Tuesday, September 29, 2020

ஆதி-திராவிடர்: சாதியற்ற சமத்துவத்தின் அடையாளம் கோ. ரகுபதி

ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி பறையர்களால் பறையர்களை மட்டுமே சுட்டுவதற்கு தோற்றுவிக்கப்பட்டது என்ற வாதம்  இக்கட்டுரையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.  அச்சொல் உச்சபட்ச தீண்டாமைக்குள்ளான பறையர், பள்ளர், சக்கிலி போன்ற பெயர்களால் அழைக்கப்பட்ட மக்கள் பிரிவினர் அனைவரையும் சுட்டுவதற்காகவும், தாங்கள்தான் தென்னிந்தியாவின் பண்டைய மக்களென அடையாளப்படுத்திக் கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற வரலாற்றுண்மையை முன்வைக்கும் அதேநேரத்தில் ஆதி-திராவிடர் சாதிகளைக் கடந்து சாதியற்ற, சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்தும் கருத்தியலாக பரிணமிக்க முயற்சித்திருக்கும் வரலாற்றினையும் நிறுவுகிறது.             

முன்னுரை: சாதிப்படிநிலையை பிரதிபலிக்கும் பெயர்

 இந்திய சாதியச் சமூகத்தில் பெயரில் என்ன இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்பினால், பதில் அம்பேத்கரிடமிருந்து கிடைக்கிறது: பெயர்கள் ஒரு முக்கியமான நோக்கத்தைக் கொண்டுள்ளன. அவை சமூகப் பொருளாதாரத்தில் மகத்தான பங்கை வகிக்கின்றன.  பெயர்கள் என்பவை அடையாளக்குறிகள்.  ஒவ்வொரு பெயரும் ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றிய குறிப்பிட்ட கருத்துக்களையும் எண்ணப்போக்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.  அது ஒரு ‘லேபிள்’ அடையாளச்சீட்டு. இந்த அடையாளச்சீட்டிலிருந்து அது என்ன என்பதை மக்கள் தெரிந்துகொள்கிறார்கள் (அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், 1997: 467). 

அம்பேத்கரின் இக்கூற்று விளக்குவதாவது: ஒருவரின் அல்லது ஒரு குறிப்பிட்ட சாதியின் சமூக, பொருளாதாரப் படிநிலையைப் பிறருக்கு எடுத்துரைக்கும் தனிச்சிறப்பினைப் பெயர்கள் பெற்றிருக்கின்றன. சமூகப்படிநிலையைப் பிரதிபலிக்கும் தன்மையைப் பெயர்கள் பெற்றிருக்கின்ற பொழுது, பெயர் சூட்டுதல் என்னும் நிகழ்ச்சி இந்தியச் சமூகத்தில் தனிநபர்களின் / தனித்த சாதிகளின் சுதந்திர உரிமைக்குட்பட்டதாக இருந்திருக்கிறதா? அல்லது புறக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக இருந்திருக்கிறதா? ஆம் என்றால் அப்புறக் கட்டுப்பாடு எது? என்ற கேள்விகள் இவ்விடத்தில் தவிர்க்க இயலாததாய் எழுகிறது.  இந்தியாவிலுள்ள சாதிகளின் தொழில், உணவுப்பழக்கம், ஆண், பெண் உறவு என சகலத்திற்கும் கறரான சட்டங்களை வகுத்தளித்திருக்கும் மநு நால்வருணத்திற்குள்ளிருக்கும் ஒவ்வொரு பிரிவினர்களுக்கும் வழங்கியிருக்கும் பெயர் என்ற அடையாளச்சீட்டு: பிராம்மணன் பெயர் மேன்மையைக் குறிக்கும் ‘சர்மன்’, க்ஷத்திரியனுக்குப் பலத்தைக் குறிக்கும் ‘வர்மன்’, வைசியனுக்கு வளத்தைக் குறிக்கும் ‘பூபதி’, சூத்திரனுக்கு பணி விடையைக் குறிக்கும் ‘தாசன்’. (திருலோக சீதாராம், 2000:14).  மநுவின் இச்சட்டம், பெயரிடுதல் என்பது மநு என்ற புறக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாயிருந்திருக்கிறது என்பதையே தெளிவுபடுத்துகிறது.       

நால்வருண அமைப்பில் இடம்பெற்றிராத உச்சபட்ச தீண்டாமைக் கொடுமைக்குள்ளான மக்கட்பிரிவினர், இந்த அடையாளச்சீட்டினைச் சூட்டிக் கொள்வதற்கு உரிமை மறுக்கப்பட்து.  சாதிக்கு புறத்தேயுள்ளோர், பறையர், பஞ்சமர், தீண்டத்தகாதோர், ஹரிஜன் போன்ற பெயர்களால் அவர்களின் விருப்பத்திற்குட்பட்டோ அல்லது வெறுப்பிற்குள்ளாகியோ அழைக்கப்பட்டனர்.  தீண்டத்தகாதோர் என்ற பெயர் குறித்து அம்பேத்கர் கருதியது (அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், 1997: 467): ‘தீண்டப்படாதவர்’ என்ற பெயரானது ஒரு கெட்ட பெயராகும்.  அது அருவருப்பூட்டுகிறது; பயமுறுத்துகிறது; முடைநாற்றம் வீசுகிறது.  ‘தீண்டப் படாதவர்’ என்ற பெயரிலிருந்தே தீண்டப்படாதவர் குறித்து இந்துவின் சமூக அணுகுமுறை தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது.  ‘தீண்டப்படாதவர்’ எவ்வளவு தகுதி பெற்றிருந்த போதிலும்கூட, மக்கள் தீண்டத்தகாதவர் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தகுதிகள் குறித்து ஆராய விரும்புவதில்லை. இதனையொத்த கருத்தொன்று மகாத்மா காந்தியால் பரவலாக்கப்பட்ட ஹரிஜன் என்ற பெயர் மீதும் எழுப்பப்பட்டது.  பெயரில் என்ன இருக்கிறது? என்று தலைப்பிட்டு பெயர் குறிப்பிடப்படாத வாசகர் ஒருவர் மகாத்மா காந்தியிடம் எழுப்பிய கேள்வி: ஹரிஜன் பெயர் எவ்வளவு புனிதமாகயிருந்தாலும் சரி, அது யாரைக் குறிக்கிறதோ அவர்கள் மனத்தில் தாங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை அப்பெயரே புகுத்திவிடுகிறதென்று நான் நினைக்கிறேன்.  அவர்கள் எவ்வளவு முன்னேற்றமடைந்தாலும், ஹரிஜன் என்ற பெயராலேயே அழைப்பதாயிருந்தால், அத்தகைய எண்ணத்தை அவர்கள் மனத்திலிருந்து அகற்றவது மிகவும் கடினமாக இருக்கும்.  ஹரிஜன் என்றவுடனேயே, தீண்டாமை, தாழ்த்தப்பட்டயென்பவை தான் பாமர மக்களுக்குப்படும்.  இயற்கையிலேயே இத்தகைய எண்ணத்தைப் புகுத்தாமலும், எடுத்தவுடனேயே தாழ்த்தப்பட்ட நிலையைக் குறிக்காமலும் உள்ள ஒரு பெயரை உபயோகிப்பது நல்லதல்லவா? மற்ற வகுப்பினரையும் தழுவக்கூடிய ஒரு பெயரை உபயோகிப்பது உசிதமல்லவா? (தமிழ் ஹரிஜன், 1946: 5).  

இந்திய சாதி அமைப்பில்  ஒரு தனிநபர் அல்லது சாதியின் படிநிலை, சமூகத்தில் வழங்கப்பட்டிருக்கும் உரிமை, பணி போன்றவைகளைக் கண்டறிய, ஒரு வட்டத்திற்குள் ஒருவர் அல்லது சாதி இணைத்துக் கொள்ளப்படுவதற்கும் அல்லது ஒதுக்கப்படுவதற்கும் பெயர் ஒன்றே போதுமானதாக இருந்து வருகிறது.  உச்சபட்ட தீண்டாமைக் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மக்கள் காலனிய ஆட்சிக்காலத்தில் தங்களை சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்துக் கொள்வதற்காகப் போராடிய போது, பிறரால் வழங்கப்பட்ட பெயர்கள் அவர்களின் சமூக முன்னேற்றத்தில் இடர்ப்பாடுகளையே ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்திருக்கின்றனர். இப்பெயர் மாற்றப்பட்டாலொழிய அவர்களுடைய சமூக அந்தஸ்தில் உயர்வதற்கான சாத்தியப்பாடே இல்லை என்கிறார் அம்பேத்கர் (அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும் 1997: 468).  மானிடவியல் அறிஞர் ராபர்ட் டெலீஜ்,  சமூக ஒழுங்கில் முன்னேற விரும்பும் ஒரு சாதி தனது இலக்குகளையும் உரிமை கொண்டாடுதலையும் பிரதிபலிக்கும் பெயரைக் கைக்கொள்வது இயல்பானது என்கிறார் (Robert Deliege, 1997:123).  பெயர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதிப்பதும், புதிய பெயரினைச் சூட்டிக்கொள்வதும் அல்லது இருக்கின்ற பெயரை மாற்றுவதும் ஒரு சமூக இயக்கத்தின் நிகழ்ச்சிநிரலில் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது.  

தமிழ்ச்சமூகத்தில் நால்வருணம் இல்லாதிருந்தபோதும் கூட கம்மாளர் (அரசாணை எண். 1802) இடையர் (யாதவ மித்ரன், 1930) போன்ற சாதிகள் தங்கள் சாதியின் பெயரை விஸ்வபிராம்மணன், யாதவ் என்று மாற்றிக்கொண்டனர்.  தீண்டத்தகாதோர், பஞ்சமர், பறையர், சாதிக்கு புறத்தேயுள்ளோர் என அழைக்கப்பட்ட மக்கள், தங்கள் மீதான தீண்டாமை ஒடுக்குமுறைக்கெதிராய் காலனிய ஆட்சிக் காலத்தில் திரளான அம்மக்கள் ஆதி-இந்து (Nandini Gooptu, 2006), ஆதி-தம் (Ronki Ram, 2004), ஆதி-திராவிடர் போன்ற பெயர்களில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.  மண்ணின் மைந்தர்கள், ஆரியருக்கு முற்பட்டோர் என்ற உரிமையைக் கொண்டாட இவர்கள் ஆதி என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தினர் (Gail Omvedt, 1991: 18-19; Susan Bayly, 2000: 246).  பெயர் மாற்றத்தில் ஈடுபட்ட முன்னவர்கள் - அவர்கள் திராவிடர்களாகவே இருந்த போதிலும், பார்ப்பனியமயமாக்கலை முன்னெடுத்தனர். ஆனால், பின்னவர்கள் அதற்கு நேரெதிரான திராவிடத்தை கைக்கொண்டனர். 

பிளவுபடுதலுக்கு இரையாக்கப்பட்ட ஆதி-திராவிடர் 

சாதி இந்துக்கள் காலனிய ஆட்சிக்குப் பின்னர், சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக தங்களிடையேயுள்ள உட்சாதிப் பிரிவுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தங்களை தனித்த பெரும் சாதியாக மாற்றிக்கொள்ளும் சாதி அரசியலை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், அனைத்துச் சாதி இந்துக்களும் அடித்தட்டு மக்களுக்கு எதிராக ஒன்றிணைந்து கொள்கின்றனர்.  இவ்விணைவிற்கான வெளிப்படையான அல்லது ரகசியமான உரையாடல் எப்பொழுதுமே அவர்களிடம் இருந்து வருகிறது.  உச்சபட்ச தீண்டாமைக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள்மீது காலனிய ஆட்சிக்குப் பின்னர் சாதி இந்துக்களால் நடத்தப்பட்டு வரும் வன்முறைகளே இதற்கு சாட்சி.  ‘ஒன்றிணைதல்’ என்பது சாதி இந்துக்களின் அரசியலாக இருந்துவரும் சூழலில் வெளிப்படையாகவே பகையுணர்வுடன் ‘பிளவுபடுதல்’ தாழ்த்தப்பட்ட மக்களின் சமகால அரசியலாக இருந்து வருகிறது.  ஆதி-திராவிடர் என்ற பெயருக்கெதிராக அருந்ததியர் மற்றும் ம(ப)ள்ளர்  இயக்கங்களின் போராட்டங்கள் பிளவுபடுதல் அரசியலில் முதன்மைப் பாத்திரம் வகித்துவருகின்றனர்.  உண்மையில், ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி சமீப காலமாகவே பிளவுபடுதல் அரசியலின் முதன்மையான இரையாகிப் போனது என்றால் அது மிகையான மதிப்பீடு அல்ல.   

பஞ்சமர், பறையர்  ஆகிய பெயர்களுக்கு மாற்றாக ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சியை அறிவித்திருந்த போதிலும் அது ‘’பறையர்’’ எனப்படும் சாதிக்கு மட்டுமே உரியது; அது எங்களுடையது அல்ல என்று ம(ப)ள்ளர் மற்றும் அருந்ததியர் இயக்கங்கள் போராடி வருகின்றன.  தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கம் ‘’அரிஜன்’’ என்ற பெயரையே மீண்டும் அமுல்படுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் 1980களில் வழக்கு தொடர்ந்தது (தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கம், திருச்சிராப்பள்ளி, வெளியிட்ட துண்டறிக்கை.  இது வெளியிடப்பட்ட தேதி அச்சிடப்பட்டிருக்கவில்லை).  சுயசாதி அரசியல் வலுப் பெற்றிருக்கும் இக்காலத்தில் அட்டவணைச் சாதியினரை ஆதி-திராவிடர் என்றழைக்க வேண்டுமென்ற அரசாணை (எண். 13/ஆர்டி-அநமு 1/07-1, 07 பிப்ரவரி 2007) தமிழக அரசாங்கத்தால் தற்போது வெளியிடப்பட்டிருப்பது போராட்டத்தை மேலும் தூண்டியிருக்கிறது.  (தினமணி 17 நவம்பர் 2007: 5; தினகரன் 19 நவம்பர் 2007: 4). ‘ஆதி-திராவிடர்’ என்னும் சொல்லாட்சி பறையரை மட்டுமே குறிப்பதற்கு பறையர்களால் முன்மொழியப்பட்டு நடைமுறைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது என்பது அப்பெயரை எதிர்ப்பவர்களின் வாதம்.  Scheduled Caste’ என்ற ஆங்கிலச் சொல்லாட்சியை அட்டவணைச் சாதியினர் என்று மொழிபெயர்ப்பு செய்வதற்குப் பதிலாக ஆதி-திராவிடர் என பெயர் சூட்டியிருப்பது மாற்றப்படவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.  எனவே, இக்கட்டுரை இனிவரும் பகுதியில் விவாதிக்க இருக்கின்ற சிக்கல்கள்: காலனிய ஆட்சியாளர்கள் பஞ்சமர், பறையர் என்ற பெயர்களை எந்த மக்கட்பிரிவினரை சுட்டுவதற்காகக் கையாண்டனர்?  சென்னை மாகாண அவையில் முன்மொழியப்பட்ட ஆதி-திராவிடர் என்னும் பெயர், பறையருக்கு மட்டுமான மாற்றுப்பெயரா? அல்லது பறையரைப்போல் ஒடுக்குமுறைக்குள்ளான அனைத்து மக்கட்பிரிவினரையும் சுட்டுவதற்காக முன்மொழியப் பட்டதா?  ஆதி-திராவிடர் என்னும் சொல்லாட்சி அடையாளப் பெயராக மட்டுமே முன்மொழியப்பட்டதா? அல்லது ஆரியர்களுக்கு (பிராமணர்) முற்பட்டோர், சாதியற்றோர் என வரலாற்றையும், கருத்தியலையும் பிரதிபலிக்கும் நோக்கத்துடனும் அப்பெயர் முன்நிறுத்தப்பட்டதா? 

பஞ்சமர், பறையர் சுட்டுவது யாரை? 

ஆதி-திராவிடர் எதிர்ப்பாளர்கள் மட்டுமின்றி பொது எண்ணமும் பிரதிபலிப்பது: பறையருக்கான  மாற்றுப்பெயரே ஆதி-திராவிடர்.  இக்கருத்தினை உறுதிசெய்வதற்கு காட்டப்பட்டுவரும் ஒரேயொரு ஆதாரமான அரசாணை எண். 817 அறிவிப்பதானது : 1. தென்னிந்தியாவிலுள்ள பண்டைய திராவிட சமூகத்தைக் குறிக்கப் பயன்படுத்தப் படும் சொற்களான ‘பஞ்சமாஅல்லது ‘’பறயா’’ அரசு ஆவணங்களிலிருந்து நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக தமிழகத்தில் ஆதி-திராவிடர் என்றும், தெலுங்கு மாவட்டங்களில் ஆதி-ஆந்திரா என்ற சொற்களும் பயன்படுத்தப்பட வேண்டும். (That this Council recommends to the Government that the terms ‘Panchama’ or ‘Paraya’ used to designate the ancient Dravidian community in Southern India should be deleted from  Government records, etc., and the term ‘Adi-dravida’ in the Tamil and ‘Adi-andhra’ in the Telegu districtse substituted instead’) 

2. அரசாங்கத்திற்கு ‘ஆதி-திராவிடர்’,‘ஆதி-ஆந்திரர்’ என்றழைப்பதில் எதிர்ப்பு இல்லை.  ஆனால், பழைய அரசு ஆவணங்களை மறுமதிப்பு செய்ய இயலாது.  பஞ்சமர், பறையர் ஆகிய சொற்களுக்குப் பதில் ஆதி-திராவிடர், ஆதி-ஆந்திரர் மற்றும் திராவிட என்ற பெயர்கள் பயன்படுத்தப்படும்.   

மேற்குறிப்பிடப்பட்ட அரசாணை, ‘தென்னிந்தியாவிலுள்ள பண்டைய திராவிடச் சமூகத்தை’ குறிப்பதற்குப் பஞ்சமர், பறையர் ஆகிய பெயர்கள் பயன்படுத்தப் படுவதாகத்தான் கூறுகிறது; மாறாக ‘பறையர்’ என்றழைக்கப்படும் பிரிவினரையோ அல்லது ‘அவர்களை மட்டுமே’ குறிப்பதற்காகவோ அல்ல என்பது தெளிவு.  இருப்பினும்கூட அது பறையரை மட்டுமே குறிக்கப்பயன்படுத்தப்பட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.  இந்தியாவில் காலனிய ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியின் நிர்வாகத்தேவைக்கு சாதிகளைக் கணக்கெடுத்த பொழுது நால் வருணத்திற்குள்ளே இருந்தோரை குறிப்பிட்ட பெயரில் பதிவு செய்வதில் சிக்கல் எழுந்திருக்கவில்லை.  இவர்கள் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று மநு வரையறை செய்திருப்பது இச்சிக்கலற்ற தன்மைக்குக் காரணம்.  ஆனால், நால்வருணத்திற்கு வெளியே இருந்த மக்கள் பிரிவினரைக் குறிப்பாக உச்சபட்ச தீண்டாமைக் கொடுமையை அனுபவித்து வந்த மக்களை என்ன பெயரில் அழைப்பது என்ற சிக்கல் காலனிய ஆட்சியாளர்களின் முன்னெழுந்தது.  அவர்கள் இம்மக்களை ‘’பறையா’’, ‘’சாதிக்கு வெளியேயுள்ளோர்’’ என்றே அழைத்தனர் (Simon Charsley,1996: 5). 1871ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில்- பறையா, பள்ளன், சக்லெர் (சக்கிலியர்), தோட்டி போன்றோர் பறையாஸ் (Pariahs) என்பதின் உட்பிரிவு- என்றே ஆங்கிலேயர்கள் கருதியுள்ளனர் (Census of 1871, 1874:170).   1881ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதும் பள்ளர் மற்றும் சக்கிலியர் ‘’பறையா’’ என்றே வகைப்படுத்தப்பட்டனர்.  இது தவறு, அவர்கள் பறையரிலிருந்து வேறுபட்ட பிரிவினர் என்றும் அவர்களை தனித்தனியே வகைப்படுத்த வேண்டும் என்றும் உணர்ந்தனர் (F.A. Nicholson,1887). 1891ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் பள்ளர்கள் உட்பிரிவு வாரியாக கணக்கெடுக்கப்பட்டிருக்கின்றனர் (Harold A.Stuart,1891:247). ‘பஞ்சமா’ என்ற பெயர் 1893ல் பயன்படுத்தப்பட்டுள்ளது (Simon Charsley, p.5).  இது பறையர், சக்கிலியர், குறவர், வில்லியர் போன்றோரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது (Aloysius, 1998: 152). கர்நாடகாவைச் சேர்ந்த ஹோலியர்கள் தங்களுக்குப் பஞ்சமர் என்ற பெயரினை வழங்கியதற்காக சென்னை அரசாங்கத்திற்கு நன்றி செலுத்தியிருப்பது இதற்கான எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம் (Census of India, 1931: 342).  1901, 1911 மற்றும் 1921 கணக்கெடுப்புகளில் பறையன், பள்ளன், சக்கிலியன் என்று தனித்தனியே கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது.  இருப்பினும், பறையா என்ற சொல்லை ‘பறையன்’ என்ற பிரிவினரையும் இதர ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரையும் சுட்டுவதற்குப் பயன்படுத்துவதாக 1930களிலும் அவர்கள் கூறியிருக்கின்றனர் (அரசாணை எண். 4554).  ஆதி-திராவிடா என்ற மாற்றுப்பெயர் அரசு ஆவணங்களில் பயன்படுத்தப்பட  வேண்டுமென்ற அரசாணை அமலுக்கு வந்த பின்னர் 1931ம் ஆண்டு கணக்கெடுப்பில் ஆதி-திராவிடர், அருந்ததியர், சக்கிலியன், தேவேந்திரகுலத்தான், குடும்பன், மாதாரி, மாதிகா, மாலா, பள்ளன் மற்றும் பறையன் என்ற பெயர்களிலும் அம்மக்கள் பதிவு செய்யப்பட்டிக்கின்றனர் (Census of India 1931, Vol.XIV, Part.II). மேற்காட்டப்பட்ட ஆதாரங்கள் பஞ்சமர், பறையர் ஆகிய சொல்லாட்சிகளைக் காலனிய ஆட்சியாளர்கள் பறையரை மட்டுமின்றித் தீண்டாமைக் கொடுமைக்குள்ளான இதர மக்களையும் குறிப்பதற்கு பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை உறுதி செய்கிறது. ஆகவே, ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி பறையருக்கு மட்டுமான மாற்றுப்பெயரல்ல.  இருப்பினும், ஆதி-திராவிடா என்ற பெயர் அமலுக்கு வந்ததற்கான சுருக்கமான போராட்ட வரலாற்றுடனும், அப்பெயரை மையப்படுத்தி நடைபெற்ற விவாதத்தின் ஊடாகவும் அப்பெயர் பறையருக்கு மட்டுமானதா என்பதைக் காண்பது இங்கு அவசியமாயிருக்கிறது. 

ஆதி-திராவிடர்: 30 ஆண்டுப் போராட்டம் 

பஞ்சமர், பறையர் ஆகிய பெயர்கள் நீக்கப்பட்டு ஆதி-திராவிடர் என்று மாற்றம் செய்வதற்கான போராட்டம் 1892-ஆம் ஆண்டு முதலே நடைபெறத் தொடங்கியிருக்கிறது.  பி.வி. சுப்ரமண்யம் பிள்ளை, வி. முகுந்து பிள்ளை, முனுசாமி பிள்ளை, ராஜரத்னம் பிள்ளை, சண்முகம் பிள்ளை, ஒங்காரம், முத்துகிருஷ்ண பிள்ளை, திருப்புகழ் அம்மாள், வேணுகோபால் பிள்ளை, வாசுதேவ பிள்ளை மற்றும் எம்.சி. ராஜா ஆகியோர் மாண்றேகு செம்ஸ்ஃபோர்டை சந்தித்து பெயர் மாற்றக் கோரிக்கையை முன்வைத்தனர்.  ஜனவரி 1922 ஆண்டில் 50,000 பேர் பங்கேற்ற பேரணி நடத்தப்பட்டது.  சென்னை மாகாண அவை உறுப்பினர் வீரையன் கோயம்புத்தூரில் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். மாநாடுகளும் கூட்டங்களும், தஞ்சாவூர், மலபார், திண்டுக்கல், செங்கற்கட்டு, வட மற்றும் தென் ஆற்காடு, திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, திருநெல்வேலி, பங்களூர் மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டிருப்பது ஆதி-திராவிடா பெயருக்கான போராட்டம் அன்றைய சென்னை மாகாணத்தையும் கடந்து நடந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.  இதற்கென பல அச்சிடப்பட்ட துண்டறிக்கைகளும் வெளியிடப்பட்டன. சுமார் 30 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் இறுதியாக, அரசாணை 817க்கான தீர்மானம் சென்னை மாகாண அவையில் எம்.சி.ராஜா 20 ஜனவரி 1922 அன்று முன்மொழிந்தார் (MLCD, 20 ஜனவரி 1922: 2047). உண்மையில், ஆதி-திராவிடர் சொல்லாட்சிக்கான போராட்டத்தில் பறையர் என்றழைக்கப்படும் மக்கள் அதிகம் பங்கேற்றிருக்கலாம்.  அவ்வாறென்றால் பறையருக்கு மட்டுமானது தானே ‘ஆதி-திராவிடர்’ என்று வாதிடலாம். இவ்வாதம் ஏற்றுக்கொள்ளப் படுவதை குறுக்கிடும் கேள்வி: ஆதி-திராவிடர் என்ற பெயரினை பறையர்கள் தங்களுக்கு மட்டுமே உரியதென உரிமை கோரினரா?  இச்சிக்கலுக்கான தீர்வுக்கு, சென்னை மாகாண அவையில் ஆதி-திராவிடர் பெயர் மாற்றத்தை முன்வைத்தவர்களின் விவாதத்தைக் காண வேண்டும்.   

ஆதி-திராவிடர்: சாதியற்றோரின் குறியீடு

பெயர் மாற்றத்திற்காக எம்.சி.ராஜா முன்வைத்தக் காரணங்கள்:  நாங்கள் நீண்டகாலமாக பறயாஸ் என்று அழைக்கப் படுகிறோம்.  இப்பெயரின் தோற்றம் என்னவாக இருந்தபோதிலும் இது- மகிழ்ச்சியற்ற, புனிதத்திற்கும் மரியாதைக்கும் எதிரானவற்றையே- வெளிப்படுத்துகிறது.  சுயமரியாதைக்கான எண்ணம் எழுந்த போது நாங்கள் இப்பெயரினை எதிர்த்து ஒரு நல்ல பெயருக்காகப் போராடினோம்.  எங்கள் மீது அக்கறை கொண்ட சில இந்துக்கள் பஞ்சமர் என்ற பெயரினைப் பரிந்துரைத்தபோது பறையருக்குப் பதிலாக அதனை ஏற்றுக்கொண்டோம்.  எங்கள் சுயமரியாதை அதிகரித்தபோது, பஞ்சமர் என்ற பெயரின் ஆபத்தையும் உணர்ந்தோம்.  சாதியை நிராகரிக்கும்- எங்களின் இனத்தையும் தோற்றத்தையும் புவியியல் நிலையையும் தெரிவிக்கும்- ஒரு பெயரே எங்களுக்கு வேண்டும்.  இம்மண்ணின் உண்மையான மைந்தர்கள் நாங்களே. எங்களை நாங்கள் ஒருபோதும் சாதியோடு இணைத்துக்கொண்டதில்லை.  எங்களின் சங்கத்தை சிலர் பறய மகாஜன சபா என்று அழைக்க நினைத்தபோது ‘ஆதி-திராவிட சபா’ என்று அழைக்கவே நாங்கள் தீர்மானித்தோம். ஆதி-திராவிடர்கள் (Adi-Dravidas) அல்லது உண்மையான திராவிடர்கள் (Original Dravidas) என்று அரசாங்கத்தின் அனைத்து ஆவணங்களிலும் பதிவுசெய்து எங்களுடைய சமூகம் மரியாதை பெறுவதற்கு உதவும்; இது எங்களைத் திராவிடர்களான பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு இணையாக நிறுத்தும் (மேலது, 2048, 2051).    

எம்.சி.ராஜாவின் உரை, ஆதி-திராவிடர் என்ற பெயர் பறையர்களைச் சுட்டுவதற்கு முன்மொழியப்பட்டதாகவே கொள்வோம்.  சாதியை புறக்கணிப்பவர்களாகத் தங்களை முன்னிறுத்தியிருந்த அவர்கள் ஆதி-திராவிடர் என்ற பெயரைப் பறையர்களுக்கு மட்டுமென்றே சுருக்கிக்கொண்டார்களா? அல்லது தங்களையொத்த ஒடுக்குமுறையை அனுபவித்து வந்த இதர சாதியினருக்கும் விரித்துக் கொண்டனரா?  இவ்விடத்தில் பெயர் மாற்றத்திற்கான விவாதத்தில் பங்கேற்ற எஸ்.சோமசுந்தரம் பிள்ளை முன்வைத்த கருத்துக்கள்  கவனிக்கத்தக்கவை:  ஆதி-திராவிடர் என்ற சொல் தென்னிந்தியாவின் பண்டைய மக்கள் என்ற பொருளைத் தருகிறது.  ‘பறையர்’ என்ற வார்த்தை மரியாதைக்குரிய பொருளைப் பெற்றிருந்தது. ‘பறையர்’ என்பதின் பொருள் அரசனின் ஆணைக்கிணங்க போர் அறிவிப்பு செய்பவன்.  எதிரிகளால் எங்கள் நாடு பிடிக்கப்பட்டபோது நாங்கள் வறுமைக்குள்ளானோம்; பெயரும் திரிபுக்குள்ளாகி மதிப்பற்றதாக்கப்பட்டது. அனைத்து மக்களுக்கும் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் ஆதி-திராவிட மக்கள் பறையர் என்ற பெயர் நீக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர்.  ஆனால், ஆதி-ஆந்திரர் என்ன பொருளைத் தருகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.  சிலர் ஆதி-மலையாளி, ஆதி-கர்நாடகா என்று அழைக்கப் படுவதை விரும்பலாம்.  இவையனைத்தும் திராவிட மொழிகளே (மேலது, பக். 2050). ஆதி-திராவிடர் என்ற அழைக்கிறபொழுது அது தெலுங்கு, மலையாளி, கர்நாடகம் மற்றும் தமிழ் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.  சோமசுந்தரம் பிள்ளையின் உரை இரண்டு முரணற்ற பொருளைத் தருகிறது: 1.பறையர் ஆதி-திராவிடர் என்றழைக்கப்பட வேண்டும். 2. ஆதி-திராவிடரென்றால் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் மக்களையும் குறிக்கும்.  இவ்விருவர்களின் உரையும் தரும் தீர்க்கமான பதில்: ஆதி-திராவிடா என்ற பெயர் பிறரால் சூட்டப்படாமல் அம்மக்களாகவே தாங்கள்தான் பண்டைய திராவிடர்கள் என்ற வரலாற்று உணர்வுநிலையோடு தெரிவு செய்து கொண்ட பெயர்.  பறயாவுக்கு அல்லது பறையர்களுக்கு என்று மட்டுமல்லாமல் தங்களைப்போல் ஒடுக்கு முறைக்குள்ளாகும் திராவிட மொழிகளாகிய தெலுங்கு, மலையாளம் மற்றும் கர்நாடகம் பேசும் மக்களுக்கும் அப்பெயர் வேண்டும் என்பதுதான்.  எனவே, ஆதி-திராவிடா என்ற பெயர் பறையர்களுக்கும் மட்டுமல்ல என்பதை அறுதியிட்டுக் கூறலாம்.   

இம்முடிவு உதாசீனம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பெயரினை எதிர்ப்பவர்கள் தங்களுடைய சாதிப்பெயர் அந்த அரசாணையில் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை என்று வாதிடலாம்.  எனவே, ஆதி-திராவிடர் பறையருக்கு மட்டுமல்ல என்ற வாதத்தை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரத்தை முன்வைப்போம். ஆர்.வீரையன், சென்னை மாகாண அவை செயலாளருக்கு 29 ஆகஸ்டு 1924 அன்று அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: பறையர், பள்ளர், சக்கிலியர் மற்றும் தொம்பா போன்ற பெயர்கள் பொது ஆவணங்களில் இடம் பெறக் கூடாது; அவற்றிற்குப் பதிலாக ஆதி-திராவிடா மற்றும் ஆதி-ஆந்திரா ஆகிய பெயர்கள் தான் இடம்  பெற வேண்டும் என்பது குறித்துத் தீர்மானம் வரும் சென்னை மாகாண அவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.  இத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப் பட்டு ஏற்கனவே அமுல்படுத்தப்பட்ட எண். 817 சட்டம் (பொது) 25 மார்ச் 1922 என்ற அரசு ஆணையோடு இணைத்து அமல்படுத்தப்பட்டது (அரசாணை எண்.3571).  இவ்வாணை, ஆதி-திராவிடா என்ற பெயர் பறையருக்கு மட்டுமல்லாது பள்ளர், சக்கிலியர், மாதிகா மற்றும் தொம்பா போன்ற சாதிகளுக்கும் உரியது என்பதை உறுதி செய்கிறது.  கேரளாவில் தீண்டாமைக் கொடுமைக்குள்ளான செருமர்கள் (புலையர்) உட்பட இதர மக்கள் தங்களை ஆதி-திராவிடர் என்று அழைக்கத் தொடங்கினர் என்பதும் இவ்விடத்தில் கவனிக்கப்பட வேண்டும் (Census of India 1931;p.335).  ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி ஒரு குறிப்பிட்ட சாதிக்கு, குறிப்பாக அப்பெயரை பல போராட்டங்களுக்கிடையே அமலுக்கு கொண்டுவந்த பறையர்களுக்கு மட்டுமின்றி, உச்சபட்ச தீண்டாமைக் கொடுமைக்குள்ளான மக்களுக்கும் விரித்துக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.   

இச்செயல் ஆதி-திராவிடர், ‘பெயர்’ என்ற தன்மையைக் கடந்து ஒதுக்குமுறைக்குள்ளான மக்களைத் தென்னிந்தியாவின் பண்டைய குடிகள் என்ற வரலாற்றினை உரிமை கொண்டாடியுள்ளது.  திராவிட மொழிக்குடும்பம் என்ற அடையாளத்துக்குள் திரளுவதற்கு முயற்சித்திருக்கிறது.  சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தை வலியுறுத்தும் சாதியற்றோராக விரிந்திருப்பதானது ஆதி-திராவிடர் கருத்தியல் தளத்திற்குள்ளும் சென்றிருக்கிறது என்பது தெளிவு.  எனவே, ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி பறையர்களுக்கு மட்டுமே உரியது அல்ல, அது பறையர்களால் முன்மொழியப்பட்டிருந்த போதிலும்கூட.  இதனை வேறு வார்த்தையிலும் கூறலாம்: ஆதி-திராவிடா என்ற சொல்லாட்சி தங்களுக்கு மட்டுமானது என்று ஒருபோதும் பறையர்கள் உரிமை கொண்டாட இயலாத அதே சமயத்தில், பிறரும் அதனை பறையர்களுக்கு மட்டுமேயானது என வாதிடவும் இயலாது.  காரணம், சமத்துவத்திற்கான ஒரு கருத்தியல் ஒருபோதும் ஒரு சாதிக்கு மட்டுமே உரியதாக இருக்கமுடியாது, அக்கருத்தியல் ஒரு குறிப்பிட்ட சாதியினரால் உற்பத்தி செய்யப்பட்ட போதிலும்கூட.    

பறையர், பள்ளர், சக்கிலியர்: இழிபெயர்களுக்கெதிரான போராட்டம்  

தங்களால் இழிபெயர்கள் எனக் கருதப்பட்டவற்றை யார் பயன்படுத்தினாலும் அதனை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.  பறையர் என்ற சொல்லைப் பயன்படுத்துபவர்களை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது (Aloysius, 1998: 166).   கட்டுரையில் மேற்குறிப்பிட்ட அரசாணை அமலுக்கு வந்த பின்னர், அரசு ஆவணங்களில் பறையர், பள்ளர், சக்கிலியர், மாதிகா மற்றும் தொம்பா போன்ற பெயர்கள் இடம்பெற்றிருப்பதை எதிர்த்து சென்னை மாகாண அவைக்குள் குரலெழுப்பப்பட்டிருக்கிறது.  சில எடுத்துக்காட்டுக்கள்:

1. நீதிமன்ற அழைப்புக் கட்டளை மற்றும் நீதிமன்ற விசாரணையின்போது பறையன் என்ற பெயர் குறிப்பிடப் படுவதை சென்னை மாகாண அவையில் எதிர்த்தார் வீரையன்.   அவ்வாறு குறிப்பிடுவது தவறென்ற சட்ட உறுப்பினர் (சென்னை மாகாண அவையில் Law Member பதவியில் இருந்தவரை சட்ட உறுப்பினர் என இங்குக் குறிப்பிடப்படுகிறது) அதன் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார் (MLCD,Vol.XXIV1925:767-768). 

2. மேட்டுப்பாளையம் ஒன்றிய வாரியம் நாகன் என்பவருக்கு கொடுத்த அறிக்கையொன்றில் ‘சக்கிலியன்’ என்று குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய வீரையன், அச்செயலை எதிர்த்தார்.  இத்தகைய பெயர் பயன்படுத்தக்கூடாது என்று அரசாணை இருந்தபோதும் இன்றும் அப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது; அரசாங்கம் அவ்வாணை அமல்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்குமா என்ற வினவினார்.  உள்ளாட்சித்துறை அமைச்சர் பனகல் அரசர், ‘இதில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது.  அரசாங்கம் அத்தகைய பெயர்களைப் பயன்படுத்தாது என்று மட்டுமே கூறியது.  பிறர் அப்பெயர்களை பயன்படுத்தினால் சம்பந்தபட்டவர்களே நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார். ஆர்.வீரையன், ‘உள்ளாட்சி அமைப்பு அச்சிட்ட அறிக்கையில்தான் இவ்வாறு உள்ளது; தனிநபர்கள் அதைப் பயன்படுத்தவில்லை’ என்றார்.  பனகல் அரசர், ‘உள்ளாட்சி அமைப்புகளின் ஆவணங்கள் அரசாங்க ஆவணங்கள் அல்ல’ என்றார்.  ‘உள்ளாட்சி அமைப்புகள் அரசாங்கத்தின் ஒரு அங்கம் இல்லையா’ என்ற கேள்வியை எழுப்பினார் ஆர்.வீரையன்.  இறுதியில், குறிப்பிட்ட சம்பவத்தை கூறினால், ‘அது குறித்து உள்ளாட்சி அமைப்புகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்’ என்றார் பனகல் அரசர்.  வீரையன் மீண்டும் மேட்டுப்பாளையம் சம்பவத்தை குறிப்பிட்டுக் கூறினார் (MLCD, Vol. XXIX, 1926: 590-591) 

3. நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் பறையர் பள்ளர் சக்கிலியர் பயன்படுத்தப்படுவது குறித்து சட்ட உறுப்பினர் பதிலளிக்குமாறு வீரையன் கோரினார்.  குறிப்பிட்ட சம்பவங்களைக் கவனத்திற்கு கொண்டு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்ட உறுப்பினர் தெரிவித்தார்  (MLCD, Vol.XXX, 1926:248).  வீரையன் சென்னை மாகாண அவைக்குள் பறையன், பள்ளன், சக்கிலியன் போன்ற பெயர்கள் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து போராடியதற்கு மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்கள் போதுமானது.  இதிலிருந்து அறிந்துகொள்ள வேண்டியது: தீண்டாமைக் கொடுமைக்குள்ளான மக்களின் பிரதிநிதிகளாகச் சென்னை மாகாண அவை உறுப்பினர்களானோர் பறையர், பள்ளர், சக்கிலியர் என்று பிளவுபடுத்தாமல் அனைவரையும் ஆதி-திராவிடர்களாகவே கருதினர் என்பது தெளிவு.  

ஆதி-திராவிடர்: சாதிக்கெதிரான சமத்துவக் கருத்தியல் 

கட்டுரையில் காட்டப்பட்டிருக்கின்ற மேற்கோள்கள் பஞ்சமர், பறையர் ஆகியவற்றிற்கு மாற்றாக ஆதி-திராவிடர் என்ற பெயர், பறையர்களின் போராட்டத்தினால் விளைந்திருப்பினும்கூட, அது பறையர்களுக்கு மட்டுமே உரியது அல்ல; மாறாக உச்சபட்சத் தீண்டாமைக் கொடுமைக்குள்ளான பள்ளர், சக்கிலியர் போன்ற சாதிகள் அனைவருக்குமான பெயராகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.  ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி தீண்டாமை ஒடுக்குமுறைக்குள்ளான மக்களின் பெயராக மட்டுமின்றி அது -சாதியைப் புறக்கணிப்பவர்கள், சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்துபவர்களின்- பெயராக இருந்திருக்கிறது. மேலும், அப்பெயர் திராவிடர்களின் ஒற்றுமைக்கானதாகவும் ஆரியர்களுக்கு (பார்ப்பனர்கள்) எதிரானதாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  ‘ஜாதிபேதத்துக்கும் ஜாதிக் கட்டுப்பாட்டுக்கும் உட்படாதவர்களும், எக்காலத்துக்கும் யதார்த்தமும் உறுதியும், தருமசிந்தனையும் குடிகொண்டவர்களாகிய நம்மவர்கள்’ என்ற பறையர்களின் பகிரங்க அறிவிப்பு, ஆதி-திராவிடர் சொல்லாட்சியின் அரசியலுக்கு சாட்சி (திராவிட மகாஜன சங்கம் மற்றும் மெட்ராஸ் பறையா மகாஜன சங்கம் 1916 ஆண்டில் வெளியிட்ட துண்டறிக்கை).   ஆதி-திராவிடாவின் இலக்கு, திராவிடர்களான பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு இணையாகத் தாங்கள் வரவேண்டும் என்பதே, மாறாக இந்துமயமாக்கல் (பார்ப்பனீயம்) அல்ல.  இந்த லட்சியத்திற்கு பறையர், பள்ளர், சக்கிலியர் போன்ற மக்களை ஒரு குடையின் ஒருங்கிணைக்கும் முயற்சியே ஆதி-திராவிடர் என்ற கருத்தியல்.  இக்கருத்தியலை முன்னெடுத்தவர்கள் பெரும்பாலும் பறையர் பிரிவினைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவ்வர்க்கம் அப்பெயரை தங்களுக்கு மட்டுமே உரியது என்று உரிமை பாராட்டாதிருந்த போதிலும் கூட, அது பறையர் சாதிக்கான மாற்றுப்பெயர் என்ற பார்வை தவறெனக் கட்டுரையில் மெய்ப்பிக்கட்டிருக்கிறது.  

சமத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்குமான கருத்தியலின் உருவாக்கத்தில் அல்லது அக்கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை நிறுவுவதற்காகப் போராடும் ஒரு இயக்கத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர் பங்கேற்கின்ற பொழுது, அம்மக்கட் பிரிவினர் அல்லாத பிறர் அக்கருத்தியலை அல்லது அவ்வியக்கத்தை அதில் பங்கேற்றிருக்கின்ற சாதிக்கு அல்லது சாதிகளுக்கு மட்டுமேயானது என்று பார்ப்பதும் அதனை பரப்புவதுமான செயலில் இறங்குவது இந்திய சமூக அமைப்பில் புதிதானதொன்று அல்ல.  இடதுசாரிகள் தமிழகத்தில் விவசாயத் தொழிலாளர்களை ஒன்றிணைத்துப் போராடிய போது அவ்வியக்கத்தில் கூலித்தொழிலாளிகளாகவும் பண்ணையடிமைகளாகவுமிருந்த பறையர், பள்ளர் அதிகமாக இருந்ததால் இடதுசாரி இயக்கம் ‘பறையன் கட்சி’, ‘பள்ளன் கட்சி’ என்றே பிறரால் அடையாளப்படுத்தப்பட்டதனை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும் (Saraswathi Menon, 1979:408). ஆதி-திராவிடர் என்ற கருத்தியலைப் பறையர்களுக்கான பெயர் என்று இன்று அடையாளப்படுத்தப்படுவதற்கும் இடதுசாரி இயக்கம் ‘பறையன் கட்சி’, ‘பள்ளன் கட்சி’ என்று அன்று அடையாளப்படுத்தப்பட்டதற்கும் இடையில் காலம் மட்டும் வேறுபாடே தவிர, பார்வை ஒன்றுதான்.  இந்நிலையை இவ்வாறு கூறலாம்: தமிழக/ இந்திய சாதிய சமூக அமைப்பில் அதனை புறக்கணித்துவிட்டு, சமத்துவத்தை வலியுறுத்தும் முற்போக்கு கருத்தியலை அல்லது இயக்கத்தை ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே என்று அடையாளப்படுத்துவதன் மூலமும் ஏற்றத்தாழ்வான சாதிய அமைப்பு தொடர்ச்சியாய் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.    

 (கட்டுரையை வாசித்து ஆலோசனை வழங்கிய  பேராசிரியர்கள் ஆ.தனஞ்செயன், சி.லக்ஷ்மணன், ஆய்வு மாணவர் ராமஜெயம் ஆகியோருக்கு நன்றி)     

 1. முதன்மைச் சான்று

 GO. 817, Law (General), 25 March 1922.

GO. 3571, Law (General), 16 December 1924.

GO. 4554, Law (General), 28 October 1930.

GO. 1802, Law (General), 20 April 1931

GO. 1458, Law (General), 11 April 1932. 

MLCD, 20 January 1922

MLCD, Vol. XXIV 1925.

MLCD, Vol. XXIX, 1926.

MLCD, Vol. XXX, 1926.

MLCD, 05 August 1932. 

Census of the Madras Presidency 1871 Vol.1(Madras: 1874)

Census of India 1931 Vol. XIV, Part. I

Census of India 1931, Vol. XIV, Part. II

யாதவமித்ரன் (மே-ஜூன், 1930).

தமிழ் ஹரிஜன் தொகுதி 14 (ஏப்ரல்: 1946). 

தினமணி, 17 நவம்பர் 2007.

தினகரன், 19 நவம்பர் 2007.  

2. இரண்டாம் நிலைச் சான்று

Aloysius, G. Religion as Emancipatory Identity: A Buddhist Movement Among the Tamils Under Colonialism (New Delhi: New Age, 1998). 

Bayly, Susan. Caste, Society and Politics in India (Cambridge: Cambridge University Press, 2000). 

Charsley, Simon. “Untouchable”: What is in a Name?’, The Journal of the Royal Anthropological Institute, Vol. 2, No. 1 (March: 1996). 

Deliege, Robert.  The World of Untouchables: Paraiyars of Tamil Nadu (Delhi: Oxford University Press, 1997). 

Gooptu, Nandini. Swami Acchutanand and the Adi Hindu Movement (New Delhi, Critical quest, 2006). 

Menon, Saraswathi. ‘Historical Development of Thanjavur Kisan Movement: Interplay of Class and Caste Factors’, EPW,  Vol. XIV, Nos. 7 and 8 (1979). 

Nicholson, F.A. Manual of the Coimbatore district in the Presidency of Madras (Madras: Government Press, 1887). 

Omvedt, Gail. ‘The Anti-Caste Movement and the Discourse of Power’, Race and Class, Vol. 33, No. 2 (1991).

 Ram, Ronk. ‘Untouchability, Dalit Consciousness, and the Ad Dharm Movement in Punjab’, Contributions to Indian Sociology, Vol. 38, No. 3 (2004).

 Stuart, Harold A. Census of India 1891 Vol. XIII.

டாக்டர் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும் தொகுதி 10 (புது தில்லி: டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், 1997). 

சீதாராம், திருலோக, மனுதர்ம சாஸ்திரம் (சென்னை: அலைகள், 2000).

 

-       புதுவிசை, இதழ் 19, ஜன-மார்ச் 2008


Saturday, April 25, 2020

அழகின் அரசியல் - பிரளயன்


ழைய தமிழ்த்திரைப்படங்களான எம்.ஜி.ஆர் நடித்த வேட்டைக்காரன், சிவாஜி நடித்த ‘திருவிளையாடல்படங்களைப் பார்த்திருக்கிறீரா? இவ்விரு படங்களிலும் ‘சாவித்திரிதான் கதாநாயகி இப்படங்களில் நடிக்கிற போது சாவித்திரி சதைபோட்டு பூசிய உடம்பாய் பார்க்க சற்று எடை கூடியவராய்த் தெரிவார். எனினும் ரசிகர்கள் இவற்றையெல்லாம் பொருட்படுத்தவேயில்லை. இப்படங்களை பெருத்த வெற்றி பெறச்செய்தனர்.

அதேபோல், 70களில் வெளியான கே.ஆர்.விஜயா நடித்த படங்களும் இப்படித்தான். சிவாஜியுடன் நடித்த ‘பாரதவிலாஸ்,எம்.ஜி.ஆருடன் நடித்த ‘நல்லநேரம்இவற்றிலிலெல்லாம் கே.ஆர்.விஜயா, இரட்டைநாடி உடம்புள்ளவராய் சற்று எடைகூடியவராய்த்தான் தெரிவார். பாரதவிலாஸ் படத்தில் தம்பதியரான சிவாஜி-கே.ஆர்.விஜயாவுக்குள் பலத்த வாக்குவாதம் நடப்பதாக ஒரு காட்சி;அதில் இப்படி ஒரு வசனம் வரும். சண்டையின் உச்சக்கட்டத்தில் கே.ஆர்.விஜயா, “மொத்தத்துல என்னை உங்க ளுக்குப் பிடிக்கல அவ்வளவுதானே?” என்று கத்துவார். பதிலுக்கு சிவாஜி அவரை ஏறஇறங்கப் பார்த்துவிட்டு கைகளால் அவர் உருவத்தை பாவனை செய்து காட்டியபடி, “ஆமாம் மொத்தத்துல உன்னைப்பிடிக்கல!” என்பார். தியேட்டர் முழுதும் ’கொல்லெனச் சிரிக்கும். அவரது உருவத்தை கிண்டல் செய்கிற மாதிரி காட்சிகள் இருந்தாலும்கூட மக்கள் அத்திரைப்படங்களில் கே.ஆர்.விஜயாவை ரசித்தனர்.

சாவித்திரிக்கும் கே.ஆர்.விஜயாவுக்கும் அந்தக்காலத்தில்  மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு. நான் கல்லூரியில் படிக்கிறபோது எங்களுக்கு ஆங்கில ஆசிரியர் ஒருவர் இருந்தார், அவர் ஓர் ஆங்கிலோ இந்தியர். தமிழை தட்டுத்தடுமாறித்தான் பேசுவார். உலக சினிமாவைப் பற்றி கொஞ்சம் ஞானம் உள்ளவர் அவர். வகுப்பறையில் அத்திரைப்படங்களைப் பற்றியெல்லாம் பேசுவார். எப்போதாவது தமிழ்ப்படங்களைப்பற்றி பேசினால் சாவித்திரியைப் பற்றி தான் அதிகம் பேசுவார். சாவித்திரியின் தீவிர ரசிகர் அவர். சாவித்திரி நடிக்கிற படங்களையெல்லாம் மூன்று நான்கு முறை பார்த்துவிடுவாராம். சாவித்திரியை அந்தக்காலத்து ஹாலிவுட் நடிகை ‘கேத்தரின் ஹெப்பர்ன்னோடு ஒப்பிட்டுப்பேசுவார். இந்தக் கதைகளையெல்லாம் அவர் எங்களிடம் பேசுகிறபோது சாவித்திரி ஃபீல்டிலேயே இல்லை என்பது வேறு விஷயம். அது ஸ்ரீதேவி ஸ்ரீப்ரியா காலம்.

இன்று சாவித்திரி போலவோ, கே.ஆர்.விஜயா போலவோ தோற்றமுள்ள ஒருவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்துவிட முடியுமா? இந்தக் கேள்வியே பலருக்கு நகைப்புக்கிடமாகத் தோன்றலாம். ஏனெனில் காலம் அப்படி மாறிவிட்டது. அழகு பற்றிய கருத்தாக்கங்களும் மாறிவிட்டன. பென்சில் போன்ற குச்சியான உடல்வாகு, இடுப்பு எலும்புகள் தெரிய ஒட்டிய வயிறு, காலர் எலும்புகள் துருத்திக்கொண்டிருக்கும் கழுத்து, தேவையான இடங்களில் மட்டும் மிதமான சதைப்பிடிப்பு.. இவைதாம் இன்று அழகிய பெண்ணின் இலக்கணங்கள் என்றாகிவிட்டது. ’ஒல்லிப்பிச்சான், ’எலும்பிஎன்று சொல்வதெல்லாம் பழைய கதை. இன்று இவைதாம் அழகிய பெண்ணின் லட்சணங்கள்.

சற்று பருமனாக இருந்துவிட்டாலோ லேசாக கொஞ்சம் வயிற்றில் சதை போட்டு விட்டாலோ பெண்கள்! அதுவும் படித்த நடுத்தரவர்க்கத்துப் பெண்கள் என்னமாய்த் தவித்துப் போகிறார்கள் தெரியுமா? ஹெல்த் கிளப்பிற்குப் போவது, ஃபிட்னஸ் கிளப்பிற்கு போவது, மருத்துவ ஆலோசனைகள் பெறுவது, டயட்டில் இருக்கிறேனென்று பட்டினி கிடப்பது எனப் பலவிதமான சாகஸங்களில் ஈடுபடுகிறார்கள். உடல் நலத்தைப் பேணுவது என்பது இங்கு தோற்றத்தைப் பேணுவது என்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. இது ஒருபக்கம், மறுபக்கத்தில், தனது உடல் பருமன் பற்றி கவலைப்படாமல் பொருட்படுத்தாமல் இருக்கும் பெண்கள்மீது சோம்பேறி!, உடல்நலம் பேணுவதில் அக்கறையற்றவள்! தின்னுங்கூலி என்றெல்லாம் சுலபமான  தீர்ப்புகள் எழுதப்பட்டு விடுகின்றன.

வேலைக்குப்போகிற பெண்கள், ‘கேரீர்பெண்கள், சமூக ஏணியில்  வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறத்துடிக்கும் பெண்கள் இவர்களுக்கெல்லாம் ‘உடல் பருமன்என்பது மிகப்பெரும் “தடைக்கல்என்றே அறிவுறுத்தப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கும், தாழ்வுணர்ச்சிக்கும் உடல் பருமன் கொண்ட பெண்கள் ஆளாக்கப்படுகின்றனர். உண்மையில் இந்த ‘உடல் பெருக்கம் (obesity)  என்பது ஆரோக்கியக்கேடுதானா என்பதே சர்ச்சைக்குரிய விஷயம்.

ஒருவர் அவரது உயரத்திற்கும் வயதிற்கும் ஏற்ப இருக்கவேண்டிய எடையைவிட இருபது சதம் கூடுதலாக எடை கொண்டிருப்போரை உடல் பெருத்தவர் என்று சொல்லலாம். ‘டயாப்படீஸ் - டைப் -2’ என்கிற நீரிழிவுக் குறைபாடு, மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இக்கூடுதலான எடை ஆபத்தை உண்டாக்கலாம்.

முறையான மருத்துவ ஆலோசனைகளும் சிகிச்சையும் பெற்று, உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை கொண்டுவந்து உடல் எடையை குறைக்கமுடியும். உடல் நலத்தைப் பேண முடியும். அதுவும் உடல் எடையை குறைக்கலாமே தவிர தனது தோற்றத்தை முழுவதுமாக மாற்றிக்கொள்ள எல்லோராலும் இயலாது. இது அவரவர் உடல்வாகைப் பொருத்தது. ஆனால் என்ன நடக்கிறது?

உயர் ரத்தஅழுத்தமோ நீரிழிவுக்குறைபாடோ இல்லாத பெண்கள் கூட ‘உடல் பருமனைபெரிய பிரச்சினையாக கருதுகிறார்கள். டயட்டில் இருக்கிறெனென்று பட்டினி கிடந்து உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்வது மட்டுமல்ல, ஃபிட்னஸ்கிளப், ஹெல்த் கிளப், என்று எந்திரங்களோடு எந்திரங்களாக தேகப்பயிற்சியில் இறங்குகிறார்கள். உடலை மெலிய வைப்பதற்கான ‘டயட்ஆலோசனைகளில் பல ஆபத்தானவை.  உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது “1000 கலோரிகளுக்கு கீழாக உணவு உட்கொள்ளுவது அரைப்பட்டினிக்குச் சமம்.” என்று. குறிப்பாக பெண்களை இது பலவிதமான  உடல்நலக் குறைபாட்டிற்கு இட்டுச் செல்லும்.” என்றும் சொல்கிறது. ஆனால் பல டயட் ஆலோசனைகள் 1000 கலோரிகளுக்கு குறைவான உணவையே பரிந்துரை செய்கின்றன.

பலவிதமான ஆய்வுமுடிவுகள் தெரிவிப்பது என்னவெனில், உடல் பெருக்கம் கொண்டவரனைவருமே டயட் மற்றும் தேகப்பயிற்சிகள் மூலம் உடலை மெலியவைத்துவிட முடியாது. அவரவர் உடல்வாகைப்பொருத்தே இது அமையும் என்பதையே. ஆனால் இந்த உண்மையை ‘மெலிந்த தேகப்பண்பாடுவசதியாக மறந்துவிடுகிறது.

பெண்களின் உடலமைப்பு ஆண்களைவிடக்கூடுதலாக கொழுப்பைச் சேமித்து வைக்கிற இயல்பு கொண்டது. மாதவிடாய் காலங்களில் நிகழ்கிற உதிரப்போக்கினால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பெண்ணுடல் கொண்டிருக்கிற தற்காப்பு அம்சம் இது. ஆனால் பெண்களை  தங்களது உடல்பருமனை ஓர் அவமானமாகவும் தனது ஆளுமையின் தோல்வியாகவும் கருதச்செய்கிறது இம்மெலிந்த தேகப் பண்பாடு. அதனால் உடல்மெலிவு முயற்சிகளில் இறங்கி, தனது உடற்கூற்றின் இயல்புக்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்த பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

மேட்டிமை நாகரீகமும்,நடுத்தரவர்க்க மனோபாவமும் இப்படியிருந்தாலும் கூட இன்றும் பெரும்பாலான மக்கள் குண்டாயிருப்பதைதான் அழகு என்று கருதுகிறார்கள். என்னதான் தொழில்வளர்ச்சி, பெருநகரங்களின் வளர்ச்சியென்று ஏற்பட்டிருந்தாலும் இந்திய மக்களின் உளம்  ‘விவசாய உளம்தான் என்கின்றனர் சமூகவியலாளர்கள். விவசாய உளம், செழிப்பை, வளமையைத்தான் அழகெனக் கருதும். நமது பண்டைய சிற்பங்கள், ஓவியங்களில் வடிக்கப் பட்டிருக்கிற பெண்ணின் தோற்றம் பருத்த உடலமைப்பைத் தான் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் பல நாடுகளிலும் இப்படித்தான். ஐரோப்பிய நாடுகளிலும் கூட இப்படித்தான்.

16ம் நூற்றாண்டைச்சேர்ந்த இத்தாலிய மறுமலர்ச்சி யுகத்தின் ஓவியங்கள் சிற்பங்களைப் பாருங்கள். அவை மெலிந்த தேகமுடையவராக பெண்ணைச் சித்தரிக்கவில்லை. ’ரெம்பிராண்டின்புகழ்பெற்ற ஓவியமான ‘குளிக்கும் அழகி (Bathsheba at her bath) குச்சியான உடல்வாகைக் கொண்டிருக்கவில்லை. வாளிப்பான சதைப்பிடிப்புள்ள பெண்ணாகத்தான் அவள் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். செழிப்பும் வளமையும்தான் அவர்களுக்கும் ‘அழகு. நடிகை ‘குஷ்பு, மெலிந்த தேகம் உள்ளவரென்று சொல்லமுடியாது. ஆனால் இவருக்குத்தான் தமிழ்நாட்டில் கோவில் கட்டப் பட்டது. இதெல்லாம் இன்று மறக்கடிக்கப்படுகிறது.

சதைப்பிடிப்பற்ற மெலிந்த தேகம் எனும் அழகுக்கோட்பாடு இன்று ஒரு மதம் போல் மட்டுமல்ல “மெலிந்த தேகமில்லாப் பெண்களுக்கு இவ்வுலகமில்லைஎன்று ‘மத அடிப்படைவாதம்போலக் கோலோச்சத் தொடங்கிவிட்டது. 

உண்மையில் ஃபேஷன் தொழிலும், அட்வர்டைஸிங் தொழிலும் சேர்ந்து பெற்றெடுத்த  ’கார்ப்பரேட் குழந்தை தான்இந்த ‘அழகுக்கோட்பாடு. விளம்பரங்களும், ஃபேஷன் உலகும் ஊட்டி வளர்த்த ‘இந்த தரப்படுத்தப்பட்ட அழகைப்பேணுவதற்கு, சந்தையில் நிறைய பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்தப்பொருட்களைத் தயாரிக்கும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆண்டொன்றிற்கான டர்ன் - ஓவர் எவ்வளவு தெரியுமா? டயட் இண்டஸ்ட்ரி - 3,300 கோடி டாலர், காஸ்மடிக் (அழகுச்சாதனங்கள்) இண்டஸ்ட்ரி - 30,000 கோடி டாலர், காஸ்மடிக் சர்ஜரி இண்டஸ்ட்ரி  - 300 கோடி டாலர். இது அமெரிக்காவிற்கு மட்டும். இந்தியக்கணக்கு என்ன தெரியுமா? 2008ம் ஆண்டு 12,000 கோடி ரூபாயாக இருந்த இத்தொழில் 2012ம் ஆண்டில் 64,000 கோடியாக வளரும் என்று சொல்லப்படுகிறது. பெண்கள் தாங்கள் குண்டாயிருந்தாலென்ன ஒல்லியாயிருந்தாலென்ன என்று அலட்டிக் கொள்ளாமலிருந்துவிட்டால் என்னவாகும்? இந்த கார்ப்பரேட் நிறுவனங்களெல்லாம் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு போய்விடவேண்டியதுதான். ஆனால் பெண்கள் அலட்டிகொள்ளாமல் இருந்துவிடுவதில்லை.

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. மதியம் மூன்று மணி இருக்கும். ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டிலுள்ள அனை வரும் கொர்கொர்ரென்று குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள். நண்பனின் தங்கை மட்டும் தூங்காமல் டி.வி. முன்னால் உட்கார்ந்திருந்தார். என்னம்மா எல்லாரும் தூங்கறாங்க! உனக்கு தூக்கம் வரல்லியா என்றேன். அவர் பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே எழுந்து போய்விட்டார். உறக்கம் கலைந்த நண்பனின் தாய்தான் பதில் சொன்னார் ‘பகலில் தூங்கினா வெயிட் போட்டுடுமில்லியா, அதான் எப்பவுமே பகல்ல தூங்கமாட்டாஎன்று.

நண்பனின் தங்கை ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறவர். தினமும் பகலில் நிச்சயமாய் அவரால் தூங்கமுடியாது. ஏதோ ஞாயிற்றுக்கிழமையில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கினால் என்ன பெரிய பிரச்சினை வந்து உடம்பு வெயிட் போட்டுவிடப் போகிறது.? எனது நண்பனின் தங்கையைப்போல் பல பெண்கள் இருக்கி றார்கள். பகலிலே தூங்கமாட்டார்கள். மனசுக்கு பிடித்ததை சாப்பிடமாட்டார்கள். அது எண்ணெய், இது கொலஸ்ட் ரால் என்று வயதானவர்கள் பத்தியம் பேணுவதைப்போல பலதை ஒதுக்குவார்கள். உடலைச்சீராக வைத்திருக்க பல தியாகங்களைச் செய்வார்கள். உண்மையில் இது ஒரு பண்பாடு. இந்தப் பண்பாடு பெண்களை மறுபடியும் தியாகம் செய்யச் சொல்லுகிறது. ஏற்கனவே குடும்பத்திற்காக, கணவனுக்காக, பிள்ளைகளுக்காக தியாகங்களை செய்தவர்கள் நவீனகாலத்தில் செய்கிற நவீன தியாகம் இது.

இந்த மெலிந்த தேகப்பண்பாட்டிற்கு இன்னொரு பரிமாணமும் உண்டு. உண்மையில் இந்த அழகுக்கோட்பாடுகள் பெண்கள் மீதாகத் தொடுக்கப்படுகிற புதியதோர் வன்முறை என்கிறார்கள் பெண்ணியவாதிகள். அழகு என்பது சார்புடையது. அவரவர் மனப்பாங்கை பொருத்தது. ஒருவருக்கு அழகாகப்படுவது மற்றொருவருக்கு படாமல் போகலாம், அழகென்பது அவரவர் மட்டத்தில் வித்தியாசப்படுவது. இதில் எல்லோருக்கும் பொதுவான அளவுகோல்களை உருவாக்க முடியாது. அப்படி உருவாக்குவது ஒரு வித பாசிஸத்திற்குத்தான் வழிவகுக்கும் என்கின்றனர் இவர்கள்.

மேலும் இம்மெலிந்த தேகப்பண்பாடு உயர்த்திப்பிடிக்கும் அழகின் இலக்கணங்களை தோற்றப்பொலிவை எல்லாப் பெண்களும்  அடைவது என்பது சாத்தியமே இல்லை. மாறாக பருமனாக தோற்றமளிக்கும் பெண்கள் பாரபட்சத்திற்கும் ஓரவஞ்சனைக்கும் ஆளாக்கப் படுவதுதான் நிகழும்! என்கின்றனர் இப்பெண்ணியவாதிகள். இவர்கள் சொன்னது போலவே அமெரிக்காவில் பணியிடங்களில் பருமனான பெண்கள் பாரபட்சத்திற்கு உள்ளாக்கப் படுகிறார்கள். தனது உடல் எடையைக் குறைக்காததால் ஒரு பெண்அலுவலரின் பதவி உயர்வு மறுக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து கலிஃபோர்னியாவின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மறுக்கப்பட்ட பதவிஉயர்வை திரும்ப பெற்றுக் கொடுத்திருக்கின்றனர் இப்பெண்ணியவாதிகள்.

மருத்துவரிடம் ஆலோசனை பெறச்செல்லும்போது,பொது இடங்களில் க்யூவில் காத்திருக்கும் போது, வேலைக்காக, உயர்கல்விக்காக நேர்முகத் தேர்விற்குச் செல்லும்போது எனப் பல தருணங்களில் பருமனான பெண்கள் மீது பாரபட்சங்கள் இழைக்கப்படுவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தோற்றத்தை அடிப்படையாகக்கொண்ட பாரபட்சங்களில் (Size discrimination) தலையிடுவதற்காகவே பல பெண்ணிய அமைப்புக்கள் அமெரிக்காவில் செயல்படுகின்றன.

தொடக்கக்காலத்தில் பெண்ணியவாதிகள், தோற்றம் குறித்த பாரபட்சங்களை, தரப்படுத்தப் பட்ட அழகு பற்றிய கருத்தாக்கங்களை ஒரு பிரச்சினையாக கருதியதில்லை. 1970களின் மத்தியிலிருந்துதான் இப்பிரச்சினைகளை கையிலெடுக்கத் தொடங்கினர். அதுமட்டுமல்ல, காலங்காலமாக பெண்ணுடலை தனது கட்டுக்குள் வைத்திருக்க ஆணாதிக்கம் செய்த வன்செயல்களின் நீட்சியாகத்தான் இவற்றைக் காணமுடியும் என்கின்றனர்.

16ம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பா மற்றும் மேற்கு நாடுகளின் பிரபுத்துவ குடும்பங்களின் பெண்கள் ‘கார்சட்’ (corset) என்கிற இரும்பு அங்கியை அணிந்திருந்தார்கள். மத்திய கால வரலாற்றுப் பின்னணியுள்ள கதையம்சம் கொண்ட ஹாலிவுட் திரைப்படங்களில் இப்படியொரு அங்கியை பெண்கள் அணிவதை நீங்கள் பார்த்திருக்க முடியும். கிட்டத் தட்ட 15 முதல் 20 கிலோ வரை எடையுள்ள இரும்பிலான இவ்வங்கி, இடுப்பையும் அடிவயிற்றையும் இறுக்கமாக அழுத்திப்பிடித்து  குட்டைப்பாவாடை போல் கால்முட்டி வரை விரிந்திருக்கும்.  மேலே அணியும் பாவாடை குடை போல் விரிந்து தரையில் தவழ இந்த அங்கிதான் உதவுகிறது. வசதியாக உட்காரவோ, மூச்சுவிடவோ கூட சிலநேரத்தில் இவ்வங்கி அணிந்தவர்கள் சிரமப்படுவர்.  சிறுநீர் மற்றும் உபாதைகளை கழிப்பதெல்லாம் கூட இவர்களுக்கு பெரும் பாடுதான். தங்களது இடுப்பையும், வயிற்றையும் கவர்ச்சிகரமாக வைத்திருக்கவே பெண்கள் இந்த அங்கிகளை அணியக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

அதேபோன்று, சீனாவில் பண்டைய காலத்தில் அரச குடும்பத்தினரின், பிரபுக்கள் குடும்பத்தினரின் பெண்களது கால்களை சிறுவயதிலிருந்தே கட்டைகளால் இறுக்கிக் கட்டி வைத்துவிடுவார்கள். இதனால் பெண்களது பாதங்கள் குறுகிச் சிறுத்துவிடும். சரியாக நடக்கக்கூட முடியாமல் போய்விடும். ஐரோப்பிய பிரபுத்துவ குடும்பத்து ஆண்களுக்கு குறுகிய இடையும் ஒட்டிய வயிறும் எப்படி பாலுறவு வேட்கையைத் தூண்டியதோ அதேபோல குறுகிச்சிறுத்த பெண்களின் பாதங்கள்தாம் பிரபுக்கள்குலச் சீனர்களுக்கு கிளர்ச்சியைத் தருமாம். குறுகிச்சிறுத்த பாதங்கள் அமையாத சீனத்துப் பெண்களின் திருமணம் நடப்பது அவ்வளவு கடினமாம்.

இது இப்படியெனில், மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் பூப்ப டைந்த பெண்களின் பிறப்புறுப்பில் உள்ள ’கிளிடோரிஸ்எனும் பகுதியை அறுவை சிகிச்சை செய்து எடுத்துவிடுவார் கள். பெண்களது பிறப்புறுப்பில் விறைப்புத்தன்மையடை கிற உணர்ச்சியை வெளிப்படுத்துகிற பகுதி அதுவே. அதனைத்தான் நீக்கிவிடுவார்கள். இது இன்றும்கூட நடக்கி றது. ஐரோப்பிய யூனியனில், மத்திய ஆப்ரிக்க நாட்டு தூத ரகத்தில் பணியாற்றும் உயரதிகாரியொருவரின் மகளுக்கு இப்படிப்பட்ட அறுவைச்சிகிச்சையை நடத்தியதாக ஐரோப் பாவின் புகழ்பெற்ற மருத்துவமனையொன்றின் மீது பெண் ணியவாதிகள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.

இப்படி காலங்காலமாக பெண்ணுடம்பின்மீது செலுத்தப்படுகிற ஆதிக்கத்தின் வன்முறையின் நீட்சிதான் இந்தப்புதிய அழகுக்கோட்பாடு என்கின்றனர் இப்பெண்ணியவாதிகள். சுருங்கச் சொல்லவேண்டுமெனில் பெண் ஒரு போகப்பொருள்; காட்சிப்பொருள்! என்கிற பழைய கள்ளை புதிய மொந்தையில் விற்பதுதான் இந்த மெலிந்த தேகப்பண்பாடு. தற்போது பழையகாலம் போல கட்டாயப்படுத்தியெல்லாம் பெண்ணுடம்பை தனது பார்வைக்கினியதாக வைத்திருக்க முடியுமா? இது ஜனநாயக யுகமல்லவா! அதனால் இந்த ஆணாதிக்கச் சமூகம், பெண்களின் ஒப்புதலோடு இச்செயல்களைத் தொடர   சில வழிமுறைகளை கண்டுபிடிக்கிறது. அதில்  ஒன்றுதான் ‘பார்பி கேர்ள்பொம்மைகள்.

மெலிந்த தேகப்பண்பாட்டை சிறுவயதிலேயே பெண்களது மனதில் விதைக்கிற ஒரு ஏற்பாட்டை “பார்பி கேர்ள்பொம்மைகள் சுலபமாகச்செய்து விடுகின்றன. மெலிந்த தேகப் பண்பாடு லட்சியமாய்க் கருதுகிற “36 - 18 -38’’ விகித உடலமைப்பை பெற்றிருக்கிற இந்த ‘பார்பி கேர்ள்பொம்மைகள் இன்று பள்ளிச்சிறுமிகள் மத்தியில் மிகவும் பிரபலம். ஆங்கிலவழிக்கல்வி பயிலுகிற சிறுமிகளிடத்தில் மட்டுமல்ல, தமிழ் வழிக்கல்வி பயிலுகிற அரசுப்பள்ளிகளின் சிறுமிகள் மத்தியிலும் இது பிரபலமாயிருக்கிறது. இந்த ‘பார்பி கேர்ள்  பொம்மையை வடிவமைத்தவர் யார் தெரியுமா? அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பெண்டகனில்ஏவுகணைகளை வடிவமைத்துக் கொண்டிருந்த “ஜாக் ரியான்என்கிற டிஸைன் எஞ்சினீயர்!.

ஐயம் எ பார்பி கேர்ள்என்கிற ஆங்கிலப் பாடலைத் தெரியாத பள்ளிச்சிறுமிகளை அதுவும் ஆங்கிலவழிக்கல்வி பயிலும், வளரிளம் பருவத்துப் பெண்களை, டீன் ஏஜ் பெண்களை காண்பது அபூர்வம். “அக்குவாரியம் (Aquarium) என்கிற இசைக்குழு உருவாக்கிய பாடல் இது. பார்பி கேர்ள் பொம்மையை பற்றிய பாடல் என்பதால் மட்டுமல்ல, இப் பாடல் இப்படி செல்வாக்கு பெற்றதற்கு வேறு ஒரு காரண மும் உண்டு. டீன் ஏஜ் பெண்கள் பார்ட்டிகளில் கலந்து கொள்வதையும், டேட்டிங் வைத்துக் கொள்வதையும் கொண்டாடுகிற பாடல் இது. மில்லியன் கணக்கில் இப்பாடல் சிடிக்கள் விற்பனையாயின. ஆனால் இப்பாடலை உருவாக்கிய ’அக்குவாரியம்இசைக்குழு மீது ‘பார்பி கேர்ள்பொம்மையை தயாரிக்கும் ‘மேட்டல் இங்க் (Mattel.Inc) நிறுவனம் வழக்கொன்றை தொடர்ந்தது. தனது ‘காப்பிரைட்உரிமையினை ‘பேட்டண்ட்உரிமையினை “அக்குவாஇசைக்குழு அத்துமீறியதாக ‘மேட்டெல்குற்றஞ்சாட்டியது.

முதலில் கீழ்கோர்ட்டில் தொடரப்பட்ட இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்தடுத்து மேல்முறையீட்டுக்குச் சென்ற ஹைக்கோர்ட், சுப்ரீம் கோர்ட் என எல்லாவற்றிலும் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வழக்கை தள்ளுபடி செய்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு மிகவும் முக்கியமானது. “பார்பிகேர்ள்பொம்மை சமூகத்தில் பிரபலமாகிவிட்ட ஒன்று.! பிரபலமாயிருக்கிற ஒன்றை `பதிவுசெய்வதும், ‘பகடிசெய்வதும் கலை-இலக்கியங் களின் இயல்பு ஆகும். இதில் தலையிடுவதா னது கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவதாகி விடும். எனவே வழக்கைத் தொடர்ந்தவர்கள் இதனை பெரிது படுத்தாமல் இருப்பதே நல்லது.!” என்று வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல் ‘மேட்டெல்நிறுவனத்திற்கு அறிவுரையும் கூறியது. இன்றும்கூட ‘காப்பிரைட்மற்றும் ‘பேடண்ட் உரிமைதொடர்பான வழக்குகளில் ‘மேட்டெல் இங்க், ‘அக்குவாவழக்கு தொடர்பாக அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு ஒரு முக்கிய முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது. இவ்வழக்கு விவரங்கள் எதைக் குறிக்கிற தென்றால், `பார்பி கேர்ள்பொம்மைகள் மேற்கத்திய சமூகத்தின், பண்பாட்டின் பிரிக்க முடியாத அம்சமாக மாறிவிட் டது என்பதைத்தான்.

நமது வாண்டுகள் மத்தியில் மிகவும் பிரபலமாயிருக்கிற ‘ஹாட் வீல்ஸ்கார் பொம்மைகளும் இந்த ‘மேட்டெல் இங்க்நிறுவனத்தின் தயாரிப்புகள்தாம்.

பார்பிகேர்ள் பொம்மைகள் உருவான வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. மேட்டெல்நிறுவனத்தின் மூன்று பங்குதாரர்களில் ஒருவரான ‘ரூத் ஹேண்ட்லர்என்ற பெண்மணி, தான் டென்மார்க் சென்றிருந்தபோது தனது மகள் பார்பராவுக்காக பொம்மையொன்றை வாங்கி வந்தார்.  ‘பில்டி லில்லிஎனும் அப்பொம்மை ஒருஜெர்மானிய தயாரிப்பு. ஜெர்மனியில் பிரபலமாயிருந்த ‘காமிக்’ ஒன்றின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப் பட்ட பொம்மை இது. இப்பொம்மை குழந்தைகள் விளையாடுவதற்கானதல்ல. வயது வந்தோர்களுக்கான பொம்மை இது. 7 இன்ச் முதல் 12 இன்ச் அளவுவரை உள்ள பொம்மை யின் உடலமைப்பு மற்றும் அதன் விகிதாச்சாரம் டீன் ஏஜ் பெண்களை மிகவும் கவரவே பிரபலமானது இது.

தன் மகளுக்காக இதனை வாங்கி வந்த ரூத் ஹேண்ட்லரின் கவனத்தை இப்பொம்மை மிகவும் ஈர்க்கவே, இப்படியொரு பொம்மையை தமது நிறுவனமே தயாரித்தாலென்ன என்ற முடிவுக்கு  வந்தார் அவர். மேட்டெல்நிறுவனத்திடம் தனது ஆலோசனையைச் சொன்னார் அவர். மேட்டெல் நிறுவனம் இதுவரை பொம்மைகளை தயாரித்ததுஇல்லை. வீட்டு உபயோகத்திற்கான ஃபர்னீச்சர்கள், உள்ளலங்காரத் திற்கான பொருட்கள் மற்றும் தட்டுமுட்டு சாமான்கள் இவற்றையே அது தயாரித்து வந்தது. எனவே ரூத் ஹேண்ட் லரின் ஆலோசனையை ஏற்க முதலில் தயங்கிய மேட்டெல் பின்னர் இசைவு தெரிவித்தது. பொம்மை தயாரிப்பை மேற்பார்வையிடும் பணியை ரூத் ஹேண்ட்லரிடமே ஒப்படைத்தது. ரூத் ஹேண்ட்லர்,  அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பெண்டகனில்  ‘ஸ்பேர்ரோ, ‘ஹாவ்க் (Sparrow, Hawk) போன்ற ஏவுகணைகளை வடிவமைத்துக் கொண்டிருந்த டிஸைன் என்ஜினீயரான ‘ஜாக் ரியான்என்ப வரை அழைத்து இந்த பொம்மையை வடிவமைக்குமாறு கூறுகிறார். அவரும் பொம்மையை உருவாக்குகிறார். அப்பொம்மைக்கு தன் மகள் பார்பராவின் பெயரைச் சூட்டுகிறார்கள். இப்படிபிறந்ததுதான்  `பார்பி கேர்ள்.

பிறகு மூன்று வருடம் கழித்து பிலடெல்பியாவில் நடக்கிற மிகப்பெரும் பொம்மைக் கண்காட்சிக்கு ‘பார்பியைஅனுப்புகிறது மேட்டெல். கண்காட்சியில் பலத்த வரவேற்பைப் பெறுகிறது ‘பார்பி. பார்பியை அறிமுகப்படுத்திய பத்தே ஆண்டுகளில், உலகத்தின் முன்னணியில் இருக்கிற கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றாகமேட்டெல்வளர்ந்தது. இன்றும் உலகின் ஏதேனும் ஒரு மூலையில் நொடிக்கு இரண்டு பார்பி பொம்மைகள் விற்பனையாகிக் கொண்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பார்பியை உருவாக்குகிறபோது மேட்டெல் நிறுவனத்தின் ரூத் ஹேண்ட்லருக்கு இப்படியொரு நோக்கம் இருந்ததோ என்னவோ! ஆனால் ஃபேஷன் உலகமும் விளம்பர உலகமும் உருவாக்கிய மெலிந்த தேகப்பண்பாட்டின் ‘கொடிக்கப்பலாகபார்பி கேர்ள் பொம்மைகள் பரிணாமம் கொண்டன. பெரும்பாலான பெண்களுக்கு இயற்கையாக கைவரப் பெறாத, அமையச் சாத்தியமில்லாத “அழகின் அளவுகோல்களைபார்பி பொம்மைகள் உயர்த்திப் பிடித்தன. 36-18-33 என்ற விகிதத்தில் பார்பி பொம்மைக்கு இருப்பது போன்ற உடலமைப்பு ஒரு பெண்ணுக்கு இருந்தால் என்னவாகும்?

பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கியில் உள்ள மத்திய மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வறிக்கை இவ்வாறு கூறுகிறது. “மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கை ஈடுகட்ட ஒரு பெண்ணுக்கு எவ்வளவு கொழுப்புச்சத்து தேவைப்படுகிறதோ அதைவிட 17 முதல் 22 சதம் குறைவான கொழுப்புச்சத்தே ‘பார்பிபோன்ற உடலமைப்பு கொண்ட பெண்களிடத்தில் இருக்கும்!” என்று. 

பார்பி கேர்ள் பொம்மைகளோடு விளையாடுகிற சிறுமிகள் ,அதன் கூந்தலை விதம் விதமாய் அலங்கரிப்பது, புதிது புதிதாய் ஆடைகளை அணிவித்து மகிழ்வது உறங்கும்போது கட்டிபிடித்துக்கொண்டு உறங்குவது என்று அப்பொம்மை யோடு உணர்வுபூர்வமான ஓர் உறவினை ஏற்படுத்திக் கொள்கின்றனர். டீன்ஏஜ் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பார்பி கேர்ளுக்கு இருப்பது போன்ற தேக அமைப்பை பெறுவதற்காக அவர்கள் பல முயற்சிகளில் இறங்குகின்றனர். இது அனோரெக்ஸியா (anorexia)  என்கிற மனச்சிக்கலுக்கு இவர்களை ஆட்படுத்திவிடுகிறது.

இச்சிக்கலுக்கு ஆட்பட்டவர்கள் குறைந்த எடையுள்ளவர்களாயிருப்பார்கள். சரியாக சாப்பிட மாட்டார்கள். அப்படி சாப்பிட்டுவிட்டாலும் எடை கூடிவிடுமோ என்கிற பயத்தில் வலுக்கட்டாயமாக சாப்பிட்டதை வாந்தி எடுத்து விடுவார்கள். இவர்களுக்கு ஹார்மோன் பிரச்சினை, தைராய்டு பிரச்சினை எல்லாம் வந்துவிடும். சேர்ந்தால் போல மூன்று மாதங்களுக்கு மாதவிடாய் தள்ளிப் போகும். இவையெல்லாம் தான் அனோரெக்ஸியாவின் அறிகுறிகள்.

1983ல் ‘கரேன் கார்பெண்டர்என்கிற பிரபலமான இளம் பாப் பாடகி உடலை மெலிய வைக்கும் முயற்சிகளில் இறங்கி கடைசியில் மாரடைப்பில் இறந்துபோனார். அனோரெக்ஸியாவால் பீடிக்கப்பட்டிருந்த இவருக்கு ஏற்பட்ட உடன்விளைவே இம்மாரடைப்பு. மேற்கத்திய பாப் இசை உலகினை இச்சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 1990களில் இவரது வாழ்க்கையை பின்னணியாக கொண்டு ‘சூப்பர் ஸ்டார்என்ற திரைப்படமொன்று ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்டது. பெரிதும் பேசப்பட்ட இப்படம், மெலிந்த தேகப்பண்பாட்டை கடும் விவாதத்திற்கு உள்ளாக்கியது. இச்சூழலில்தான் பெண்ணியவாதிகள் பார்பி கேர்ள் பண்பாட்டை எதிர்த்து கண்டனக்குரல் எழுப்ப ஆரம்பித்தனர். பார்பி கேர்ள்  பொம்மை விற்பனையாகும் கடைகளுக்குள் புகுந்து பொம்மைகளை அடித்து நொறுக்கினர்.

லட்சத்தில் ஐந்து பெண்களுக்குகூட  பார்பி போன்ற உடலமைப்பு இருக்காது. இயற்கையின் நியதி இவ்வாறிருக்கையில் மெலிந்த தேகப்பண்பாட்டை பறைசாற்றுகிற பார்பி பொம்மைகள் பெண்களின் நலனுக்கு பெரும் கேட்டினை விளைவிக்கின்றன. பெரும்பாலான பெண்களை தாழ்வுணர்ச்சி கொள்ளச்செய்கின்றன. மனப்பிறழ்வுக்குள்ளாக்குகின்றன. மெலிந்த தேகம் ஆரோக்கியத்தின் அடையாளமல்ல. மாறாக அழகுச்சாதன உற்பத்தியாளர்கள், பிட்னஸ் கருவிகள் தயரிப்பாளர்கள், ஃபேஷன் நிறுவனங்கள் மற்றும் காஸ்மடிக் சர்ஜரி நிறுவனங்கள் போன்ற கார்ர்ப்பரேட் நிறுவனங்கள் பணம் பண்ணுவதற்காக பெண்களின் நலனை பலி கொடுக்கும் ஏற்பாடுதான் இந்த மெலிந்த தேகப்பண்பாடுஎன்றெல்லாம் கருத்துப்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த னர் பெண்ணியவாதிகள்.

லிபொசக்ஷன் (Liposuction) என்கிற காஸ்மடிக் சர்ஜரி அதாவது உடம்பிலுள்ள கொழுப்புச் சத்தை உறிஞ்சி எடுக்கிற சிகிச்சை தற்போது பரவலாக சர்வசாதாரணமாக செய்யப் படுகிறது. ஆனால் இது கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பதை பலரும் உணர்வதில்லை. இருபதுகளின் இறுதியில் அல்லது முப்பதுகளில் வயதுகொண்டிருக்கும் பெண்கள்தாம் ஏற்கனவே இதுபோன்ற உடலை மெலிய வைக்கும் முயற்சிகளில் இறங்குவார்கள். இப்போதென்னவென்றால் டீன் ஏஜ் பெண்கள்கூட இதற்கு இரையாகத் தொடங்கிவிட்டனர்.

பார்பி கேர்ள்மெலிந்த தேகப்பண்பாட்டை மட்டுமல்ல வெள்ளை நிற மேலாதிக்கத்தையும் உயர்த்திப்பிடிக்கிறது ; நியாயப்படுத்துகிறது  என்று பெண்ணியவாதிகள் குற்றஞ்சாட்டினர். உடனே மேட்டெல்.இங்க் நிறுவனம் என்ன செய்தது தெரியுமா? பெண்ணியவாதிகளின் விமர்சனத்தில் இந்த ஒன்றை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டது.  கறுப்பு இனச்சாயலில் ஒரு பொம்மை, செவ்விந்தியச் சாயலில் (Hispanic) ஒரு பொம்மை, ஆசியர்களை போன்ற அதாவது சீன, ஜப்பானியர்களைப் போன்ற ஒரு பொம்மை (ஆசியர்கள் என்றாலே மேற்கு உலகிற்கு சீனர்களும் ஜப்பானியர்களும்தான்)  இவற்றையெல்லாம் தயாரித்து சந்தைக்கு அறிமுகம் செய்தது அதாவது நிறபேதத்தை கைகழுவிவிட்டு.

பிறகு பேசுகிற பார்பி பொம்மைகளையும் மேட்டெல் அறி முகப்படுத்தியது. “நான் ஃபேஷன் மாடலாகப் போகிறேன்!”.  “நான் டேட்டிங் வைத்துக்கொள்ளப்போகிறேன்என்றெல்லாம் இப்பார்பி பொம்மைகள் பேசும். 1990களில்  அறிமுகம் செய்யப்பட்ட இப்பேசும் பொம்மைகள் சிறுமிகளிடத்தில் வெகுசீக்கிரத்தில் பிரபலமாகிவிட்டன. அப்போது பெண்ணியவாதிகள் என்ன செய்தனர் தெரியுமா? இப்பேசும் பொம்மைகள் வைக்கப் பட்டிருக்கும் குடோனுக்குள் இரவோடிரவாக யாருக்கும் தெரியாமல் நுழைந்து பேசுவதற்காக புரோக்ராம் செய்யப்பட்டு அப்பொம்மைகளில்  பொருத்தப்பட்டிருந்த மைக்ரோ சிப்புகளை அகற்றிவிட்டு வேறு ‘சிப்களை வைத்துவிட்டு வந்துவிட்டனர். அந்தப் பொம்மைகளை வாங்கி சென்றவர்களெல்லாம் அதிர்ந்து போய்விட்டனர். ஏனெனில் அந்த பார்பி,  “மெலிந்த தேகம் வேண்டுமா? விஷத்தைக்குடி! பென்சிலில் இருக்கிற ‘லெட்டைத் தின்னு! பாம்புகளைச் சாப்பிடு!” என்றெல்லாம் பேசியது. பெண்ணியவாதிகளின் எதிர்ப்புச் செயல்பாடுகளை இச்சம்பவம் பிரபலமாக்கியது என்றாலும் பார்பி கேர்ளின் செல்வாக்கை அவற்றால் குறைக்க இயலவில்லை.

கடந்த பத்தாண்டுகளில் வேறொரு போக்கும் தலையெடுத்தது. 30-22-32 என்ற அளவில் உடலமைப்பு கொண்டவர்கள் அணிவதற்கேற்ற ‘சிக்கெனப்பிடிக்கும் ஆடைகளை பேஷன் நிறுவனங்கள் தயாரிக்க ஆரம்பித்தன.

இந்த உடைகளை அணிவதற்கேற்ற மெலிந்த உடல் கொண்ட மாடல்கள் ‘ஸைஸ் ஜீரோ (Size Zero) மாடல்கள் என்றழைக்கப்பட்டனர். ஸைஸ் ஜீரோ நிலையை எட்டிப் பிடிக்க போட்டி போட்டுக்கொண்டு பலர் உடல்மெலிவு முயற்சிகளில் இறங்கினர். 2006 ம் ஆண்டு, இப்படி ஸைஸ் ஜீரோ மாடல் என்றறியப்பட்ட ‘லூஸல் ராமோஸ்என்கிற் 22 வயதுள்ள மாடல் உருகுவேயில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் கேட் வாக் செய்யும்போது மயக்கமடைந்து கீழே விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு இரண்டுநாட்களில் நினைவு திரும்பாமலேயே அவர் உயிர் பிரிந்தது. இது நடந்த ஆறே மாதங்களில் அவரது தங்கை பதினெட்டு வயதேயான ‘எலீனா ராமோஸ்என்பவர் இதேபோன்று இறந்துபோனார். இவர்களிருவருமே “அனோரெக்ஸியாவால்பாதிக்கப்பட்டவர்கள்.

இப்படி மெலிந்ததேகப் பண்பாட்டிற்கு இரையாகும் பெண்கள் பற்றி ‘மார்கே பியர்ஸிஎன்கிற கவிஞர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ‘பார்பி கேர்ள்என்று தலைப்பிடப்பட்ட அக்கவிதையின் தளர்த்தியான எனது மொழியாக்கம் இது:

எவரையும் போலவே
இவளும் பிறந்தாள் தவழ்ந்தாள்; நடந்தாள்.
அடுப்பு பொம்மை பானை பொம்மை மற்றும் 
படுக்கையை நனைக்கும் குழந்தை பொம்மை  
இவற்றினோடே விளையாடிக்களித்தாள்.

செர்ரி நிறத்து லிப்ஸ்டிக்கட்டியை கரைத்தாற் போன்று
மூத்திரம் போனாள் ஒருநாளில். 
பருவமடைகிற மாயமிதுவென பலரும் சொல்லினர் அவள் காதில்.

இப்படி நாட்கள் கழிந்திடும்போது
வகுப்புத்தோழன்
அவளிடம் சொன்னான்:
உனக்கு  புடைத்த மூக்கு!
பருத்த கால்கள் என்று.

வலிய கரங்கள் நெடிய முதுகென
அவள் திண்மையானவள்
ஆரோக்கியசாலி.
தன் பாலியல் விழைவை துணிச்சலாய்ச்சொல்வாள்
தேவையை நிறைக்கும் திறனும் கொண்டாள். 
எனினும்
அவள் வருத்தப்பட்டாள்
தனது புடைத்த மூக்கிற்காகவும் 
பருத்த கால்களுக்காகவும்

எல்லோரிடத்திலும் மன்னிப்பு கோரினாள்.
அனைவரும்
அவள்  மூக்கையும் கால்களையும் மட்டுமே பார்த்தவாறு
அடக்கம் காக்கச்சொன்னார்கள்
அவளை
உண்மை உணரச் சொன்னார்கள்.

சூழலின் கணைகள் துளைக்க துளைக்க
இடையறாத உடற்பயிற்சி பட்டினி கிடப்பதுவென
கவசங்களெடுத்து அணிந்துகொண்டாள்.
புன்னகையொன்றை முகத்தில் ஒட்டிக்கொண்டாள்.

இழுத்துச்சலித்த ராட்டினக்கயிறு
ஒருநாள்  இற்று விழுவதுபோல
அவளிடமிருந்த அருங்குணங்கள் அறுந்து விழுந்தன.
தனது புடைத்த மூக்கை அரிந்தெடுத்தாள்.
பருத்தக் கால்களை வெட்டினாள்
ரத்தம் சொட்டச்சொட்ட அவர்களுக்கு அர்ப்பணித்தாள்.

இதோ மெழுகிட்டு சரிசெய்யப்பட்ட மூக்கும்
அழகுப்பொடி பூசப்பட்ட முகமுமாய்
வெண்ணிற ஸாட்டீன் துணி விரிக்கப்பட்ட பேழைக்குள் அவள் ... 
வெட்டப்பட்ட கால்களை மறைக்கும் 
வெண்ணிற உள் பாவாடையும் பிங்க் நிற ஆடையும் அணிவிக்கப்பட்டு.  
இவளல்லவோ அழகி! 
பார்ப்பவரனைவரும் சொன்னார்கள் 
இப்படியாக அவள் முழுமையடைந்தாள்’ 
எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் சுபமுடிவே அவளுக்கும்

அந்தப்பெண் இறந்துவிட்டாள் என்பதை நேரடியாகச் சொல்ல இக்கவிதை முயலவில்லை. “பேழைக்குள் அவள் கிடத்தப்பட்டிருக்கிறாள்என்றே சொல்லப்பட்டிருக்கிறது. சவப் பெட்டியைக் குறிக்கும் காஃபின் (coffin) என்கிற சொல்லை  அவரிதில் பயன்படுத்தவில்லை. மாறாக விலையுயர்ந்த நகைகள் வைக்கப்படும் பேழையைக்குறிக்கும் `காஸ்கட் (casket) என்கிற சொல்லையே அவர் பயன்படுத்தியிருக்கிறார். இந்தக்கவிதை பெண்கள் மத்தியில் மெலிந்த தேகப் பண்பாடு பற்றிய பெரும் விவாதங்களை உருவாக்கியது.

ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு பெண்ணிய அமைப்பு அரசுக்கு இப்படியொரு கோரிக்கை வைத்தது. தற்போது சிகரெட் விளம்பரங்களில் எப்படி ‘புகைப்பது உடல் நலத்திற்கு தீங்கானதுஎன்று எச்சரிக்கை வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறதோ அதேபோன்று மெலிந்த தேகமுடைய பெண்களை மாடலாகப் பயன்படுத்தும் விளம்பரங¢களில் ‘மெலிந்த தேகம் உடல்நலத்திற்கு தீங்கானதுஎன்ற வாசகம் பொறிக்கப்படவேண்டும்என்றனர். அதாவது பிஃப்டி ‘கேஜி தாஜ் மஹால்களாயிருப்பது உடல்நலத்திற்கு தீங்கானது என்று.

இக்கோரிக்கைகள் நிறைவேறவில்லையென்றாலும் கூட பெண்ணியவாதிகளின் குரல்களுக்கு ஓரளவு  பலன் இருக்கத்தான் செய்தது. பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள் சில இக்குரல்களுக்கு மதிப்பளிக்க ஆரம்பித்தன. விளம்பரங்களுக்கு சில கட்டுப்பாடுகளை கொண் டுவந்தன. இதனைத் தொடர்ந்து மெலிந்த தேகம் கொண்ட பெண்களை மட்டு மல்ல, பருத்த தேகம் கொண்ட பெண்களையும் சராசரி உடலமைப்பு கொண்ட பெண்களையும் கொண்டு ஃபேஷன் ஷோக்கள் நடைபெற ஆரம்பித்தன. இருந்தபோதிலும் மெலிந்த தேகப்பண்பாட்டின் மேலாண்மையை, பார்பி பண்பாட்டை இவற்றால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

இந்தியாவில் மட்டும் மேட்டெல்.இங்க் நிறுவனத்திற்கு 1500 அவுட்லெட்டுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவில் நடைபெறுகிற பொம்மை விற்பனைகளில் மேட்டெல்லின் பங்கு 8 சதம்தான். 92 சத பங்கினை இதர நிறுவனங்கள் மற்றும் சீனத்தயாரிப்புகள்தான் வகிக்கின்றன எனினும் கடந்த ஆண்டில் மேட்டெல் நிறுவனத்தின் ஹாட்வீல்ஸ் கார்களின்  விற்பனை 32 % அதிகரித்ததெனில் `பார்பிபொம்மைகள் மட்டும் 40 சதம் அதிகரித்துள்ளன.

எந்த சானலைத் தட்டினாலும் அதில் வருகிற டெலி ஷாப்பிங் விளம்பரங்களைப் பாருங்கள். அரைகுறை ஆடையோடு ஒரு பெண், எக்ஸர்ஸைஸ் செய்துகொண்டோ, ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டோ இந்த மெலிந்த தேகப்பண்பாட்டை நமக்கு உபதேசம் செய்வதைப் பார்க்க முடியும். அதில் காட்டப்படுகிற உபகரணங்களையெல்லாம் வாங்கிக் குவித்து நம் ஒவ்வொருவரின் வீட்டையும் ஜிம்னாஸியமாக்கிவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்.

இந்தப்போக்குகளெல்லாம் கடந்த இருபதாண்டுகளாகத் தான் நம்நாட்டில் பரவலாக ஆரம்பித்தது. அதற்கு ஒரு பின்னணியும் உண்டு. பி.வி.நரசிம்மராவ் பிரதமராகவும், மன்மோஹன்சிங் நிதியமைச்சராகவும் இருந்த 90களின் தொடக்கத்திலிருந்துதான் இப்போக்கு பரவலாக அறிமுகமாகிறது. அவர்கள் செயல்படுத்தத் தொடங்கிய ‘புதிய பொருளாதாரக் கொள்கைதான் இவற்றின் ஊற்றுக்கண். ராஜீவ்காந்தி காலத்திலேயே இப்புதிய பொருளாதாரக் கொள்கைக்கான அஸ்திவாரங்கள்  இடப்பட்டுவிட்டாலும், நரசிம்மராவ் காலத்தில்தான் அவை உயர்வேகம் பெற்றன. தனியார்மயமாக்கம், தாராளமயமாக்கம், அன்னிய முதலீட்டிற்கான தங்குதடையற்ற அனுமதி இவையே இவற்றின் பிரதான அம்சங்கள்.

அரசியலில் பொருளாதாரத்தில் மிகப்பெரும் மாறுதல்களைக் கொண்டுவந்த சமயத்தில்தான் வேறொரு விஷயமும் இங்கே நடக்கிறது. 1993லிருந்து பல இந்தியப்பெண்கள் உலக அழகிகளாகவும் பிரபஞ்ச அழகிகளாகவும் தேர்ந்தெடுக்கப்படலாயினர். சுஷ்மிதாசென், ஐஸ்வர்யாராய், லாரா தத்தா, டயானாஹெய்டன், யுக்தாமுகி, பிரியங்கா சோப்ரா என்று பலர் உலக அழகிகளாயினர். இவர்களெல்லாம் போட்டியில் முதல் பரிசை வென்றவர்கள், இரண்டாவது பரிசு அல்லது சிறந்த தலைமுடி, சிறந்த உடலமைப்பு, சிறந்த பல்வரிசை என்ற வகைகளில் பரிசு பெற்றவர்களைக் கணக்கிட்டால் அதாவது கடந்த 2010ல் உலக அழகிப் போட்டியில் இரண்டாவது பரிசுபெற்ற ‘பார்வதி ஓமனகுட்டன்போன்றவர்களைச் சேர்த்தோமானால்  இப்பட்டியல் அனுமார் வால் போல இன்னும் நீளும்.

இதற்குமுன் 1966ம் ஆண்டு ரீட்டா பரியா என்கிற இந்தியப் பெண் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப்பின் 1993-94 காலத்திலிருந்துதான் அடிக்கடி இந்தியப் பெண்கள் ‘உலக அழகிகளாயினர். நமக்கு ஒரு கேள்வியெழலாம். 1993க்கு முன்பு நமது இந்திய நாட்டில் அழகிகளே இல்லையா என்று. இது குதர்க்கமான கேள்வி தான் எனினும், இக்கேள்வி சில உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது. உண்மையில் இவ்வழகிப்போட்டிகள், அழகுச்சாதனங்கள் மற்றும் ஃபிட்னஸ் சாதனங்கள் உற்பத்தி யில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் சந்தை விரிவாக்க உத்திகள்தாம். அவைதாம் இவ்வழகிப் போட்டிகளை ஸ்பான்ஸர் செய்கின்றன.

இந்நிறுவனங்கள், வாங்கும் திறன் கொண்ட கோடிக்கணக் கான வலுவான நுகர்வோர்களைக் கொண்ட சந்தையாக இந்தியாவைப் பார்த்தன. இந்தியப்பெண்கள் உலக அழகி களாவதற்கும் இச்சூழலுக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. அழகு பற்றிய புதிய கருத்தாக்கங்கள், ஃபிட்னஸ் குறித்த விழிப்புணர்வுகள் எல்லாம் இதன் பிறகே பரவலாக ஆரம்பித்தன. உண்மையில் இன்று இந்தியப்பெண்களின் மிகமுக்கியமான ஆரோக்கியப்பிரச்சினையாக எது இருக்கிறது தெரியுமா? ‘ரத்த சோகைதான். 

மத்திய அரசின் ஆய்வுக்குறிப்பொன்று இவ்வாறு கூறுகிறது. இந்தியாவில் 54 சத பெண்கள் ரத்த சோகையால் பீடிக்கப்பட்டிருக்கிறார்களென்று. இந்த ரத்த சோகை பல நேரத்தில்  அதுவும் கருவுற்ற காலத்தில் பெண்களின் உயிரைக்குடிக்கிற எமனாக மாறிவிடும். இந்தியாவில் பிரசவகாலத்தில் இறந்து போகிற பெண்கள் விகிதம் பல ஆப்பிரிக்க நாடுகளின் விகி தத்தைவிட அதிகம். மிகவும் பின்தங்கிய நாடான ‘ஹெய்தியில் 1000க்கு 52 பெண்கள் பிரசவகாலத்தில் இறக்கிறார் களென்றால் இந்தியாவில் 1000க்கு 54 பேர் இறக்கிறார்கள். இது உலக சுகாதார நிறுவனம் கொடுத்துள்ள அறிக்கை.

அதனால்தான் கருவுற்றுள்ள பெண்கள் இரும்புச்சத்து மாத்திரைகளைச் சாப்பிடவேண்டும். அல்லது இரும்புச்சத்துள்ள கீரை மற்றும் பயறுவகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென பல நலவாழ்வுத்திட்டங்கள் அறிவுறுத்துகின்றன. விழிப்புணர்வு பிரச்சாரங்களைச் செய்கின்றன. இப்பிரச்சார உத்திகளிலுள்ள பிரச்சினைகளென்னவெனில் இவையெல்லாம் பெண்களை குறிவைத்தே நடத்தப்படுகின்றன. இரும்புச்சத்து மாத்திரைகளைச் சாப்பிடு! கருவுற்ற காலத்தில் மாதம் தவறாமல் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரைப் பார்.! எடைப்பரிசோதனை செய்து கொள்! அரசு தருகிற சத்துணவு உருண்டைகளை தவறாமல் சாப்பிடு!! என்று பெண்களை நோக்கியே புத்திமதிகளை அள்ளிவீசுகின்றன.

இது என்னவிதமான தோற்றத்தை ஏற்படுத்துகிறதென்றால், ஏதோ பெண்கள்தான் வீம்பாக இவற்றையெல்லாம் செய்ய மறுக்கிறார்கள் என்கிற மயக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன. பலியாகிகொண்டிருக்கும் பெண்களின்  தலையிலேயே இந்த பழியை சுமத்திவிடுகின்றன.. உண்மையில் இப் பிரச்சினைக்கு ஆளாயிருப்பது  பெரும்பாலான கிராமப்புறத்து பெண்களும் நகர்ப்புறத்து அடித்தட்டு பெண்களும்தான். பார்பி கேர்ள் பொம்மைகளை வாங்கிவைத்து விளையாடாமலேயே  மெலிந்த உடலமைப்பு பெற்ற பெண்கள் இவர்களில் பலருண்டு. எக்ஸர்ஸைஸ் செய்து மெலியவைத்த தேகமல்ல இது. சரியாக சாப்பிடாமல், சத்துள்ள உணவை உட்கொள்ளாமல், முறையாக ஓய்வு எடுக்காமல் உழைத்து உழைத்து நலிந்துபோன தேகம் இவர்களுடையது.

கிராமப்புறத்து உழைக்கும் பெண்கள் ஒருநாளைக்கு 16மணி நேரம் உழைக்க வேண்டியிருக்கிறது. சமையல் செய்வது, தண்ணீர் சேகரிப்பது, குழந்தைகளை பராமரிப்பது, வீட்டை பராமரிப்பது, முதியோர் எவரேனும் வீட்டிலிருந்தால் அவர்களைப் பராமரிப்பது அதோடு சம்பாதிப்பதற்காக வேலைக்குப் போவது என்று அதிகநேரம் இவர்கள் உழைக்க வேண்டியிருக்கிறது. இந்தச்சூழலில் கருவுற்றபெண் தன் உடல்நலம் குறித்து எத்தகைய அக்கறை எடுத்துக்கொள்ள முடிகிறது.? நீங்கள் இத்தகைய பெண்களை சந்தித்து கேட்டுப் பாருங்கள் அவர்களின் பதில் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்: “மருத்துவமனைக்குப் போனால் ஒருநாள் வேலை போய்விடுகிறது. மற்ற வேலைகளும் கெட்டுவிடுகிறது. அதுவும் மாதாமாதம் போவதென்பதெல்லாம் முடிகிற காரியமா? சத்துணவு உருண்டைகள் தருகிறார்கள்தான். குழந்தைகளை  பார்க்க வைத்துக்கொண்டு நான் மட்டும் எப்படிச் சாப்பிடுவது? அதையெல்லாம் குழந்தைகளுக்கு கொடுத்துவிடுவேன். ஏதோ முடியும்போது மருத்துவமனை சென்று வருவேன். முடியாவிட்டால் விட்டு விடுவேன்!”. இதுதான் அவர்களின் பதில். பெண்கள் இங்கே  மறுபடியும் தியாகம் செய்கிறார்கள். தங்கள் உடலநலத்தை ஏன் உயிரையும் கூட.

ஒரு பெண் கருவுற்றால் அது அவளது பொறுப்பு மட்டும்தானா? அவளது கணவனுக்கு பொறுப்பில்லையா? அவளது குடும்பத்திற்கு பொறுப்பில்லையா?அந்த சமூகத்திற்கு பொறுப்பில்லையா?  கருவுற்ற பெண்ணின் நலம் என்பதும் தாயின் நலம் என்பதும் கணவனின், அந்த குடும்பத்தின், அந்த சமூகத்தின் பொறுப்பாக ஏன் மாறுவதில்லை? ஏன் இப்படியொரு பண்பாட்டை நாம் வளர்ப்பதில்லை? பார்பி பண்பாட்டையும் மெலிந்த தேகப்பண்பாட்டையும் பெண் களை தியாகம் செய்யச்சொல்லுகிற பண்பாட்டையும் இன்னும் ஏன் வளர்த்துக்கொண்டிருக்கிறோம். 

பின்னுரை :
சோஸலிஸ்ட் அப்பீல் என்கிற பத்திரிகையின் ஆசிரியரும், புகழ்பெற்ற மார்க்ஸீய சிந்தனையாளருமான பிரிட்டனைச் சேர்ந்த ஆலன் வுட், 2001ம் ஆண்டு, ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் கோடைக்கால மார்க்ஸீயப் பள்ளியொன்றில் ‘கலையும் வர்க்கப் போராட்டமும்எனும் தலைப்பில் உரையாற்றினார். அதில் சில பகுதிகள் இங்கே: இப்போதெல்லாம் அழகியல் பற்றி பல முட்டாள்தனமான விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. எது அழகு? எது அசிங்கம்? என்று அடித்துப்பேசுகிறார்கள். எது அழகு, எது அசிங்கம் என்று யாராவது அறுதியிட்டுச் சொல்லிவிட முடியுமா? அதெல்லாம் இருக்கட்டும்.. அழகென்றால் என்ன என்று உங்களையே நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா.? உண்மையில், அழகென்றால் என்ன அசிங்கமென்றால் என்னவென்று நமக்கு நன்றாகத் தெரியுமென நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் வரலாறு என்ன சொல்கிறது தெரியுமா? எல்லா சமூகங்களுக்கும் எல்லா காலத்துக்கும் ஏற்ற பொதுவான ‘அழகென்பதுஎப்போதுமே இருந்ததில்லை. அது சமூகத்திற்கு சமூகம், காலத்திற்கு காலம் வேறுபட்டும் மாறிக்கொண்டும்தான் இருந்தது; இருக்கிறது.”

ஆரம்பகாலத்து சமூகங்களில் அல்லது தொல் சமுகங்களில் அழகு பற்றிய கருத்தாக்கங்கள் போன்ற பண்பாட்டு மதிப்பீடுகளுக்கும், அச்சமூகத்தின் பொருளாதார அடித்தளத்திற்கும் இருக்கிற உறவுகள் தெள்ளத்தெளிவாக அடையாளம் காட்டக்கூடியதாக இருந்தன. ஆனால் பிந்தைய, தற்போதைய சமூகங்களில் இவ்வுறவுகள் அவ்வளவு தெளிவாக அடையாளம் காட்டக்கூடியதாயில்லை. மிகவும் சிக்கல் மிகுந்ததாகவும் தெளிவற்றதாகவுமே அவை புலப்படுகின்றன.

உதாரணமாக, கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள மாசாய் பழங்குடியினர் ஒட்டகச்சிவிங்கி போல் கழுத்து நீண்டிருக்கிற பெண்களையே அழகெனக்கருதுவர். அவ்வழகை அடையவேண்டி, சிறிய வயதிலிருந்தே கழுத்தை நீண்டதாக்க பல முயற்சிகளில் இறங்குவர். இப்படி கழுத்து நீண்டிருப்பது நம்மில் பலருக்கு அழகெனப்படாதுதான்.. ஆனால் மாசாய் பழங் குடியினர்க்கு அழகு பற்றிய இக்கருத்தாக்கம் எப்படி வந்தது என்று நம்மால் விளக்கிடமுடியும்.

இந்நடைமுறைக்கு மூலகாரணம் இதுதான். மாசாய் பழங்குடியினர், செல்வமெனக் கருதுவது இரண்டு விஷயங்களையே. ஒன்று அவர்கள் வைத்திருக்கும் கால்நடைகளை, மற்றொன்று அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் செம்பு உலோகத்தை. ஏனெனில், அவர்களைப் பொறுத்தவரை செம்பு அரிதானது; விலை மதிப்பற்றது. எவ்வளவுக்கெவ்வளவு ஒரு பெண் செம்பினாலான அணிகலன்களை அணிந்திருக்கிறாளோ அவ்வளவுக்கவ்வளவு அவள் கவர்ச்சியுடையவளாய்க் கருதப்படுவாள். அதுவும் குறிப்பாக கழுத்தில் அணிந்திருந்தால் கவர்ச்சி மேலும் கூடும். எனவேதான் அதிகமான செம்பு வளையங்களை அணிய வேண்டி மாசாய் பெண், தனது கழுத்தை நீண்டதாக்கிகொள்கிறாள். இக்கருத்தாக்கம் இவர்களிடம் வேர்கொண்டதற்கு காரணம் இதுதான். காலம் செல்லச்செல்ல இந்த மூலகாரணத்தை அவர்கள் மறந்து போகிறார்கள். எனினும் பண்பாட்டு மரபுகளும், சடங்கு சம்பிரதாயங்களும் இதனையே வலியுறுத்த கழுத்து நீண்ட பெண்தான் அழகென மெல்ல மெல்ல அவர்கள் நம்பத் தொடங்கிவிடுகிறர்கள் அவர்கள் சமுக ஆழ்மனத்தில் இக்கருத்தாக்கம் வேர்கொள்ளத் தொடங்கிவிடுகிறது.

சரி இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வதென்ன? ஆகப் பொதுவான அழகென்பது எதுவுமில்லை; அது சார்புடையது. ஆனால் அது வரலாற்று வளர்ச்சியில் பரிணாமம் கொள்கிறது; பல மாற்றங்களுக்குட்படுகிறது என்பதைத்தானே.?

எனினும் இந்த நேரத்தில் ஒன்றை நாம் எச்சரிக்க வேண்டியிருக்கிறது. இதை ஒரு சூத்திரமாக்கி எந்திரகதியில் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது மிகவும் அபாயகரமானது. கலைகளும், சமயங்களும் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியோடு - அதாவது பொருளாதார அடித்தளத்தோடு  நேரடித் தொடர்புடையதென்று கருதமுடியாதென மார்க்ஸ் தெளிவாகக் குறிப்பிடுகிறார் . இதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

புதுவிசை, இதழ் 33, செப்டம்பர் 2011