Thursday, March 22, 2018

ஆனந்தம் பண்டிதர்: சித்த வைத்தியரின் சமூக வைத்தியம் - கோ. ரகுபதி

தமிழ்ச் சித்தவைத்திய நிபுணர், அறிஞர், களப் போராளி எனப் பன்முக அடையாளம் கொண்ட பண்டிதர் எஸ்.எஸ். ஆனந்தம் பிள்ளை (இனிவரும் பகுதியில் ஆனந்தம் பண்டிதர் எனக் குறிப்பிடப்படுவார்) தமிழ்ச்சமூக ஆளுமைகளின் வரலாற்றில் எழுதப்படாதவர். எந்தக் கருதுகோளையும் முன்வைத்துக்கொண்டு அவரைத் தேடவில்லை; நான் அவரைக் கண்டுபிடித்தது ஒரு விபத்துதான். முனைவர் பட்டம் பெறுவதற்காக தேவேந்திரர் சாதி இயக்கம் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது ஆதிமருத்துவர் சாதியின் மீதான கவனம் ஒரு கட்டுரையினூடாக ஏற்பட்டது. இதற்கு மேலும் தூபமிட் டது புதுமைப்பித்தன் எழுதிய ‘நாசகார கும்பல்’. இவை முனைவர் பட்ட ஆய்விலிருந்த என் கவனத்தைத் திசைதிருப் பியது. மருத்துவர் சாதி குறித்தத் தரவு சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கினேன். அந்தச் சாதியைச் சேர்ந்த ஒரு சித்த வைத்தியர் ஆனந்தம் பண்டிதர் குறித்துக் கூறியதோடு பண்டிதர் நடத்திய மருத்துவன் இதழின் ஒருசில பக்கங்களையும் கொடுத்தார். அதைத் தமிழகத்தில் தனிநபர்கள் பலரிடமும் நூலகங்கள் பலவற்றிலும் தேடினேன்; மிஞ்சியது ஏமாற்றம்தான். என் முனைவர் பட்ட ஆய்வைத் தொடரவேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக கிடைத்தத் தரவுகளைக் கொண்டு “ஆதிமருத்துவர்: சவரத்தொழிலாளராக்கப்பட்ட வரலாறு” என்னும் நூலை 2006ஆம் ஆண்டு வெளியிட்டேன்; அதில் ஆனந்தம் பண்டிதர் குறித்து சிறு அறிமுகம் மட்டும் கொடுக்கமுடிந்தது. நூல் வெளியீட்டு விழா முதன்முதலில் பாண்டிச்சேரியில் நிகழ்ந் தது. இவ்வாறு ஒரு நூல் வெளியாயிருக்கிறது என்பதை அறிந்த ஆதிமருத்துவர் சமூகத்தைச் சேர்ந்தவரும் சமூக விடுதலைக் கான அரசியல் செயல்பாட்டில் தன்னை இணைத்துக்கொண் டிருக்கும் அரிமாவளவன், கவிஞர் ஆலா ஆகியோர் அதற்கான ஏற்பாட்டைச் செய்தனர். அந்த நிகழ்வில் மருத்துவன் இதழைக்கண்டுபிடித்து அதனைத் தொகுத்துத் தமிழ்ச் சமூகத்திற்கு அளிப்பேன் என்ற என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன். 

அன்றுமுதல் என் தரவு சேகரிப்புப்பட்டியலில் மருத்துவன் இதழும் இணைந்துட்டது. இந்தத் தேடலில் சில வருடங்களுக்குப்பின்னர் ஆனந்தம் பண்டிதரைப் பற்றிய குறிப்புகளும் அவர் திராவிடன் பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றும் கிடைத்தது. இருப்பினும், அவை போதுமான தரவுகளல்ல என்பதை உணர்ந்து மருத்துவன் இதழைத் தேடினேன். ஆதி மருத்துவர் புத்தகத்தை மறுபதிப்பு செய்து வெளியிடவேண்டும் என்ற எண்ணத்தில் தீவிர தேடுதலில் ஈடுபட்டேன்; இருப்பினும் மிஞ்சியது ஏமாற்றமே. மறுபதிப்பும் ஆனந்தம் பண்டிதர் குறித்தச் சித்திரம் முழுமை பெறா மல் வெளிவர வேண்டிய நிலைமை உருவானபோது பெருத்த வருத்தமே என்னை ஆட்கொண்டது; இது மறு பதிப்பு நூல் எழுதுவதில் தாமதத்தை ஏற்படுத்தியது. எனவே, மீண்டும் தேடிக்கொண்டே இருந்தேன், ஒரு நாள் திடீரென எதிர்பாராதவிதமாக அந்த இதழின் பெரும்பகுதியைக் கண்டெடுத்தேன்; பத்தாண்டுத் தேடுதலில் புதையல் ஒன்றைக் கண்டெடுத்த மகிழ்ச்சி. உடனடியாக அந்த இதழ் முழுவதையும் படிக்கத் தொடங்கினேன், அப்போது ஆனந்தம் பண்டிதர் தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமான ஓர் ஆளுமையாகத் தெரிந் தார். தமிழ்ச்சமூக வரலாற்றில் இருக்கின்ற ஒரு பெருத்த இடைவெளியை ஆனந்தம் பண்டிதர் நிரப்ப இருக்கிறார் என்ற ஆனந்தம் பெருக்கெடுத்தது. எனவே, ஏற்கனவே வெளியிட்ட நூலில் ஆனந்தம் பண்டிதர் குறித்து விரி வாக எழுதுவது குறித்து முதலில் சிந்தித்தேன்; ஆனால் அவ்வாறு செய்தால் பண்டிதர் குறித்து முழுமையான சித்திரம் கிடைப்பது கடினம் என்பதால் அவர் குறித்துத் தனியாக ஒரு நூல் வெளியிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். இதற்கு அடிப்படைக் காரணம் அவருடைய அறிவுச்செயல்பாடும் களப்போராட்டமும் ஆகும். எனவே, அவரது சிந்தனைகளைத் தொகுத்துத் தமிழ்ச்சமூகத்திற்கு அளிப்பது அவசியம் என்று உணர்ந்ததால் அது நூல் வடிவம் பெற்றுவிட்டது.   

தமிழ்ச் சித்தவைத்திய காவலர் 

ஆனந்தம் பண்டிதர் மருத்துவர் சாதியைச் சேர்ந்த கும்பகோணம் சாமிநாதன்-கமலம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார்; இந்தக் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக அரசர் குடும்பங்களுக்கு வைத்தியம் செய்துவந்த னர். வைத்தியர் பரம்பரையில் பிறந்து வளர்ந்த ஆனந்தம் பண்டிதர் தன் சாதியின் பாரம்பரிய குலத்தொழிலான சித்த மருத்துவத்தைக் கைக்கொண்டிருந்ததோடு அதில் நிபுணத்துவமும் பெற்றிருந்தார்; இசை, நாடகம், கூத்து போன்றவற்றில் ஆர்வமிக்க அவர் தமிழ் இலக்கியத்தை யும் மருத்துவநூல்களையும் ஆழ்ந்து படித்தார். தமிழ்ச் சித்த வைத்தியமுறையைப் பாதுகாத்து அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணமும் அவருக்கிருந்தது. ஆனால் அவர் வாழ்ந்த அந்தக்காலத்தில் தமிழ்ச் சித்தவைத்தியம் ஆயுர்வேத, ஆங்கில மருத்துவம் ஆகிய இருமுனைத் தாக்குதலை எதிர்கொண்டது; முன்னது சுவீகரித்துக்கொள்ள எத்த னித்தது; பின்னது அழித்தொழிக்க முற்பட்டது. பிரிட் டிஷ் ஏகாதிபத்தியம் தன் அரசியல் பொருளாதார நலனுக் காக ஆங்கில மருத்துவத்தைப் பரப்பியது; சென்னை மாகாணத்தின் பலபகுதிகளிலும் ஆங்கில மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை ஆகியவற்றை நிறுவத் தொடங் கியது. இதனால் தமிழ்ச் சித்த வைத்தியம் மட்டுமின்றி இந்தியாவில் அப்போதிருந்த பல்வேறு வகையான சுதேச மருத்துவமுறைகள் தாக்குதலுக்குள்ளாயின. எனவே, ஆயுர்வேத வைத்தியர்கள் இந்திய அளவில் ஒரு சங்கத்தை நிறுவி மாநாடு, கண்காட்சி போன்ற வற்றை நடத்தியதோடு அதை ஆங்கில மருத்துவக் கல்லூரியில் முறையாகக் கற்பிப்பதற்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதரவை வேண்டினர். இவர்கள் இந்தியாவின் சுதேசிய வைத்தியம் என்றால் அது ஆயுர் வேதம், யூனானி ஆகியன மட்டுமே எனக் கூறினர். மேலும் அந்த மருத்துவமுறைகளை நிறுவனமயமாக்கு வதற்கான முயற்சிகளை எடுத்தனர். ஆயுர்வேத வைத்தியத்தை பரப்பும் பணியைச் செய்துகொண்டிருந்த வைத்திய கலாநிதி பத்திரிகை ஆயுர்வேதம், யுனானி ஆகிய சுதேச வைத்தியசாலைகளை அரசாங்கம் அமைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. (வைத்திய கலாநிதி, அக்டோபர் 1914,ப.45.). 

சென்னை சட்டசபையில் ஏ.எஸ்.கிருஷ்ணராவ் நவம்பர் 1914ஆம் ஆண்டு ‘‘ஆயுர்வேத - யூனானி வைத்தியங்களென்னும் சுதேச வைத்திய முறைகளை’’ கவர்ன்மென்டார் ஆதரித்து, அவற்றை அபிவிருத்தி செய்யவேண்டுமென்று ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். மேலும் அந்தத் தீர்மானம், பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கும் மருத்துவமனைகள் மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமானவையாக இல்லை; மக்களில் படித்தோருக்கு சுதேச வைத்தியத்தின் மீது நம்பிக்கைக்குறைவு ஏற்பட வில்லை. ஆகவே, சுதேச வைத்தியமுறைகளான ஆயுர் வேதம் யுனானி ஆகியவற்றை தேச மொழிகளிலும் ஆங்கிலத்திலும் பரவச் செய்ய வேண்டுமென வலியுறுத் தியது. அவர்கள் ஆயுர் வேத, யூனானி மருத்துவ முறைகளை ஆதரிப்பதற்கு சாதியும் ஒரு காரணம். மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை ஆதரித்து நரஸிம்மையர், ‘மேனாட்டு முறையை அனுஸரித்த சாஸ்திரங்களின்படி வைத்தியம் செய்துகொள்வதற்கு அவர்களுக்கு இஷ்டமு மில்லை. ஆகவே ஜனங்களுக்கு வைத்திய உதவி வேண் டியளவுக்கு கிடைக்கும்படிச் செய்வதற்கு இது ஒன்று தான் ஏற்ற வழியாகும். அதாவது, ஆயுர்வேத யூனானி வைத்திய சாலைகளையும் பாடசாலைகளையும் ஸ்தாபித்து...’ எனப் பேசினார் (வைத்திய கலாநிதி, நவம்பர் 1914, 63). 

ஆயுர்வேத வைத்தியர்கள் தமிழ்ச்சமூகத்தில் சித்த வைத்தியம் என்ற ஒன்று இருந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை. இது இருட்டடிப்பு வேலை மட்டுமல்ல, சுவீகரிக்கும் தந்திரமும்கூட. இதன் அரசியலானது, தமிழ்ச் சித்த வைத்தியம் உட்பட இதர மொழி பேசும் மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களிடம் மருத்துவத் தில் இருந்த பன்மைத்தன்மை மீது ஆயுர்வேதமென்ற ஒற்றைத்தன்மையை ஒட்டுவதற்கான முயற்சியே அது. இதில் தமிழ்ச் சித்த வைத்தியம் அழித்தொழிக்கப்படும் அபாயமிருப்பதை அன்று உணர்ந்தவராகத் தென்படுப வர் ஆனந்தம் பண்டிதர் மட்டுமே; எனவே அதைப் பாதுகாப்பதற்காக இரண்டு வடிவங்களில் போராடினார்: 1) களப்போராட்டம் 2). அறிவுச் செயல்பாடு. இந்தப் போராட்டத்தில் ஆனந்தம் பண்டிதரின் முதல் வெளிப் பாடு, பிராமணரல்லாத இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான பி.தியாகராயர் தலைமையில் 1915 டிசம்பர் 23 அன்று அவர் தென் இந்திய மருத்துவர் சங்கத்தை நிறுவியதாகும். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் துணை யுடன் ஆயுர்வேதத்தை நிறுவனமாக்கு வதற்கான முயற் சிக்கப்பட்ட (1914) அடுத்த ஆண்டே (1915) தமிழ்ச் சித்த வைத்தியத்தை பாதுகாப்பதற்கானச் சங்கத்தை ஆனந்தம் பண்டிதர் நிறுவியது கூர்ந்து கவனிக்கத்தக்கது. இந்தப் போராட்டத்தில் அவருக்கு துணைநின்றோர் ஆதிமருத்து வர் சாதியினரும் அன்றைக்கு வலுவாக இருந்த பிராமண ரல்லாதோர் இயக்கத்தினரும் ஆவர். ஆயுர்வேத வைத்தி யத்தை நிறுவுவதற்கு முன்னின்றவர்கள் பிராமணர்கள் என்பதால் தமிழ்ச் சித்த வைத்தியத்தைப் பாதுகாக்கும் போராட்டம் இயல்பாகவே பிராமண எதிர்ப்புப் போராட்டமாகவும் இருந்ததால் பிராமணரல்லாதோர் இயக்கத் தலைவர்கள் ஆனந்தம் பண்டிதருக்கு ஆதரவு கொடுத்தது வியப்புக்குரியதல்ல. ஆதி மருத்துவர்களின் பாரம்பரிய தொழில் தமிழ்ச் சித்தவைத்தியம் என்பதால் அவர்களும் அந்தப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும், தென் இந்திய மருத் துவர் சங்கம் ஆதிமருத்துவர்களின் சமூக விடுதலையையும் இலக்காகக் கொண்டிருந்ததாலும் அவர்கள் இயல் பாக அதில் அய்க்கிமாயினர். அதாவது, தமிழ்ச் சித்த வைத்தியத்தைப் பாதுகாப்பதனூடாக அதைக் குலத் தொழிலாகக் கைக்கொண்டிருந்த ஆதிமருத்துவர்களின் விடுதலையையும் ஆனந்தம் பண்டிதர் இணைத்தார். 

காலனிய அரசாங்கம் 1921ஆம் ஆண்டு சென்னையில் வெளியிட்ட மருத்துவர் கோமன் அறிக்கையானது இந்தி யாவிலுள்ள பாரம்பரிய மருத்துவமுறைகள் மீது பாத கத்தை விளைவிப்பதை உணர்ந்த ஆனந்தம் பண்டிதர் சுதேசி மருத்துவமுறைகளைப் பாதுகாக்கும் நோக்குடன் சென்னையில் 1923 அக்டோபர் 20,21 ஆகிய நாட்களில் தென் இந்திய மருத்துவர் சங்க மாநாட்டை ஒருங்கி ணைத்ததோடு அதில் தமிழ்ச் சித்த வைத்தியம் குறித்து உரை நிகழ்த்தினார். காலனிய அரசாங்கம் 1924 ஜூலை 01 அன்று ஆயுர்வேதம், யூனானி ஆகிய மருத்துவ முறை களைக் கற்பிப்பிதற்குக் கல்விநிலையம் நிறுவ முனைந்தபோது அந்த வைத்தியமுறைகளோடு சித்த வைத்தியமும் கற்பிக்கப்பட வேண்டுமென்று குரலெ ழுப்பிய ஆனந்தம் பண்டிதர் அதில் வெற்றி கண்டார். தமிழ்ச் சித்த மருத்துவத்தைப் பாதுகாப்பதற்கு இத்தகைய களப்போராட்டம் போதுமானதாக இல்லை; அதற்கு அறிவுப்போரட்டமும் அவசியம் என்றுணர்ந் தார் அவர். விளைவு, மருத்துவன் (றிபிசீஷிமிசிமிகிழி) என்ற தமிழ் வைத்திய மாத இதழை 1929ஆம் ஆண்டு சென்னை, 221 தங்கசாலை வீதியை தலைமையிடமாகக் கொண்டு வெளியிட்டார். இது ஓராண்டுகாலம் வெளி யானது. இதில் ஆனந்தம் பண்டிதர் ‘தமிழ் வைத்தியமும் சம்ஸ்கிருத வைத்தியமும்’ என்ற தலைப்பிட்டு தொடர் கட்டுரை எழுதினார். இந்தக் கட்டுரையில் சித்த வைத்தி யம் சம்ஸ்கிருதத்திலிருந்து உருவானது எனக்கூறி அதைக் கபளீகரம் செய்வதை எதிர்த்து தமிழர்களுக்கென மருத்துவ அறிவுப் பாரம்பரியம் இருப்பதை எடுத்து ரைத்தார்; தமிழ்ச் சித்தவைத்தியம் சுயமாக உருவாகி பிற மருத்துவ முறைகளின் துணையின்றி தனித்துச் செயல்படுகிறது என்ற வாதத்தை முன்வைத்தார்.

தமிழ்ச் சித்த வைத்திய அறிவுப் பாரம்பரியத்தைத் தற்காத்துக் கொள்வதற்கான இந்தப் போராட்டத்தில் ‘தமிழ்ச் சித்த வைத்தியம் தனித்துவமானது என்ற வரலாற்றை ஒப்புக்கொண்ட’ பிராமணர்களின் கருத்துக் களையும் மருத்துவன் இதழில் ஆனந்தம் பண்டிதர் வெளியிட்டார். இந்த அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். சுப்ரமணிய ஐயர், வைத்தியர் டி.கோபாலாச்சாரியார் ஆகியோரின் கட்டுரை, உரை ஆகியன அந்தப் பத்திரிகையில் வெளியாயின. மேலும், அவரிடம் சிகிச்சை பெற்று குணமடைந்த இராமநாத புரம் அரசர், எட்டயபுரம் அரசர், ஜமீன்தார், நீதிமன்ற நீதிபதிகள், பிராமணர்கள், பிராமணரல்லா உயர்சாதியி னர் போன்றோர் தமிழ்ச் சித்த வைத்தியம் குறித்தும் அதில் ஆனந்தம் பண்டிதரின் நிபுணத்துவம் குறித்தும் எழுதிய கடிதங்களை மருத்துவன் இதழில் ஆனந்தம் பண்டிதர் வெளியிட்டார். இது தற்ப்புகழ்ச்சிக்கான செயல்பாடு அல்ல; அது தமிழ்ச் சித்த வைத்தியத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கின்ற ஓர் அறிவுச் செயல்பாடு. இதன் அடிப்படை நோக்கம் வெகுமக்களிடத்தில் தமிழ்ச் சித்த வைத்தியத்தின் தனித்துவத்துவம், அதன் சிறப்பு போன்றவற்றைப் பரப்புவதனூடாக அதைப் பாதுகாத்தலாகும். அவர் தமிழ்ச் சித்த வைத்தியத்தைப் பாதுகாப்பதற்குப் போராடிய அதேசமயம் அவர் இந்தியாவின் இதர மருத்துவ முறைகளைப் புறக்கணிக்க வில்லை; தென் இந்திய மருத்துவர் சங்க மாநாட்டை 1923ஆம் ஆண்டு அவர் நடத்தியபோது ஆயுர்வேத மருத்துவர்களே எண்ணிக்கையில் அதிகம் பங்கேற்றனர் என்பது அதற்குச் சாட்சி. அவர் நடத்திய இந்தப் போராட்டத்தின் விளைவாக சித்த மாணவர்களுக்கு பட்டங்கள் அளிக்கும் தேர்வாளர் குழுவில் ஆனந்தம் பண்டிதர் இணைக்கப்பட்டார். சித்த மருத்துவத்தை இதர மருத்துவ முறைகளோடு இணைத்துக் கற்பிக்கப் பட வேண்டுமென்ற போராடி வெற்றிகண்ட பண்டிதர் இறுதியில் சித்த மருத்துவத்துக்கு மட்டுமேயென தனிக்கல்வி நிலையம் நிறுவப்படுவதற்கு வித்திட்டார். குறிப்பாக பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டதில் ஆனந்தம் பண்டிதருடைய பங்கு அளப்பரியது.

ஆதிமருத்துவர்களின் பொருளாதார விடுதலைக்கான ஓர் ஆயுதமாகவும் சித்த வைத்தியத்தைக் கண்டார் ஆனந்தம் பண்டிதர்; இதை ஆதிமருத்துவர்களுக்கான கூட்டுறவுச் சங்கம் மூலம் செயல்படுத்த வேண்டுமெனச் சிந்தித்தார். இது அவர்களுக்கு ஒரு பொருளாதார விடு தலையைத் தருமெனக் கருதினார் அவர். இதனால் சித்த வைத்தியம் மூலம் பொருளீட்டுவதற்கு அவர் திட்ட மிட்டார் என அவர்மீது குற்றம் சுமத்தவும் இயலாது; காரணம், பொருளாதாரம் ஒன்றுதான் அவருக்கான இலக்காக ஒரு போதும்  இருந்திருக்கவில்லை. சென்னை யில் அவர் நடத்திய தமிழ் சித்த வைத்தியசாலையில் இலவசமாகவும் சிகிச்சை அளித்தது, சுயமரியாதை இயக்க  மாநாடுகள் நடக்கிறபோது அங்குத் தன் மருத் துவக்குழுவோடுச் சென்று இலவச மருத்துவம் செய்தது ஆகியன அவர் மருத்துவத்தை பொருளீட்டுவதற்கான தொழிலாக செயல்படுத்தவில்லை என்பதைத் தெளிவு படுத்துகிறது. ‘...பணம் சம்பாதிக்கும் நோக்கத்தையே முக்கியமாகக் கருதாமல் சித்த வைத்தியத்தில் தமக்குள்ள அறிவைப் பொதுஜன நன்மைக்கே உரியதாகச் செய்யக் கருதி அவ்வாறே செய்து வருகின்றார்’ என ஆனந்தம் பண்டிதர் குறித்து சென்னை நகராட்சியின் அன்றைய கவுன்சிலர் வி.சக்கரை செட்டியார் குறிப்பிடுகிறார்.  மருத்துவரின் ஆலோசனைக்கு ஒரு பொருளா தார மதிப்பை ஆங்கில மருத்துவமுறை நிர்ணயம் செய்து அதை வசூலிக்கிறது ஆனால், ஆனந்தம் பண்டிதர் எவ்விதப் பொருளாதரமும் பெற்றுக்கொள்ளாமல் மருத்துவ ஆலோசனையை இலவசமாக வழங்கினார். ‘நேரில் வருவதற்கு இயலாத நோயாளர் தமது நோயின் விவரத்தைத் தபாலில் அறிவித்தால் தக்க ஆலோசனை சொல்லப் படும்’ என்று ஆனந்தம் பண்டிதர் மருத்துவன் இதழில் அறிவித்தார்; இது அவர் தன்னுடைய சொந்தச் செலவில் மருத்துவ ஆலோசனை கொடுத்தார் என்பதை உணர்த்துகிறது. 
  
அன்றைய காலகட்டங்களின் ஆவணங்களைக் காணுகிறபோது பல்வேறு நோய்களின்  தாக்குதலுக்குள்ளாகி மகளிரும் குழந்தைகளும் ஆங்கில மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. மேலும் குழந்தை இறப்பும் அதிகம் நிகழ்ந்துள்ளது; பிறந்த குழந்தைகளில் நான்கில் ஒரு பங்கினர் ஒரு வருடத்திற்குள் இறந்தனர். எனவே, இவற்றைத் தடுப்பதற்கு மருத்துவ ஆலோசனை மக்களுக்குத் தேவைப்பட்டது. ஆனந்தம் பண்டிதர் மருத்துவன் இதழில் பாலர் பரிபாலனம் என்ற பகுதியில் தாய்-சேய் நலன் குறித்துத் தொடர்க்கட்டுரை எழுதினார். இதர நோய்கள் குறித்துப் பிற வைத்தியர்கள் எழுதியதையும் அந்தப் பத்திரிகையில் வெளியிட்டார். இன்றைய தினசரி பத்திரிகைகள் மருத்துவமனைகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து பெருத்தத் தொகையை விளம்பரமாகப் பெற்றுக் கொண்டு மேம்போக்கான மருத்துவ ஆலோசனைகள் வழங்குவது போல் அல்லாமல் எந்தவித விளம்பரமும் பெற்றுக்கொள்ளாமல் மிக ஆழமான விரிவான மருத்துவ ஆலோசனை வழங்கினார் ஆனந்தம் பண்டிதர். அதுமட்டுமின்றி எந்த நோய்க்கெல்லாம் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமென ஆங்கில மருத்துவம் பரிந்துரை செய்ததோ அந்த நோய்களுக்கெல்லாம் அறுவையின்றியே தமிழ்ச் சித்த  வைத்தியத்தால் குணப்படுத்தினார் ஆனந்தம் பண்டிதர். ஆங்கில மருத்துவத்தின் அறுவைச் சிகிச்சைக்கு கூடுதல் பணச்செலவும் சித்த மருத்துவத்திற்கு மிகக் குறைந்த பணச்செலவும் ஆகும் என்பதை விளக்கத் தேவையில்லை. எனவே ஆனந்தம் பண்டிதர் சித்த வைத்தியத்தை பொருளைப் பெருங்குவி யலாக மாற்றுவதற்கான தொழிலாக அல்லாமல் மக்கள் ஆரோக்கியத்திற்கான ஒன்றாகக் கைக்கொண்டிருந்தார் என்பது திண்ணம். இந்தக் காரணத்தால்தான் தந்தை பெரியார், தியாகராய செட்டியார், மறைமலை அடிகள் எனப் பிராமணரல்லாதோர் இயக்கத் தலைவர்கள் மட்டுமின்றி பாஷ்யம் ஐயங்கார், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எஸ். சுப்பிரமணி ஐயர் எனப் பிராமணர் களும் ஆனந்தம் பண்டிதரைப் போற்றி எழுதியுள்ளனர்.

சமூக அரசியல் அறிஞர் 

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவில் சில அரசியல் சீர்திருத்தங்களைச் செய்தபோது அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஒவ்வொரு சாதியினரும் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்குப் போராடினர். அதற்காக அவர்கள் சாதிச்சங்கங்கள் நிறுவுதல், பிரிட் டிஷ் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்தல், அதன் ஆதரவை நாடுதல், இழிவேலைகளைச் செய்ய மறுத்தல் எனப் போராட்டங்கள் பல நடத்தினர். இந்தப் போக்கு களிலிருந்து ஆனந்தம் பண்டிதர் சிலவற்றில் ஒன்று பட்டும் சிலவற்றில் வேறுபட்டும் சிலவற்றில் தனித்தும் நின்றார். அன்றைய சாதிய இயக்கங்கள் சில மாகாண அளவிலும் சில இந்திய அளவிலும் உருவாயின. ஆதி மருத்துவர்களுக்கான சாதிச்சங்கத்தை தென் இந்திய அளவில் நிறுவிய ஆனந்தம் பண்டிதர் அவர்களை ஒருங் கிணைப்பதற்காக பெரும் முயற்சி எடுத்தார். இந்திய அளவில் வலைப்பின்னலை ஏற்படுத்துவதற்காக 1921 டிசம்பர் 26 முதல் 28ஆம் தேதி வரை ஆக்ராவில் நடை பெற்ற மருத்துவ சமூக மாநாட்டில் பங்கேற்றார். தமிழ் ஆதிமருத்துவர் சாதியினர் எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் இடம்பெயர்ந்தனரோ அங்கெல்லாம் சங்கத்தை நிறுவி னார்; 1924ஆம் ஆண்டு ஒரு குழுவாக இலங்கைக்குச் சென்ற அவர் அங்குச் சுற்றுப்பயணம் செய்து மருத்துவ குலச் சங்கத்தை ஏற்படுத்தினார். உண்மையில், ஆனந்தம் பண்டிதர் ஆதிமருத்துவர் சங்கத்தை ஆசிய அளவில் கட்டமைத்தார். இந்தச் சங்கத்தின் மூலம் அவர் “இந்திய அரசியல் மகாசபையாகிய சர். ஜான் சைமன் கமிஷ னுக்கு  தென் இந்திய மருத்துவர் சங்கத்தின் அறிக்கை” யெனச் சமர்ப்பித்தார். அதில் ஆதிமருத்துவர்களின் ஒடுக்கப்படும் நிலைமை, அவர்களை முன்னேற்றுவ தற்குத் தேவையானவை குறித்து எடுத்துரைத்தார். 

பொதுவாக, ‘பாரம்பரிய தொழிலைக்’ கைவிடுதல், பிராமணியமயமாக்கம் எனச் சாதிய அமைப்புகள் கொண்டிருந்த நிலைப்பாட்டுடன் அவர் வேறுபட்டு நின்றார்; தங்களின் பாரம்பரிய தொழிலான சித்த மருத்துவத்தைப் பற்றிக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்; அது அதன் செல்வாக்கை மெல்லமெல்ல இழந்து கொண்டிருந்த போதிலும்கூட. அன்றைய காலங்களில் பொருளாதார மேம்பாட்டிற்காக கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தும் முயற்சியில் அனைத்து சாதிகளும் ஈடுபட் டன; ஆனந்தம் பண்டிதரும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அவருடைய சிந்தனையின் தனித்துவமானது, அவர் ஆதிமருத்துவர் சாதியின் பொருளாதார மேம்பாட் டிற்காக் கூட்டுறவு சங்கம் மூலம் மூலிகைமரம் வளர்ப்பு, மருந்துத் தயாரிப்பு, ஏற்றுமதி என அதை நிறுவனமாக மாற்றவேண்டுமென்ற தொலைநோக்குத் திட்டத்தை முன்வைத்தாகும்; ஆனால், அந்தத் திட்டம் அந்தச் சமூகத்தால் செயல்படுத்த இயலவில்லை. இருப்பினும், சென்னையில் 1944ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய மருத்துவர்களின் (சித்தா, ஆயுர்வேதம், யுனானி) கூட்டுறவுச் சங்கத்தின் மருந்து உற்பத்தி, விற்பனை என்ற செயல்பாடு ஆனந்தம் பண்டிதரின் சிந்தனையின் விளைவு எனலாம். இந்த கூட்டுறவுச் சங்கத்தின் உருவாக்கத்தில் ஆனந்தம் பண்டிதர் ஆற்றிய பங்கு என்னவென்பதை அறிந்து கொள்ள இயலவில்லை; ஆனால் அதற்கான கருத்தியலை முதன்முதலில் முன்வைத்தவர் ஆனந்தம் பண்டி தர் என்பதை மறுக்க இயலாது. ஆனந்தம் பண்டிதரின் சிந்தனை பாரம்பரிய தொழிலையே சுற்றி இருந்ததால் அவர் நவீன தொழில்களுக்கு எதிரானவர் என்ற முடிவுக்கு வர இயலாது; காரணம், அவர் நவீன தொழில்கள் பலவற்றையும் ஆதிமருத்துவர்கள் கற்க வேண்டுமென வலியுறுத்தினார். அதாவது, ஆனந்தம் பண்டிதர் தொழிலில் ஜனநாயகப்போக்கைக் கடைபிடித்தார். 

சாதி இயக்கங்கள் எவையெல்லாம் இழிதொழில்கள் எனக் கருதினவோ அவற்றை எல்லாம் விட்டொழிப்பதற்காகப் போராடின. ஆதிமருத்துவர் செய்த இழி தொழில்களை மறுப்பதற்கான போராட்டத்தைத் திட்டமிட்ட ஆனந்தம் பண்டிதர் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் சிந்தித்தார். ஆதிக்கச்சாதிகள் வழக்கமாக அரங்கேற்றும் ‘வன்முறை, சமூகப் பொருளாதார விலக்கம்’ ஆகிய எதிர்வினைகளைப் புரிந்துகொண்டு போராட்டக்காரர்களுக்கான மாற்றுத் தொழிலையும் அதைச் செய்யும் இடத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு போராட்டத்தை நடத்தினார். எதிர்வினைகளையும் உணர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான முன்னேற்பாட்டோடு போராட்டத்தைத் திட்டமிட்டு நிகழ்த்தியது அவருடைய தனித்துவம். 

மாப்பிள்ளைச் சவரம், சவச்சவரம் செய்ய மறுத்தல் போராட்டங்கள் 1920களின் தொடக்கத்தில் திருநெல்வேலியில் முகிழ்த்து அது அந்த மாவட்டத்தின் தாமிரபரணி நதிக்கரையின் மேற்குத்திசையில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி போன்ற ஊர்களில் தொடங்கி கிழக்குத்திசையில் ஆத்தூர் வரை பரவியபோது அந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்கு ஆதிமருத்துவர் சமூக ஆடவர்களை இலங்கைக்குச் சென்று அங்கு ஒப்பனைத்தொழில் செய்து பிழைத்துக்கொள்வதற்கு வழிவகுத்தார். ஆனால் ஆதிக்கச்சாதியினரின் உளவியல் வன்மத்தை அவர் எதிர் பார்த்திருக்கவில்லை; அவர்கள் ஆதி மருத்துவர் சாதி பெண்களையும் குழந்தைகளையும் கொடூரமாகத் தாக்கினர். பொதுவாக, பெண்களையும், குழந்தைகளையும் மதித்துப் போற்றுகின்ற நாடென்று தொடர்ந்து கூறிவருது அப்பட்டமான பொய்யென்பதை ஆனந்தம் பண்டிதர் அப்போது உணர்ந்திருக்கலாம். ஒரு நிகழ்வில் அவரும் வன்முறையை எதிர்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூரில் 1924 மே 25 அன்று பண்டிதர் ஆதிக்கச்சாதியினரால் தாக்கப் பட்டார், அதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகப் பெண் வேடமணிந்து வேறுவழியின்றி அங்கிருந்து வெளியேறினார். தன் சமூக விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட பண்டிதர் அதற்கானப் போராட்டத்தை நடத்துகிறபோது தனக்கு மட்டுமென சலுகை தருவதை மறுத்தார். ஆதிமருத்துவர் சமூகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி மலைக் கோட்டை தாயுமானவர் கோயிலில் 1923 ஏப்ரல் 01 அன்று அவர்களை அழைத்துக்கொண்டு அந்தக் கோயிலுக்குள் சென்றபோது ஆனந்தம் பண்டிதருக்கு மட்டும் அனுமதி தந்தபோது, ‘இந்துக்களெல்லோரும் ஆலயத்துள் செல்லுங்காலம் வரும்போதன்றி இது போது நான் ஆலயத்துட் செல்லேன்’ எனக் கூறி அதை மறுத்தார். இந்தச் சம்பவங்களெல்லாம் அரச மருத்துவ குடும் பத்தைச் சேர்ந்த ஆனந்தம் பண்டிதருக்குச் சாதியின் கொடூரமுகத்தைக் கற்றுக் கொடுத்திருக்கக்கூடும். அதனால்தான் அவர் அன்று வலுவாக ஒலித்து ஆங்காங்கு செயல்படுத்தப்பட்ட சீர்திருத்தத் திருமணம், சாதி ஒழிப்பு ஆகிய கருத்தாக்கங்களோடு ஒத்திசைந்தார்; ஆனால், இது குறித்துத் தனியாகக் கட்டுரை ஏதும் அவர் எழுதவில்லை; இருப்பினும், மருத்துவன் இத ழில் திருமணம் தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி; சாதி மறுப்புத் திருமணம் ஒன்று முடிந்த பின்னர் அவர் விருந்து கொடுத்தது போன்ற அவருடைய செயல்பாடுகள் அவர் சாதி ஒழிப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது தெளிவு.  

சுயமரியாதை இயக்கத்தோடு நட்புறவு கொண்டி ருந்த போதிலும் ஆனந்தம் பண்டிதர் நாத்திகர் அல்லர். அவர் கடவுளர்களை விமர்சிப்பதோடு முரண்பட்டார். குறிப்பாக, சிவலிங்கம் விமர்சிக்கப்படுவதற்கு எதிராக எதிர்வினையாற்றினார். அதேசமயம் மதச் சீர்திருத்தத்தை முன்வைத்த அவர் மத அடையாளங்களுக்கு தன்னு டைய கருத்தை குமரன் பத்திரிகையில் இவ்வாறு பதிவு செய்தார்: ‘‘கடவுளைப்பற்றிய கொள்கையெல்லாம் மக்களுடைய மனத்தில் இருக்க வேண்டுமேயல்லாது அவரவர் மதச்சின்னங்களாக உடைகளிலோ, தலைமயிரிலோ, நெற்றிகளிலிடும் குறிகளிலோ வெளிப்படுத்திக் காட்டிக்கொள்ள வேண்டுவதில்லை. இக்கொள்கையை பரவச்செய்ய வேண்டும். இல்லையேல் நாட்டில் மக்கள் சமாதானமாக ஒற்றுமையோடு வாழ்வ தற்கு வழி ஏற்படாது.’’ மதச்சின்னங்களையே ஏற்காத ஆனந்தம் பண்டிதர் மதங்கள் நிறுவனங்களாக்கப் படுவதையும் ஏற்காதவர் என்று முடிவு செய்யலாம். மொழி குறித்த அவருடைய சிந்தனையும் தனித்துவமா னது. மொழி என்பதைப் புவிப்பரப்பு வரைகோடுக்குள் மட்டும் சுருக்கிக் கொள்ளாமல் மொழியினூடாகவே அறிவு கட்டமைக்கப்பட்டிருப்பதைக் கண்ட ஆனந்தம் பண்டிதர் தமிழ் மொழியைக் கற்பதனூடாகவே சித்த மருத்துவத்தைப் பாதுகாக்க இயலும் என்றுணர்ந்து தன் சாதியினரை தமிழ் மொழியை நன்றாகக் கற்குமாறு அறிவுறுத்தினார்; அதேசமயம் ஆங்கிலத்தையும் பயிலுமாறும் அறிவுறுத்தினார். 

ஆனந்தம் பண்டிதர் பிராமண எதிர்ப்பு மரபின் ஓர் தனித்துவமான தமிழ்ச் சித்த வைத்திய ஆளுமை என்பதைக் குறிப்பிட்டு கூறவேண்டியதுள்ளது. பிராமண ஆதிக்கத்திற்கு எதிரான இயக்கத்திற்கு தமிழ்ச் சமூகத் தில் நீண்டநெடிய வரலாறு உண்டு. அந்த மரபின் நவீன கால ஆளுமைகளாக அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், ஆனந்தம் பண்டிதர் ஆகியோரைக் குறிப்பிட லாம். பிராமண, சம்ஸ்கிருத எதிர்ப்பு உச்சத்திலிருந்த அன்றைய காலகட்டத்தில் பறையர் சாதியைச் சேர்ந்த அயோத்திதாச பண்டிதர் தலித்துகளின் சாதி பேதமற்ற தனித்துவமான தமிழ் பௌத்த அடையாளத்தை முன் வைத்தார். நாடார் சாதியைச் சேர்ந்த ஆபிரகாம் பண்டிதர் கர்நாடக இசையை மறுத்து அது தமிழ் இசை என்றார். இந்த வரிசையில் ஆதிமருத்துவர் சாதியைச் சேர்ந்த ஆனந்தம் பண்டிதர் ஆயுர்வேத வைத்தியத்தைப் புறக்கணித்து தமிழ்ச் சித்த வைத்தியத்தை உயர்த்திப் பிடித்தார். பிராமண ஏகாதிபத்தியமானது மொழி, இசை, மருத்துவம் எனத் தமிழ் அறிவுப் பாரம்பரியத்தைக் கபளீகரம் செய்வதற்கு எதிராக மேற்குறிப்பிட்ட பண்டிதர்கள் அறிவுத்தளத்தில் போராடினர். அதாவது பிறரின் உடைமைக்கு தன் பெயரிட்டு தன் உடைமையாக்கிக் கொள்ளும் கபளீகரச் செயல்பாட்டிற்கு எதிராக தங்கள் உடைமையை தற்காத்துக் கொள்வதற்குப் போராடினர். அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், ஆனந்தம் பண்டிதர் ஆகிய மூவரும் இரண்டு புள்ளிகளில் ஒன்றிணைகின்றனர்:

1) இம்மூவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தோர் என்றபோதிலும் தொழிலடிப்படையில் தமிழ்ச் சித்த வைத்தியர்கள்
2) பிராமணிய கபளீகரத்திலிருந்து தமிழர்களின் அறிவுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல். இது அந்த மூவரின் தனித்துவம்கூட. 

சித்த மருத்துவத்தைப் பாதுகாத்தல், தன் சமூக மக்களின் விடுதலை ஆகிய இரண்டு இலக்குகளையும் கைக்கொண்டு பயணித்த பண்டிதர் உ.வே.சாமிநாத அய்யர், ராஜாஜி, பெரியார் போன்றோருடன் நட்புறவு கொண்டிருந்தார். பிராமணரல்லாதோருடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த ஆனந்தம் பண்டிதர் பிராமணர் ஆதிக்கத்தை எதிர்த்த போதிலும் அவர்களை வெறுத்து ஒதுக்கவில்லை, அவர் நடத்திய மருத்துவர் மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராகவும் டி.பி. சீனிவாச ஐயங்கார், மாநாட்டுத்தலைவராக ஸ்ரீ நாராயண ஐயங்கார் ஆகியோர் செயல்பட்டது அதற்குச் சாட்சி. அவருடைய இந்த நற்பண்பின் காரணமாகவே அவர் சென்னை நகர பரிபாலன சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டபோது தென்னிந்திய மருத்துவர் சங்கம், வியாசர் பாடி ஆதித்திராவிட ஐக்கிய நாணய சங்கம், கணேசபுரம் கல்வி வளர்ச்சி சங்கம், வாலிபர் கால்பந்துக் கூட்டம், சென்னை சிவனடியார் திருக்கூட்டம், ஆரிய சமாஜம் ஆகிய அமைப்புகள் அவருக்கு சென்னையில் வாழ்த்துக் கூட்டம் நடத்தின. 

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சாதிச் சங்கங் கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ‘கைக்கூலிகளாகச்’ செயல் பட்டனர் எனக் காங்கிரஸ் இயக்கம் குற்றம் சுமத்தியது. பொதுவாகவே பிராமணர் சாதிச் சங்கம் முதற்கொண்டு சாதிய சமூகத்தின் அடித்தட்டிலுள்ள சாதிச் சங்கங்கள் வரை பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் போற்றின; ஆனால் தேசப்பற்றை எவ்வாறு அளவிடுவது என்பதுதான் இங்குச் சிக்கல். சுதேச தொழில்களும் அதனை ஆதார மாகக் கொண்டு வாழும் மக்களும் பிறரால் தாக்குதலுக் குள்ளாகும்போது அவற்றைப் பாதுகாப்பது தேசப்பற்று என வரையறுக்கலாம். கைத்தறி மூலம் துணி உற்பத்தி செய்தவர்களின் வாழ்க்கை பிரிட்டிஷ் ஏகாதபத்தியத்தின் எந்திர உற்பத்தி கடுமையாகத் தாக்கியபோது   கதராடை தேசப்பற்றின் அடையாளமாக முன்னிறுத்தப் பட்டது; இதர சுதேசி தொழில்களை காங்கிரஸ் கணக்கில் கொள்ளவில்லை. ஆனால் குறைந்த செலவில் மக்களுக்கு மருத்துவம் கொடுத்துக் கொண்டிருந்த தமிழ்ச் சித்த வைத்தியத்தின் மீது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மட்டுமின்றி அதன்மீது தாக்குதல் தொடுத்த ஆயுர்வேத சம்ஸ்கிருத வைத்தியத்தையும் என்னவென்று வரையறுப்பது? தமிழ்ச் சித்த வைத்தியத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடிய ஆனந்தம் பண்டிதரை யார் என அடை யாளப்படுத்துவது? உள்நாட்டுத் தொழில்கள் எவையாக இருப்பினும் அவற்றைப் பாதுகாத்தல் என்பதே தேசப்பற்றின் குறியீடுதான் அந்தவகையில் சித்த வைத்தியத்தைப் பாதுகாத்தலும் தேசப்பற்றின் அடையாளமே. அவ்வாறென்றால் ஆனந்தம் பண்டிதர் ஒரு பச்சையான தேசப்பக்தர். தமிழ்ச் சித்த வைத்தியத்தைப் பாதுகாப்பதற்காக அவர் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த, தியாகராய செட்டியார், பனகல் அரசர் ஆகியோரை நினைவுகூறும்விதமாக புதுமாம்பலம் என்ற வந்த பெயரை தியாகராயநகர், என்றும் அதேபகுதியில் ‘பனகல் பூங்கா’ எனவும் பெயர் சூட்டியவர் பண்டிதர் ஆனந்தம். அதுமட்டுமல்ல, சென்னையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் ‘பெரியார் ஈ.வே.ரா.’ என்றழைக்க வேண்டுமென்ற தீர்மானத்தையும் உருவாக்கியவர் ஆனந்தம் பண்டிதரே.

சித்த வைத்தியத்தில் மட்டுமின்றி சமூகப், பொருளாதார, அரசியல் துறைகளிலும் புலமை மிக்க ஆனந்தம் பண்டிதர் 1876 மார்ச் 16 அன்று பிறந்து 1972 ஜூன் 18 அன்று மரித்த போதிலும் அவர் போராடி நிறுவனமயமாக்கியுள்ள தமிழ்ச் சித்த மருத்துவக் கல்லூரிகளில் பயின்று ஒருபோதும் அந்தத் தொழிலைச் சாதித் தொழிலாகக் கொண்டிருக்காத சாதியினர் சித்த மருத்துவர்களாகி பொருளீட்டுகின்றனர்; மக்களும் சித்த மருத்துவத்தை நோக்கித் திரும்புகின்றனர் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர். ஆனால் அந்தப் போராட்டத்தில் பெரும்பான்மையாகப் பங்குபெற்ற  அவருடைய ஆதிமருத்துவர் சாதியினர் அவர்களின் பாரம்பரிய சித்த மருத்துவத்தை இழந்து நிற்கின்றனர்.

இந்தக் கட்டுரை ஆனந்தம் பண்டிதர் மருத்துவன் இதழ், திராவிடன் பத்திரிகை ஆகியவற்றில் எழுதிய கட்டுரைகள், அவரைப் பற்றி தந்தை பெரியார், மறைமலை அடிகள் போன்றோர் எழுதிய கட்டுரைகள் ஆகியவற்றை கோ.ரகுபதி தொகுத்து வெளியிடயிருக்கும் நூலின் முன்னுரை.  

புதுவிசை 46
    

No comments:

Post a Comment