Tuesday, September 29, 2020

ஆதி-திராவிடர்: சாதியற்ற சமத்துவத்தின் அடையாளம் கோ. ரகுபதி

ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி பறையர்களால் பறையர்களை மட்டுமே சுட்டுவதற்கு தோற்றுவிக்கப்பட்டது என்ற வாதம்  இக்கட்டுரையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.  அச்சொல் உச்சபட்ச தீண்டாமைக்குள்ளான பறையர், பள்ளர், சக்கிலி போன்ற பெயர்களால் அழைக்கப்பட்ட மக்கள் பிரிவினர் அனைவரையும் சுட்டுவதற்காகவும், தாங்கள்தான் தென்னிந்தியாவின் பண்டைய மக்களென அடையாளப்படுத்திக் கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற வரலாற்றுண்மையை முன்வைக்கும் அதேநேரத்தில் ஆதி-திராவிடர் சாதிகளைக் கடந்து சாதியற்ற, சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்தும் கருத்தியலாக பரிணமிக்க முயற்சித்திருக்கும் வரலாற்றினையும் நிறுவுகிறது.             

முன்னுரை: சாதிப்படிநிலையை பிரதிபலிக்கும் பெயர்

 இந்திய சாதியச் சமூகத்தில் பெயரில் என்ன இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்பினால், பதில் அம்பேத்கரிடமிருந்து கிடைக்கிறது: பெயர்கள் ஒரு முக்கியமான நோக்கத்தைக் கொண்டுள்ளன. அவை சமூகப் பொருளாதாரத்தில் மகத்தான பங்கை வகிக்கின்றன.  பெயர்கள் என்பவை அடையாளக்குறிகள்.  ஒவ்வொரு பெயரும் ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றிய குறிப்பிட்ட கருத்துக்களையும் எண்ணப்போக்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.  அது ஒரு ‘லேபிள்’ அடையாளச்சீட்டு. இந்த அடையாளச்சீட்டிலிருந்து அது என்ன என்பதை மக்கள் தெரிந்துகொள்கிறார்கள் (அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், 1997: 467). 

அம்பேத்கரின் இக்கூற்று விளக்குவதாவது: ஒருவரின் அல்லது ஒரு குறிப்பிட்ட சாதியின் சமூக, பொருளாதாரப் படிநிலையைப் பிறருக்கு எடுத்துரைக்கும் தனிச்சிறப்பினைப் பெயர்கள் பெற்றிருக்கின்றன. சமூகப்படிநிலையைப் பிரதிபலிக்கும் தன்மையைப் பெயர்கள் பெற்றிருக்கின்ற பொழுது, பெயர் சூட்டுதல் என்னும் நிகழ்ச்சி இந்தியச் சமூகத்தில் தனிநபர்களின் / தனித்த சாதிகளின் சுதந்திர உரிமைக்குட்பட்டதாக இருந்திருக்கிறதா? அல்லது புறக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக இருந்திருக்கிறதா? ஆம் என்றால் அப்புறக் கட்டுப்பாடு எது? என்ற கேள்விகள் இவ்விடத்தில் தவிர்க்க இயலாததாய் எழுகிறது.  இந்தியாவிலுள்ள சாதிகளின் தொழில், உணவுப்பழக்கம், ஆண், பெண் உறவு என சகலத்திற்கும் கறரான சட்டங்களை வகுத்தளித்திருக்கும் மநு நால்வருணத்திற்குள்ளிருக்கும் ஒவ்வொரு பிரிவினர்களுக்கும் வழங்கியிருக்கும் பெயர் என்ற அடையாளச்சீட்டு: பிராம்மணன் பெயர் மேன்மையைக் குறிக்கும் ‘சர்மன்’, க்ஷத்திரியனுக்குப் பலத்தைக் குறிக்கும் ‘வர்மன்’, வைசியனுக்கு வளத்தைக் குறிக்கும் ‘பூபதி’, சூத்திரனுக்கு பணி விடையைக் குறிக்கும் ‘தாசன்’. (திருலோக சீதாராம், 2000:14).  மநுவின் இச்சட்டம், பெயரிடுதல் என்பது மநு என்ற புறக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாயிருந்திருக்கிறது என்பதையே தெளிவுபடுத்துகிறது.       

நால்வருண அமைப்பில் இடம்பெற்றிராத உச்சபட்ச தீண்டாமைக் கொடுமைக்குள்ளான மக்கட்பிரிவினர், இந்த அடையாளச்சீட்டினைச் சூட்டிக் கொள்வதற்கு உரிமை மறுக்கப்பட்து.  சாதிக்கு புறத்தேயுள்ளோர், பறையர், பஞ்சமர், தீண்டத்தகாதோர், ஹரிஜன் போன்ற பெயர்களால் அவர்களின் விருப்பத்திற்குட்பட்டோ அல்லது வெறுப்பிற்குள்ளாகியோ அழைக்கப்பட்டனர்.  தீண்டத்தகாதோர் என்ற பெயர் குறித்து அம்பேத்கர் கருதியது (அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், 1997: 467): ‘தீண்டப்படாதவர்’ என்ற பெயரானது ஒரு கெட்ட பெயராகும்.  அது அருவருப்பூட்டுகிறது; பயமுறுத்துகிறது; முடைநாற்றம் வீசுகிறது.  ‘தீண்டப் படாதவர்’ என்ற பெயரிலிருந்தே தீண்டப்படாதவர் குறித்து இந்துவின் சமூக அணுகுமுறை தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது.  ‘தீண்டப்படாதவர்’ எவ்வளவு தகுதி பெற்றிருந்த போதிலும்கூட, மக்கள் தீண்டத்தகாதவர் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தகுதிகள் குறித்து ஆராய விரும்புவதில்லை. இதனையொத்த கருத்தொன்று மகாத்மா காந்தியால் பரவலாக்கப்பட்ட ஹரிஜன் என்ற பெயர் மீதும் எழுப்பப்பட்டது.  பெயரில் என்ன இருக்கிறது? என்று தலைப்பிட்டு பெயர் குறிப்பிடப்படாத வாசகர் ஒருவர் மகாத்மா காந்தியிடம் எழுப்பிய கேள்வி: ஹரிஜன் பெயர் எவ்வளவு புனிதமாகயிருந்தாலும் சரி, அது யாரைக் குறிக்கிறதோ அவர்கள் மனத்தில் தாங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை அப்பெயரே புகுத்திவிடுகிறதென்று நான் நினைக்கிறேன்.  அவர்கள் எவ்வளவு முன்னேற்றமடைந்தாலும், ஹரிஜன் என்ற பெயராலேயே அழைப்பதாயிருந்தால், அத்தகைய எண்ணத்தை அவர்கள் மனத்திலிருந்து அகற்றவது மிகவும் கடினமாக இருக்கும்.  ஹரிஜன் என்றவுடனேயே, தீண்டாமை, தாழ்த்தப்பட்டயென்பவை தான் பாமர மக்களுக்குப்படும்.  இயற்கையிலேயே இத்தகைய எண்ணத்தைப் புகுத்தாமலும், எடுத்தவுடனேயே தாழ்த்தப்பட்ட நிலையைக் குறிக்காமலும் உள்ள ஒரு பெயரை உபயோகிப்பது நல்லதல்லவா? மற்ற வகுப்பினரையும் தழுவக்கூடிய ஒரு பெயரை உபயோகிப்பது உசிதமல்லவா? (தமிழ் ஹரிஜன், 1946: 5).  

இந்திய சாதி அமைப்பில்  ஒரு தனிநபர் அல்லது சாதியின் படிநிலை, சமூகத்தில் வழங்கப்பட்டிருக்கும் உரிமை, பணி போன்றவைகளைக் கண்டறிய, ஒரு வட்டத்திற்குள் ஒருவர் அல்லது சாதி இணைத்துக் கொள்ளப்படுவதற்கும் அல்லது ஒதுக்கப்படுவதற்கும் பெயர் ஒன்றே போதுமானதாக இருந்து வருகிறது.  உச்சபட்ட தீண்டாமைக் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மக்கள் காலனிய ஆட்சிக்காலத்தில் தங்களை சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்துக் கொள்வதற்காகப் போராடிய போது, பிறரால் வழங்கப்பட்ட பெயர்கள் அவர்களின் சமூக முன்னேற்றத்தில் இடர்ப்பாடுகளையே ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்திருக்கின்றனர். இப்பெயர் மாற்றப்பட்டாலொழிய அவர்களுடைய சமூக அந்தஸ்தில் உயர்வதற்கான சாத்தியப்பாடே இல்லை என்கிறார் அம்பேத்கர் (அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும் 1997: 468).  மானிடவியல் அறிஞர் ராபர்ட் டெலீஜ்,  சமூக ஒழுங்கில் முன்னேற விரும்பும் ஒரு சாதி தனது இலக்குகளையும் உரிமை கொண்டாடுதலையும் பிரதிபலிக்கும் பெயரைக் கைக்கொள்வது இயல்பானது என்கிறார் (Robert Deliege, 1997:123).  பெயர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதிப்பதும், புதிய பெயரினைச் சூட்டிக்கொள்வதும் அல்லது இருக்கின்ற பெயரை மாற்றுவதும் ஒரு சமூக இயக்கத்தின் நிகழ்ச்சிநிரலில் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது.  

தமிழ்ச்சமூகத்தில் நால்வருணம் இல்லாதிருந்தபோதும் கூட கம்மாளர் (அரசாணை எண். 1802) இடையர் (யாதவ மித்ரன், 1930) போன்ற சாதிகள் தங்கள் சாதியின் பெயரை விஸ்வபிராம்மணன், யாதவ் என்று மாற்றிக்கொண்டனர்.  தீண்டத்தகாதோர், பஞ்சமர், பறையர், சாதிக்கு புறத்தேயுள்ளோர் என அழைக்கப்பட்ட மக்கள், தங்கள் மீதான தீண்டாமை ஒடுக்குமுறைக்கெதிராய் காலனிய ஆட்சிக் காலத்தில் திரளான அம்மக்கள் ஆதி-இந்து (Nandini Gooptu, 2006), ஆதி-தம் (Ronki Ram, 2004), ஆதி-திராவிடர் போன்ற பெயர்களில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.  மண்ணின் மைந்தர்கள், ஆரியருக்கு முற்பட்டோர் என்ற உரிமையைக் கொண்டாட இவர்கள் ஆதி என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தினர் (Gail Omvedt, 1991: 18-19; Susan Bayly, 2000: 246).  பெயர் மாற்றத்தில் ஈடுபட்ட முன்னவர்கள் - அவர்கள் திராவிடர்களாகவே இருந்த போதிலும், பார்ப்பனியமயமாக்கலை முன்னெடுத்தனர். ஆனால், பின்னவர்கள் அதற்கு நேரெதிரான திராவிடத்தை கைக்கொண்டனர். 

பிளவுபடுதலுக்கு இரையாக்கப்பட்ட ஆதி-திராவிடர் 

சாதி இந்துக்கள் காலனிய ஆட்சிக்குப் பின்னர், சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக தங்களிடையேயுள்ள உட்சாதிப் பிரிவுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தங்களை தனித்த பெரும் சாதியாக மாற்றிக்கொள்ளும் சாதி அரசியலை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், அனைத்துச் சாதி இந்துக்களும் அடித்தட்டு மக்களுக்கு எதிராக ஒன்றிணைந்து கொள்கின்றனர்.  இவ்விணைவிற்கான வெளிப்படையான அல்லது ரகசியமான உரையாடல் எப்பொழுதுமே அவர்களிடம் இருந்து வருகிறது.  உச்சபட்ச தீண்டாமைக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள்மீது காலனிய ஆட்சிக்குப் பின்னர் சாதி இந்துக்களால் நடத்தப்பட்டு வரும் வன்முறைகளே இதற்கு சாட்சி.  ‘ஒன்றிணைதல்’ என்பது சாதி இந்துக்களின் அரசியலாக இருந்துவரும் சூழலில் வெளிப்படையாகவே பகையுணர்வுடன் ‘பிளவுபடுதல்’ தாழ்த்தப்பட்ட மக்களின் சமகால அரசியலாக இருந்து வருகிறது.  ஆதி-திராவிடர் என்ற பெயருக்கெதிராக அருந்ததியர் மற்றும் ம(ப)ள்ளர்  இயக்கங்களின் போராட்டங்கள் பிளவுபடுதல் அரசியலில் முதன்மைப் பாத்திரம் வகித்துவருகின்றனர்.  உண்மையில், ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி சமீப காலமாகவே பிளவுபடுதல் அரசியலின் முதன்மையான இரையாகிப் போனது என்றால் அது மிகையான மதிப்பீடு அல்ல.   

பஞ்சமர், பறையர்  ஆகிய பெயர்களுக்கு மாற்றாக ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சியை அறிவித்திருந்த போதிலும் அது ‘’பறையர்’’ எனப்படும் சாதிக்கு மட்டுமே உரியது; அது எங்களுடையது அல்ல என்று ம(ப)ள்ளர் மற்றும் அருந்ததியர் இயக்கங்கள் போராடி வருகின்றன.  தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கம் ‘’அரிஜன்’’ என்ற பெயரையே மீண்டும் அமுல்படுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் 1980களில் வழக்கு தொடர்ந்தது (தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கம், திருச்சிராப்பள்ளி, வெளியிட்ட துண்டறிக்கை.  இது வெளியிடப்பட்ட தேதி அச்சிடப்பட்டிருக்கவில்லை).  சுயசாதி அரசியல் வலுப் பெற்றிருக்கும் இக்காலத்தில் அட்டவணைச் சாதியினரை ஆதி-திராவிடர் என்றழைக்க வேண்டுமென்ற அரசாணை (எண். 13/ஆர்டி-அநமு 1/07-1, 07 பிப்ரவரி 2007) தமிழக அரசாங்கத்தால் தற்போது வெளியிடப்பட்டிருப்பது போராட்டத்தை மேலும் தூண்டியிருக்கிறது.  (தினமணி 17 நவம்பர் 2007: 5; தினகரன் 19 நவம்பர் 2007: 4). ‘ஆதி-திராவிடர்’ என்னும் சொல்லாட்சி பறையரை மட்டுமே குறிப்பதற்கு பறையர்களால் முன்மொழியப்பட்டு நடைமுறைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது என்பது அப்பெயரை எதிர்ப்பவர்களின் வாதம்.  Scheduled Caste’ என்ற ஆங்கிலச் சொல்லாட்சியை அட்டவணைச் சாதியினர் என்று மொழிபெயர்ப்பு செய்வதற்குப் பதிலாக ஆதி-திராவிடர் என பெயர் சூட்டியிருப்பது மாற்றப்படவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.  எனவே, இக்கட்டுரை இனிவரும் பகுதியில் விவாதிக்க இருக்கின்ற சிக்கல்கள்: காலனிய ஆட்சியாளர்கள் பஞ்சமர், பறையர் என்ற பெயர்களை எந்த மக்கட்பிரிவினரை சுட்டுவதற்காகக் கையாண்டனர்?  சென்னை மாகாண அவையில் முன்மொழியப்பட்ட ஆதி-திராவிடர் என்னும் பெயர், பறையருக்கு மட்டுமான மாற்றுப்பெயரா? அல்லது பறையரைப்போல் ஒடுக்குமுறைக்குள்ளான அனைத்து மக்கட்பிரிவினரையும் சுட்டுவதற்காக முன்மொழியப் பட்டதா?  ஆதி-திராவிடர் என்னும் சொல்லாட்சி அடையாளப் பெயராக மட்டுமே முன்மொழியப்பட்டதா? அல்லது ஆரியர்களுக்கு (பிராமணர்) முற்பட்டோர், சாதியற்றோர் என வரலாற்றையும், கருத்தியலையும் பிரதிபலிக்கும் நோக்கத்துடனும் அப்பெயர் முன்நிறுத்தப்பட்டதா? 

பஞ்சமர், பறையர் சுட்டுவது யாரை? 

ஆதி-திராவிடர் எதிர்ப்பாளர்கள் மட்டுமின்றி பொது எண்ணமும் பிரதிபலிப்பது: பறையருக்கான  மாற்றுப்பெயரே ஆதி-திராவிடர்.  இக்கருத்தினை உறுதிசெய்வதற்கு காட்டப்பட்டுவரும் ஒரேயொரு ஆதாரமான அரசாணை எண். 817 அறிவிப்பதானது : 1. தென்னிந்தியாவிலுள்ள பண்டைய திராவிட சமூகத்தைக் குறிக்கப் பயன்படுத்தப் படும் சொற்களான ‘பஞ்சமாஅல்லது ‘’பறயா’’ அரசு ஆவணங்களிலிருந்து நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக தமிழகத்தில் ஆதி-திராவிடர் என்றும், தெலுங்கு மாவட்டங்களில் ஆதி-ஆந்திரா என்ற சொற்களும் பயன்படுத்தப்பட வேண்டும். (That this Council recommends to the Government that the terms ‘Panchama’ or ‘Paraya’ used to designate the ancient Dravidian community in Southern India should be deleted from  Government records, etc., and the term ‘Adi-dravida’ in the Tamil and ‘Adi-andhra’ in the Telegu districtse substituted instead’) 

2. அரசாங்கத்திற்கு ‘ஆதி-திராவிடர்’,‘ஆதி-ஆந்திரர்’ என்றழைப்பதில் எதிர்ப்பு இல்லை.  ஆனால், பழைய அரசு ஆவணங்களை மறுமதிப்பு செய்ய இயலாது.  பஞ்சமர், பறையர் ஆகிய சொற்களுக்குப் பதில் ஆதி-திராவிடர், ஆதி-ஆந்திரர் மற்றும் திராவிட என்ற பெயர்கள் பயன்படுத்தப்படும்.   

மேற்குறிப்பிடப்பட்ட அரசாணை, ‘தென்னிந்தியாவிலுள்ள பண்டைய திராவிடச் சமூகத்தை’ குறிப்பதற்குப் பஞ்சமர், பறையர் ஆகிய பெயர்கள் பயன்படுத்தப் படுவதாகத்தான் கூறுகிறது; மாறாக ‘பறையர்’ என்றழைக்கப்படும் பிரிவினரையோ அல்லது ‘அவர்களை மட்டுமே’ குறிப்பதற்காகவோ அல்ல என்பது தெளிவு.  இருப்பினும்கூட அது பறையரை மட்டுமே குறிக்கப்பயன்படுத்தப்பட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.  இந்தியாவில் காலனிய ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியின் நிர்வாகத்தேவைக்கு சாதிகளைக் கணக்கெடுத்த பொழுது நால் வருணத்திற்குள்ளே இருந்தோரை குறிப்பிட்ட பெயரில் பதிவு செய்வதில் சிக்கல் எழுந்திருக்கவில்லை.  இவர்கள் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று மநு வரையறை செய்திருப்பது இச்சிக்கலற்ற தன்மைக்குக் காரணம்.  ஆனால், நால்வருணத்திற்கு வெளியே இருந்த மக்கள் பிரிவினரைக் குறிப்பாக உச்சபட்ச தீண்டாமைக் கொடுமையை அனுபவித்து வந்த மக்களை என்ன பெயரில் அழைப்பது என்ற சிக்கல் காலனிய ஆட்சியாளர்களின் முன்னெழுந்தது.  அவர்கள் இம்மக்களை ‘’பறையா’’, ‘’சாதிக்கு வெளியேயுள்ளோர்’’ என்றே அழைத்தனர் (Simon Charsley,1996: 5). 1871ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில்- பறையா, பள்ளன், சக்லெர் (சக்கிலியர்), தோட்டி போன்றோர் பறையாஸ் (Pariahs) என்பதின் உட்பிரிவு- என்றே ஆங்கிலேயர்கள் கருதியுள்ளனர் (Census of 1871, 1874:170).   1881ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதும் பள்ளர் மற்றும் சக்கிலியர் ‘’பறையா’’ என்றே வகைப்படுத்தப்பட்டனர்.  இது தவறு, அவர்கள் பறையரிலிருந்து வேறுபட்ட பிரிவினர் என்றும் அவர்களை தனித்தனியே வகைப்படுத்த வேண்டும் என்றும் உணர்ந்தனர் (F.A. Nicholson,1887). 1891ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் பள்ளர்கள் உட்பிரிவு வாரியாக கணக்கெடுக்கப்பட்டிருக்கின்றனர் (Harold A.Stuart,1891:247). ‘பஞ்சமா’ என்ற பெயர் 1893ல் பயன்படுத்தப்பட்டுள்ளது (Simon Charsley, p.5).  இது பறையர், சக்கிலியர், குறவர், வில்லியர் போன்றோரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது (Aloysius, 1998: 152). கர்நாடகாவைச் சேர்ந்த ஹோலியர்கள் தங்களுக்குப் பஞ்சமர் என்ற பெயரினை வழங்கியதற்காக சென்னை அரசாங்கத்திற்கு நன்றி செலுத்தியிருப்பது இதற்கான எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம் (Census of India, 1931: 342).  1901, 1911 மற்றும் 1921 கணக்கெடுப்புகளில் பறையன், பள்ளன், சக்கிலியன் என்று தனித்தனியே கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது.  இருப்பினும், பறையா என்ற சொல்லை ‘பறையன்’ என்ற பிரிவினரையும் இதர ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரையும் சுட்டுவதற்குப் பயன்படுத்துவதாக 1930களிலும் அவர்கள் கூறியிருக்கின்றனர் (அரசாணை எண். 4554).  ஆதி-திராவிடா என்ற மாற்றுப்பெயர் அரசு ஆவணங்களில் பயன்படுத்தப்பட  வேண்டுமென்ற அரசாணை அமலுக்கு வந்த பின்னர் 1931ம் ஆண்டு கணக்கெடுப்பில் ஆதி-திராவிடர், அருந்ததியர், சக்கிலியன், தேவேந்திரகுலத்தான், குடும்பன், மாதாரி, மாதிகா, மாலா, பள்ளன் மற்றும் பறையன் என்ற பெயர்களிலும் அம்மக்கள் பதிவு செய்யப்பட்டிக்கின்றனர் (Census of India 1931, Vol.XIV, Part.II). மேற்காட்டப்பட்ட ஆதாரங்கள் பஞ்சமர், பறையர் ஆகிய சொல்லாட்சிகளைக் காலனிய ஆட்சியாளர்கள் பறையரை மட்டுமின்றித் தீண்டாமைக் கொடுமைக்குள்ளான இதர மக்களையும் குறிப்பதற்கு பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை உறுதி செய்கிறது. ஆகவே, ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி பறையருக்கு மட்டுமான மாற்றுப்பெயரல்ல.  இருப்பினும், ஆதி-திராவிடா என்ற பெயர் அமலுக்கு வந்ததற்கான சுருக்கமான போராட்ட வரலாற்றுடனும், அப்பெயரை மையப்படுத்தி நடைபெற்ற விவாதத்தின் ஊடாகவும் அப்பெயர் பறையருக்கு மட்டுமானதா என்பதைக் காண்பது இங்கு அவசியமாயிருக்கிறது. 

ஆதி-திராவிடர்: 30 ஆண்டுப் போராட்டம் 

பஞ்சமர், பறையர் ஆகிய பெயர்கள் நீக்கப்பட்டு ஆதி-திராவிடர் என்று மாற்றம் செய்வதற்கான போராட்டம் 1892-ஆம் ஆண்டு முதலே நடைபெறத் தொடங்கியிருக்கிறது.  பி.வி. சுப்ரமண்யம் பிள்ளை, வி. முகுந்து பிள்ளை, முனுசாமி பிள்ளை, ராஜரத்னம் பிள்ளை, சண்முகம் பிள்ளை, ஒங்காரம், முத்துகிருஷ்ண பிள்ளை, திருப்புகழ் அம்மாள், வேணுகோபால் பிள்ளை, வாசுதேவ பிள்ளை மற்றும் எம்.சி. ராஜா ஆகியோர் மாண்றேகு செம்ஸ்ஃபோர்டை சந்தித்து பெயர் மாற்றக் கோரிக்கையை முன்வைத்தனர்.  ஜனவரி 1922 ஆண்டில் 50,000 பேர் பங்கேற்ற பேரணி நடத்தப்பட்டது.  சென்னை மாகாண அவை உறுப்பினர் வீரையன் கோயம்புத்தூரில் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். மாநாடுகளும் கூட்டங்களும், தஞ்சாவூர், மலபார், திண்டுக்கல், செங்கற்கட்டு, வட மற்றும் தென் ஆற்காடு, திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, திருநெல்வேலி, பங்களூர் மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டிருப்பது ஆதி-திராவிடா பெயருக்கான போராட்டம் அன்றைய சென்னை மாகாணத்தையும் கடந்து நடந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.  இதற்கென பல அச்சிடப்பட்ட துண்டறிக்கைகளும் வெளியிடப்பட்டன. சுமார் 30 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் இறுதியாக, அரசாணை 817க்கான தீர்மானம் சென்னை மாகாண அவையில் எம்.சி.ராஜா 20 ஜனவரி 1922 அன்று முன்மொழிந்தார் (MLCD, 20 ஜனவரி 1922: 2047). உண்மையில், ஆதி-திராவிடர் சொல்லாட்சிக்கான போராட்டத்தில் பறையர் என்றழைக்கப்படும் மக்கள் அதிகம் பங்கேற்றிருக்கலாம்.  அவ்வாறென்றால் பறையருக்கு மட்டுமானது தானே ‘ஆதி-திராவிடர்’ என்று வாதிடலாம். இவ்வாதம் ஏற்றுக்கொள்ளப் படுவதை குறுக்கிடும் கேள்வி: ஆதி-திராவிடர் என்ற பெயரினை பறையர்கள் தங்களுக்கு மட்டுமே உரியதென உரிமை கோரினரா?  இச்சிக்கலுக்கான தீர்வுக்கு, சென்னை மாகாண அவையில் ஆதி-திராவிடர் பெயர் மாற்றத்தை முன்வைத்தவர்களின் விவாதத்தைக் காண வேண்டும்.   

ஆதி-திராவிடர்: சாதியற்றோரின் குறியீடு

பெயர் மாற்றத்திற்காக எம்.சி.ராஜா முன்வைத்தக் காரணங்கள்:  நாங்கள் நீண்டகாலமாக பறயாஸ் என்று அழைக்கப் படுகிறோம்.  இப்பெயரின் தோற்றம் என்னவாக இருந்தபோதிலும் இது- மகிழ்ச்சியற்ற, புனிதத்திற்கும் மரியாதைக்கும் எதிரானவற்றையே- வெளிப்படுத்துகிறது.  சுயமரியாதைக்கான எண்ணம் எழுந்த போது நாங்கள் இப்பெயரினை எதிர்த்து ஒரு நல்ல பெயருக்காகப் போராடினோம்.  எங்கள் மீது அக்கறை கொண்ட சில இந்துக்கள் பஞ்சமர் என்ற பெயரினைப் பரிந்துரைத்தபோது பறையருக்குப் பதிலாக அதனை ஏற்றுக்கொண்டோம்.  எங்கள் சுயமரியாதை அதிகரித்தபோது, பஞ்சமர் என்ற பெயரின் ஆபத்தையும் உணர்ந்தோம்.  சாதியை நிராகரிக்கும்- எங்களின் இனத்தையும் தோற்றத்தையும் புவியியல் நிலையையும் தெரிவிக்கும்- ஒரு பெயரே எங்களுக்கு வேண்டும்.  இம்மண்ணின் உண்மையான மைந்தர்கள் நாங்களே. எங்களை நாங்கள் ஒருபோதும் சாதியோடு இணைத்துக்கொண்டதில்லை.  எங்களின் சங்கத்தை சிலர் பறய மகாஜன சபா என்று அழைக்க நினைத்தபோது ‘ஆதி-திராவிட சபா’ என்று அழைக்கவே நாங்கள் தீர்மானித்தோம். ஆதி-திராவிடர்கள் (Adi-Dravidas) அல்லது உண்மையான திராவிடர்கள் (Original Dravidas) என்று அரசாங்கத்தின் அனைத்து ஆவணங்களிலும் பதிவுசெய்து எங்களுடைய சமூகம் மரியாதை பெறுவதற்கு உதவும்; இது எங்களைத் திராவிடர்களான பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு இணையாக நிறுத்தும் (மேலது, 2048, 2051).    

எம்.சி.ராஜாவின் உரை, ஆதி-திராவிடர் என்ற பெயர் பறையர்களைச் சுட்டுவதற்கு முன்மொழியப்பட்டதாகவே கொள்வோம்.  சாதியை புறக்கணிப்பவர்களாகத் தங்களை முன்னிறுத்தியிருந்த அவர்கள் ஆதி-திராவிடர் என்ற பெயரைப் பறையர்களுக்கு மட்டுமென்றே சுருக்கிக்கொண்டார்களா? அல்லது தங்களையொத்த ஒடுக்குமுறையை அனுபவித்து வந்த இதர சாதியினருக்கும் விரித்துக் கொண்டனரா?  இவ்விடத்தில் பெயர் மாற்றத்திற்கான விவாதத்தில் பங்கேற்ற எஸ்.சோமசுந்தரம் பிள்ளை முன்வைத்த கருத்துக்கள்  கவனிக்கத்தக்கவை:  ஆதி-திராவிடர் என்ற சொல் தென்னிந்தியாவின் பண்டைய மக்கள் என்ற பொருளைத் தருகிறது.  ‘பறையர்’ என்ற வார்த்தை மரியாதைக்குரிய பொருளைப் பெற்றிருந்தது. ‘பறையர்’ என்பதின் பொருள் அரசனின் ஆணைக்கிணங்க போர் அறிவிப்பு செய்பவன்.  எதிரிகளால் எங்கள் நாடு பிடிக்கப்பட்டபோது நாங்கள் வறுமைக்குள்ளானோம்; பெயரும் திரிபுக்குள்ளாகி மதிப்பற்றதாக்கப்பட்டது. அனைத்து மக்களுக்கும் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் ஆதி-திராவிட மக்கள் பறையர் என்ற பெயர் நீக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர்.  ஆனால், ஆதி-ஆந்திரர் என்ன பொருளைத் தருகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.  சிலர் ஆதி-மலையாளி, ஆதி-கர்நாடகா என்று அழைக்கப் படுவதை விரும்பலாம்.  இவையனைத்தும் திராவிட மொழிகளே (மேலது, பக். 2050). ஆதி-திராவிடர் என்ற அழைக்கிறபொழுது அது தெலுங்கு, மலையாளி, கர்நாடகம் மற்றும் தமிழ் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.  சோமசுந்தரம் பிள்ளையின் உரை இரண்டு முரணற்ற பொருளைத் தருகிறது: 1.பறையர் ஆதி-திராவிடர் என்றழைக்கப்பட வேண்டும். 2. ஆதி-திராவிடரென்றால் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் மக்களையும் குறிக்கும்.  இவ்விருவர்களின் உரையும் தரும் தீர்க்கமான பதில்: ஆதி-திராவிடா என்ற பெயர் பிறரால் சூட்டப்படாமல் அம்மக்களாகவே தாங்கள்தான் பண்டைய திராவிடர்கள் என்ற வரலாற்று உணர்வுநிலையோடு தெரிவு செய்து கொண்ட பெயர்.  பறயாவுக்கு அல்லது பறையர்களுக்கு என்று மட்டுமல்லாமல் தங்களைப்போல் ஒடுக்கு முறைக்குள்ளாகும் திராவிட மொழிகளாகிய தெலுங்கு, மலையாளம் மற்றும் கர்நாடகம் பேசும் மக்களுக்கும் அப்பெயர் வேண்டும் என்பதுதான்.  எனவே, ஆதி-திராவிடா என்ற பெயர் பறையர்களுக்கும் மட்டுமல்ல என்பதை அறுதியிட்டுக் கூறலாம்.   

இம்முடிவு உதாசீனம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பெயரினை எதிர்ப்பவர்கள் தங்களுடைய சாதிப்பெயர் அந்த அரசாணையில் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை என்று வாதிடலாம்.  எனவே, ஆதி-திராவிடர் பறையருக்கு மட்டுமல்ல என்ற வாதத்தை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரத்தை முன்வைப்போம். ஆர்.வீரையன், சென்னை மாகாண அவை செயலாளருக்கு 29 ஆகஸ்டு 1924 அன்று அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: பறையர், பள்ளர், சக்கிலியர் மற்றும் தொம்பா போன்ற பெயர்கள் பொது ஆவணங்களில் இடம் பெறக் கூடாது; அவற்றிற்குப் பதிலாக ஆதி-திராவிடா மற்றும் ஆதி-ஆந்திரா ஆகிய பெயர்கள் தான் இடம்  பெற வேண்டும் என்பது குறித்துத் தீர்மானம் வரும் சென்னை மாகாண அவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.  இத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப் பட்டு ஏற்கனவே அமுல்படுத்தப்பட்ட எண். 817 சட்டம் (பொது) 25 மார்ச் 1922 என்ற அரசு ஆணையோடு இணைத்து அமல்படுத்தப்பட்டது (அரசாணை எண்.3571).  இவ்வாணை, ஆதி-திராவிடா என்ற பெயர் பறையருக்கு மட்டுமல்லாது பள்ளர், சக்கிலியர், மாதிகா மற்றும் தொம்பா போன்ற சாதிகளுக்கும் உரியது என்பதை உறுதி செய்கிறது.  கேரளாவில் தீண்டாமைக் கொடுமைக்குள்ளான செருமர்கள் (புலையர்) உட்பட இதர மக்கள் தங்களை ஆதி-திராவிடர் என்று அழைக்கத் தொடங்கினர் என்பதும் இவ்விடத்தில் கவனிக்கப்பட வேண்டும் (Census of India 1931;p.335).  ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி ஒரு குறிப்பிட்ட சாதிக்கு, குறிப்பாக அப்பெயரை பல போராட்டங்களுக்கிடையே அமலுக்கு கொண்டுவந்த பறையர்களுக்கு மட்டுமின்றி, உச்சபட்ச தீண்டாமைக் கொடுமைக்குள்ளான மக்களுக்கும் விரித்துக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.   

இச்செயல் ஆதி-திராவிடர், ‘பெயர்’ என்ற தன்மையைக் கடந்து ஒதுக்குமுறைக்குள்ளான மக்களைத் தென்னிந்தியாவின் பண்டைய குடிகள் என்ற வரலாற்றினை உரிமை கொண்டாடியுள்ளது.  திராவிட மொழிக்குடும்பம் என்ற அடையாளத்துக்குள் திரளுவதற்கு முயற்சித்திருக்கிறது.  சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தை வலியுறுத்தும் சாதியற்றோராக விரிந்திருப்பதானது ஆதி-திராவிடர் கருத்தியல் தளத்திற்குள்ளும் சென்றிருக்கிறது என்பது தெளிவு.  எனவே, ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி பறையர்களுக்கு மட்டுமே உரியது அல்ல, அது பறையர்களால் முன்மொழியப்பட்டிருந்த போதிலும்கூட.  இதனை வேறு வார்த்தையிலும் கூறலாம்: ஆதி-திராவிடா என்ற சொல்லாட்சி தங்களுக்கு மட்டுமானது என்று ஒருபோதும் பறையர்கள் உரிமை கொண்டாட இயலாத அதே சமயத்தில், பிறரும் அதனை பறையர்களுக்கு மட்டுமேயானது என வாதிடவும் இயலாது.  காரணம், சமத்துவத்திற்கான ஒரு கருத்தியல் ஒருபோதும் ஒரு சாதிக்கு மட்டுமே உரியதாக இருக்கமுடியாது, அக்கருத்தியல் ஒரு குறிப்பிட்ட சாதியினரால் உற்பத்தி செய்யப்பட்ட போதிலும்கூட.    

பறையர், பள்ளர், சக்கிலியர்: இழிபெயர்களுக்கெதிரான போராட்டம்  

தங்களால் இழிபெயர்கள் எனக் கருதப்பட்டவற்றை யார் பயன்படுத்தினாலும் அதனை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.  பறையர் என்ற சொல்லைப் பயன்படுத்துபவர்களை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது (Aloysius, 1998: 166).   கட்டுரையில் மேற்குறிப்பிட்ட அரசாணை அமலுக்கு வந்த பின்னர், அரசு ஆவணங்களில் பறையர், பள்ளர், சக்கிலியர், மாதிகா மற்றும் தொம்பா போன்ற பெயர்கள் இடம்பெற்றிருப்பதை எதிர்த்து சென்னை மாகாண அவைக்குள் குரலெழுப்பப்பட்டிருக்கிறது.  சில எடுத்துக்காட்டுக்கள்:

1. நீதிமன்ற அழைப்புக் கட்டளை மற்றும் நீதிமன்ற விசாரணையின்போது பறையன் என்ற பெயர் குறிப்பிடப் படுவதை சென்னை மாகாண அவையில் எதிர்த்தார் வீரையன்.   அவ்வாறு குறிப்பிடுவது தவறென்ற சட்ட உறுப்பினர் (சென்னை மாகாண அவையில் Law Member பதவியில் இருந்தவரை சட்ட உறுப்பினர் என இங்குக் குறிப்பிடப்படுகிறது) அதன் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார் (MLCD,Vol.XXIV1925:767-768). 

2. மேட்டுப்பாளையம் ஒன்றிய வாரியம் நாகன் என்பவருக்கு கொடுத்த அறிக்கையொன்றில் ‘சக்கிலியன்’ என்று குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய வீரையன், அச்செயலை எதிர்த்தார்.  இத்தகைய பெயர் பயன்படுத்தக்கூடாது என்று அரசாணை இருந்தபோதும் இன்றும் அப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது; அரசாங்கம் அவ்வாணை அமல்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்குமா என்ற வினவினார்.  உள்ளாட்சித்துறை அமைச்சர் பனகல் அரசர், ‘இதில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது.  அரசாங்கம் அத்தகைய பெயர்களைப் பயன்படுத்தாது என்று மட்டுமே கூறியது.  பிறர் அப்பெயர்களை பயன்படுத்தினால் சம்பந்தபட்டவர்களே நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார். ஆர்.வீரையன், ‘உள்ளாட்சி அமைப்பு அச்சிட்ட அறிக்கையில்தான் இவ்வாறு உள்ளது; தனிநபர்கள் அதைப் பயன்படுத்தவில்லை’ என்றார்.  பனகல் அரசர், ‘உள்ளாட்சி அமைப்புகளின் ஆவணங்கள் அரசாங்க ஆவணங்கள் அல்ல’ என்றார்.  ‘உள்ளாட்சி அமைப்புகள் அரசாங்கத்தின் ஒரு அங்கம் இல்லையா’ என்ற கேள்வியை எழுப்பினார் ஆர்.வீரையன்.  இறுதியில், குறிப்பிட்ட சம்பவத்தை கூறினால், ‘அது குறித்து உள்ளாட்சி அமைப்புகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்’ என்றார் பனகல் அரசர்.  வீரையன் மீண்டும் மேட்டுப்பாளையம் சம்பவத்தை குறிப்பிட்டுக் கூறினார் (MLCD, Vol. XXIX, 1926: 590-591) 

3. நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் பறையர் பள்ளர் சக்கிலியர் பயன்படுத்தப்படுவது குறித்து சட்ட உறுப்பினர் பதிலளிக்குமாறு வீரையன் கோரினார்.  குறிப்பிட்ட சம்பவங்களைக் கவனத்திற்கு கொண்டு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்ட உறுப்பினர் தெரிவித்தார்  (MLCD, Vol.XXX, 1926:248).  வீரையன் சென்னை மாகாண அவைக்குள் பறையன், பள்ளன், சக்கிலியன் போன்ற பெயர்கள் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து போராடியதற்கு மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்கள் போதுமானது.  இதிலிருந்து அறிந்துகொள்ள வேண்டியது: தீண்டாமைக் கொடுமைக்குள்ளான மக்களின் பிரதிநிதிகளாகச் சென்னை மாகாண அவை உறுப்பினர்களானோர் பறையர், பள்ளர், சக்கிலியர் என்று பிளவுபடுத்தாமல் அனைவரையும் ஆதி-திராவிடர்களாகவே கருதினர் என்பது தெளிவு.  

ஆதி-திராவிடர்: சாதிக்கெதிரான சமத்துவக் கருத்தியல் 

கட்டுரையில் காட்டப்பட்டிருக்கின்ற மேற்கோள்கள் பஞ்சமர், பறையர் ஆகியவற்றிற்கு மாற்றாக ஆதி-திராவிடர் என்ற பெயர், பறையர்களின் போராட்டத்தினால் விளைந்திருப்பினும்கூட, அது பறையர்களுக்கு மட்டுமே உரியது அல்ல; மாறாக உச்சபட்சத் தீண்டாமைக் கொடுமைக்குள்ளான பள்ளர், சக்கிலியர் போன்ற சாதிகள் அனைவருக்குமான பெயராகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.  ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி தீண்டாமை ஒடுக்குமுறைக்குள்ளான மக்களின் பெயராக மட்டுமின்றி அது -சாதியைப் புறக்கணிப்பவர்கள், சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்துபவர்களின்- பெயராக இருந்திருக்கிறது. மேலும், அப்பெயர் திராவிடர்களின் ஒற்றுமைக்கானதாகவும் ஆரியர்களுக்கு (பார்ப்பனர்கள்) எதிரானதாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  ‘ஜாதிபேதத்துக்கும் ஜாதிக் கட்டுப்பாட்டுக்கும் உட்படாதவர்களும், எக்காலத்துக்கும் யதார்த்தமும் உறுதியும், தருமசிந்தனையும் குடிகொண்டவர்களாகிய நம்மவர்கள்’ என்ற பறையர்களின் பகிரங்க அறிவிப்பு, ஆதி-திராவிடர் சொல்லாட்சியின் அரசியலுக்கு சாட்சி (திராவிட மகாஜன சங்கம் மற்றும் மெட்ராஸ் பறையா மகாஜன சங்கம் 1916 ஆண்டில் வெளியிட்ட துண்டறிக்கை).   ஆதி-திராவிடாவின் இலக்கு, திராவிடர்களான பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு இணையாகத் தாங்கள் வரவேண்டும் என்பதே, மாறாக இந்துமயமாக்கல் (பார்ப்பனீயம்) அல்ல.  இந்த லட்சியத்திற்கு பறையர், பள்ளர், சக்கிலியர் போன்ற மக்களை ஒரு குடையின் ஒருங்கிணைக்கும் முயற்சியே ஆதி-திராவிடர் என்ற கருத்தியல்.  இக்கருத்தியலை முன்னெடுத்தவர்கள் பெரும்பாலும் பறையர் பிரிவினைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவ்வர்க்கம் அப்பெயரை தங்களுக்கு மட்டுமே உரியது என்று உரிமை பாராட்டாதிருந்த போதிலும் கூட, அது பறையர் சாதிக்கான மாற்றுப்பெயர் என்ற பார்வை தவறெனக் கட்டுரையில் மெய்ப்பிக்கட்டிருக்கிறது.  

சமத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்குமான கருத்தியலின் உருவாக்கத்தில் அல்லது அக்கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை நிறுவுவதற்காகப் போராடும் ஒரு இயக்கத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர் பங்கேற்கின்ற பொழுது, அம்மக்கட் பிரிவினர் அல்லாத பிறர் அக்கருத்தியலை அல்லது அவ்வியக்கத்தை அதில் பங்கேற்றிருக்கின்ற சாதிக்கு அல்லது சாதிகளுக்கு மட்டுமேயானது என்று பார்ப்பதும் அதனை பரப்புவதுமான செயலில் இறங்குவது இந்திய சமூக அமைப்பில் புதிதானதொன்று அல்ல.  இடதுசாரிகள் தமிழகத்தில் விவசாயத் தொழிலாளர்களை ஒன்றிணைத்துப் போராடிய போது அவ்வியக்கத்தில் கூலித்தொழிலாளிகளாகவும் பண்ணையடிமைகளாகவுமிருந்த பறையர், பள்ளர் அதிகமாக இருந்ததால் இடதுசாரி இயக்கம் ‘பறையன் கட்சி’, ‘பள்ளன் கட்சி’ என்றே பிறரால் அடையாளப்படுத்தப்பட்டதனை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும் (Saraswathi Menon, 1979:408). ஆதி-திராவிடர் என்ற கருத்தியலைப் பறையர்களுக்கான பெயர் என்று இன்று அடையாளப்படுத்தப்படுவதற்கும் இடதுசாரி இயக்கம் ‘பறையன் கட்சி’, ‘பள்ளன் கட்சி’ என்று அன்று அடையாளப்படுத்தப்பட்டதற்கும் இடையில் காலம் மட்டும் வேறுபாடே தவிர, பார்வை ஒன்றுதான்.  இந்நிலையை இவ்வாறு கூறலாம்: தமிழக/ இந்திய சாதிய சமூக அமைப்பில் அதனை புறக்கணித்துவிட்டு, சமத்துவத்தை வலியுறுத்தும் முற்போக்கு கருத்தியலை அல்லது இயக்கத்தை ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே என்று அடையாளப்படுத்துவதன் மூலமும் ஏற்றத்தாழ்வான சாதிய அமைப்பு தொடர்ச்சியாய் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.    

 (கட்டுரையை வாசித்து ஆலோசனை வழங்கிய  பேராசிரியர்கள் ஆ.தனஞ்செயன், சி.லக்ஷ்மணன், ஆய்வு மாணவர் ராமஜெயம் ஆகியோருக்கு நன்றி)     

 1. முதன்மைச் சான்று

 GO. 817, Law (General), 25 March 1922.

GO. 3571, Law (General), 16 December 1924.

GO. 4554, Law (General), 28 October 1930.

GO. 1802, Law (General), 20 April 1931

GO. 1458, Law (General), 11 April 1932. 

MLCD, 20 January 1922

MLCD, Vol. XXIV 1925.

MLCD, Vol. XXIX, 1926.

MLCD, Vol. XXX, 1926.

MLCD, 05 August 1932. 

Census of the Madras Presidency 1871 Vol.1(Madras: 1874)

Census of India 1931 Vol. XIV, Part. I

Census of India 1931, Vol. XIV, Part. II

யாதவமித்ரன் (மே-ஜூன், 1930).

தமிழ் ஹரிஜன் தொகுதி 14 (ஏப்ரல்: 1946). 

தினமணி, 17 நவம்பர் 2007.

தினகரன், 19 நவம்பர் 2007.  

2. இரண்டாம் நிலைச் சான்று

Aloysius, G. Religion as Emancipatory Identity: A Buddhist Movement Among the Tamils Under Colonialism (New Delhi: New Age, 1998). 

Bayly, Susan. Caste, Society and Politics in India (Cambridge: Cambridge University Press, 2000). 

Charsley, Simon. “Untouchable”: What is in a Name?’, The Journal of the Royal Anthropological Institute, Vol. 2, No. 1 (March: 1996). 

Deliege, Robert.  The World of Untouchables: Paraiyars of Tamil Nadu (Delhi: Oxford University Press, 1997). 

Gooptu, Nandini. Swami Acchutanand and the Adi Hindu Movement (New Delhi, Critical quest, 2006). 

Menon, Saraswathi. ‘Historical Development of Thanjavur Kisan Movement: Interplay of Class and Caste Factors’, EPW,  Vol. XIV, Nos. 7 and 8 (1979). 

Nicholson, F.A. Manual of the Coimbatore district in the Presidency of Madras (Madras: Government Press, 1887). 

Omvedt, Gail. ‘The Anti-Caste Movement and the Discourse of Power’, Race and Class, Vol. 33, No. 2 (1991).

 Ram, Ronk. ‘Untouchability, Dalit Consciousness, and the Ad Dharm Movement in Punjab’, Contributions to Indian Sociology, Vol. 38, No. 3 (2004).

 Stuart, Harold A. Census of India 1891 Vol. XIII.

டாக்டர் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும் தொகுதி 10 (புது தில்லி: டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், 1997). 

சீதாராம், திருலோக, மனுதர்ம சாஸ்திரம் (சென்னை: அலைகள், 2000).

 

-       புதுவிசை, இதழ் 19, ஜன-மார்ச் 2008


No comments:

Post a Comment