Saturday, February 13, 2016

சமகால முதலாளித்துவத்தில் திரும்பிவரும் பாசிசம் - சமிர் அமின்

உலகப் புகழ்பெற்ற ஆப்பிரிக்க மார்க்ஸிய அறிஞர் சமிர் அமின் (Samir Amin) பிரெஞ்சு மொழியில்  எழுதிய இக்கட்டுரை ஜேம்ஸ் மெம்ப்ரெஸால் (James Membrez) ஆங்கிலத்தில்  மொழியாக்கம் செய்யப்பட்டு ‘ மன்த்லி ரெவ்யூ' ஏட்டின் செப்டம்பர் 2014 இல் வெளிவந்துள்ளது.  ஆங்கிலம் வழித்  தமிழாக்கமும் குறிப்புகளும் : எஸ்.வி. ராஜதுரை

ந்தக் கட்டுரையின் தலைப்பே, அரசியல் அரங்கிற்குள் பாசிசம்  திரும்பி வந்துள்ளதை சமகால முதலாளித்துவத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியுடன் இணைத்துப்பார்ப்பதாக அமைவது தற்செயலானதல்ல. பாசிசம் என்பதும் நாடாளுமன்ற ஜனநாயகத்திலுள்ள நிச்சயமற்றத்தன்மைகளை நிராகரிக்கின்ற எதேச்சாதிகார போலிஸ் ஆட்சியும் ஒன்றல்ல. முதலாளியச்சமுதாயத்தை நிர்வகிப்பதில் சில திட்டவட்டமான சூழ்நிலைமைகளில் எதிர் கொள்ளப்படுகின்ற சில சவால்களுக்கான குறிப்பிட்டதொரு அரசியல் எதிர்வினைதான் பாசிசமாகும்.

வேற்றுமையில் ஒற்றுமை

பல ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக 1930களிலிருந்து 1945 வரை, முன்னணியிலிருந்து அதிகாரத்தைச் செலுத்திவந்த அரசியல் இயக்கங்களை பாசிசம் என்று சரியாகக் கூறமுடியும். இத்தாலியின் பெனிட்டோ முஸ்ஸோலினி, ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர், ஸ்பெயினின் ஃப்ரான்ஸிஸ்கோ ஃப்ராங்கோ, போர்ச்சுக லின் அந்தோனியோ டெ ஒலிவெய்ரா ஸலாஸர், ஃபிரான்ஸின் ஃபிலிப் பெதெய்ன், ஹங்கேரியின் மிக்லோஸ் ஹோர்த்தி, ரொமேனியாவின் அயோன் அந்தோனெஸ்க்யூ, குரோஷியாவின் அன்ட்டே பவெலிச் ஆகியோரின் ஆட்சிகள் இதில் அடங்கும். பாசிசத்திற்கு பலியான சமுதாயங்களின் பன்முகத்தன்மை - வளர்ச்சியடைந்த பெரிய முதலாளிய சமுதாயங்கள், ஆதிக்கத்துக்குட்பட்ட சிறிய முதலாளிய சமுதாயங்கள், வெற்றிகரமான யுத்தத்துடன் சம்பந்தப்பட்டிருந்த சமுதாயங்கள், யுத்தத்தில் ஏற்பட்ட தோல்வியின் விளைபொருள்களாக இருந்த சமுதாயங்கள் ஆகிய இரண்டும் இவற்றில் அடங்கும் - இந்தச் சமுதாயங்கள் அனைத்தையும் நாம் ஒன்றாகச் சேர்ப்பதைத் தடுக்கின்றது. எனவே, பல்வகைக் கட்டமைப்புகளும் பல்வகைச்சூழல் இணைவுகளும்  இந்தச் சமுதாயங்களில் ஏற்படுத்திய வெவ்வேறு வகை பாதிப்புகளை நாம் திட்டவட்டமாக எடுத்துக்கூறியாக வேண்டும்.

ஆயினும், இந்தப் பல்வகைத்தன்மையைத் தாண்டி, பாசிச சமுதாயங்கள் அனைத்துக்கும் பின்வரும் இரு பொதுப்பண்புகள் இருந்தன. 
(1) சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட சூழ்நிலைமைகளில், அந்த பாசிசங்கள்  அனைத்துமே முதலாளித்துவத்தின் அடிப்படை நெறிகளை -  குறிப்பாக நவீன ஏகபோக முதலாளித்துவம் உள்ளிட்ட முதலாளியத் தனிச்சொத்தை- கேள்விக்குட்படுத்தாத வகையில் அரசாங்கத்தை நிர்வகிக்க விரும்பின. அதனால்தான், பாசிசச் சொல்லாடல்களில் ‘முதலாளித்துவம்', ‘செல்வந்தர்களின் ஆட்சி' ஆகியன நீண்ட வசைமாரிகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த போதிலும்,  இந்த பாசிசங்கள் முதலாளித்துவத்தை நிர்வகிப்பதற்கான வெவ்வேறு வடிவங்களாக இருந்தனவேயன்றி, முதலாளித்துவம் நிலவுவதற்கான நியாயத்தைக் கேள்விக்குட்படுத்துகின்ற அரசியல் வடிவங்களாக இருக்கவில்லை. இந்தப் பல்வேறு வகை பாசிசங்களால் முன்வைக்கப்பட்ட ‘மாற்றுத் திட்டங்களை'ப் பரிசீலனை செய்கையில், பாசிசச் சொல்லாடல்களின் உண்மைத்தன்மையில் ஒளிந்துகொண்டிருக்கும் பொய் புலப்பட்டு விடுகின்றது. இந்தச் சொல்லாடல்கள் முதலாளியத் தனிச்சொத்து என்னும் முக்கியப் பிரச்சினையைப் பொருத்தவரை எப்போதுமே மௌனம் சாதித்து வந்தன. பாசிசம் மட்டுமே, முதலாளிய சமுதாயத்தின் அரசியல் நிர்வாகம் எதிர்கொண்ட சவால்களுக்கான ஒரே ஒரு எதிர்வினையாக  இருக்கவேண்டியதில்லை என்றாலும், கொந்தளிப்பான, ஆழமான நெருக்கடிகள் தோன்றும் சூழல் இணைவுகளில்தான் ஆதிக்க மூலதனத்துக்கு பாசிசம் ஆகச்சிறந்த தீர்வாக, ஏன் சிலவேளை  சாத்தியமான ஒரே தீர்வாகத் தோன்றுகிறது. ஆக, நமது பகுப்பாய்வு இந்த நெருக்கடிகள் மீது கவனம் குவிக்கவேண்டும்.

(2) நெருக்கடியிலுள்ள முதலாளியச் சமுதாயத்தை நிர்வகிப்பதற்குப் பாசிசத்தைத் தேர்வு செய்தல் என்பது  எப்போதுமே- இதை ஒரு வரையறையாகக்கூடக் கொள்ளலாம்- ‘ஜனநாயகத்தை'த் திட்டவட்டமாக நிராகரிப்பதை அடிப்படையாகக் கொள்கிறது. நவீன ஜனநாயகத்திற்கு அடிப்படையாகவுள்ள கோட்பாடுகளையும் நடைமுறைகளையும்- பல்வகைக் கருத்துகளை அங்கீகரித்தல், பெரும்பான்மையைத் தீர்மானிக்கத் தேர்தல் வழிமுறைகளை நாடுதல், சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு உத்தரவாதம் செய்தல் முதலியவற்றை- அகற்றிவிட்டு, அவற்றுக்கு மாற்றீடாக ஒட்டுமொத்தமான கட்டுப்பாடு, ‘மாபெரும் தலைவ'ரினதும் அவரது முகவர்களினதும் அதிகாரத்துக்கு அடிபணிதல் என்னும் மதிப்பீடுகளை உருவாக்குகின்றது. மதிப்பீடுகள் இவ்வாறு தலைகீழாக மாற்றப்படுவதுடன் கூடவே, அடிபணிதலை நியாயப்படுத்துவதைச் சாத்தியமாக்குவதற்காகப் பின்னோக்கிய கருத்துகளுக்கு அழைத்துச்செல்லப்படுவதும் நடக்கிறது. கடந்தகாலம் என்று சொல்லப் படுவதற்கு (மத்திய காலத்துக்குத்) திரும்பிச்செல்வது அவசியம் என்று பிரகடனப்படுத்துதல், அரசு மதம் அல்லது ‘இனம்' அல்லது ‘இனத்துவம்' (‘தேசம்') என்பதன் பண்புகள் என்று சொல்லப்படுவனவற்றுக்கு அடிபணிதல் ஆகியன பாசிசச்சக்திகளால் பயன்படுத்தப்படும் கருத்தியல் சொல்லாடல் கருவிகளாக அமைகின்றன. இந்த இரு பண்புகளும் நவீன ஐரோப்பிய வரலாற்றில் காணப்பட்ட பலவேறு பாசிச வடிவங்களுக்குப் பொதுவானவை. அந்த வடிவங்களைக் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

1. உலகம் முழுவதிலுமான அல்லது குறைந்தபட்சம் பிரதேச அளவிலான, முதலாளித்துவ அமைப்பில் மேலாதிக்கம் செலுத்தும் சக்திகளாக வளர்ச்சியடையும் வேட்கை கொண்டிருந்த முக்கிய, ‘வளர்ச்சியடைந்த' முதலாளிய அரசுகளின் பாசிசம்.

இவ்வகையான பாசிசத்திற்கு முன்மாதிரியாக இருப்பது நாஜிசம். ஜெர்மனி, 1870களிலிருந்து பெரிய தொழில் வளர்ச்சி அரசாகவும், அந்த சகாப்தத்தில் இருந்த மேலாதிக்க அரசுகளுடனும் (அப்போது முதல்நிலையில் மகா பிரிட்டனும், இரண்டாம் நிலையில் பிரான்சும் இருந்தன) மேலாதிக்கச் சக்தியாக வளர ஆசைப்பட்டுக் கொண்டிருந்த நாட்டுடனும் (அமெரிக்கா) போட்டிபோடக்கூடியதாகவும் வளர்ந்திருந்தது. 1918ஆம் அதற்கு ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, தனது மேலாதிக்க ஆசையின் தோல்வியால் ஏற்பட்ட பின்விளைவுகளை அது சமாளிக்க வேண்டியிருந்தது. ஹிட்லர் தெளிவாகத் தமது திட்டத்தை வகுத்தார்: ரஷியாவும் அதற்கு அப்பாலுள்ள பகுதிகளும் உள்ளிட்ட ஐரோப்பாவில் ‘ஜெர்மனி'யின் மேலாதிக்கத்தை, அதாவது, நாஜிசத்தின் எழுச்சிக்கு உதவி செய்த ஏகபோக நிறுவனங்களின் முதலாளித்துவ மேலாதிக்கத்தை நிறுவுதல் என்பதுதான் அந்தத் திட்டம். தமது முக்கிய எதிராளிகளுடன் சமரசம் செய்துகொள்வதற் கும் கூட அவர் தயாராக இருந்தார்: அதாவது ஐரோப்பாவை யும் ரஷியாவையும் தாம் எடுத்துக்கொண்டு, சீனாவை ஜப்பானுக்கும், ஆசியாவின் பிற பகுதிகளையும் ஆப்பிரிக்காவையும் மகா பிரிட்டனுக்கும், லத்தின் அமெரிக்க நாடுகளை அமெரிக்காவுக்கும் கொடுத்துவிடுவது என்னும் சமரத்துக்கு அவர் தயாராக இருந்தார். அத்தகைய சமரசம் சாத்தியமானது என்று நினைத்ததுதான் அவரது தவறு: மகா பிரிட்ட னும் அமெரிக்காவும் அதற்கு உடன்படவில்லை; அந்த நாடுகளுக்கு மாறாக, ஜப்பானோ அதை ஆதரித்தது.

ஜப்பானிய பாசிசமும் இதே வகையைச் சேர்ந்ததுதான். 1895 ஆம் ஆண்டிலிருந்தே ஜப்பான் கிழக்கு ஆசியா முழுவதிலும் தனது மேலாதிக்கத்தைத் திணிக்க விரும்பியது. ஜப்பானில் எழுச்சி பெற்றுக்கொண்டிருந்த முதலாளித்துவம், தொடக்கத்தில்  ‘பேரரசாட்சி' வடிவத்தில் நிர்வகிக்கப்பட்டுவந்தது. அந்த வடிவம், மேல்தோற்றத்துக்கு  ‘தாராளவாத' நிறுவனங்களை  (தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் போன்றவற்றை) அடிப்படையாகக் கொண்டிருந்தா லும், உண்மையில் ஜப்பானின் பேரரசர், நவீனமயமாக்கலால் மாற்றம் பெற்றிருந்த மேற்குடியினர் (aristocracy) ஆகியோரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பின்னர் அந்த வடிவம், இராணுவ உயர் தலைமையால் நேரடியாக நிர்வகிக்கப் பட்ட மூர்க்கதனமான வடிவமாக மாறியது. பேரரச/பாசிச ஜப்பானுடன் நாஜி ஜெர்மனி கூட்டணி அமைக்க, மகா பிரிட்டனும் (பேர்ல் ஹார்பர் துறைமுகத்தின்மீது 1941இல் ஜப்பானியப் போர் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தியப் பிறகு) அமெரிக்காவும் ஜப்பானுடன் மோதின. ஜப்பா னிய ஆக்கிரமிப்பை எதிர்த்து சீனாவிலும் போர் நடந்தது. அந்த எதிர்ப்புப் போரில் ஈடுபட்டிருந்த கோமிண்டாங்கில் இருந்த குறைபாடுகள், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்டுகள் வழங்கிய ஆதரவால் ஈடுசெய்யப்பட்டன.

2. இரண்டாம் நிலை முதலாளிய அரசுகளின் பாசிசம்

இதற்கு முதன்மை எடுத்துக்காட்டாக இருப்பவர் இத்தாலியின் முஸ்ஸோலினி. பாசிசம் என்பதை (அதன் பெயரையும்)  உருவாக்கியவர் அவர்தான். 1920களில் ஏற்பட்ட முதலாளித்துவ நெருக்கடி, வளர்ச்சியடைந்து வந்த கம்யூனிஸ்ட் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு இத்தாலிய வலதுசாரிச் சக்திகளிடமிருந்து (பழைய மேற்குடி வர்க்கம் முதலாளி வர்க்கம், நடுத்தர வர்க்கங்கள்) வந்த எதிர்வினைதான் முஸ்ஸோலினியிசமாகும். உலகம் முழுவதையும் மேலாதிக்கம் செய்வது ஒருபுறமிருக்கட்டும், அய்ரோப்பா முழுவதிலும்கூட மேலாதிக்கம் செய்யும் விருப்பம் இத்தாலிய முதலாளித்துவத்துக்கோ, அதன் அரசியல் கருவியான முஸ்ஸோலினியின் பாசிசத்துக்கோ இருக்கவில்லை.  ரோமப் பேரரசை மறுநிர்மாணம் செய்யப் போவதாக முஸ்ஸோலினி என்னதான் தம்பட்டமடித்துக் கொண்டாலும், (மத்தியதரைக்கடல் பகுதியின் எஜமானனாக இருந்த) மகா பிரிட்டனுடனோ,  நாஜி ஜெர்மனியு டனோ கூட்டணி வைப்பதன் மூலமே தம்மை நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என்பதை  அவர் புரிந்துகொண்டிருந்தார். சாத்தியமான இரு கூட்டணிகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இரண்டாம் உலகப்போர் தொடங்கும் வரை முஸ்ஸோலினிக்கு ஊசலாட்டம் இருந்துவந்தது.

ஸலாஸர், ஃப்ராங்கோ ஆகியோரின் பாசிசமும் இதே வகையைச் சேர்ந்தவைதான். குடியரசுக் கொள்கையை ஆதரித்த தாராளவாதிகளிடமிருந்தோ, சோசலிசக் குடியரசு வாதிகளிடமிருந்தோ வந்த அச்சுறுத்தலுக்கான எதிர்வினையாக ஸ்பெயினின் வலதுசாரிச் சக்திகளாலும் கத்தோலிக்கத் திருச்சபையாலும் ஆட்சியில் அமர்த்தப்பட்டவர்கள்தாம் அந்த இரு சர்வாதிகாரிகளும். இந்தக் காரணத்தால்தான்,  (கம்யூனிச-எதிர்ப்பு) என்னும் போர்வையின் கீழ் ஜனநாயக-விரோத வன்முறையை மேற்கொண்ட அவர்கள் ஒருபோதும்  முக்கிய ஏகாதிபத்திய அரசுகளால் ஒதுக்கி வைக்கப்படவில்லை. 1945ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்தது (நேட்டோவின் நிறுவன உறுப்பினர்களிலொருவர் ஸலாஸர்; தனது நாட்டில் அமெரிக்காவின் இராணுவத்தளங்களை நிறுவ ஸ்பெயின் இசைவு தந்தது). அமெரிக்காவைப் பின்பற்றி, இயல்பாகவே பிற்போக்கு முதலாளிய ஒழுங்கமைப்பை உத்தரவாதம் செய்கின்ற  ஐரோப்பியச் சமுதாயமும் (European Community); இது இப்போது ஐரோப்பிய ஒன்றியம் [European Union] என்றழைக்கப் படுகிறது) அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கியது. போர்ச்சுகலில் 1974ல் நடந்த ‘கார்னேஷன் புரட்சி'க் கும் 1980இல் ஃப்ராங்கோவின் மறைவுக்கும் பிறகு, இந்த இரு சமுதாய அமைப்புகளும்  (ஸ்பானிய, போர்ச்சுகல் பாசிச சமுதாய அமைப்புகளும் -எஸ்.வி.ஆர்.)  நமது சகாப்தத்திலுள்ள ‘குறைந்தபட்ச ஜனநாயக அரசாங்கங்க'ளின் முகாமில் சேர்ந்துகொண்டன.

3.தோற்கடிக்கப்பட்ட அரசுகளின் பாசிசம்

இவற்றில் பிரான்ஸின் விஷி அரசாங்கம், பெல்ஜியத்தில் லியோ டெக்ரே (Leon Degrelle)  தலைமையிலிருந்த அர சாங்கம், நாஜிகளால் ஆதரிக்கப்பட்ட ‘ஃப்ளெமிஷ்' போலி அரசாங்கம் ஆகியன அடங்கும். பிரான்ஸில் மேல்தட்டு வர்க்கங்கள், மக்கள் முன்னணிக்குப் பதிலாக ஹிட்லரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டன (இந்த விஷயம் பற்றி அன் லெக்ரோ-ரிட்ஸ் [Anne-Lecroix-Ritz] எழுதியுள்ள நூலைப் பார்க்கவும்). தோல்வியுடனும் ‘ஜெர்மானிய ஐரோப்பா'வுக்கு அடிபணிதலுடனும் தொடர்புடையனவாக இருந்த இந்த பாசிசங்கள், நாஜிகளின் தோல்விக்குப் பிறகு பின்வாங்கிப் பின்னணிக்குச் சென்றுவிட்டன. பிரான்சில் இந்த பாசிசம், நாஜி-எதிர்ப்புப் போராட்டக்காரர்களின் கவுன்சில்களுக்கு வழிவிட்டுச் சென்றுவிட்டது. இந்தக் கவுன்சில்கள் குறிப்பிட்ட காலத்திற்கு கம்யூனிஸ்டுகளை இதர நாஜி- எதிர்ப்புப் போராளிகளுடன் (குறிப்பாக, தளபதி டி காலுடன்) ஒன்றிணைத்தன. ஆனால், இந்தக் கவுன்சில்களின் பரிணாம வளர்ச்சி வேறு திசையில் சென்றது. அதாவது,(நாஜிச-பாசிசத் தாக்குதல்களால் பாதிப்படைந்த) ஐரோப்பிய நாடுகளின் மறுநிர்மாணம் தொடங்கப் பட்டு, பிரான்ஸ் மார்ஷல் திட்டத்திலும் நேட்டோவிலும் சேர்ந்து, அமெரிக்க மேலாதிக்கத்திற்கு விருப்பத்துடன் அடிபணிந்தது. பாசிச-எதிர்ப்புப் போராட்டத்தில் - இதில் முதலாளித்துவ எதிப்புப் போராட்டமும் உள்ளுறைந்திருந்தது - உருவான தீவிர இடதுசாரி சக்திகளிடமிருந்து பழைமைவாத இடதுசாரிச் சக்திகளும், கம்யூனிச-எதிர்ப்பு வலதுசாரி சோசலிச-ஜனநாயகவாதிகளும் நிரந்தரமான முறிவை ஏற்படுத்திக்கொண்டன.

4.கிழக்கு ஐரோப்பியச் சார்பு (Dependent) முதலாளிய சமுதாயங்களின் பாசிசம்

கிழக்கு ஐரோப்பாவிலிருந்த முதலாளியச் சமுதாயங்கள், மேற்சொன்ன சமுதாயங்களிலிருந்து மிகவும் வேறுபட்டவை. போலந்து, பால்டிக் அரசுகள், ரொமேனியா, ஹங்கேரி, யூகோஸ்லேவியா, கிரீஸ்,போலந்தின் ஆட்சியின் கீழ் இருந்த மேற்கு உக்ரெய்ன் ஆகியவற்றின் சமுதாயங்களே அவை. அங்கிருந்தது பிற்போக்கான, எனவே சார்பு முதலாளித்துவமாகும். முதலாம், இரண்டாம் உலகப் போர்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில், இந்த நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் நாஜி ஜெர்மனியை ஆதரித்துவந்தன. இருப்பினும், ஹிட்லரின் திட்டத்துடன் அவற்றுக்கிருந்த அரசியல் தொடர்புகளை ஒவ்வொன்றாகப் பரிசீலிப்பது அவசியம்.

போலந்தில் ரஷிய ஆதிக்கத்தின் (ஜார் ரஷிய ஆதிக்கத்தின்) மீதிருந்த பழைய பகைமை, சோவியத் யூனியனுக்கு எதிரான பகைமையாக மாறியது. இதை ஊக்குவித்தது, போலிஷ் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கத்தோலிக்கப் போப்பும் அவரது சீடர்களுமாவர். பிரான்ஸில் இருந்த விஷி அரசாங்கத்தைப் போலவே போலந்தும் இயல்பாகவே ஜெர் மனியைச் சார்ந்து பிழைக்கும் நாடாக மாறியிருக்கும். ஆனால், ஹிட்லரால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவரைப் பொருத்தவரை ரஷியர்கள், உக்ரெய்னியர்கள், ஸெர்பியர்கள் ஆகியோரும்கூட யூதர்கள், ரோமாக்கள் (ஜிப்ஸிகள் -எஸ்.வி.ஆர்.), இன்னும்  பல இனத்தவரைப் போலவே முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்பட வேண்டியவர்களாக இருந்தனர். ஆகவே, நாஜி ஜெர்மனியுடன் அணி சேர்ந்த போலிஷ் பாசிசம் என்பதற்கு இடமிருக்கவில்லை.

இதற்கு மாறாக, ஹோர்த்தியின் ஆட்சியின் கீழ் இருந்த ஹங்கேரி, அன்டோனெஸ்குவின் தலைமையில் இருந்த ரொமானியா ஆகியன, நாஜி ஜெர்மனிக்கு அடிமைப்பட்ட கூட்டாளிகளாக நடத்தப்பட்டன. இவ்விரு நாடுகளிலுமிருந்த பாசிசங்கள், அந்தந்த நாட்டுக்கேயுரிய சமுதாய நெருக்கடிகளின் விளைவாகத் தோன்றியவைதான்: ஹங்கேரியில் சிறிதுகாலமே நீடித்ததும் பேலா குன்னின் தலைமையில் இருந்ததுமான கம்யூனிஸ்ட் ஆட்சிக்குப் பிறகு, ‘கம்யூனிசம்' பற்றி உருவாக்கப்பட்டிருந்த பீதி, ரொமானியாவில் ஹங்கேரியர்களுக்கும் ரூத்தேனியர்களுக்கும் எதிராகத் திரட்டப்பட்ட தேசியவெறி ஆகியன இந்த நாடுகளில் பாசிசத்தை உருவாக்கின.

யூகேஸ்லாவியாவில் ஹிட்லரின் ஜெர்மனியும் அதனையடுத்து முஸ்ஸோலினியின் இத்தாலியும் ‘சுதந்திர' குரோஷியாவை ஆதரித்தன. இந்த ‘சுதந்திர' குரோஷியாவின் நிர்வாகம், கத்தோலிக்கத் திருச்சபையின் தீர்மானகரமான ஆதரவு பெற்றிருந்த ஸெர்பிய-விரோத உஸ்டாஷி என்னும் பாசிச அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது; அதேவேளை,  ஒழித்துக்கட்டப்பட வேண்டிய மக்கள் பிரிவினரில் ஸெர்பியர்களையும் சேர்த்திருந்தனர்  நாஜிகள்.

தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள், அவற்றுக்கு சொத்துடைமை வர்க்கங்கள் காட்டிய எதிர்வினை ஆகிய இரண்டிற்குமான எதிர்கால வாய்ப்புக்கான சூழ்நிலைமையை ரஷியப் புரட்சி, 1939க்கு முந்தைய சோவியத் யூனியனில் மட்டுமல்லாது, ரஷியா இழந்திருந்த பிரதேசங்களான பால்டிக் நாடுகள், போலந்து ஆகியவற்றிலும் மாற்றியிருந்தது. 1921ம் ஆண்டு ரீகா ஒப்பந்தத்தையடுத்து, போலந்து பேலாரஸ் நாட்டின் மேற்குப்பகுதிகளையும் (வோல்னியா), உக்ரெய்னையும் (முன்பு ஆஸ்திரியப் பேரரசிடமிருந்த தென் கால்ஸியா, ஜார் பேரரசில் ஒரு மாகாணமாக இருந்த வட கால்ஸியா) தன்னுடன் இணைத்துக்கொண்டது.

இந்தப் பிரதேசம் முழுவதிலும், 1917ஆம் ஆண்டு தொட்டு (ஏன், முதல் ரஷியப்புரட்சி நடந்த 1905ஆம் ஆண்டிலிருந்தே) இரண்டு முகாம்கள் வடிவம் கொண்டன : ஒன்று,  தங்களது நன்மைக்காக தீவிரமான நிலச்சீர்திருத்தத்தை விரும்பிய விவசாய வர்க்கத்தின் பெரும் பகுதியினரிடையேயும் அறிவாளிகளின் வட்டாரங்களிலும் (குறிப்பாக யூதர்களிடம்) பெரும் ஆதரவைப் பெற்றிருந்த சோசலிச ஆதரவு முகாம் (இது பின்னர் போல்ஷ்விக் ஆதரவு முகாமாக மாறியது); மற்றொன்று, அனைத்து  நில உடைமை வர்க்கங்களிடையே இருந்த சோசலிச-எதிர்ப்பு முகாம் (சோசலிச எதிர்ப்பின் காரணமாக இந்த முகாம், பாசிச செல்வாக்கின் கீழ் இருந்த ஜனநாயக விரோத அரசாங்கங்களுக்கு பரிவு காட்டியது). இந்த இரு முகாம்களுக்கிருந்த வேறுபாடு, பால்டிக் நாடுகள், பேலாரஸ், மேற்கு உக்ரெய்ன் ஆகியன சோவியத் யூனியனில் மீண்டும் ஐக்கியப்பட்டபோது, மேலதிக அழுத்தம் பெற்றது.

ஒருபுறம், போலிஷ் தேசியவெறிக்கும் (போலிஷ் குடியேற்றங்களை உருவாக்குவதன் மூலம், போலந்துடன் இணைக்கப்பட்டிருந்த பேலாரஸ், உக்ரெய்னியப் பகுதிகளை ‘போலிஷ் மயமாக்குவதில்' விடாப்பிடியாக இருந்த தேசியவெறி) அந்த தேசியவெறியால் பாதிக்கப் பட்ட மக்களுக்குமிடையே இருந்த முரண்பாட்டின் காரணமாகவும்;  மறுபுறம், போலிஷ்-எதிர்ப்பு, (கம்யூனிச-எதிர்ப்பின் காரணமாக ஏற்பட்ட) ரஷிய-எதிர்ப்பு ஆகிய இரண்டையும் கொண்டி ருந்த உக்ரெய்னிய ‘தேசியவாதிகளுக்கும்' ஹிட்லரின் திட்டத்துக்குமிடையிலான முரண்பாட்டின் காரணமாகவும் (ஹிட்லரின் திட்டத்தில், நாஜி ஜெர்மனிக்கு அடிமைப்பட் டிருந்த உக்ரெய்ன் அரசை உருவாக்குவது இருக்கவில்லை; ஏனெனில் நாஜிகளால் ஒழித்துக் கட்டப்பட வேண்டிய மக்களாக உக்ரெய்னியர்கள் குறித்து வைக்கப்பட்டிருந்தனர்) ஐரோப்பாவின் இந்தப்பகுதியில் ‘பாசிச-ஆதரவாளர்களு'க்கும் ‘பாசிச-எதிர்ப்பாளர்களு'க்கும் இருந்த முரண்பாட்டின் அரசியல் வரைபடம் மங்கலானதாக்கப்பட்டிருந்தது.

இங்கு நான் ஓல்ஹா ஓஸ்ட்ரிட்சௌக் (Olha Ostritchouk)  எழுதியுள்ள Les Ukrainens face d' leur passe என்னும் புத்தகத்தை வாசகர்களுக்குக் குறிப்பிட விரும்புகிறேன். ஐரோப்பாவின் இந்தப்பிரதேசத்தின் (சோவியத் உக்ரெய்னாக மாறிய ஆஸ்த்ரிய கால்ஸியா, போலிஷ் உக்ரெய்ன், சின்ன ரஷியா ஆகியன) சமகால வரலாற்றைப் பற்றிய ஒஸ்ட்ரிட் சௌக்கின் கூர்மையான பகுப்பாய்வு,  இன்னும் தொடர்ந்து நீடிக்கும் முரண்பாடுகள், மோதல்கள் ஆகியவற்றிலுள்ள பிரச்சினைகளையும் உள்நாட்டு பாசிசம் ஆக்கிரமித்துள்ள இடத்தையும் வாசகர்கள் புரிந்துகொள்ள உதவும்.

கடந்தகால மற்றும் நிகழ்கால பாசிசத்தின் மீது மேற்கு நாட்டு வலதுசாரி சக்திகள் காட்டும் பரிவு

இரண்டு உலகப்போர்களுக்கிடையில் நிலவிய ஐரோப்பிய நாடாளுமன்றங்களிலிருந்த வலதுசாரி உறுப்பினர்கள் எப்போதுமே பாசிசத்தின் மீதும், அதைவிட வெறுக்கத்தக்கதாக இருந்த நாஜிசத்தின்மீதும் பரிவு காட்டி வந்தனர். மிகையான ‘பிரிட்டிஷ்தன்மை' கொண்டிருந்த சர்ச்சிலும்கூட முஸ்ஸோலினி மீதான தமது அனுதாபத்தை ஒருபோதும் மூடி மறைத்ததில்லை. அமெரிக்கக் குடியரசுத்தலைவர்களும், ஜனநாயக, குடியரசுக் கட்சிகளும்  ஹிட்லரின் ஜெர்மனி தோற்றுவித்த அபாயத்தையும், எல்லாவற்றுக்கும் மேலாக பேரரச/ பாசிச  ஜப்பான் தோற்றுவித்த அபாயத்தையும் மிகத் தாமதமாகவே கண்டறிந்தனர். அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கே உரிய மனித வெறுப்பு மனப்பான்மையுடன், பிறர் சத்தமின்றிச் சிந்தித்து வந்ததை பகிரங்கமாகக் கூறினார் ட்ரூமன்: போரில் ஈடுபட்டுள்ள ஜெர்மனி, சோவியத் ரஷியா, தோற்கடிக்கப்பட்ட ஐரோப்பியர்கள் ஆகிய அனைவரும் போரால்  சோர்வடையட்டும்; பிறகு எவ்வளவு தாமதமாக முடியுமோ அவ்வளவு தாமதமாக அமெரிக்கா தலையிட்டு எல்லா பலன்களையும் அறுவடை செய்துகொள்ளட்டும்.

இது கொள்கைரீதியான பாசிச-எதிர்ப்பின் வெளிப்பாடு அல்ல. 1945ல் ஸலாஸரையும் ஃப்ராங்கோவையும் மீண்டும் ஆட்சியில் அமர்த்த எவ்விதத் தயக்கமும் காட்டப்படவில்லை. மேலும், அய்ரோப்பிய பாசிசத்தின் உட்கையாகச் செயல்படுவது கத்தோலிக்கத் திருச்சபையின் கொள்கையிலுள்ள நிலையான அம்சமாக இருந்து வந்துள்ளது.  ஆகவே, போப் பன்னிரண்டாம் பயஸை முஸ்ஸோலினி, ஹிட்லர் ஆகியோரின் கூட்டாளி எனக் கூறுவது மிகையாகாது.

ஹிட்லரின் யூத-எதிர்ப்புக் கொள்கையும்கூட, மிக தாமதமாகவே, அது தனது கொலை வெறியின் இறுதிக்கட்டத்தை அடைந்த பிறகே  இழிவுபடுத்தப்பட்டது. ஹிட்லரின் பேச்சுகளால் தூண்டிவிடப்பட்ட வெறுப்புக்கு, ‘யூத-போல்ஷ்விச'த்தின்  மீதான வெறுப்புக்கு அழுத்தம் தருவது பல அரசியல்வாதிகளிடம் பொதுவாக இருந்த விஷயம்தான்.  நாஜிசத்தின் தோல்விக்குப் பிறகுதான், கோட்பாட்டளவில் யூத எதிர்ப்புக் கொள்கையைக் கண்டனம் செய்வது அவசியமானதாகியது. யூத-எதிர்ப்புக் கொள்கையைக் கண்டனம் செய்வதை மேலும் எளிதாக்கிய காரணம், ‘பேரழிவுக்கு பலியானவர்கள்' என்னும் சிறப்புப் பட்டத்துக்கான வாரிசுகள் என்று தங்களுக்குத் தாங்களே உரிமை கொண்டாடியவர்கள் இஸ்ரேலின் ஜியோனிஸ்டுகளாக, பாலஸ்தீனர்கள், அராபிய மக்கள் ஆகியோருக்கு (இவர்கள் ஐரோப்பிய யூத-எதிர்ப்புக் கொள்கையின் பயங்கரச் செயல்களோடு எவ்விதத்திலும் சம்பந்தப் படாதவர்கள்) எதிரான மேற்கு நாட்டு ஏகாதிபத்தியத்தின் கூட்டாளிகளாக மாறியது தான்.

நாஜிகள் மற்றும் முஸ்ஸோலினியின் இத்தாலியின் தகர்வின் காரணமாக, மேற்கு அய்ரோப்பிய (‘இரும்புத் திரை'க்கு மேற்கே இருந்த நாடுகளின்) வலதுசாரி அரசியல் சக்திகள் தங்களை, பாசிசத்தின் உடந்தையாளர்களாகவும் கூட்டாளிகளாகவும் இருந்தவர்களிடமிருந்து (இவர்களும் அந்த வலதுசாரி அரசியல் சக்திகளில் உள்ளடங்கியிருந்தவர்கள் தாம்) வேறுபடுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. இது வெளிப்படையான விஷயம். ஆயினும், பாசிச இயக்கங்கள் பின்னணிக்குச் செல்லும்படியும் திரைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும்படியும்  நிர்பந்திக்கப்பட்டனவேயன்றி அவை உண்மையில் காணாமல் போகவில்லை.

மேற்கு ஜெர்மனியில், ‘சமரசம்' என்னும் பெயரால், அந்த நாட்டு அரசாங்கமும் அதன் புரவலர்களும் (அமெரிக்காவும், அதற்கடுத்தபடியாக மகா பிரிட்டனும் பிரான்சும்) போர்க் குற்றங்களையும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும் இழைத்தவர்களில் கிட்டத்தட்ட அனைவரையும் அப்படியே விட்டுவிட்டன. பிரான்ஸில், நாஜிகளுடன் ஒத்துழைத்தவர்களுக்கு மரணதண்டனை வழங்குதல் என்னும் பெயரால் மிகைச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்னும் காரணம் காட்டி, நாஜி எதிர்ப்புப் போராளிகள்மீது சட்ட நடவடிக்கை கள் தொடங்கப்பட்டன. அதேவேளை அந்துவான் பினாயின் தலைமையில் விஷி அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் அரசியல் அரங்கிற்கு மீண்டும் வந்தனர். இத்தாலியில் பாசிசம் மௌனமாக்கப்பட்டது என்றாலும், அது கிறிஸ்தவ ஜன நாயகக் கட்சி அணிகளிலும் கத்தோலிக்கத் திருச்சபை அணிகளிலும் தொடர்ந்து நிலவி வந்தது. ஐரோப்பிய சமுதாயத் தால் ( பின்னர் இது ‘ஐரோப்பிய ஒன்றிய'மாக மாறியது) 1980இல் ஸ்பெயினில் திணிக்கப்பட்ட சமரசத்திட்டம், ஃப்ராங்கோ ஆட்சிக்காலத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களை நினைவூட்டுவதைத் தடை செய்துவிட்டது.

பழைமைபேண் வலதுசாரி சக்திகள் மேற்கொண்ட கம்யூனிஸ்ட்-எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மேற்கு ஐரோப்பிய, மத்திய ஐரோப்பிய சோசலிச, சோசலிச-ஜனநாயகக்  கட்சிகள் தந்த ஆதரவுதான் பாசிசச்சக்திகள் திரும்பி வந்ததற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த ‘மிதவாத' இடதுசாரிக் கட்சிகள்  ஒருகாலத்தில் உண்மையான, உறுதியான பாசிச-எதிர்ப்புக் கட்சிகளாகத்தான் இருந்தன. ஆனால் அதை அவை மறந்துவிட்டன. இந்தக் கட்சிகள் சமூக தாராளவாதக் கட்சிகளாக (social-liberal parties) மாற்றப்பட்டமையும், பிற்போக்கு முதலாளித்துவ அமைப்புக்கான உத்தர வாதமாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஐரோப்பிய  மறுநிர்மாணத்துக்கு அவை தந்த நிபந்தனையற்ற ஆதரவும், நேட்டோ மூலமும் இதர வழிகளிலும் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு அவை நிபந்தனையற்ற முறையில் அடிபணிந்ததும், மரபான வலதுசாரி சக்திகளும் சமூக தாராளவாதிகளும் இணைந்த பிற்போக்கு அணியொன்று வலுப்படுத்தப்படு வதைச் சாத்தியமாக்கியுள்ளன; இந்த அணி, தேவைப்படும் போது, புதிய அதிதீவிர வலதுசாரிகளுக்கும் தனக்குள் இடம் கொடுக்கக்கூடியதாக உள்ளது.

பின்னர், கிழக்கு ஐரோப்பிய பாசிசத்துக்கு மறுவாழ்வு தரும் நடவடிக்கைகள் 1990லிருந்து விரைவாகத் தொடங்கின. அந்தந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த பாசிச இயக்கங்கள் எல்லாமே பல்வேறு அளவுகளில் ஹிட்லரிசத்தின் விசுவாசமான கூட்டாளிகளாகவோ அதனுடன் ஒத்துழைத்தவையாகவோ இருந்தவைதாம். நாஜிகளின் தோல்வி நெருங்கி வருகையில் அந்த பாசிச இயக்கங்களிலிருந்த செயலூக்கமுள்ள தலைவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மேற்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, அமெரிக்க ஆயுதப்படைகளிடம் ‘சரணடையுமாறு' செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர்கூட அவர்கள் இழைத்த குற்றங்களுக்காக விசாரணை செய்யப்பட சோவியத், யூகோஸ்லேவியா அல்லது புதிய மக்கள் குடியரசு அரசாங்கங்களிடம் (கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் அரசாங்கங்கள்-எஸ்.வி.ஆர்.) ஒப்படைக்கப்படவில்லை (இது நேசநாடுகள் தமக்கிடையே செய்துகொண்ட ஒப்பந்தங்களை மீறுவதாகும்). அவர்கள் எல்லோரும் அமெரிக்காவிலும் கனடாவிலும் புகலிடம் தேடிக்கொண்டனர். அவர்களுடைய மூர்க்கத்தனமான கம்யூனிச-எதிர்ப்புக்காக, மேற்சொன்ன நாடுகளின் அரசாங்கங்கள் அவர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கின.

மேலே குறிப்பிடப்பட்ட நூலில் ஓஸ்ட்ரோசௌக், அமெரிக்க அரசாங்கக் கொள்கையின் குறிக்கோள்களுக்கும் (அமெரிக்காவுக்குப் பின்னால் உள்ள ஐரோப்பிய அரசாங்கங்களின் கொள்கைகளின் குறிக்கோள்களுக்கும்) கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ள (குறிப்பாக, உக்ரெய்னின்) பாசிசவாதிகளுக்குமிடையே உள்ள கூட்டை, மறுக்கமுடியாதபடி மெய்ப்பிப்பதற்கான அனைத்துத் தகவல்களையும் தந்துள்ளார். எடுத்துக்காட்டாக, ‘பேராசிரியர்' டிமிட்ரோடோம்ஸ் டோவ் (Dmytro Domstov) என்பவர் 1975ல் மரணமடையும் வரை தமது படைப்புகள் அனைத்தையும் கனடாவில்தான் வெளியிட்டு வந்தார். ‘யூத-போல்ஷ்விசம்' என்னும் சொற்றொடரை (நாஜிகள் பயன்படுத்திய சொற்றொடர் -எஸ்.வி. ஆர்.) வழக்கமாகப் பயன்படுத்தி வந்த அவரது எழுத்துகள் மூர்க்கத்தனமான கம்யூனிச-எதிர்ப்பு எழுத்துகள் மட்டுமல்ல, அடிப்படையில் ஜனநாயக-விரோத எழுத்துகளுமாகும். மேற்குலகிலுள்ள ஜனநாயக அரசுகள் என்று சொல்லப்படுபவை  உக்ரெய்னில் ‘ஆரஞ்சுப்புரட்சி'க்கு (அதாவது பாசிச எதிர்ப்புரட்சிக்கு) ஆதரவு தந்ததுடன், அதற்கு நிதியுதவி வழங்கி அதனை ஒழுங்கமைக்கவும் செய்தன.

பாசிசவாதிகளை ‘மிதவாத' ஊடகங்கள் ஆதரிக்கின்றன. ஆனால் அதை அவற்றால் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள முடியாது. எனவே அந்த ஆதரவை மூடிமறைக்க அவை பயன்படுத்தும் ‘சாமர்த்தியமான' வழிமுறை மிக சுலபமானது: அதாவது ‘பாசிஸ்ட்' என்னும் சொல்லுக்குப் பதிலாக ‘தேசியவாதிகள்' (Nationalists)  என்னும் சொல்லைப் பயன்படுத்துகின்றன. ‘பேராசிரியர்' டோம்ஸ்டோவ் இனி ‘பாசிஸ்ட்' அல்ல; அவர் ‘தேசியவாதி'! அதேபோல, மரி லெ பென் ( Marine Le Penn;  பிரான்சில் இப்போதுள்ள ஓர் அதிதீவிர வலதுசாரிக் கட்சியின் தலைவர்- எஸ்.வி.ஆர்.), ‘பாசிஸ்ட்' அல்லர், மாறாக ( ‘லெ மோந்த்' நாளேடு எழுதுவதைப்போல) ‘தேசியவாதி'!!

இந்த அசல் பாசிஸ்டுகள், அவர்களே சொல்லிக்கொள்வது போல ‘தேசியவாதிகளா'? இது கேள்விக்குரியது. சமகால உலகிலுள்ள உண்மையான ஆதிக்கச்சக்திகளின், அதாவது அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றின் ஏகபோக முதலாளியச் சக்திகளின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துபவர் கள்தாம் இன்று ‘தேசியவாதிகள்' என்னும் பெயருக்குத் தகுதியுடையவர்கள். ‘தேசியவாதிகள்' என்று சொல்லப்படுபவர்கள், வாஷிங்டன், பிரெஸ்ஸெல்ஸ், நேட்டோ ஆகியவற்றின் நண்பர்கள். அவர்களது ‘தேசியம்' என்பது, அவர்களது அவப்பேறுகளுக்கு ஒருபோதும் காரணமாக இல்லாத அண்டைப்புற அப்பாவி மக்களின் மீது தேசியவெறி கொண்ட வெறுப்பைக் காட்டுவதுதான்: உக்ரெய்னிய பாசிஸ்டுகளுக்கு எதிரிகளாக இருந்தவர்கள் ரஷியர்கள் (ஜார் அல்ல); குரோஷிய பாசிஸ்டுகளுக்கு எதிரியாக இருந்தவர்கள் ஸெர்பியர்கள்; பிரான்ஸ், ஆஸ்திரியா, ஸ்விட்ஸர்லாந்து, கிரீஸ், இன்னும் வேறு இடங்களில் தோன்றியுள்ள புதிய அதிதீவிர இடதுசாரிகளைப் பொருத்தவரை, அந்த நாடு களுக்குப் ‘புலம்பெயர்ந்தவர்கள்தாம்' எதிரிகள்.

ஒருபுறம் அமெரிக்காவிலுள்ள முக்கிய அரசியல் சக்திகள் (குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும்), ஐரோப்பாவிலுள்ள முக்கிய அரசியல் சக்திகள் ( நாடாளுமன்ற வலதுசாரிகள், சமூக தாராளவாதிகள்) ஆகியோருக்கும், மறுபுறம் கிழக்கு ஐரோப்பாவிலுள்ள பாசிஸ்டுகளுக்கும் உள்ள கள்ளக்கூட்டால் ஏற்படும் அபாயத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்தக் கள்ளக்கூட்டின் பேச்சாளராகத் தம்மைத்தாமே நிறுவிக்கொண்டுள்ள ஹில்லாரி கிளின்டன், போர்வெறிக் கூச்சலை அதன் எல்லைக்கே கொண்டு சென் றுள்ளார். ஜார்ஜ் டபிள்யூ.புஷ்ஷையும் விஞ்சும் வகையில் அவர், ரஷியாவுக்கு எதிரான கெடுபிடிப்போரை (cold war) மீண்டும் தொடங்குவதுடன் மட்டுமல்லாது,  பழிவாங்கும் வெறியோடு அந்த நாட்டின்மீது முன்கூட்டியே இராணுவத் தாக்குதலை நடத்தவேண்டும் என்றும், உக்ரெய்ன், ஜார்ஜியா, மோல்டோவா மற்றும் சீனா, ஆதிக்கச்சக்தி களுக்கு எதிராக ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தின் அமெரிக்க நாட்டு மக்கள் கிளர்ச்சி செய்துவரும் இடங்கள் ஆகியவற்றில் மேலும் வெளிப்படையான இராணுவத் தலையீட்டைச் செய்யவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார். அவப்பேறாக, அமெரிக்கா, தனக்கு ஏற்பட்டுள்ள சரிவுக்கான  எதிர்வினையாக சிறிதுகூடத் தயக்கமில்லாமல் மேற்கொள்ளும்  நடவடிக்கைகள் ,‘அமெரிக்காவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக' ஹில்லாரி கிளின்டனைத் தேர்ந்தெ டுப்பதற்கான போதுமான ஆதரவைத்  திரட்டக்கூடும். இந்த போலி பெண்ணிலைவாதிக்குப் பின்னால் இருப்பவை என்ன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அமெரிக்காவிலும், ‘பழைய இரும்புத்திரை'க்கு மேற்கே உள்ள ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள ‘ஜனநாயக’ அமைப்புக்கு பாசிச அபாயம் இன்னும்கூட அச்சுறுத்தலாக இருப்ப தில்லை என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், மரபான நாடாளுமன்ற வலதுசாரிகளுக்கும் சமூக தாராளவாதிகளுக்குமிடையே ஏற்பட்டுள்ள கூட்டின் காரணமாக, வரலாற்று ரீதியான பாசிச இயக்கங்களைப் பின்பற்றி உருவாகின்ற அதிதீவிர வலதுசாரி சக்திகளின் சேவைகளை நாடவேண்டிய தேவை ஆதிக்க மூலதனத்திற்கு இல்லாமல் போய்விட்டது. அப்படியானால், கடந்த பத்தாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் அதிதீவிர வலதுசாரி சக்திகள் தேர்தல் வெற்றிகளைப் பெற்றதற்குக் காரணம் என்ன? மேல்நிலையாக்கப்பட்டுள்ள ஏகபோக முதலாளித்துவம்  (generalized monopoly capitalism)  எல்லா இடங்களிலும் பரவிவருவதால் ஐரோப்பியர்களும்கூடப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், (மரபான) வலதுசாரிச் சக்திகளுக்கும் சோசலிச இடதுசாரிகள் என்று சொல்லப்படுபவர்களுக்குமிடையே ஏற்பட்டுள்ள கூட்டுக்கு எதிர்வினையாக, அவர்கள் தேர்தலைப் புறக்கணிப்ப தையோ, அதிதீவிர வலதுசாரிகளுக்கு வாக்களிப்பதையோ விரும்புகின்றனர். ஆக இந்தச்சூழலில் புரட்சிகரமான இடதுசாரி சக்திகளாக வளரக்கூடிய சக்திகளுக்குப் பெரும் பொறுப்பு இருக்கிறது. நடப்பிலுள்ள முதலாளித்துவத்தைக் கடந்துசெல்கிற உண்மையான முன்னேற்றத்துக்கான திட்டங்களை அவை துணிச்சலோடு முன்மொழியுமானால், இப்போது அவற்றுக்கு இல்லாத நம்பகத்தன்மையை உருவாக்கிக்கொள்ள முடியும். தற்போது குறிப்பிட்ட தனித் தனிப் பிரச்சினைகளின் பொருட்டு துண்டுதுண்டாக நடத்தப்பட்டு வரும் எதிர்ப்பியக்கங்களை ஒருங்கிணைக்கவும்  தற்காப்புப்போராட்டங்களை அவற்றுக்கு வழங்கவும் புரட்சிகர இடதுசாரிகளால் முடியும். இத்தகைய இடதுசாரி ‘இயக்கத்'தால், உழைக்கும் வர்க்கங்களுக்குச் சார்பாக சமுதாயத்தில் பல்வேறு வர்க்கங்களுக்குள்ள பலாபலத்தை மாற்றியமைத்து முன்னேற்றகரமான வளர்ச்சியை சாத்தியப்படுத்த முடியும். இதற்கான நிரூபணமாக இருப்பவை, தென் அமெரிக்க நாடுகளில் மக்கள் இயக்கங்கள் அடைந்துள்ள வெற்றிகளாகும்.

இப்போதுள்ள நிலைமைகளில், அதிதீவிர வலதுசாரிகள் பெற்றுள்ள தேர்தல் வெற்றிகளும் கூட சமகால முதலாளியத்திலிருந்தே தோன்றியவைதான். இந்தத் தேர்தல் வெற்றிகள், ‘மக்களைக் கவர்ந்திழுப்பதற்காக உருவாக்கப்பட்டவை' என்று அதிதீவிர வலதுசாரிகளின் சொல்லாடகள், அதிதீவிர இடதுசாரிகளின் சொல்லாடல்கள் ஆகிய இரண்டையும் ஒரே குரலில் இகழ்ந்து அவை இரண்டையும் ஒன்றாகச் சேர்ப்பதற்கு ஊடகங்களை அனுமதிக்கின்றன. இப்படிச் செய்வதன் மூலம், இந்த ஊடகங்கள், அதிதீவிர வலதுசாரி கள் (‘வலதுசாரி' என்னும் சொல்லே சுட்டிக்காட்டுவது போல) முதலாளித்துவ ஆதரவுச்சக்திகள், மூலதனத்தின் கூட்டாளிகளாக ஆகக்கூடியவர்கள் என்பதையும், அதிதீவிர இடதுசாரிகளோ முதலாளித்துவ அதிகார அமைப்புக்கு அபாயகரமான எதிர்ப்புச் சக்திகளாக வளரும் ஆற்றல் கொண்டவர்கள் என்னும் உண்மையை மூடிமறைக்கின்றன.

மேற்கு, கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் காணப்படும் சூழல் இணைவு சிற்சில மாற்றங்களுடன் அமெரிக்காவிலும்  இருப்பதை நம்மால் அவதானிக்கமுடிகின்றது. ஆனால், அமெரிக்காவிலுள்ள அதிதீவிர வலதுசாரிகள் ஒருபோதும் பாசிஸ்டுகள் என்று அழைக்கப்பட்டதில்லை. கடந்தகால ‘மெக்கார்த்தியச'த்தைப் போலவே, இன்றைய தேநீர் விருந்து வெறியர்களும் (ஹில்லாரி கிளிண்டன் போன்ற) போர் வெறியர்களும் ‘தன்னுரிமை' என்பதற்குப் பகிரங்கமான ஆதரவு தெரிவிக்கின்றனர். முதலாளித்துவ அமைப்பால் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு இணங்குவதாக அவர்களால் ‘சந்தேகிக்கப்படும்' அரசாங்கத்திற்கு எதிராக ஏகபோக மூலதனத்தின் உடைமையாளர்கள், அவற்றை நிர்வகிப்பவர்கள் ஆகியோரின்  நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் பொருளில்தான் அவர்கள் ‘தன்னுரிமை' என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

பாசிஸ்ட் இயக்கங்களைப்பற்றிய கடைசி அவதானிப்பு இது தான்: கோரிக்கைகளை எழுப்புவதை எப்போது, எவ்வாறு நிறுத்திக்கொள்வது என்பதை அவை அறிந்துகொள்ளாமல் இருப்பதாகத் தோன்றுகிறது. தலைவர் வழிபாடு, கண்மூடித்தனமான அடிபணிதல், வெறியுணர்வைப் பரப்பும் போலி-இனத்துவ, போலி-மதக் கட்டுக்கதைகளை விமர்சன நோக் கில்லாமலும் வானளாவிய வகையிலும் போற்றிப் புகழ்தல், வன்முறைச் செயல்களுக்காக ஆயுதமேந்திய குடிபடைகளுக்கு ஆள்சேர்த்தல் ஆகியன பாசிசத்தைக் கட்டுப்படுத்த முடியாத சக்தியாக ஆக்குகின்றன. பாசிசம் எந்த சமூகப் பிரிவினரின் நலன்களுக்கு சேவை புரிவதற்காக அறிவற்ற பிறழ்வுகளைச் செய்கின்றதோ, அந்தப் பிறழ்வுகளின் கண்ணோட்டத்திற்கும்கூட ‘தவறுகளாக'த் தென்படுவனவற்றை அது செய்வது தவிர்க்க முடியாததாக அமைந்துவிடுகிறது. ஹிட்லர் உண்மையிலே மனநோயாளி; இருப்பினும் அவரால் தம்மை ஆட்சியில் அமர்த்திய பெரும் முதலாளிகளைத் தமது பைத்தியக்காரத்தனத்தின் இறுதிவரை பின்பற்றி வருமாறு நிர்பந்திக்க முடிந்தது; அது மட்டுமின்றி, மக்கள்தொகையில் மிகப்பெரும் பகுதியின் ஆதரவையும் திரட்டிக்கொள்ள முடிந்தது. ஹிட்லரிசம் என்பது ஓர் அதீதமான விஷயம் என்றாலும், மனநோயாளிகளாக இல்லாத முஸ்ஸோலினி, ஃப்ராங்கோ, ஸலாஸர் ஆகியோரின் கூட்டாளிகளும் கையாட்களும்கூட கொடுங்குற்றச் செயல் களை இழைக்கத் தயங்கியதில்லை.

சமகாலத் தெற்கு நாடுகளில் பாசிசம்

இலத்தின் அமெரிக்காவிலுள்ள விவசாயிகள், அடிமை நிலைக்குத் தாழ்த்தப்பட்டு, நிலவுடைமையாளர்களின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுச் சுரண்டப்பட்டனர். இந்தச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டே இலத்தின் அமெரிக்கா, 19ம் நூற்றாண்டில் உலகளாவிய மூலதனத்துடன் இணைக்கப்பட்டது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது மெக்ஸிகோவில் இருந்த போர்ஃபிரோ டயஸின் ஆட்சி அமைப்பு. 20ம் நூற்றாண்டில் உலக முதலாளியத்துடன் இலத்தின் அமெரிக்கா மேலும் நெருக்கமாக இணைக்கப்பட்டதன் காரணமாக ‘வறுமை நவீனமயமாக்கப்பட்டது'. ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நிகழ்ந்ததைவிட மிக அதிக அளவிலும், மிக விரைவாகவும் கிராமப்புறத்திலிருந்து மக்கள் வெளியேறினர். இதன் காரணமாக, பழைய கிராமப்புற வறுமை வடிவங்களிலிருந்து வேறுபட்ட புதிய வறுமை வடிவங்கள் லத்தின் அமெரிக்க நகர்ப் புறச்சேரிகளில் தோன்றின. அதேவேளை, சர்வாதிகார ஆட்சி களை நிறுவியும், தேர்தல் மூலம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும்  ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டியும், கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் தடைசெய்தும், உளவுபார்க்கும் தொழில்நுட்பங்களின் மூலம் யாரை வேண்டுமானாலும் கைது செய்யவும் சித்திரவதை செய்யவுமான உரிமைகள் அனைத்தையும் ‘நவீன' உளவுத்துறையினருக்கு வழங்கியும் வெகுமக்கள் மீதான அரசியல் கட்டுப்பாடு  'நவீனமயமாக்கப்பட்டது'. முதலாளித்துவத்துக்கான இத்தகைய அரசியல் நிர்வாக வடிவங்கள், ஐரோப்பிய சார்பு முதலாளிய நாடுகளில் காணப்பட்ட பாசிசங்களுடன் மிகவும் ஒத்திருந்தன என்பதில் சந்தேகமில்லை. 20ம் நூற்றாண்டு லத்தின் அமெரிக்காவிலிருந்த சர்வாதிகார ஆட்சிகள் அந்தந்த நாட்டுப் பிற்போக்கு அணிக்கு (பெரும் நிலவுடைமையாளர்கள், தரகு முதலாளி வர்க்கங்கள், லத்தின் அமெரிக்காவில் ஏற்பட்ட இந்த உதிரி வளர்ச்சி வடிவத்திலிருந்து சிலவேளை பயன டைந்த மத்தியதர வர்க்கங்கள் ஆகியோர் அடங்கியதுதான் இந்த அணி) மட்டுமல்ல; எல்லாவற்றுக்கும் மேலாக, ஆதிக்க வெளிநாட்டு மூலதனத்துக்கு, குறிப்பாக அமெரிக்க மூலதனத்துக்கு சேவை செய்தன. அதனால்தான், அமெ ரிக்கா இந்த சர்வாதிகார ஆட்சிகளை- லத்தின் அமெரிக்கா வில் அண்மையில் மக்கள் இயக்கங்கள் வெடித்துக் கிளம்பி  நிலைமையை மாற்றிய வரை-ஆதரித்து வந்தது. இந்த மக்கள் இயக்கங்களுக்குள்ள ஆற்றலும், அவை கொண்டுவந்த சமூக, ஜனநாயக முன்னேற்றங்களும்- குறைந்த காலத்துக்கேனும்- பாசிச சர்வாதிகார ஆட்சிகள் திரும்பி வருவதைத் தடுத்துள்ளன. ஆனால் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. ஒரு புறம் உழைக்கும் வர்க்கங்களுக்கும், மறுபுறம் உள்நாட்டு முதலாளித்துவம், உலக முதலாளித்துவம் ஆகியவற்றுக்குமிடையே இப்போதுதான் மோதல் தொடங்கியுள்ளது. எல்லா வகையான பாசிசங்களயும் போலவே, லத்தின் அமெரிக்க சர்வாதிகார ஆட்சிகளாலும் ‘தவறுகளை'ச் செய்வதைத் தவிர்க்க முடியவில்லை, சில தவறுகள் அந்த சர்வாதிகார ஆட்சிகளின் அழிவுக்கும் வழிகோலின.  இதற்கு எடுத்துக்காட்டு யோர்ஹெ ரஃபெய்ல் விடெலாவின் (Jorge Rafael Videla)   சர்வாதிகார ஆட்சி. அர்ஜெண்டின மக்களிடையே தோன்றியிருந்த தேசிய உணர்வைத் தமது சொந்த ஆதாயத்துக்குப் பயன்படுத்த முனைந்த அவர் மால்வினாஸ் தீவுகளைக் கைப்பற்றப் போர் தொடுத்தார்.

1980களில் தொடங்கி, மேல்நிலை ஏகபோக முதலாளியப் பரவலின் காரணமாக உருவான உதிரி வளர்ச்சி, பாண்டூங் சகாப்தத்தில் (1955-1980) ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் தோன்றிய ஆட்சிமுறைகளை அகற்றிவிட்டது.  இந்த உதிரி வளர்ச்சி,லத்தின் அமெரிக்காவில் ஏற்பட்டதைப் போலவே,  வறுமையை நவீனமயமாக்கி ஒடுக்குமுறை வன்முறையையும் நவீனமயமாக்கியுள்ளது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருப்பவை அரபு உலகில் நாஸரின் ஆட்சிக்குப் பிற கும் இராக்கில் பாத் கட்சியின் ஆட்சிக்குப் பிறகும் தோன்றி யுள்ள அரசாங்க அமைப்புகளாகும். பாண்டூங் சகாப்தத்தைச் சேர்ந்த தேசிய, மக்களாதாரவு பெற்ற ஆட்சிகளையும்  உலகமயமாக்கப்பட்ட நவ-தாராளவாத வாகனத்தில் ஏறிக்கொண்ட அவற்றின் வாரிசுகளையும்- அவை அனைத்துமே ‘ஜனநாயகத்தன்மையற்றவை' என்னும் காரணம் காட்டி-ஒன்றாகச் சேர்க்கக்கூடாது. பாண்டூங் சகாப்த ஆட்சிகள், எதேச்சாதிகார அரசியல் நடைமுறைகளைக் கொண்டிருந்தபோதிலும், மக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டவையாக இருந்தன. அதற்குக் காரணம், ஒன்று, அந்த ஆட்சிகளின் உண்மை யான சாதனைகள்தாம்; அந்த சாதனைகளிலிருந்து உழைக்கும் வர்க்கங்களில் பெரும்பான்மையினர் பலனடைந்தனர்; இரண்டு, அந்த ஆட்சிகளின் ஏகாதிபத்திய-எதிர்ப்பு நிலைப்பாடு. அந்த ஆட்சிகளுக்குப் பிறகு வந்த சர்வாதிகார ஆட்சிகள், எப்போது உலகமயமாக்கப்பட்ட நவதாராளவாதத்தையும் அதனோடு சேர்ந்துவரும் உதிரி வளர்ச்சியையும் ஏற்றுக் கொண்டனவோ அப்போதே அவை தாம் இருப்பதற்கான நியாயத்தை இழந்துவிட்டன. (பாண்டூங் சகாப்த) ஆட்சி, ஜனநாயக ஆட்சியாக இல்லாமலிருந்தாலும், அது  மக்களா தரவு பெற்ற, தேசியத்தன்மை வாய்ந்த ஆட்சியாக இருந்தது.  அது நவதாராளவாதப் பொருளாதார, மக்கள் விரோத, தேச விரோதத் திட்டத்திற்கு சேவை செய்யும் போலிஸ் வன்முறை ஆட்சிக்கு வழிவிட்டு மறைய வேண்டியதாயிற்று.

2011ல் தொடங்கிய அண்மைக்காலக் கிளர்ச்சிகள், சர்வாதிகார ஆட்சிகளைக் கேள்விக்குட் படுத்தியுள்ளன. ஆனால், சர்வாதிகார ஆட்சிகள் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு சரி. இந்த சர்வாதிகார ஆட்சிகளுக்கான மாற்றுகள்  நிலைபெற வேண்டுமானால், இந்தக் கிளர்ச்சிகள் எந்த மூன்று குறிக்கோள்களுக்காக எழுந்துள்ளனவோ, அந்த மூன்று குறிக்கோள்களையும் ஒன்றிணைப்பதில் அவை வெற்றியடைய வேண்டும். பின்வருவனதான் அந்த மூன்று குறிக் கோள்கள்: சமுதாயம், அரசியல் ஆகியவற்றை ஜனநாயகப் படுத்துதலைத் தொடர்ந்து செய்தல், முற்போக்கான சமூக வளர்ச்சிகள், தேசிய இறையாண்மையை உறுதி செய்தல்.

இந்த வெற்றியைச் சாதிப்பதிலிருந்து நாம் வெகுதூரம் பின்தங்கியிருக்கிறோம். அதனால்தான் கண்ணுக்குத் தெரிகின்ற குறுகிய காலத்துக்குப் பல்வேறு மாற்றுகள் சாத்தியமானவை யாகத் தோன்றுகின்றன. பாண்டூங் சகாப்தத்தைச் சேர்ந்த தேசிய, மக்களாதரவு ஆட்சிமுறைக்கு (சிறிது ஜனநாயகத்தன்மையைச் சேர்த்துக்கொண்டு)  திரும்பிச் செல்வது சாத்தி யமா? அல்லது  உறுதிபெற்ற ஜனநாயக, மக்கள்சார்பான, தேசிய முன்னணி ஏற்படுமா? அல்லது கடந்தகாலத்தை நோக்கிய  பிரமைக்குள் - அது இன்றையச் சூழலில், அரசியலையும் சமுதாயத்தையும் ‘இஸ்லாமியமயமாக்கும்' வடிவத்தை மேற்கொள்கின்றது - மூழ்குவதா?

முதலாளித்துவத்தின் சவாலுக்கான இந்த மூன்று மாற்றுகளில் எதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பதில் மிகுந்த குழப்பம் ஏற்பட்டுள்ள இந்தச்சூழலில், மேற்கு நாட்டு அரசு கள் (அமெரிக்காவும் அதற்குக் கீழ்ப்படிந்துள்ள ஐரோப்பியக் கூட்டாளிகளும்) ஒன்றைத் தேர்வு செய்து கொண்டுள்ளன: அவை அரசியல் இஸ்லாத்தின் வடிவங்களான முஸ்லிம் சகோதரத்துவம் அமைப்புக்கும் மற்றும்/ அல்லது இதர ‘ஸலாஃபிஸ்ட்'அமைப்புகளுக்கும் முன்னுரிமையுடன் கூடிய ஆதரவை வழங்கியுள்ளன. இதற்கான காரணம் எளிதானதும் தெளிவானதுமாகும்: இந்த அரசியல் சக்திகள் உலக மயமாக்கப்பட்ட நவதாராளவாதத்துக்குள்ளேயே தமது அதிகாரத்தைச் செலுத்துவதை ஏற்றுக்கொண்டுள்ளன; இப்படிச் செய்வதன் மூலம், சமூகநீதி, தேசிய சுதந்திரம் ஆகியவற்றுக்கான வருங்கால வாய்ப்புகளைக் கைவிட்டுவிடுகின்றன. ஏகாதிபத்திய சக்திகளின் குறிக்கோளும் இதுதான்.

இவ்வகையில், அரசியல் இஸ்லாத்தின் செயல்திட்டம் சார்பு முதலாளித்துவ சமுதாயங்களில் காணப்படும் பாசிச வகையோடு சேர்ந்திருக்கிறது. உண்மையில் இது, எல்லா வகை யான பாசிசங்களுடனும் இரு அடிப்படையான பண்புகளைப் பகிர்ந்துகொள்கிறது: 1. முதலாளிய அமைப்பின் இன்றியமையா அம்சங்களுக்கான சவால்கள் அரசியல் இஸ்லாத்தில் இல்லை (அதாவது, இன்றையச்சூழலில், உலகமயமாக்கப்பட்ட நவதாராளவாத முதலாளித்துவத்தின் பரவலுடன் தொடர்புடைய உதிரி வளர்ச்சிமுறையை அது கேள்விக்குட்படுத்துவதில்லை); 2.அரசியல் நிர்வாகத்திற்கு  ஜனநாயக விரோத, போலிஸ்-அரசு வடிவங்களைத் (கட்சி களையும் அமைப்புகளையும் தடைசெய்தல், இஸ்லாமிய ஒழுக்கநெறிகளைத் திணித்தல் போன்றவை) தேர்ந்தெ டுத்துக் கொள்ளுதல்.

இவ்வாறு ஏகாதிபத்திய அரசுகள், பிற நாடுகளில் ஜனநாயக-விரோத ஆட்சிமுறைகள் ஏற்படுவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதால் (இது, வெள்ளம்போல் நம்மைச் சூழ்ந்து கொள்ளும் பிரச்சாரங்களிலுள்ள ஜனநாயக-ஆதரவு சொற்ஜாலத்திலுள்ள பொய்யை நிரூபிக்கின்றது), சம்பந்தப்பட்ட இஸ்லாமிய ஆட்சிகளின் ‘மிகைச் செயல்களை' இந்த ஏகாதி பத்திய அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகின்றது. பாசிசத்தின் இதர வடிவங்களைப் போலவே, அவை இருப்பதற்கான அதே காரணங்களின் பொருட்டே, இந்த மிகைச் செயல்கள் ‘இஸ்லாமியவாத’ச் சிந்தனை முறையின் ‘மரபணுக்களி'லேயே பதிந்துவைக்கப்பட்டுள்ளன: கேள்வி கேட்காமல் தலைவர்களுக்கு அடிபணிதல், அரசு மதத்தைப் பற்றியொழுகுவதை வெறித்தனமாகப் போற்றிப் புகழ்தல்,  நிர்பந்தத்தின் மூலம் அடிபணிதலைச் சாதிக்க அதிர்ச்சிப்படைகளைப் பயன்படுத்துதல். உண்மையில், உள்நாட்டுப்போர் நடக்கும் சூழலில் தான் (எடுத்துக்காட்டாக, ஸன்னி களுக்கும் ஷியாக்களுக்குமிடையிலான உள்நாட்டுப் போர்)   ‘இஸ்லாமிய' செயல்திட்டம் வளர்ச்சி காண்கிறது ( இதை ஏற்கெனவே பார்க்க முடிகிறது). இந்த ‘இஸ்லாமிய' செயல் திட்டம் ஏற்படுத்துகின்ற விளைவு,  நிரந்தரமான குழப்பம் மட்டுமே. ஆக, சம்பந்தப்பட்ட சமுதாயங்கள் உலக அரங்கில்  தம்மை அறுதியிட்டுக்கொள்வதைச் சாத்தியமற்றதாக்கு வதற்கான உத்தரவாதமே இவ்வகையான இஸ்லாமிய அரசு (அதிகாரம்) ஆகும். ‘இஸ்லாமிய' அரசாங்கத்தைவிடச் சிறந்ததொன்றை- ஸ்திரமான, அமெரிக்காவுக்கு அடிபணிந் துள்ள உள்நாட்டு அரசாங்கத்தை- உருவாக்கும் எண்ணத்தை வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கைவிட்டுவிட்டது; அப்படிப்பட்ட அரசாங்கத்துக்கு அடுத்தபடியாக சிறந்தது என்று அது கருதும் ‘இஸ்லாமிய' அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

இதேபோன்ற வளர்ச்சிகளையும் தேர்வுகளையும் ஹிந்து இந்தியா போன்ற, அராபிய-முஸ்லிம் உலகத்திற்கு வெளியே உள்ள பகுதிகளிலும் காணலாம். அண்மையில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, உலகமயமாக்கப்பட்ட நவதாராளவாதத்திற்குள் தனது அரசாங்கம் சேர்த்துக் கொள்ளப்படுவதை ஏற்றுக்கொள்கின்ற பிற்போக்குத்தனமான ஹிந்துமதக் கட்சியாகும். எழுச்சி பெற்றுவரும் வல்லரசாக வளரும் திட்டத்திலிருந்து இந்தியா, தன்னுடைய அரசாங்கத்தின் கீழ் பின்வாங்குவதை உத்தரவாதம் செய்யும் கட்சியாகும். அதை பாசிஸ்ட் கட்சி என்று கூறுவது மிகையாகாது.

முடிவாகச் சொல்வதென்றால், பாசிசம் மேற்கு, கிழக்கு, தெற்கு நாடுகளுக்குத் திரும்பி வந்திருக்கின்றது; அது திரும்பி வந்துள்ளது, இயல்பாகவே, மேல்நிலையாக்கப்பட்ட, நிதி மூலதனமயமாக்கப்பட்ட, உலகமயமாக்கப்பட்ட ஏகபோக முதலாளித்துவத்தின் கட்டமைப்பு சார்ந்த நெருக்கடியுடன் தொடர்புடையதாகும். நெருக்கடிக்குள்ளான முதலாளித் துவ அமைப்பின் ஆதிக்க மையங்கள், பாசிச இயக்கங்களின் சேவைகளை உண்மையிலேயே நாடக்கூடிய அபாயம் அல்லது அதற்கான சாத்தியப்பாடு என்னும்  அபாயம் நம்மிடம் மிகப்பெரும் விழிப்புணர்வைக் கோருகின்றது. இப்போதுள்ள நெருக்கடி இன்னும் மோசமானதாகத்தான் ஆகப்போகின்றது. இதன் விளைவாக, பாசிஸ்ட் தீர்வுகளை நாடக் கூடிய அச்சுறுத்தல், உண்மையான அபாயமாக மாறும்.  வாஷிங்டனின் போர்வெறிக்கு ஹில்லாரி கிளிண்டன் தந்து வரும் ஆதரவு,  உடனடியான எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

***

குறிப்புகள்:
நேட்டோ (ழிகிஜிளி : (NATO : The North Atlantic Treaty Organization): அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய, 28 உறுப்பிய நாடுகளைக்கொண்ட  பாதுகாப்பு அமைப்பு. வெளிநாடுகளிலிருந்து வரும் இராணுவத்தாக்குதல்களிலிருந்து பாது காத்துக் கொள்வதற்காகவென்று 1949இல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் நோக்கம், சோவியத் யூனியன் மற்றும் இதர கம்யூனிஸ்ட் நாடுகளின் செல்வாக்குப் பரவாமல் தடுப்பதுதான். 1991ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு ‘ நேட்டோ' உறுதுணையாக இருந்திருக்கி றது. இந்த அமைப்பின் தலைமையகம் பெல்ஜியத்தின் தலைநகரான பிரெஸ்ஸெல்ஸில் இயங்குகிறது.

கார்னேஷன் புரட்சி: போர்ச்சுகலில் இருந்த ஸலாஸரின் பாசிச ஆட்சியைத் தூக்கியெறிந்த புரட்சி;  கம்யூனிஸ்டுகள், ஜனநாயகவாதிகள், இராணுவத்திலிருந்த முற்போக்குச்சக்திகள் ஆகியோர்  இணைந்து நடத்திய அந்தப் புரட்சியில் பங்கேற்றவர்களுக்கு, மக்கள் கார்னேஷன் பூக்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்ததால் ‘கார்னேஷன் புரட்சி' என்று அழைக்கப்பட்டது.

விஷி அரசாங்கம் (Vichy Government) : பிரான்ஸ் நாஜிகளிடம் சரணடைந்த பிறகு அவர்களிடம் அடிபணிந்த மார்ஷல் பெதெய்ன்  தலைமையில் விஷி என்னுமிடத்தில் அமைக்கப்பட்ட  அரசாங்கம். 

மார்ஷல் திட்டம் (Marshall Plan): இரண்டாம் உலகப்போரின் காரணமாகப் பெரும் பொருளாதார அழிவுகளைச் சந்தித்திருந்த ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டுவருவ தற்காக உருவாக்கப்பட்ட திட்டம் (European Recovery Program-ERP). அன்றைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் மார்ஷல் அத்திட்டத்தை உருவாக்க முன்முயற்சி எடுத்ததால் ‘மார்ஷல் திட்டம்' என்றழைக்கப்பட்டது. உலகப்போரில் அனைத்து மேற்கு ஐரோப்பிய நாட்டுப் பொருளாதாரங்களும்  நசிந்திருக்க, அமெரிக்கப் பொருளாதாரம் மட்டுமே விரைவான வளர்ச்சியடைந்திருந்தது. அதற்குக் காரணம் பேர்ல் துறைமுகத்தின் மீது ஜப்பானியர் நடத்திய திடீர்த்தாக்குதலைத் தவிர வேறு எந்த இராணுவத்தாக்குதலும் எதிரி நாடுகளால் அதன்மீது நடத்தப்படவில்லை. ஐரோப்பாவை மறுநிர்மாணம் செய்வதற்கான ‘மார்ஷல் திட்ட'த்தை உருவாக்குவதற்கு 1947 முதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பான பேச்சு வார்த்தைகளுக்கு வருமாறு சோவியத் யூனியனுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும், அத்திட்டம் சோசலிச நாடுகளுக்கு அமெரிக்காவிலிருந்து வரும் அச்சுறுத்தலாகும் என்று ஸ்டாலின் கருதியதால் அந்த நாடுகள்  கலந்து கொள்ளவில்லை. 1947 ஜூலை முதல் நான்கு நிதியாண்டுகளுக்கு அமல்படுத்தப்பட்ட அத்திட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கு 13 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளாதார, தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது. அத்திட்டக்காலம் முடிவடைகையில் மேற்கு ஜெர்ம னியைத் தவிர மற்ற எல்லா மேற்கு ஐரோப்பிய நாடுகளுமே உலகப் போருக்கு முந்தைய பொருளாதார வளர்ச்சி மட்டத்தை அடைந்திருந்தன. அதேவேளை,  இந்த நாடுகள் அமெரிக்காவின் உற்பத்திப் பொருள்களுக்கான பரந்த  சந்தையாக மாறின. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கணிசமான செல்வாக்குடன் இயங்கிவந்தன. பிரான்ஸிலும் இத்தாலியிலும் நாஜிசத்திற்கும் பாசிசத்திற்கும் எதிரான போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னணிப் பாத்திரம் வகித்தன. எனவே இந்த நாடுகளில் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்னும் அச்சமும் அமெரிக்காவிடம் இருந்தது. இந்த அச்சத்தைப் போக்குவதற்கும் சோவியத் யூனியனின் செல்வாக்குப் பரவாமல் தடுப்பதற்கும் ‘மார்ஷல் திட்டம்' பயன்பட்டது.

ரீகா ஒப்பந்தம்: போலந்துக்கும் சோவியத் யூனியனுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம்.

ட்ரூமன்   (Harry S. Truman) :  அமெரிக்காவின் 33ஆவது குடியரசுத் தலைவராக 1945 முதல் 1953 வரை பதவி வகித்தவர்.

இரும்புத் திரை (Iron Curtain): பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவரும் இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவருமான வின்ஸ்டன் சர்ச்சிலால் உருவாக்கப்பட்ட சொற்றொடர். மேற்கு நாடுகளுடன், சோவியத் யூனியனும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளும் வெளிப்படையான  தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதைத் தடுப்பதற்காக சோவியத் யூனியன் உருவாக்கிய கருத்து நிலையை மட்டுமின்றி,  அந்த நாடுகளின் அரசியல், பிரதேச எல்லைகளையும் குறிப்பதற்காக ‘இரும்புத்திரை' என்னும் சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது.

ஆரஞ்சுப் புரட்சி: உக்ரெய்னின் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்ப தற்கான முதற்கட்டத் தேர்தலில் ஊழலும் முறைகேடுகளும் நடந்த தாகக் கூறி, 2014 நவம்பர் முதல் 2005  ஜனவரி வரை நடந்தப் போராட்டங்களும்  அரசியல் செயல்பாடுகளும் ‘ஆரஞ்சுப் புரட்சி' என அழைக்கப்படுகின்றன.  இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறையும் அமெரிக்காவிலுள்ள பல்வேறு நிறுவனங்க ளும் நிதி உதவி செய்ததை இலண்டனிலிருந்து வெளிவரும் ‘தி கார்டி யன்' நாளேடு அம்பலப்படுத்தியது. மேற்கு நாட்டுப் ‘பார்வையாளர்க' ளின் கண்காணிப்பின் கீழ் 2005 ஜனவரியில் நடந்த தேர்தல் நியாய மானது, நேர்மையானது என்று மேற்கு நாடுகள் பாராட்டின. மேற்கு நாடுகளால் ஆதரிக்கப்பட்ட  விக்டர் யுஸ்ஷெங்கோ 52% வாக்கு களைப் பெற்று வெற்றிபெற்றார்.

மேல்நிலை ஏகபோக முதலாளித்துவம் (generalized monopolies/monopoly capitalism): இந்தக் கருத்தாக்கத்துக்கு சமிர் அமின் கூறும் விளக்கம்: ஒப்பீட்டளவில் சுயேச்சையாக உள்ள நிறுவனங்கள் என்னும் கடலிலுள்ள தீவுகளாக (முக்கியமான தீவுகளாக இருந்த போதிலும்) இருப்பவை அல்ல இன்றுள்ள ஏகபோக நிறுவனங்கள். அவை ஒன்றிணைந்த அமைப்பாக இருக்கின்றன. எனவே, இந்த ஏகபோக நிறுவனங்கள் உற்பத்தி அமைப்புகள் அனைத்தையும் தமது இறுக்கமான கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மட்டுமல்லாது  ஏகபோக நிறுவனங்கள் என்று கறாராக வரையறுக்க முடியாத பெரிய கார்ப்பரேஷன்களும்கூட இன்றைய ஏகபோக நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கட்டுப்பாட்டு வலைக்குள் தான் இருக்கின்றன. அவற்றுக்கிருந்த சுயேச்சைத்தன்மை  மிகவும் சுருங்கி, அவை மேற்சொன்ன ஏகபோக நிறுவனங்களின் துணை ஒப்பந்தக்காரர்களாகிவிட்டன. இந்த மேல்நிலை ஏகபோக முதலாளித்துவம் என்பது அமெரிக்க, மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பா, ஜப்பான் ஆகியவற்றில் மூலதனம் மத்தியப்படுத்தப்படுவதில் உள்ள புதிய கட்டமாகும். 1980களிலும் 1990களி லும் இந்தக் கட்டத்தை ஏகபோக மூலதனம் அடைந்தது. இந்த மேல் நிலை ஏகபோக நிறுவனங்கள்தாம் இன்று உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

உதிரி வளர்ச்சி  (Lumpen Development): ‘உதிரி வளர்ச்சி' என்னும் சொற்றொடரைக் கீழ்க்காணும் பொருளில் சமிர் அமின் பயன்படுத்துகிறார்: ஏகாதிபத்திய மைய (core) நாடுகளால், உலகின் ஓர நாடுகள் (periphery) மீது திணிக்கப்படும் வளர்ச்சி முன்மாதிரியின் காரணமாக விரைவாக, ஓர நாடுகளின் சமுதாயங்கள் விரைவாக சிதைந்து கொண்டிருக்கின்றன. உழைக்கும் மக்கள், வெறும் உயிர்பிழைப்புக்கான ஊதியம் மட்டுமே தரப்படும் முறைசாராத்துறைகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களது வக்கற்ற நிலை அதிகரித்து வருகின்றது. அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஜப்பான ஆகிய ‘மைய' நாடுகளைச் சேர்ந்த  ஒரு சில ஏகபோக நிறுவனங்க ளின் கட்டுப்பாட்டிலேயே உலக மூலதனம் இயங்குகின்றது. அவற்றின் மீது  ஓர நாடுகளின் அரசுகளுக்குக் கட்டுப்பாடு இருப்பதில்லை; மாறாக, ‘மைய' நாடுகளின் மூலதனத்துக்குப் பாதுகாப்பை உத்த வாதம் செய்கின்றன. (மேல்நிலை ஏகபோக முதலாளித்துவம், உதிரி வளர்ச்சி- இரண்டுக்குமான விளக்கத்திற்கு: Samir Amin, The Implosion of the Contemporary Global Capitalist System,http://www.globalresearch.ca/implosion-of-contemporary-capitalism-audacity-more-audacity-in-form..)

மெக்கார்தியிசம் (McCarthyism): அமெரிக்க அரசை உளவு பார்ப் பதற்காகவும் அமெரிக்கச் சமுதாயத்தைச் சீர்குலைப்பதற்காகவும் அரசாங்கப் பொறுப்புகளிலும் சமுதாய, அரசியல், பண்பாட்டுத் துறை களிலும் ஊடுருவியுள்ள கம்யூனிஸ்டுகள், அவர்களது ஆதரவாளர் கள், சோவியத் உளவாளிகள் ஆகியோரைக் ‘களையெடுத்தல்' என்ற பெயரால் 1950களில் நடத்தப்பட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளே மெக்கார்தியிசம் ஆகும். அமெரிக்காவின் விஸ்கோன்ஸின் மாகா ணத்திலிருந்து குடியரசுக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான (செனெட்டர்) ஜோசெஃப் மெக்கார்த்தி இந்த நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கியதால் இவற்றுக்கு மெக்கார்த் தியிசம் எனப் பெயர் ஏற்பட்டது. தேசவிரோதக் கம்யூனிஸ்டுகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் களையெடுப்பது என்னும் பெயரால்  நடத்தப்பட்ட ஒடுக்குமுறைகளால் பாதிக்கப் பட்டவர்களில் சார்லி சாப்ளின், நாடகாசிரியர்கள் லிலியன் ஹெல்மன், ஆர்தர் மில்லர், பிரபல பாடகர் போல் ரோப்ஸன் போன்றோரும் அடங்குவர்.

தேநீர் விருந்து (இயக்கம்): 2007இல் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட அரசியல் இயக்கம். அரசாங்கச் செலவுகளையும் வரிகளையும் குறைப்பதன் மூலம் அமெரிக்கக் கூட்டாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திலுள்ள பற்றாக்குறையைப் போக்க முடியும் என்பது இந்த இயக்கத்தின் கருத்துகளிலொன்று. சாதாரண அமெரிக்கக் குடிமக்களைக் கவர்வதற்காக சில ஜனரஞ்சக முழக்கங்களை இந்த இயக்கம் எழுப்பி வருகின்றது என்றாலும், அடிப்படையில் இது தனிச் சொத்தைப் பாதுகாப்பதையும் அமெரிக்காவின் நலன்களை முன் னிட்டு பிற நாடுகளில் இராணுவத்தலையீடு செய்வதையும் பரிந்துரைக்கின்றது.

குடிபடை (militia): ஆயுதப்பயிற்சி பெற்ற குடிமக்களைக் கொண்டு உருவாக்கப்படும் படை. இது, அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான இராணுவத்தின் அங்கம் அல்ல. ஆனால், பாசிஸ்டுகள் இதுபோன்ற குடிபடைகளை உருவாக்கி, தங்கள் எதிரிகளைத் தாக்குவதற்கு அவற்றைப் பயன்படுத்துவதற்கு பாசிச அரசாங்கம் முழு ஒப்புதல் தருகின்றது. பாசிச-எதிர்ப்பு இடதுசாரிகள், ஏகாதிபத்திய-எதிர்ப்புச் சக்திகள் ஆகியனவும்கூட தங்களுக்கான குடிபடைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். ஆனால் இந்தக் குடிபடைகளின் நோக்கமும் செயல்பாடும் பாசிஸ்ட் குடிபடைகளின் நோக்கத்திலிருந்தும் செயல்பாட்டிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டவை.

யோர்ஹெ ரஃபெய்ல் விடெலா: 1976இல் இராணுவப்புரட்சி மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி அர்ஜைண்டினாவின் குடியரசுத் தலைவராக 1981 வரை பதவி வகித்தவர். அவரது ஆட்சிக்காலத்தில்  பல்லாயிரக்கணக்கான அர்ஜைண்டினக் குடிமக்கள் ‘காணாமல் போகச்' செய்யப்பட்டனர்; ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டுச் சித்தரவதை செய்யப் பட்டனர். ஆயிரக்கணக்கான பெண் கைதிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். கர்ப்பிணிக ளாக்கப்பட்ட பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் அவர்களிடமிருந்து பிரிக்கப் பட்டு, இராணுவத்தைச் சேர்ந்த குடும்பங்களிடம் ஒப்படைக்கப் பட்டனர்.  அந்த நாட்டில் இராணுவ ஆட்சி அகற்றப்பட்ட பிறகு, மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் விடெலா  இழைத்தக் குற்றங்கள்  நிரூபிக்கப்பட்டன. அதன் விளைவாக 50 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவர், குளியல் அறையில் வழுக்கி விழுந்து, சிறையிலேயே இறந்தார். அர்ஜைண்டினாவுக்கு அருகில் உள்ளவையும் பிரிட்டிஷ் இராணுவ முகாம்கள் உள்ளதுமான மால்வினாஸ் தீவுகளைக் கைப்பற்ற அவரது ஆட்சிக்காலத்தில் மேற் கொள்ளப்பட்ட இராணுவத்தாக்குதல்கள் பிரிட்டிஷ் இராணுவத்தால் முறியடிக்கப்பட்டன.

பாண்டுங் சகாப்தம்:  அன்று உலகில் இருந்த அமெரிக்க முகாம், சோவியத் முகாம் ஆகிய இரண்டிலும் சேராமல், சுயேச்சையாகத் தமது அரசியல், பொருளாதார வளர்ச்சியைக் காண விரும்பிய ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் இந்தோனீஷியாவின் பாண்டூங் நகரத்தில் 1955 ஏப்ரலில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டன. 1961இல் யூகாஸ்லேவியாவின் தலைநகர் பெல்கிரேடில் நடபெற்ற மாநாட்டில் தான் ‘அணிசேரா இயக்கம்' முறைப்படி  உருக்கொண்டது. பாண்டூங் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த நாடுகள் இந்தோனீசியா, பர்மா, பாகிஸ்தான், இலங்கை, இந்தியா ஆகியனவாகும். பாகிஸ்தான் பின்னர், அமெரிக்க முகாமுக்குச் சென்றுவிட்டது. பாண்டூங் சகாப்தம் என்று சமிர் அமின் இக்கட்டுரையில் குறிப்பிடுவது, அணிசேரா (நாடுகளின்) இயக்கம் இருந்த காலகட்டத்தைத்தான். அந்த இயக்கத்தில் முன் னணிப் பாத்திரம் வகித்தவர்கள் ஜவகர்லால் நேரு, சுகார்ணோ, கமால் அப்துல் நாஸர், மார்ஷல் டிட்டோ, சௌ என்லாய் ஆகியோராவர். இந்த நாடுகள் எல்லாவற்றிலுமே நாடாளுமன்ற ஜனநாயக முறை இருக்கவில்லை; சில நாடுகளில் அந்த  ஜனநாயகமுறை மீது கடுமையான வரம்புகள் விதிக்கப்பட்டிருந்தன. இன்னும் சில நாடுகளில், ஏகாதிபத்திய- எதிர்ப்பும் தேசப்பற்றும் கொண்டிருந்த இராணுவத்தின் ஆட்சி நிலவியது.

இந்த நாடுகளின் ஆட்சிமுறைகள் 1980களிலிருந்து மாற்றமடைந்து நவதாராளவாத ஆட்சி முறைக்கு வழிவிட்டதாக  சமிர் அமினின் கட்டுரையில் கூறப்படுவது சரியான கருத்து அல்ல. ஏனெனில், இந்த நாடுகள் பலவற்றில், பல்வேறு காரணங்களால் ஆட்சிமுறைகள் 1980க்கு முன்னரே மாற்றப்பட்டுவிட்டன. எடுத்துக்காட்டாக, 1965இல் சிஐஏவின் பின்பலத்துடன் நடந்த இராணுவ எதிர்ப்புரட்சி, சுகார் ணோவை ஆட்சியிலிருந்து அகற்றி அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை அமைத்தது.

ஸலாஃபிஸம்: இஸ்லாத்திற்குள்ளேயே இருக்கும் ஓர் இயக்கம். தொடக்ககால முஸ்லிம்களின் (முன்னோர்களின் -ஸலாஃப்) வழிமுறைகளையும் நெறிகளையும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துபவர்களே ஸலாஃபிஸ்டுகள்.

புதுவிசை  42வது இதழிலிருந்து