்ணுக்கு இருந்தால் என்னவாகும்?
பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கியில்
உள்ள மத்திய மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வறிக்கை இவ்வாறு கூறுகிறது. “மாதவிடாய்
காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கை ஈடுகட்ட ஒரு பெண்ணுக்கு எவ்வளவு கொழுப்புச்சத்து தேவைப்படுகிறதோ
அதைவிட 17 முதல் 22 சதம் குறைவான கொழுப்புச்சத்தே ‘பார்பி’போன்ற
உடலமைப்பு கொண்ட பெண்களிடத்தில் இருக்கும்!” என்று.
‘பார்பி கேர்ள்
பொம்மைகளோடு விளையாடுகிற சிறுமிகள் ,அதன் கூந்தலை விதம் விதமாய் அலங்கரிப்பது, புதிது
புதிதாய் ஆடைகளை அணிவித்து மகிழ்வது உறங்கும்போது கட்டிபிடித்துக்கொண்டு உறங்குவது
என்று அப்பொம்மை யோடு உணர்வுபூர்வமான ஓர் உறவினை ஏற்படுத்திக் கொள்கின்றனர். டீன்ஏஜ் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பார்பி கேர்ளுக்கு இருப்பது போன்ற தேக
அமைப்பை பெறுவதற்காக அவர்கள் பல முயற்சிகளில் இறங்குகின்றனர். இது அனோரெக்ஸியா (anorexia) என்கிற மனச்சிக்கலுக்கு இவர்களை ஆட்படுத்திவிடுகிறது.
இச்சிக்கலுக்கு ஆட்பட்டவர்கள் குறைந்த
எடையுள்ளவர்களாயிருப்பார்கள். சரியாக சாப்பிட மாட்டார்கள். அப்படி சாப்பிட்டுவிட்டாலும்
எடை கூடிவிடுமோ என்கிற பயத்தில் வலுக்கட்டாயமாக சாப்பிட்டதை வாந்தி எடுத்து விடுவார்கள். இவர்களுக்கு ஹார்மோன் பிரச்சினை, தைராய்டு பிரச்சினை எல்லாம் வந்துவிடும். சேர்ந்தால்
போல மூன்று மாதங்களுக்கு மாதவிடாய் தள்ளிப் போகும். இவையெல்லாம் தான் அனோரெக்ஸியாவின்
அறிகுறிகள்.
1983ல் ‘கரேன் கார்பெண்டர்’ என்கிற பிரபலமான இளம் பாப் பாடகி உடலை மெலிய வைக்கும் முயற்சிகளில்
இறங்கி கடைசியில் மாரடைப்பில் இறந்துபோனார். அனோரெக்ஸியாவால் பீடிக்கப்பட்டிருந்த இவருக்கு
ஏற்பட்ட உடன்விளைவே இம்மாரடைப்பு. மேற்கத்திய பாப் இசை உலகினை இச்சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 1990களில் இவரது வாழ்க்கையை பின்னணியாக கொண்டு ‘சூப்பர் ஸ்டார்’ என்ற திரைப்படமொன்று ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்டது. பெரிதும்
பேசப்பட்ட இப்படம், மெலிந்த தேகப்பண்பாட்டை கடும் விவாதத்திற்கு உள்ளாக்கியது. இச்சூழலில்தான்
பெண்ணியவாதிகள் பார்பி கேர்ள் பண்பாட்டை எதிர்த்து கண்டனக்குரல் எழுப்ப ஆரம்பித்தனர்.
பார்பி கேர்ள் பொம்மை விற்பனையாகும் கடைகளுக்குள்
புகுந்து பொம்மைகளை அடித்து நொறுக்கினர்.
“லட்சத்தில்
ஐந்து பெண்களுக்குகூட பார்பி போன்ற உடலமைப்பு
இருக்காது. இயற்கையின் நியதி இவ்வாறிருக்கையில் மெலிந்த தேகப்பண்பாட்டை பறைசாற்றுகிற பார்பி பொம்மைகள் பெண்களின் நலனுக்கு
பெரும் கேட்டினை விளைவிக்கின்றன. பெரும்பாலான பெண்களை தாழ்வுணர்ச்சி கொள்ளச்செய்கின்றன.
மனப்பிறழ்வுக்குள்ளாக்குகின்றன. மெலிந்த தேகம் ஆரோக்கியத்தின் அடையாளமல்ல. மாறாக
அழகுச்சாதன உற்பத்தியாளர்கள், பிட்னஸ் கருவிகள் தயரிப்பாளர்கள், ஃபேஷன் நிறுவனங்கள்
மற்றும் காஸ்மடிக் சர்ஜரி நிறுவனங்கள் போன்ற கார்ர்ப்பரேட் நிறுவனங்கள் பணம் பண்ணுவதற்காக
பெண்களின் நலனை பலி கொடுக்கும் ஏற்பாடுதான் இந்த மெலிந்த தேகப்பண்பாடு” என்றெல்லாம் கருத்துப்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த னர் பெண்ணியவாதிகள்.
‘பார்பி கேர்ள்’ மெலிந்த தேகப்பண்பாட்டை மட்டுமல்ல வெள்ளை நிற மேலாதிக்கத்தையும்
உயர்த்திப்பிடிக்கிறது ; நியாயப்படுத்துகிறது
என்று பெண்ணியவாதிகள் குற்றஞ்சாட்டினர். உடனே மேட்டெல்.இங்க் நிறுவனம் என்ன
செய்தது தெரியுமா? பெண்ணியவாதிகளின் விமர்சனத்தில் இந்த ஒன்றை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டது. கறுப்பு இனச்சாயலில் ஒரு பொம்மை, செவ்விந்தியச்
சாயலில் (Hispanic) ஒரு பொம்மை, ஆசியர்களை போன்ற அதாவது சீன, ஜப்பானியர்களைப்
போன்ற ஒரு பொம்மை (ஆசியர்கள் என்றாலே மேற்கு உலகிற்கு சீனர்களும் ஜப்பானியர்களும்தான்) இவற்றையெல்லாம் தயாரித்து சந்தைக்கு அறிமுகம் செய்தது
அதாவது நிறபேதத்தை கைகழுவிவிட்டு.
பிறகு பேசுகிற பார்பி பொம்மைகளையும்
மேட்டெல் அறி முகப்படுத்தியது. “நான் ஃபேஷன் மாடலாகப் போகிறேன்!”. “நான் டேட்டிங் வைத்துக்கொள்ளப்போகிறேன்” என்றெல்லாம் இப்பார்பி பொம்மைகள் பேசும். 1990களில் அறிமுகம் செய்யப்பட்ட இப்பேசும் பொம்மைகள் சிறுமிகளிடத்தில்
வெகுசீக்கிரத்தில் பிரபலமாகிவிட்டன. அப்போது பெண்ணியவாதிகள் என்ன செய்தனர் தெரியுமா?
இப்பேசும் பொம்மைகள் வைக்கப் பட்டிருக்கும் குடோனுக்குள் இரவோடிரவாக யாருக்கும் தெரியாமல்
நுழைந்து பேசுவதற்காக புரோக்ராம் செய்யப்பட்டு அப்பொம்மைகளில் பொருத்தப்பட்டிருந்த மைக்ரோ சிப்புகளை அகற்றிவிட்டு
வேறு ‘சிப்’களை வைத்துவிட்டு வந்துவிட்டனர். அந்தப் பொம்மைகளை
வாங்கி சென்றவர்களெல்லாம் அதிர்ந்து போய்விட்டனர். ஏனெனில் அந்த பார்பி, “மெலிந்த தேகம் வேண்டுமா? விஷத்தைக்குடி! பென்சிலில்
இருக்கிற ‘லெட்’டைத் தின்னு! பாம்புகளைச் சாப்பிடு!” என்றெல்லாம்
பேசியது. பெண்ணியவாதிகளின் எதிர்ப்புச் செயல்பாடுகளை இச்சம்பவம் பிரபலமாக்கியது என்றாலும்
பார்பி கேர்ளின் செல்வாக்கை அவற்றால் குறைக்க இயலவில்லை.
கடந்த பத்தாண்டுகளில் வேறொரு போக்கும்
தலையெடுத்தது. 30-22-32 என்ற அளவில் உடலமைப்பு கொண்டவர்கள் அணிவதற்கேற்ற ‘சிக்’கெனப்பிடிக்கும் ஆடைகளை பேஷன் நிறுவனங்கள் தயாரிக்க ஆரம்பித்தன.
இந்த உடைகளை அணிவதற்கேற்ற மெலிந்த உடல்
கொண்ட மாடல்கள் ‘ஸைஸ் ஜீரோ’ (Size Zero) மாடல்கள்
என்றழைக்கப்பட்டனர். ஸைஸ் ஜீரோ நிலையை எட்டிப் பிடிக்க போட்டி போட்டுக்கொண்டு பலர்
உடல்மெலிவு முயற்சிகளில் இறங்கினர். 2006 ம் ஆண்டு, இப்படி ஸைஸ் ஜீரோ மாடல் என்றறியப்பட்ட
‘லூஸல் ராமோஸ்’ என்கிற் 22 வயதுள்ள மாடல் உருகுவேயில் நடைபெற்ற
ஃபேஷன் ஷோவில் கேட் வாக் செய்யும்போது மயக்கமடைந்து கீழே விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப் பட்டு இரண்டுநாட்களில் நினைவு திரும்பாமலேயே அவர் உயிர் பிரிந்தது.
இது நடந்த ஆறே மாதங்களில் அவரது தங்கை பதினெட்டு வயதேயான ‘எலீனா ராமோஸ்’ என்பவர் இதேபோன்று இறந்துபோனார். இவர்களிருவருமே “அனோரெக்ஸியாவால்” பாதிக்கப்பட்டவர்கள்.
இப்படி மெலிந்ததேகப் பண்பாட்டிற்கு இரையாகும்
பெண்கள் பற்றி ‘மார்கே பியர்ஸி’ என்கிற கவிஞர் ஒரு கவிதை
எழுதியிருக்கிறார். ‘பார்பி கேர்ள்’ என்று தலைப்பிடப்பட்ட
அக்கவிதையின் தளர்த்தியான எனது மொழியாக்கம் இது:
எவரையும் போலவே
இவளும் பிறந்தாள் தவழ்ந்தாள்;
நடந்தாள்.
அடுப்பு பொம்மை பானை பொம்மை மற்றும்
படுக்கையை நனைக்கும் குழந்தை பொம்மை
இவற்றினோடே விளையாடிக்களித்தாள்.
செர்ரி நிறத்து லிப்ஸ்டிக்கட்டியை கரைத்தாற்
போன்று
மூத்திரம் போனாள் ஒருநாளில்.
பருவமடைகிற
மாயமிதுவென பலரும் சொல்லினர் அவள் காதில்.
இப்படி நாட்கள் கழிந்திடும்போது
வகுப்புத்தோழன்
அவளிடம் சொன்னான்:
உனக்கு புடைத்த மூக்கு!
பருத்த கால்கள் என்று.
வலிய கரங்கள் நெடிய முதுகென
அவள் திண்மையானவள்
ஆரோக்கியசாலி.
தன் பாலியல் விழைவை துணிச்சலாய்ச்சொல்வாள்
தேவையை நிறைக்கும் திறனும்
கொண்டாள்.
எனினும்
அவள் வருத்தப்பட்டாள்
தனது புடைத்த மூக்கிற்காகவும்
பருத்த கால்களுக்காகவும்
எல்லோரிடத்திலும் மன்னிப்பு கோரினாள்.
அனைவரும்
அவள் மூக்கையும் கால்களையும் மட்டுமே பார்த்தவாறு
அடக்கம் காக்கச்சொன்னார்கள்
அவளை
உண்மை உணரச் சொன்னார்கள்.
சூழலின் கணைகள் துளைக்க துளைக்க
இடையறாத
உடற்பயிற்சி பட்டினி கிடப்பதுவென
கவசங்களெடுத்து அணிந்துகொண்டாள்.
புன்னகையொன்றை
முகத்தில் ஒட்டிக்கொண்டாள்.
இழுத்துச்சலித்த ராட்டினக்கயிறு
ஒருநாள் இற்று விழுவதுபோல
அவளிடமிருந்த அருங்குணங்கள்
அறுந்து விழுந்தன.
தனது புடைத்த மூக்கை அரிந்தெடுத்தாள்.
பருத்தக் கால்களை வெட்டினாள்
ரத்தம் சொட்டச்சொட்ட அவர்களுக்கு அர்ப்பணித்தாள்.
இதோ மெழுகிட்டு சரிசெய்யப்பட்ட மூக்கும்
அழகுப்பொடி பூசப்பட்ட முகமுமாய்
வெண்ணிற ஸாட்டீன் துணி விரிக்கப்பட்ட பேழைக்குள்
அவள் ...
வெட்டப்பட்ட கால்களை மறைக்கும்
வெண்ணிற உள் பாவாடையும் பிங்க் நிற ஆடையும்
அணிவிக்கப்பட்டு.
இவளல்லவோ அழகி!
பார்ப்பவரனைவரும்
சொன்னார்கள்
இப்படியாக அவள் முழுமையடைந்தாள்’
எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் சுபமுடிவே அவளுக்கும்
அந்தப்பெண் இறந்துவிட்டாள் என்பதை நேரடியாகச்
சொல்ல இக்கவிதை முயலவில்லை. “பேழைக்குள் அவள் கிடத்தப்பட்டிருக்கிறாள்” என்றே சொல்லப்பட்டிருக்கிறது. சவப் பெட்டியைக் குறிக்கும் காஃபின்
(coffin) என்கிற சொல்லை அவரிதில் பயன்படுத்தவில்லை.
மாறாக விலையுயர்ந்த நகைகள் வைக்கப்படும் பேழையைக்குறிக்கும் `காஸ்கட்’ (casket) என்கிற சொல்லையே அவர் பயன்படுத்தியிருக்கிறார். இந்தக்கவிதை
பெண்கள் மத்தியில் மெலிந்த தேகப் பண்பாடு பற்றிய பெரும் விவாதங்களை உருவாக்கியது.
ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு பெண்ணிய அமைப்பு
அரசுக்கு இப்படியொரு கோரிக்கை வைத்தது. தற்போது சிகரெட் விளம்பரங்களில் எப்படி ‘புகைப்பது
உடல் நலத்திற்கு தீங்கானது’ என்று எச்சரிக்கை வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறதோ அதேபோன்று மெலிந்த தேகமுடைய பெண்களை மாடலாகப் பயன்படுத்தும் விளம்பரங¢களில் ‘மெலிந்த
தேகம் உடல்நலத்திற்கு தீங்கானது’ என்ற வாசகம் பொறிக்கப்படவேண்டும்’ என்றனர். அதாவது பிஃப்டி ‘கேஜி தாஜ் மஹால்’களாயிருப்பது
உடல்நலத்திற்கு தீங்கானது என்று.
இக்கோரிக்கைகள் நிறைவேறவில்லையென்றாலும்
கூட பெண்ணியவாதிகளின் குரல்களுக்கு ஓரளவு பலன்
இருக்கத்தான் செய்தது. பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள் சில இக்குரல்களுக்கு மதிப்பளிக்க
ஆரம்பித்தன. விளம்பரங்களுக்கு சில கட்டுப்பாடுகளை கொண் டுவந்தன. இதனைத் தொடர்ந்து மெலிந்த
தேகம் கொண்ட பெண்களை மட்டு மல்ல, பருத்த தேகம் கொண்ட பெண்களையும் சராசரி உடலமைப்பு
கொண்ட பெண்களையும் கொண்டு ஃபேஷன் ஷோக்கள் நடைபெற ஆரம்பித்தன. இருந்தபோதிலும் மெலிந்த
தேகப்பண்பாட்டின் மேலாண்மையை, பார்பி பண்பாட்டை இவற்றால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
இந்தியாவில் மட்டும் மேட்டெல்.இங்க்
நிறுவனத்திற்கு 1500 அவுட்லெட்டுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவில் நடைபெறுகிற
பொம்மை விற்பனைகளில் மேட்டெல்லின் பங்கு 8 சதம்தான். 92 சத பங்கினை இதர நிறுவனங்கள்
மற்றும் சீனத்தயாரிப்புகள்தான் வகிக்கின்றன எனினும் கடந்த ஆண்டில் மேட்டெல் நிறுவனத்தின்
ஹாட்வீல்ஸ் கார்களின் விற்பனை 32 % அதிகரித்ததெனில்
`பார்பி’ பொம்மைகள் மட்டும் 40 சதம் அதிகரித்துள்ளன.
எந்த சானலைத் தட்டினாலும் அதில் வருகிற டெலி ஷாப்பிங் விளம்பரங்களைப் பாருங்கள். அரைகுறை ஆடையோடு ஒரு பெண், எக்ஸர்ஸைஸ் செய்துகொண்டோ, ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டோ இந்த மெலிந்த தேகப்பண்பாட்டை நமக்கு உபதேசம் செய்வதைப் பார்க்க முடியும். அதில் காட்டப்படுகிற உபகரணங்களையெல்லாம் வாங்கிக் குவித்து நம் ஒவ்வொருவரின் வீட்டையும் ஜிம்னாஸியமாக்கிவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்.
இந்தப்போக்குகளெல்லாம் கடந்த இருபதாண்டுகளாகத்
தான் நம்நாட்டில் பரவலாக ஆரம்பித்தது. அதற்கு ஒரு பின்னணியும் உண்டு. பி.வி.நரசிம்மராவ்
பிரதமராகவும், மன்மோஹன்சிங் நிதியமைச்சராகவும் இருந்த 90களின் தொடக்கத்திலிருந்துதான்
இப்போக்கு பரவலாக அறிமுகமாகிறது. அவர்கள் செயல்படுத்தத் தொடங்கிய ‘புதிய பொருளாதாரக்
கொள்கை’தான் இவற்றின் ஊற்றுக்கண். ராஜீவ்காந்தி காலத்திலேயே
இப்புதிய பொருளாதாரக் கொள்கைக்கான அஸ்திவாரங்கள்
இடப்பட்டுவிட்டாலும், நரசிம்மராவ் காலத்தில்தான் அவை உயர்வேகம் பெற்றன. தனியார்மயமாக்கம்,
தாராளமயமாக்கம், அன்னிய முதலீட்டிற்கான தங்குதடையற்ற அனுமதி இவையே இவற்றின் பிரதான
அம்சங்கள்.
அரசியலில் பொருளாதாரத்தில் மிகப்பெரும்
மாறுதல்களைக் கொண்டுவந்த சமயத்தில்தான் வேறொரு விஷயமும் இங்கே நடக்கிறது. 1993லிருந்து
பல இந்தியப்பெண்கள் உலக அழகிகளாகவும் பிரபஞ்ச அழகிகளாகவும் தேர்ந்தெடுக்கப்படலாயினர்.
சுஷ்மிதாசென், ஐஸ்வர்யாராய், லாரா தத்தா, டயானாஹெய்டன், யுக்தாமுகி, பிரியங்கா சோப்ரா
என்று பலர் உலக அழகிகளாயினர். இவர்களெல்லாம் போட்டியில் முதல் பரிசை வென்றவர்கள், இரண்டாவது
பரிசு அல்லது சிறந்த தலைமுடி, சிறந்த உடலமைப்பு, சிறந்த பல்வரிசை என்ற வகைகளில் பரிசு
பெற்றவர்களைக் கணக்கிட்டால் அதாவது கடந்த 2010ல் உலக அழகிப் போட்டியில் இரண்டாவது பரிசுபெற்ற ‘பார்வதி ஓமனகுட்டன்’ போன்றவர்களைச்
சேர்த்தோமானால் இப்பட்டியல் அனுமார் வால்
போல இன்னும் நீளும்.
இந்நிறுவனங்கள், வாங்கும் திறன் கொண்ட
கோடிக்கணக் கான வலுவான நுகர்வோர்களைக் கொண்ட சந்தையாக இந்தியாவைப் பார்த்தன. இந்தியப்பெண்கள்
உலக அழகி களாவதற்கும் இச்சூழலுக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. அழகு பற்றிய புதிய
கருத்தாக்கங்கள், ஃபிட்னஸ் குறித்த விழிப்புணர்வுகள் எல்லாம் இதன் பிறகே பரவலாக ஆரம்பித்தன.
உண்மையில் இன்று இந்தியப்பெண்களின் மிகமுக்கியமான ஆரோக்கியப்பிரச்சினையாக எது இருக்கிறது
தெரியுமா? ‘ரத்த சோகை’தான்.
மத்திய அரசின் ஆய்வுக்குறிப்பொன்று இவ்வாறு
கூறுகிறது. இந்தியாவில் 54 சத பெண்கள் ரத்த சோகையால் பீடிக்கப்பட்டிருக்கிறார்களென்று.
இந்த ரத்த சோகை பல நேரத்தில் அதுவும் கருவுற்ற
காலத்தில் பெண்களின் உயிரைக்குடிக்கிற எமனாக மாறிவிடும். இந்தியாவில் பிரசவகாலத்தில்
இறந்து போகிற பெண்கள் விகிதம் பல ஆப்பிரிக்க நாடுகளின் விகி தத்தைவிட அதிகம். மிகவும்
பின்தங்கிய நாடான ‘ஹெய்தியில்’ 1000க்கு 52 பெண்கள் பிரசவகாலத்தில்
இறக்கிறார் களென்றால் இந்தியாவில் 1000க்கு 54 பேர் இறக்கிறார்கள். இது உலக சுகாதார
நிறுவனம் கொடுத்துள்ள அறிக்கை.
அதனால்தான் கருவுற்றுள்ள பெண்கள் இரும்புச்சத்து
மாத்திரைகளைச் சாப்பிடவேண்டும். அல்லது இரும்புச்சத்துள்ள கீரை மற்றும் பயறுவகைகளை
உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென பல நலவாழ்வுத்திட்டங்கள் அறிவுறுத்துகின்றன. விழிப்புணர்வு
பிரச்சாரங்களைச் செய்கின்றன. இப்பிரச்சார உத்திகளிலுள்ள பிரச்சினைகளென்னவெனில் இவையெல்லாம்
பெண்களை குறிவைத்தே நடத்தப்படுகின்றன. இரும்புச்சத்து மாத்திரைகளைச் சாப்பிடு! கருவுற்ற
காலத்தில் மாதம் தவறாமல் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரைப் பார்.! எடைப்பரிசோதனை
செய்து கொள்! அரசு தருகிற சத்துணவு உருண்டைகளை தவறாமல் சாப்பிடு!! என்று பெண்களை நோக்கியே
புத்திமதிகளை அள்ளிவீசுகின்றன.
இது என்னவிதமான தோற்றத்தை ஏற்படுத்துகிறதென்றால்,
ஏதோ பெண்கள்தான் வீம்பாக இவற்றையெல்லாம் செய்ய மறுக்கிறார்கள் என்கிற மயக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன.
பலியாகிகொண்டிருக்கும் பெண்களின் தலையிலேயே
இந்த பழியை சுமத்திவிடுகின்றன.. உண்மையில் இப் பிரச்சினைக்கு ஆளாயிருப்பது பெரும்பாலான கிராமப்புறத்து பெண்களும் நகர்ப்புறத்து
அடித்தட்டு பெண்களும்தான். பார்பி கேர்ள் பொம்மைகளை வாங்கிவைத்து விளையாடாமலேயே மெலிந்த உடலமைப்பு பெற்ற பெண்கள் இவர்களில் பலருண்டு.
எக்ஸர்ஸைஸ் செய்து மெலியவைத்த தேகமல்ல இது. சரியாக சாப்பிடாமல், சத்துள்ள உணவை உட்கொள்ளாமல்,
முறையாக ஓய்வு எடுக்காமல் உழைத்து உழைத்து நலிந்துபோன தேகம் இவர்களுடையது.
கிராமப்புறத்து உழைக்கும் பெண்கள் ஒருநாளைக்கு
16மணி நேரம் உழைக்க வேண்டியிருக்கிறது. சமையல் செய்வது, தண்ணீர் சேகரிப்பது, குழந்தைகளை
பராமரிப்பது, வீட்டை பராமரிப்பது, முதியோர் எவரேனும் வீட்டிலிருந்தால் அவர்களைப் பராமரிப்பது
அதோடு சம்பாதிப்பதற்காக வேலைக்குப் போவது என்று அதிகநேரம் இவர்கள் உழைக்க வேண்டியிருக்கிறது.
இந்தச்சூழலில் கருவுற்றபெண் தன் உடல்நலம் குறித்து எத்தகைய அக்கறை எடுத்துக்கொள்ள முடிகிறது.?
நீங்கள் இத்தகைய பெண்களை சந்தித்து கேட்டுப் பாருங்கள் அவர்களின் பதில் பெரும்பாலும்
இப்படித்தான் இருக்கும்: “மருத்துவமனைக்குப் போனால் ஒருநாள் வேலை போய்விடுகிறது. மற்ற
வேலைகளும் கெட்டுவிடுகிறது. அதுவும் மாதாமாதம் போவதென்பதெல்லாம் முடிகிற காரியமா?
சத்துணவு உருண்டைகள் தருகிறார்கள்தான். குழந்தைகளை பார்க்க வைத்துக்கொண்டு நான் மட்டும் எப்படிச் சாப்பிடுவது?
அதையெல்லாம் குழந்தைகளுக்கு கொடுத்துவிடுவேன். ஏதோ முடியும்போது மருத்துவமனை சென்று
வருவேன். முடியாவிட்டால் விட்டு விடுவேன்!”. இதுதான் அவர்களின் பதில். பெண்கள் இங்கே மறுபடியும் தியாகம் செய்கிறார்கள். தங்கள் உடலநலத்தை
ஏன் உயிரையும் கூட.
ஒரு பெண் கருவுற்றால் அது அவளது பொறுப்பு
மட்டும்தானா? அவளது கணவனுக்கு பொறுப்பில்லையா? அவளது குடும்பத்திற்கு பொறுப்பில்லையா?அந்த
சமூகத்திற்கு பொறுப்பில்லையா? கருவுற்ற பெண்ணின்
நலம் என்பதும் தாயின் நலம் என்பதும் கணவனின், அந்த குடும்பத்தின், அந்த சமூகத்தின்
பொறுப்பாக ஏன் மாறுவதில்லை? ஏன் இப்படியொரு பண்பாட்டை நாம் வளர்ப்பதில்லை? பார்பி பண்பாட்டையும்
மெலிந்த தேகப்பண்பாட்டையும் பெண் களை தியாகம் செய்யச்சொல்லுகிற பண்பாட்டையும் இன்னும்
ஏன் வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.
பின்னுரை :
சோஸலிஸ்ட் அப்பீல் என்கிற பத்திரிகையின்
ஆசிரியரும், புகழ்பெற்ற மார்க்ஸீய சிந்தனையாளருமான பிரிட்டனைச் சேர்ந்த ஆலன் வுட்,
2001ம் ஆண்டு, ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் கோடைக்கால மார்க்ஸீயப் பள்ளியொன்றில்
‘கலையும் வர்க்கப் போராட்டமும்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அதில் சில பகுதிகள் இங்கே: “இப்போதெல்லாம்
அழகியல் பற்றி பல முட்டாள்தனமான விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. எது அழகு? எது அசிங்கம்?
என்று அடித்துப்பேசுகிறார்கள். எது அழகு, எது அசிங்கம் என்று யாராவது அறுதியிட்டுச்
சொல்லிவிட முடியுமா? அதெல்லாம் இருக்கட்டும்.. அழகென்றால் என்ன என்று உங்களையே நீங்கள்
கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா.? உண்மையில், அழகென்றால் என்ன அசிங்கமென்றால் என்னவென்று
நமக்கு நன்றாகத் தெரியுமென நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் வரலாறு என்ன சொல்கிறது
தெரியுமா? எல்லா சமூகங்களுக்கும் எல்லா காலத்துக்கும் ஏற்ற பொதுவான ‘அழகென்பது’ எப்போதுமே இருந்ததில்லை. அது சமூகத்திற்கு சமூகம், காலத்திற்கு
காலம் வேறுபட்டும் மாறிக்கொண்டும்தான் இருந்தது; இருக்கிறது.”
“ஆரம்பகாலத்து
சமூகங்களில் அல்லது தொல் சமுகங்களில் அழகு பற்றிய கருத்தாக்கங்கள் போன்ற பண்பாட்டு
மதிப்பீடுகளுக்கும், அச்சமூகத்தின் பொருளாதார அடித்தளத்திற்கும் இருக்கிற உறவுகள்
தெள்ளத்தெளிவாக அடையாளம் காட்டக்கூடியதாக இருந்தன. ஆனால் பிந்தைய, தற்போதைய சமூகங்களில்
இவ்வுறவுகள் அவ்வளவு தெளிவாக அடையாளம் காட்டக்கூடியதாயில்லை. மிகவும் சிக்கல் மிகுந்ததாகவும் தெளிவற்றதாகவுமே அவை புலப்படுகின்றன.
உதாரணமாக, கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள
மாசாய் பழங்குடியினர் ஒட்டகச்சிவிங்கி போல் கழுத்து நீண்டிருக்கிற பெண்களையே அழகெனக்கருதுவர்.
அவ்வழகை அடையவேண்டி, சிறிய வயதிலிருந்தே கழுத்தை நீண்டதாக்க பல முயற்சிகளில் இறங்குவர்.
இப்படி கழுத்து நீண்டிருப்பது நம்மில் பலருக்கு அழகெனப்படாதுதான்.. ஆனால் மாசாய் பழங் குடியினர்க்கு
அழகு பற்றிய இக்கருத்தாக்கம் எப்படி வந்தது என்று நம்மால் விளக்கிடமுடியும்.
இந்நடைமுறைக்கு மூலகாரணம் இதுதான். மாசாய்
பழங்குடியினர், செல்வமெனக் கருதுவது இரண்டு விஷயங்களையே. ஒன்று அவர்கள் வைத்திருக்கும்
கால்நடைகளை, மற்றொன்று அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் செம்பு உலோகத்தை. ஏனெனில்,
அவர்களைப் பொறுத்தவரை செம்பு அரிதானது; விலை மதிப்பற்றது. எவ்வளவுக்கெவ்வளவு ஒரு பெண்
செம்பினாலான அணிகலன்களை அணிந்திருக்கிறாளோ அவ்வளவுக்கவ்வளவு அவள் கவர்ச்சியுடையவளாய்க்
கருதப்படுவாள். அதுவும் குறிப்பாக கழுத்தில் அணிந்திருந்தால் கவர்ச்சி மேலும் கூடும்.
எனவேதான் அதிகமான செம்பு வளையங்களை அணிய வேண்டி மாசாய் பெண், தனது கழுத்தை நீண்டதாக்கிகொள்கிறாள்.
இக்கருத்தாக்கம் இவர்களிடம் வேர்கொண்டதற்கு காரணம் இதுதான். காலம் செல்லச்செல்ல இந்த
மூலகாரணத்தை அவர்கள் மறந்து போகிறார்கள். எனினும் பண்பாட்டு மரபுகளும், சடங்கு சம்பிரதாயங்களும்
இதனையே வலியுறுத்த கழுத்து நீண்ட பெண்தான் அழகென மெல்ல மெல்ல அவர்கள் நம்பத் தொடங்கிவிடுகிறர்கள்
அவர்கள் சமுக ஆழ்மனத்தில் இக்கருத்தாக்கம் வேர்கொள்ளத் தொடங்கிவிடுகிறது.
சரி இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வதென்ன?
ஆகப் பொதுவான அழகென்பது எதுவுமில்லை; அது சார்புடையது. ஆனால் அது வரலாற்று வளர்ச்சியில்
பரிணாமம் கொள்கிறது; பல மாற்றங்களுக்குட்படுகிறது என்பதைத்தானே.?
எனினும் இந்த நேரத்தில் ஒன்றை நாம் எச்சரிக்க
வேண்டியிருக்கிறது. இதை ஒரு சூத்திரமாக்கி எந்திரகதியில் எல்லாவற்றிலும் பொருத்திப்
பார்ப்பது மிகவும் அபாயகரமானது. கலைகளும், சமயங்களும் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியோடு - அதாவது பொருளாதார அடித்தளத்தோடு நேரடித்
தொடர்புடையதென்று கருதமுடியாதென மார்க்ஸ் தெளிவாகக் குறிப்பிடுகிறார் . இதையும் நீங்கள்
கவனத்தில் கொள்ளவேண்டும்.
புதுவிசை, இதழ் 33, செப்டம்பர் 2011
புதுவிசை, இதழ் 33, செப்டம்பர் 2011
No comments:
Post a Comment