Showing posts with label நேர்காணல். Show all posts
Showing posts with label நேர்காணல். Show all posts

Friday, March 23, 2018

அர்ஜூன் டாங்ளே அவர்களுடன் நேர்காணல் - புதியமாதவி

மகாராஷ்டிரா மாநிலத்தின் அரசியலிலும் இலக்கியத்திலும் குறிப்பிடத்தக்க ஆளுமை அர்ஜூன் டாங்ளே. 1945 ல் மும்பையில் பிறந்தவர். மும்பை பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரி. நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய தலித் சிறுத்தைகள் (தலித் பேந்தர் ) அமைப்பின் நிறுவனத்தலைவர்களில் ஒருவர். தற்போது பாரதீய குடியரசுக் கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர். இவரது நூல்கள்:

1. Chhavani Halte Ahe- போர்க்குற்றத்தின் பயணம் -கவிதைகள் ( 1978 ல் மாநில அரசின் விருதினைப் பெற்றது )

2. Hi Bandhavarchi Manse - ஏ... உறவுகளே... – சிறுகதைகள்

3. Dalit Sahitya, Ek Abhyas- தலித் சமூகத்திற்கு ஒரு பாடம் , விமர்சனம்

4. Dalit vidroha- - தலித்துகளின் எதிரி, இலக்கியம் மற்றும் அரசியல்சார் கட்டுரைத் தொகுப்பு

அர்ஜூன் டாங்ளே, தனது ஆக்கங்களை வெளியிட்டுக் கொள்வதை விடவும், தலித் இலக்கியத்தை உலகளாவிய வாசிப்புக்குகொண்டு செல்ல வேண்டும் என்பதில்தான் கூடுதல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதனாலேயே அவர், மராத்திய தலித் ஆக்கங்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து தொகுப்புகளாக பதிப்பித்து வருகிறார். டாங்ளே மொழிபெயர்த்து, தொகுப்பாசிரியராயிருந்து வெளியிட்ட நூல்கள்:

1. A Corpse In The Well : (translations From Modern Marathi Dalit Autobiographies) 1992
2. No Entry For The New Sun: Translations From Modern Marathi Dalit Poetry
3. Homeless In My Land: Translations From Modern Marathi Dalit Short Stories
4. Poisoned Bread: Translations From Modern Marathi Dalit Literature

மும்பையில் வசிக்கும் தோழர் புதியமாதவி அவர்கள், புதுவிசைக்காக திரு அர்ஜுன் டாங்ளே அவர்களைச் சந்தித்து உரையாடியதிலிருந்து இந்நேர்காணல் தொகுக்கப்பட்டுள்ளது.
I

உங்கள் எழுத்துகள் எங்கள் தமிழுலகத்துக்கு ஏற்கனவே அறிமுகமானவை. குறிப்பாக தலித் இலக்கிய வட்டாரத்தில் உங்களை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. நாங்கள் அறியாத உங்கள் இளமைக் காலம் பற்றி அறியவிரும்புகிறோம்.

அர்ஜூன் டாங்ளே: நம்ம தாராவி அருகிலிருக்கும் மாதுங்கா லேபர் கேம்ப் பகுதியில்தான் நாங்கள் குடியிருந்தோம். என் அப்பாகாட்டன் மில்லில் வேலை செய்தார். 15.6.1945 ல் நான் பிறந்தேன். நாங்கள் 6 பேர் அண்ணன் தம்பிகள். தாராவி சால்களில் எனக்குநண்பர்கள் உண்டு. மும்பை துறை முகத்தில் வேலை செய்துகொண்டே நான் மர்ஸி தயாநந்த் கல்லூரியில் முதுகலை படித்தேன்.காலையில் கல்லூரி. 11 மணிக்கு மேல் வேலை. இதற்கிடையில் கவிதை, கதை என்று எழுத ஆரம்பித்தேன். என் தாய்வழி மாமாசங்கர் நாராயண் பவார் பொதுவுடமை இயக்கத்தில் இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் தான் மும்பையில் பாபாசாகிப் அம்பேத்கரின்போராட்டங்களும் இயக்கமும் செயல்பட்டுக் கொண்டிருந்தன. இந்த இரண்டு இயக்கங்களின் தாக்கங்களுடன் தான் என் இளமைக்காலம்.

ஆனால் பொதுவுடமை இயக்கமும் அம்பேத்கரிய இயக்கமும் ஒன்றுக்கொன்று எதிரெதிரானதாகத்தானே நிறுத்தப்படுகிறது? இரண்டுக்குமிடையே உள்ளது பகைமுரணா ? நட்பு முரணா?

இரு இயக்கங்களும் ஒன்றுக்கொன்று எதிரணியில் நிற்பதாகச் சொல்லப்படும் கருத்துகளுடன் எனக்கு உடன்பாடில்லை. 1936ல்பாபாசாகிப் அம்பேத்கர் உழைப்பாளர் விடுதலை இயக்கத்தை (Independence labour party) ஆரம் பித்தபோது அந்த இயக்கத்தின் அடையாளமாக இருந்தது சிவப்புக்கொடிதான். மட்டுமல்ல,1938 வாக்கில் நிலமற்ற கூலிவிவசாயப் பெருமக்களை ஒன்றிணைத்து அவர் நடத்திய பேரணியிலும், கருப்புச் சட்டத்தை (Black act) எதிர்த்து நடந்த போராட்டங்களிலும் பெரும்பான்மையான கம்யூனிஸ்ட் தோழர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். தொழிற்சாலைகளை, அங்காடிகளை அதன் உரிமையாளர்கள் எவ்விதமான முன்னறிவிப்போ காரணமோ இன்றி இழுத்து மூடுவதை அங்கீகரித்த சட்டம்தான் கருப்புச்சட்டம். அதை எதிர்த்து நடந்த போராட்டங்களில் டாங்கே, விவேஷ்கர், ஜம்னாதாஸ் போன்ற தோழர்களும் பிரிட்டிஷ் பிரட்லியும் கலந்துகொண்ட வரலாற்றை அறிந்தவர் எவரும் இரண்டு இயக்கங்களும் எதிரணியில் நிற்பதாகக் கருதுவதில்லை.

இந்தியச் சமூகச்சூழலில் சாதிப்படிநிலை ஒழியாமல் சமத்து வம் சாத்தியமில்லை என்ற கருத்தை உள்வாங்கிக்கொள்ளகம்யூனிஸ்டுகள் சற்று காலம் எடுத்துக்கொண்டார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் பல்வேறு இக்கட்டானகாலக்கட்டங்களில் இரு இயக்கங்களும் இணைந்தே செயல்பட்டிருக்கின்றன. 1957ல் மும்பை மாநகரை மொழிவழி மாகாணப்பிரிவின் அடிப்படையில் மராத்திய மாநிலத்துடன் இணைக்க நடந்த போராட்டங்களில் "ஒன்றுபட்ட மராட்டியம்" (united maharashtra) அமைப் பில் குடியரசுக் கட்சியும் அங்கம் வகித்திருந்தது. 17 சட்டசபை உறுப்பினர்களும் 7 நாடாளு மன்ற உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். பிரகாஷ் அம்பேத்கருடன் இணைந்து நாங்கள் ஆரம்பித்த 'பகுஜன் தலித் சமித்சமிக்தி' நிலவுரிமைக்காக நிறைய போராட்டங்களை நடத்தியது. 2009ல் இங்கு நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 3வது அணியின் பெயர் RLDF - Republican left democratic front. அம்பேத்கரிசம் Vs கம்யூனிசம் என்று அடிக்கடி நடக்கும் வாதங்கள் இரண்டு கருத்துருவாக்கங்களை எதிரணியில் நிறுத்தாமல் இணைகோட்டில் நிறுத்தும் வாதங்களாகவே கருதுகிறேன். சொற்பமான சிலர் வரலாறு அறியாமல் இரண்டையும் எதிரணிகளாக கருதி வாதிடுவதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

சி.பி.எம் தோழர்கள் இன்று அம்பேத்கரின் கருத்துகளை அதிகமாக அறிந்துகொள்ள விரும்புவதை நானறிவேன். அவர்கள் நடத்தும் இயக்கம் சார்ந்த இதழ்களில்கூட அம்பேத்கரின் புகைப்படம் அட்டைப் படமாக வர ஆரம்பித்துவிட்டது. பத்திரிகையாளர் மதுஷேட்டே போன்றவர்கள் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் புத்தகத்தையும் அம்பேத்கர் எழுதிய anihalation of caste புத்தகத்தையும் இவ்விரு இயக்கத்தாரும் கட்டாயம் வாசிக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இரு இயக்கங்கள் சார்ந்த போராட்டக் களப்பணி இன்று நீர்த்துப் போயிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்கள் தந்தையார் காட்டன் மில்லில் வேலை பார்த்ததை நீங்கள் சொன்னதும் இன்னொரு செய்தியும் நினைவுக்கு வருகிறது. இந்த மில் தொழில்வளர்ச்சி மும்பையில் ஏற்பட்டதால் மராத்திய தலித்துகளின் வாழ்க்கையில் மிகப்பெரியமாற்றம் ஏற்பட்டது என்று சொல்லலாமா?

உண்மைதான். கிராமங்களில் நிலமற்றவர்கள் நாங்கள். பண்ணையார்களுக்கு அடிமைகள். எங்கள் உழைப்புக்கு கூலி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது. ஆனால் இந்த தொழில் வளர்ச்சி இந்த பண்ணை அடிமைகளுக்கு தொழிலாளர் என்ற புதியமுகத்தைக் கொடுத்தது. எங்கள் உழைப்புக்கான ஊதியம் கிடைத்தது. உரிமைகளைக் கேட்பது தவறல்ல என்ற அடிப்படை உணர்வை ரொம்பவும் சாதாரண எழுதப் படிக்கத் தெரியாத அனைவரும் புரிந்து கொண்டோம். எங்கள் தலைமுறையின் கல்விக்கு இந்தத்தொழில் வளர்ச்சி உதவி யது. மட்டுமல்ல. 60களில் நாராயண் சுர்வேயின் கவிதைகள்- தொழிலாளர் பிரச்னைகளை முன்வைத்துவெளிவந்தன. பாபுராவ் பாகுல் சிறுகதைத் தொகுப்பு - 'நான் என் சாதியை மறைத்தபோது' - 'jevha mi jaat chorli hoti' வெளிவந்தது. அந்தப்பத்து சிறுகதைகளையும் பத்துதடவை - மின்சாரம் தாக்கியது - ten electric shocks -என்று சொன்னார்கள்.

இந்த மில்களில் அப்போது நிலவிய தீண்டாமைக் கொடுமைகள் குறித்து தொழிற்சங்கங்களின் அணுகுமுறை என்னவாக இருந்தது?

அன்றைக்கு காட்டன்மில்களில் சாதியப்பாகுபாடு இருக்கத்தான் செய்தது. மில் தொழிலாளர்களின் யூனியன்களிலும் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை. அன்றைக்கு யூனியன் ஆபிஸ்களில் கயிறு/ரிப்பன் அல்லது நூல்களால் கோர்க்கப்பட்டிருக்கும் கோப்புகள் அல்லது காகிதங்களை பல்நுனியால் கடித்து அவிழ்ப்பார்கள். அப்படி பல்லால் கடிக்கும் குறிப்பிட்டஅந்த வேலைக்கு தலித்துகளை யூனியன் ஆபிஸ்களில் நியமிப்பதில்லை. தலித் எச்சில் பட்ட காகிதத்தைத் தொடுவது யூனியன் தலைவர்களைத் தீட்டுப்படுத்திவிடும் என்பதுதானே காரணமாக இருக்கக் கூடும்! இன்றும்கூட களப்பணியாளர்களிடம் சாதியம் காப்பாற்றப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. மேதாபட்கரின் போராட்டங்களில் பங்கேற்றபோது கண்கூடாகக் கண்டேன். களப்பணியிலும் சாலைப் போராட்டங்களிலும் கலந்து நின்றவர்கள் சாப்பிடும்போது தனித்தனியாகப் பிரிந்து நின்றார்கள். தமிழ்நாட்டில் கூட இரட்டைக்குவளை முறை இன்றும் கிராமங்களில் இருப்பதாக வாசித்திருக்கிறேன். அதுபோலத்தான் இதுவும். மேதாபட்கரிடம் இதுபற்றி கேட்டபோது 'this is not my problem' என்று சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன்.

போராட்டக்களத்திலேயே சாதியம் இருக்கிறது தீண்டாமை நிலவுகிறது என்றால் மற்ற இடங்களைப் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது? தலித்துகளுக்காக குரல் கொடுக்கிறார்கள் என்பதைவிட தலித்துகளுக்கு உதவி செய்வதை தொண்டு மனப்பான்மையுடன் - ஒரு charity அமைப்பு போல -நடந்துகொள்வதாகவே கருதுகிறேன். காங்கிரசாகட்டும் காந்தியாகட்டும் இன்றைய மேதாபட்கராகட்டும் இந்த விசயத்தில் ஒரேமாதிரியான மனப்பான்மையுடன்தான் இருந்தார்கள் / இருக்கிறார்கள்.

கல்வி நகரமயம் தொழில்மயம் போன்றவற்றால் சாதி ஒழிந்துவிடும் என்று சில அறிவுஜீவிகள் சொல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அன்றுபோல கண்டால் தீட்டு, தொட்டால் தீட்டு என்பதெல்லாம் மும்பை போன்ற மாநகர வாழ்க்கையில் ஜனநெரிசலில் மிதிபட்டு விட்டது. இதை மட்டும் ஒரு மாற்றமாக கருதலாமே தவிர சாதியம் செத்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. லோக்கல் டிரெயினில் அருகருகே உட்கார்ந்து இன்று எல்லோரும் பயணம் செய்தாலும் பயணம் செய்கிற ஒவ்வொருவரின் அடிமனசிலும் சாதி வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது. கிராமத்தில் பண்ணையாருக்கு அடிமையாக வாழ்ந்த தலித், நகரவாழ்வில் குடிசைப்பகுதியில்வாழ்ந்தா லும் தினமும் சாலையோரத்தில் குப்பைகளை/ தாள்களை/ ப்ளாஸ்டிக்குகளைப் பொறுக்கிக்கொண்டு ஜீவனம் செய்தாலும் அவன் இங்கே எந்தப் பண்ணையாருக்கும் அடிமையில்லை! மேலும் தனியார் நிறுவனங்களில் மட்டுமே வேலைவாய்ப்புகள் இருப்பதால் தலித்துகள் மற்றவர்களுடன் சேர்ந்து தன்னைத் தகவமைத்துக்கொண்டு வேலை வாய்ப்புகளை வசப்படுத்திக் கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ரிசர்வேஷன் காரணமாக இவன் இந்த வேலைக்கு வர முடிந்தது என்று சொல்லும் காரணங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

அடிமட்ட நிலையில் தலித்துகளுக்கு இதனால் ஏற்பட்டிருக்கும் பாதகங்கள் அதிகம் என்பது உண்மைதான் எனினும் மும்பை போன்ற மாநகர வாழ்க்கையில் சாதியம் தன் முகத்தையும் வேஷத்தையும் மாற்றிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதனால்தான் கிராமத்தை நோக்கிப் பயணம் செய்ய காந்தி போன்றவர்கள் சொன்ன போது பாபாசாகிப் கிராமத்தை விட்டு நகரத்தைநோக்கிய வாழ்க்கைப் பயணத்தை முன்னிறுத்தினார். இப்படியாக வெளிப்படையாக சாதியம் மும்பை மாதிரி மாநகரத்தில்தெரிவதில்லை என்பதாலேயே சாதியம் இல்லை, தீண்டாமை இல்லை என்று சொல்வதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாக அமையும். இங்கே இன்றும் திருமணவீட்டிலும் இழவுவீட்டிலும் சாதி அதற்கான முகம் மாறாமல் அப்படியே வாழ்ந்துகொண்டிருப்பதை நாமறிவோம். நம்முடைய குடியிருப்புகளில் கூட தலித்துகளில் பலர் தன் தலித்திய அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஏன் வாழ்கிறார்கள்? நகர வாழ்க்கையில் சாதி இல்லை என்றால் அப்படி மறைத்துக்கொண்டு வாழவேண்டிய அவசியம் என்ன?

காட்கோபரில் (மும்பை புறநகர் பகுதி ) அம்பேத்கரின் சிலை அவமதிக்கப்பட்டதும் அப்போது நடந்தப் போராட்டங்களையும் நினைத்துப் பாருங்கள். மேதாபட்கரின் பேரணிகளில் களப் போராட்டத் தளத்தில் நிலவும் சாதியம் குறித்து சொன்னதையும் யோசித்துப் பாருங்கள். எனவே சாதியம் செத்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. இதைவிடுத்து இன்றைக்கு கிராமப்புறங்களில் சாதிச்சண்டைகள் தீவிரமாகி இருக்கின்றன. தலித்துகளுக்கு ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு ஆதிக்கச்சாதியினரை எரிச்சலூட்டுகிறது. பீகார், உத்திர பிரதேச மாநிலங்களில் மிக அதிகமாக சாதிக்கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள் அவரது நோக்கங்களைப் பழுதற உள்வாங்கி செயல்படுகின்றனவா?

பார்லிமெண்டெரி டெமாக்ரசியில் அமைப்புரீதியாக அம்பேத்கரின் கருத்துகளை முன்னிறுத்தி அனைத்திந்திய அளவில் செயல்படும் ஓரமைப்பு தலித்துகளுக்கு இல்லை என்பதாலும் இருக்கிற தலித்திய அமைப்புகள் மாநில அளவில் மட்டுமே இருப்பதாலும் பெரும்பாலும் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்தே அரசியல் தளத்தில் நிற்பதாலும் அம்பேத்கரின் கருத்துருவாக்கங்களை இந்த இயக்கங்கள் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை நீங்கள் வைப்பதாக எண்ணுகிறேன். ஆனால் அம்பேத்கரின் கருத்துகள் இந்தியா முழுவதும் பரவி இருப்பதும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் அவருடைய நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டு அந்தந்த மாநிலங்களில் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதையும் அமைப்புகள் போராட்டங்கள் இயக்கங்களுக்கும் அப்பாற்பட்டு நடந்த ஒரு மிகப்பெரிய புரட்சியாகவே நினைக்கிறேன்.

50, 60 வருடங்களுக்கு முன் 1924 வாக்கில் காலில் செருப்பு போட அனுமதி மறுக்கப்பட்டவன் காலடியில் விரைந்து ஓடும் காரின்ஆக்ஸிலேட்டர் வந்துவிட்டதை மிகப்பெரிய மாற்றமாகவே நினைக்கிறேன். இந்த மாற்றங்களுக்கு அடித்தளமாக இருந்தது அம்பேத்கரின் ஜடியாலஜி தான். அமைப்புரீதியாக அம்பேத்கரின் இயக்கங்களுக்கு மட்டுமல்ல, கம்யூனிச இயக்கங்கள் எந்தளவுக்கு மார்க்சியத்தை உள்வாங்கிக்கொண்டு செயல்படுகின்றன? காந்தியத்தை ஏற்றுக்கொண்ட காங்கிரசு எங்கே இருக்கிறது?

அம்பேத்கரின்  சிந்தனை செயலூக்கத்துடன் நின்று செயலாற்றிய காலம் என்று எதை மதிப்பீடு செய்கிறீர்கள்?

1957 முதல் 1965 வரை அரசியல் களத்தில் செயலூக்கத்துடன் இருந்த காலம். நிலமற்றவர்களுக்கு வாழ்வாதாரமாக நிலம் வேண்டிநடந்தப் போராட்டத்தில் சற்றொப்ப 3,87,000 பேர் சிறை சென்றார்கள். அரசு அம்பேத்கரிஸ்டுகளின் போராட்டங்களைக் கண்டு அச்சப்பட்டது. அக்காலத்தில்தான் உ.பி.யில் ரிபப்ளிகன் பார்ட்டியைச் சார்ந்த 3 பேர் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 1972முதல் 1975வரை மராட்டியத்தில் தலித் பேந்தர்களின் காலம். அப்போது தலித் அல்லாத ஒத்த சிந்தனையாளர்களும் எங்களுடன் சேர்ந்து பணியாற்றினார்கள். கலை இலக்கியத்தளத்தில் அம்பேத்கரின் சிந்தனை செயலூக்கத்துடன் எப்போதும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்தியா முழுமையும் இந்த அலை கலை இலக்கியத் தளத்தில் தொடர்வதைத்தான் மிகவும் பெருமையும்மகிழ்ச்சியும் தரும் விசயமாக கருதுகிறேன்.

இந்தியக்குடியரசுக் கட்சி இருக்கும்போது 9.7.1972ல் நீங்கள் தனியாக தலித் சிறுத்தைகள் அமைப்பை ஏற்படுத்த என்ன காரணம்?

அமெரிக்காவின் கறுப்பின விடுதலையும் கறுப்பு இலக்கியமும் என்போன்ற இளைஞர்களுக்கு அதுபோன்ற ஓர் அமைப்பை உருவாக்கி நிறைய சாதிக்கவேண்டும் என்ற வெறியை ஏற்படுத்தி இருந்த காலக்கட்டம். கலகக்குரலாக கவிதை எழுதுவது மட்டும் இந்தச் சமூகத்தின் எந்தப் பிரச்னையையும் தீர்த்துவிடாது என்பதையும் உணர்ந்தோம். அப்போதுதான் நான்,என்னுடன் நாம்தேவ்தசல், ஜே.வி பவார் சேர்ந்து தலித் சிறுத்தைகள் அமைப்பை ஆரம்பித்தோம். குடியரசுக் கட்சியின் ஒரு மந்தமான செயல்பாடு எங்கள் வேகத்திற்கு அன்று ஈடுகொடுக்க முடியவில்லை. அதுவும் ஒரு காரணம்.

அவ்வளவு வேகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தலித் சிறுத்தைகள் அமைப்பு ஆரம்பித்த வேகத்திலேயே 1978ல் முடிந்துபோனது ஏன்? உங்கள் அமைப்பில் அப்படி என்ன பிரச்சனை ஏற்பட்டது? அதைத் தவிர்த்திருக்கலாம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்தது உண்டா?

ரொம்ப பெரிதாக எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. சின்ன கருத்தியல் முரண்பாடுகள்தான் காரணம். மூன்று விதமான குரல்கள் ஒலித்தன. ஒன்று மார்க்சியவாதிகள். எல்லாமே அதற்குள் அடக்கம் என்று நினைப்பவர்கள். அடுத்து தீவிர - கலப்படம் விரும்பாத தூய அம்பேத்கரிஸ்ட். நமக்கு அம்பேத்கர் மட்டும் போதும் என்றார்கள், மூன்றாவது புத்திஸ்ட். பதவி, அதிகாரம் இருக்கும் இடத்தில்தான் விட்டுக்கொடுத்தலும் சமரசமும் தேவைப்படுகிறது. எங்கள் அமைப்புகளில் அப்படி எதுவுமில்லை. எனவே சமரசத்திற்கு யாரும் தயாரில்லை. இதேநிலை கம்யூனிச, சோசலிஷ, நக்சல் அமைப்புகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அடுத்தவர்களை உதாரணம் சொல்வதன் மூலம் நான் எங்களை நியாயப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இப்போது நினைப்பதுண்டுதான்.. நீங்கள் கேட்பது மாதிரி "தவிர்த்திருக்கலாமோ" என்று. எப்படியோ அது கடந்த காலம். இப்போதும்கூட தலித் பிரச்சனைகளில் நாங்கள் ஒன்றுபட்டு செயல்படுகிறோம். அடிக்கடி என்னைச் சந்திக்கும் பலர் தலித் சிறுத்தைகள் அமைப்பின் அவசியத்தை இன்றும் என்னிடம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்..

உங்கள் வேகத்துக்கு இந்தியக் குடியரசுக் கட்சி ஈடுகொடுக்காது என்று சொன்ன நீங்கள் இன்று அதில்தானே இருக்கிறீர்கள்!

ஆமாம். மராத்திய மாநிலத்தில் வளர்ந்து வரும் சிவசேனா, விஷ்வ இந்து பரிஷத், மராத்திய நவ நிர்மான் சேனா, பி.ஜேபி என்று மதம்சார்ந்த அரசியல் சூழலில் ஒரு செக்குலார் அமைப்புக்கான தேவை இன்று அதிகம். அந்த வகையில் நாங்கள் இந்திய குடியரசுக்கட்சியில் சேர்ந்து எங்கள் செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.

குடியரசுக் கட்சியின் ஒருபிரிவு சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதை எவ்வாறு விளங்கிக் கொள்வது?

RPI இணைந்து நிற்கவில்லை. Rashtriya republican party சிவசேனாவுடன் சேர்ந்து நின்றது. இவர்கள் எப்போதுமே சிவசேனாவுக்கு ஜால்ரா அடிப்பவர்கள்தான். இது ஒரு பலகீனமான அமைப்பு. ஒரு சில இடங்களில் RPIலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காகப் பிரிந்த சிலர் சிவசேனையுடன் இணைந்திருக்கலாம்.

இந்த நாட்டில் 1/5 ஆக இருக்கின்ற தலித்துகள் இயற்கை வளங்களில், பொதுச்சொத்தில், பொருளாதர வணிகச் செயல்பாடுகளில் கலை இலக்கிய பண்பாட்டு நடவடிக்கைகளில் உரிய பங்கை அடைவதற்குப் போராடாமல் பிறரோடு சேர்ந்து சில்லறை அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக தலைகளைக் காட்டி பங்கு வாங்கிக்கொள்வதாக தலித் இயக்கங்கள் வலுகுன்றிப் போயிருப்பதை எப்படி விளங்கிக்கொள்வது?

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆட்சிதான் கைமாறியது. மக்களாட்சி, அரசியல் சட்ட உரிமை என்றெல்லாம் வந்த பிறகும் ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற எது தடையாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தலித்மக்களில் படித்த நடுத்தர வர்க்கத்தினர் போராட்டங்களைக் கைவிட்டு அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்ள அடிப்படைக் கொள்கைகளை மறந்துவிட்டு அரசியல் கட்சிகளுடன் பேரம் பேசி விலை போய்க் கொண்டிருக்கிறார்கள். அனைத்திந்திய தலித்திய அரசியலமைப்பு/ அல்லது மாநில தலித் இயக்கங்களை ஒட்டுமொத்த இந்திய அளவில் ஒன்றணைக்கும் ஓரமைப்பின் தேவையை உணர வேண்டும். அப்படி ஓர் அரசியல் சக்தியாக மாற்றம் பெற்றால் மட்டுமே நீங்கள் சொல்வதுபோல நமக்கான உரிய பங்கை நாமடைவது சாத்தியப்படக்கூடும். அதுவரை அவர்கள் தூக்கி எறியும் எலும்புத் துண்டுகளுக்காக காத்திருக்கும் தெருநாய்களாகத்தான் நாமிருப்போம். இந்தப் பூர்ஷ்வா அரசு தன் குடிமக்களை வாழவைப்பதும் இல்லை. சாகவிடுவதும் இல்லை, இரண்டுக்கும் நடுவில் தத்தளிக்கும் வாழ்க்கை. இந்த அரசு வீடு இல்லாதவனுக்கு தண்ணீர்க்குழாயும் மின்சாரமும் வழங்கும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறது. இம்மாதிரியான சூழலில் அம்பேத்கரின் கருத்துகளை முன்னெடுத்துச் செல்லும் அகிலஇந்திய அமைப்பின் தேவையை நாம் உணர வேண்டும்.

இப்போதைய சூழலில் ஒரு தலித் இயக்கம் அகில இந்திய மட்டத்தில் துவக்கப்படுவதாக இருந்தால் அல்லது இருக்கிற இயக்கம் தன்னைச் சரிப்படுத்திக் கொள்வதென்றால் அதன் செயல்திட்டத்தில் இடம்பெற வேண்டிய தலையாய அம்சங்கள் என்று எவற்றைச் சுட்டிக்காட்டுவீர்கள்?

அந்தந்த மாநிலத்தின் தலித் இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றுகூடி அனைத்திந்திய அமைப்புக்கான தேவைபற்றி பேசவேண்டிய காலக் கட்டமிது. அப்படி ஓரமைப்பு நிறுவப் பட்டால் மட்டுமே அரசியல் தளத்தில் அதிகாரப்பகிர்வும் உரிமைகளைப் பெறுவதும் சாத்தியப் படும். அந்த அமைப்பில் ஒத்தக்கருத்துள்ள தலித்தல்லாதவர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். பாபாசாகிப்கூட சாதியடிப்படையில் மட்டுமே ஒன்றிணைக்கப்பட்டிருக்கும் இயக்கங்களை முழுமனதுடன் வரவேற்கவில்லை.

தலித் அல்லாதவர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று சொல்லும் நீங்கள் பகுஜன் மாயாவதி சர்வஜன் மாயாவதி ஆனதை விமர்சனம் செய்கிறீர்களே, ஏன்?

பகுஜன் சர்வஜன் ஆனதால் பகுஜனுக்கும் சரி சர்வஜனுக்கும் சரி.. என்ன கிடைத்தது? அதனால்தான் சொல்கிறேன் மீண்டும் சொல்கிறேன் ஒத்தக்கருத்துள்ள தலித் அல்லாதவர்களையும் இணைத்துக் கொண்டு என்று. "ஒத்தக் கருத்துள்ள' (like minded ) என்ற சொல்லை அடிக்கோடிட்டு வாசிக்கவும். தலித்தல்லாதவர்களை இணைத்துக்கொள்ளும் போது ஒத்தக்கருத்துள்ளவர்களாக இருக்க வேண்டியது அடிப்படை விசயம். இல்லை என்றால் நம் தேர்தல் கூட்டணிக்கும் இதற்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்!

தலித் மக்கள் சக்தி வலுவான அதிகாரமாக இந்திய அரசியலில் வளர்ச்சி அடையாமைக்கு என்ன காரணம்?

தலித் நேஷனல் பார்ட்டி கிடையாது. எல்லோரும் ஏற்றுக்கொண்ட தலித் தலைமை அம்பேத்கருக்குப் பின் நம்மிடம் இல்லை. பாபாசாகிப் அவர்களுக்கு தேசியஅளவில் தலித் அமைப்பு ஒன்று வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. டாக்டர் லோகியா, ஆச்சார்ய அதர்லே, சமாஜ்வாடி எஸ்.என். ஜோஷி ஆகியோருக்கு பாபாசாகிப் கடிதம் எழுதினார். ஆக்கப்பூர்வமாக அதைச் செய்வதற்குள் அவர் இறந்து விட்டார். தலித் அமைப்புகளின் மாநிலத்தலைவர்கள் உள்ளூரைத் தாண்டி வரத் தயாராகவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட மாநில வாரியாக தங்கள் கூட்டணிகளை மாற்றிக்கொண்டாலும் மத்திய அளவில் ஒன்றாக நிற்கின்றன. குறைந்தபட்ச அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து மாநில தலித் அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் ஓர் அமைப்பு இன்றைய தேவை. அப்படிப்பட்ட ஓர் அமைப்பு ஏற்படாதவரை தலித் சக்திகளை அரசியல் தலைவர்கள் தங்கள் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வார்கள்.

தலித்துகளுக்குள் நிலவும் சாதிப்படிநிலைகள், உட்சாதிப்பூசல்கள், இட ஒதுக்கீடுக்குள் உள்ஒதுக்கீடு- பற்றி எல்லாம் என்ன நினைக்கிறீர்கள்?

சாதிப்படிநிலைகள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. தலித்துகளில் இரண்டுவகை. ஒருசாரார் இந்து தலித்துகள். ஜெகஜீவன்ராம் போன்றவர்கள் இதில் அடங்குவர். ஒன்றை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் அம்பேத்கரை இந்து தலித்துகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை! மகர்கள்தான் ரிசர்வேசனை அனுபவித்து முன்னேறி இருக்கிறார்கள். மாத், மதங் என்று இங்கேயும் உட்சாதி இட ஒதுக்கீடு குரல்கள் கேட்கின்றன. உள் ஒதுக்கீடுகளில் உள்ள சில நியாயங்களை இந்துத்துவவாதிகள் திசைதிருப்பி ஆதாயம் தேடிக் கொள்வதை அனைத்து தலித் உட்சாதிப்பிரிவினரும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு சேமநல அரசாக இந்திய அரசு முழுமை பெறுவதற்குள் உலகமயமாதலில் கால்வைத்து விட்டது. இன்று அரசானது சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் ஓர் ஏஜென்சியாக மாறிவிட்டது. எனவே ஒடுக்கப்பட்டோர் நலனில் தனித்த அக்கறை செலுத்த வேண்டும் என்பது பேச்சளவிலும் கூட கைவிடப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீடு நடைமுறையில் முடக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே தொழில் வணிகம் போன்றவற்றில் தலித்துகளுக்கு வாய்ப்பு குறைவு. மிகுந்த சவால்களுடன் கூடிய இந்த நிகழ்காலத்தை தலித்துகள் எவ்வாறு கடப்பது?

இந்திய அரசு உலகமயமாதலில் நுழைந்தது சரியா தவறா என்று பேசுவது இனி அர்த்தமில்லாதது. வெகுதூரம் வந்தாகிவிட்டது. உலகமயமாதலில் இருந்து இனி நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் வெளிவருவது சாத்தியமில்லை. 

அமெரிக்காவிலிருந்து அறிவியலையும் அணு ஆயுதத்தையும் ஹை டெக்னாலஜியையும் இறக்குமதி செய்திருக்கும் நாம் அமெரிக்க அரசின் சில மனித உரிமைக் கொள்கைகளையும் தனியார் நிறுவனங்களிலும் கறுப்பர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முன்னுரிமையையும் சேர்த்தே இறக்குமதி செய்திருந்தால் நல்லது. 

ஆனால் உலகமயமாதல் என்றால் அமெரிக்காவுக்கு அடிமையாதல் என்பதல்ல. அந்தப் புரிதல் நமக்கு வேண்டும். உலகமயமாதல் என்றால் நம் இயற்கை வளங்களை அடுத்தவன் கொள்ளை அடிக்க விட்டுவிட்டு நிற்பதல்ல. மக்கள் சக்தியை ஒன்று திரட்டினால் நம்மால் சில அழிவுகளிலிருந்து காத்துக்கொள்ள முடியும். மராட்டியத்தில் விடியோகோனின் சிறப்பு பொருளாதார மண்டலத்தை மக்கள் சாலையில் இறங்கி தடுத்து நிறுத்திவிட்டார்கள். இவை எல்லாம் நம்பிக்கை தரும் செய்திகள். எனினும் இன்றைக்கு தலித்துகளிடம் போராட்டக்குணம் நீர்த்துப்போய்விட்டதோ என்ற அச்சம் எனக்குண்டு. எங்கள் போராட்டங்களைக் கண்டு அரசும் ஆட்சியாளர்களும் அச்சப்பட்ட காலம் ஒன்றுண்டு. அன்றைக்கெல்லாம் ஒரு பிரச்சனை என்றால் சாலையில் இறங்கி நின்று போராடிய பொதுமக்கள் இன்றில்லை. தலித்துகளின் வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கம் சார்ந்தவர்கள் இன்றைக்கு குடிசைவாழ் தலித்துகளுக்காக போராட சாலையில் இறங்கத் தயாராக இல்லை. போராட்டக்குணம் குறைந்துவிட்டது. இன்றைய சூழலில் மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டுவதன் மூலமே நம்மை நோக்கியிருக்கும் சவால்களை எதிர்கொள்ள முடியும். ஆனால் அதுவே காணாமல் போய்க் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் கவலை தருகிறது.

தலித் பெண்களின் தனித்துவமான பிரச்சனைகள் என்று எவற்றை அடையாளப்படுத்துவீர்கள்? தலித் இயக்கங்கள் அவற்றைக் கவனத்தில் கொண்டுள்ளனவா?

போராட்டகளத்தில் நிற்கும் ஒவ்வொரு தலித் ஆண்மகனின் வீட்டிலிருக்கும் பெண்களும் அதே போராட்டகளத்தில் நிற்கும் தலித் அல்லாத ஆண்மகனின் வீட்டிலிருக்கும் பெண்களும் அடிப்படையில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையை நாங்கள் கவனத்தில் கொண்டிருக்கிறோம். தலித் போராடினால் அவனை அடக்க அவன் வீட்டுப் பெண்டு பிள்ளைகளை வன்கொடுமை செய்கிறார்கள். அன்று முதல் இன்றுவரை தொடரும் கதை இது. தலித் அல்லாத ஆண்மகனின் வீட்டுப் பெண்களுக்கு அடிப்படையில் இந்தப் பிரச்சனை அதிகமாக இருப்பதில்லை. பெண்ணியம் பேசும்போதும் தலித் பெண்களின் பிரச்சனைகளை தனித்துவப்படுத்தி இன்று தலித் பெண்கள் முன்வந்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இயக்கங்கள் இவற்றை என்றைக்குமே புறக்கணித்ததில்லை.

ஆனால் தலித்திய இயக்கங்களில் பெயர் சொல்லும்படியாக பெண்கள் இல்லையே? ஏன்? நீங்கள் ஆரம்பித்திருந்த தலித்பேந்தர் அமைப்பிலும் பெண்கள் நிர்வாகத்தில் இருந்ததாகத் தெரியவில்லையே?

பெண்கள் நிர்வாகத்தில் முன்வரவில்லை. தலைமைப் பொறுப்பேற்க முன்வரவில்லை. தலித் பேந்தரிலும் தலைமைக்கு வரவில்லை என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் சாலையில் இறங்கிப் போராட்டமா, பேரணியா.. பெரும்பான்மையான பெண்கள் அக்காலக் கட்டங்களில் கலந்துகொண்டார்கள். இன்று நிலைமை ஓரளவு மாறி வருகிறது. தலைமைக்கு வரவும் நிர்வாகப்பொறுப்புகளை ஏற்கவும் பெண்கள் தயாராகிவிட்டார்கள்.

இங்கு சிலைகளை வைத்து நடக்கும் அரசியல் அறிந்ததுதான். இதுவரை அரசாங்கங்களும் கட்சிகளும் வைத்துள்ள பெரும்பாலான சிலைகள் தலித்தல்லாதவர்களுடையதே. ஊடகங்களில் வெளியாகும் அரசுத்துறை விளம்பரங்களில் ஆளுயரத்திற்கு நின்று புன்னகைப்பதும் இவர்களே. விபத்தில் மறைந்த ராஜசேகர ரெட்டிக்கு 12,000 சிலைகளை ஆந்திரா முழுக்க வைக்கப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அரசாங்கமோ, கட்சிகளோ அவை செலவழிக்கிற தொகை பொதுமக்களுடையதுதான். ஆனால் இதையெல்லாம் விரயமென்று பேசாத பொதுநல விரும்பிகள், நீதிமன்றங்கள் எல்லாம் மாயாவதியின் சிலைவைப்பு முயற்சிக்கு இப்படி கொந்தளிப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ரொம்ப சிம்பிள். அவர் ரெட்டி, இவர் மாயாவதி. மாயாவதி ரெட்டியாக இருந்திருந்தால் இந்தக் கேள்வியே வந்திருக்காது. இந்த இடத்தில் இன்னொரு செய்தியையும் சொல்லியாக வேண்டும். உ.பி.யில் தலித்துகளுக்கும் பிற சிறுபான்மை மக்களுக்கும் செய்யவேண்டிய உருப்படியான காரியங்கள் நிறைய இருக்கிறது. மாயாவதி தன் அதிகாரத்தையும் ஆற்றலையும் காட்டவும் நிலைநிறுத்தவும் களங்கள் பல உ.பி.யில் இருக்கின்றன. எனவே இந்த சிலை விவகாரத்தில் எல்லாம் தன் நேரத்தையும்ஆற்றலையும் வீணடிக்கக் கூடாது. தொலைநோக்குப்பார்வையுடன் கூடிய எதிர்காலத் திட்டங்களில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.

மாயாவதியின் அரசியல் வெற்றி தலித் சமூகத்தின் வெற்றியா?

இல்லை. மாயாவதியின் அரசியல் வெற்றிகளை நாமும் ஊடகங்களுடன் சேர்ந்து பாராட்டலாம். ஆனால் ஊடகங்கள் சொல்வதுபோல அவர் தலித்துகளின் அடையாளம் அல்ல. இந்த வெற்றியை அடைய அவர் கொடுத்திருக்கும் விலை என்ன ? அவரை ஆதரிக்கும் புனே டி.எஸ். குல்கர்னி ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். மாயாவதி தேர்தலில் நிறுத்திய நாசிக் 'மகந்த' ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். இந்த மாதிரி விலையைக் கொடுத்து மாயாவதி தலித் சமுதாயத்திற்கு என்ன செய்துவிடப்போகிறார்? அண்மையில் தாதர் சிவாஜி பார்க் கூட்டத்திற்கு வந்தவர் அங்கிருக்கும் அம்பேத்கரின் சைதன்ய பூமிக்குக்கூட போகவில்லை! she lost her dalit idealogy.

சைதன்யபூமி கிட்டத்தட்ட ஒரு வழிபாட்டுத்தலம் போலதானே இருக்கிறது? செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவது, பூ வாங்கி அர்ச்சனை செய்வது இத்யாதி காட்சிகளைப் பார்க்கிறோமே.. அம்பேத்கரை நாம் கடவுள் ஆக்கிவிட்டோமோ?

சைதன்யபூமிக்கு வருகிறவர்களுக்கும் திருப்பதிக்கு போய் வருகிறவர்களுக்குமான வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். எதையும் வேண்டி கேட்டு, கேட்டது கிடைத்துவிட்டால் அதற்குக் கைமாறாக எதையாவது செய்து தன்னையும் தன் கடவுளையும் ஏமாற்றிக் கொள்ளும் கூட்டமல்ல சைதன்யபூமிக்கு வருபவர்கள். அன்பை, மரியாதையை தங்களுக்குத் தெரிந்தவகையில் வெளிக் காட்டும் மக்கள். தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு தலைவனுக்கு தங்கள் நன்றியை மட்டும் காட்டவரும் மக்கள். மும்பையில் பிறந்து வளரும் நம் வீட்டு பிள்ளைகள் சாதியம் தெரியாதவர்களாக ஏன் சாதியற்றவர்களாக இருக்கிறார்கள். சாதியற்றவர்கள் என்று சொல்வதில் பெருமைதான் எனினும் சாதிப் படிநிலை மாறாத இச்சமூக அமைப்பில் அவர்களுக்கான இடம்..

இன்று நம்மைப் போன்ற பலர் குடும்பத்தில் இப்பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. அமெரிக்கன் சிலிக்கன் வேலியில் டாலராக சம்பாதிக்கும் அவாள் வீட்டுக்குழந்தைகள் தங்கள் மேனிலையைக் காப்பாற்றிக்கொள்ள டாலர் டாலராக விஷவ இந்து பரிஷத் மாதிரி அமைப்புகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். நம் தலித்துகளிடம் தான் நவ தலித் பிராமணர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். நம் குடியிருப்பில் எத்தனை தலித்துகள் இருக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு? உங்களையும் என்னையும் போல அவர்கள் தம்மை தலித் என்று சொல்லிக் கொள்வதில்லை. தங்கள் அறிவு, பணம், பதவி இந்த சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு பயன்பட வேண்டும் என்ற சமூக விழுமியத்தை நாம் நம் குடும்பங்களின் தனிமனித விழுமியமாகக் கடைபிடிக்க வேண்டும்.

II

இந்து மதத்தின் பிடியிலிருந்து தம்மக்களை விடுவிப்பது என்ற அம்பேத்கரின் அடிப்படை நிலைப்பாட்டை பல தலித்இயக்கங்கள் கைவிட்டுவிட்டது எதனால்? இந்துமதம் அவற்றையும் உட்செரித்துக் கொண்டதா?

மிகவும் விரிவாக பேசப்பட வேண்டிய விசயம் இது. பாபாசாகிப் one man one vote என்று அரசியல் சட்டத்தின் மூலம் சமஉரிமை கொடுத்த பிறகுதான் பவுத்தம் தழுவினார். அப்படியானால் அரசியல் சட்டம் மட்டுமே சமூகத்தில் சம உரிமையை தம் மக்களுக்கு கொடுக்க முடியாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். மராட்டியத்தில் தலித்துகள் மகர், சம்பார், மாத் என்று மூன்று பெரும்பிரிவுக்குள் அடங்குவர். இதில் மகர் பிரிவினர் முதலில் அம்பேத்கரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு சமூகத்தளத்தில் சம உரிமைப் போராட்டக்களத்தில் முன்நின்றார்கள். அதனால்தான் காங்கிரசு இயக்கம்கூட மகர் அல்லாத ஜெகஜீவன்ராம் அவர்களை அம்பேத்கருக்கு எதிராக நிறுத்துவதற்காகவே வளரவிட்டது. இந்தப் பிரிவுகளில் ஒருசாரார் அம்பேத்கரை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டினார்கள். இன்றும் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டுதான் சிவசேனை, பாரதிய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகள் "இந்து தலித்துகள்" என்ற முத்திரையுடன் நம் மக்களைப் பிளவுபடுத்தி இருக்கிறார்கள். அம்பேத்கர்கூட அரசியல் களத்தில் அவருடன் எவ்விதத்திலும் ஒப்புமைப்படுத்த தகுதியில்லாத வேட்பாளருடன் போட்டியிட்டு மும்பையில் தோல்வி அடைந்திருக்கிறார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் தலித் அரசியல் இயக்கங்களையும் பவுத்தத்தையும் இணைத்து பார்க்கும் யதார்த்தத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை யோசித்துப் பாருங்கள்.

ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். நானே சட்டசபை தேர்தலில் நிற்பதாக வைத்துக்கொள்வோம். என் தொகுதியில் இருக்கும் அனைத்து வாக்காளர்களையும் சந்திக்கும்போது அதில் சிலர் கணபதி கோவிலுக்கு அழைத்து அர்ச்சனை செய்யலாம். சிலர் மசூதிக்கு அழைக்கலாம். அவர்களுடன் சேர்ந்து நோன்பு கஞ்சி குடிக்கலாம்... இதை எல்லாம் எவ்விதமான தடைகளுமின்றி இந்துமத வேட்பாளரால் செய்ய முடிகிறது. இதையே நான் செய்தால் அது கேள்விக்குறி ஆவது தவறு. இன்னொரு முக்கிய விசயத்தையும் கவனிக்கத் தவறி விட்டோம். நீங்கள் (புதியமாதவி) படித்தவர், தொலைக்காட்சி பார்க்கவும் நேரமில்லாமல் வாசிப்பு, கருத்தரங்கு, இலக்கியம் என்று உங்கள் நேரத்தைக் கழிக்க முடிகிறது. ஆனால் பெரும்பான்மையான மக்கள் கதி? அவர்களுக்கான வடிகால்? எனக்குத் தெரிந்து பவுத்தம் தழுவிய நன்கு படித்த குடும்பங்கள்கூட வெளியில் பவுத்தம் சார்ந்தும் குடும்பத்தின் பழக்கவழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்களில் ஒரு இந்துவாகவும் இருக்கிறார்கள். கண்பதி உற்சவங்கள், தசரா கொண்டாட்டத்தின் ஆடல் பாடல்கள், தயிர்ப்பானை உடைக்கும் கோவிந்தா கோவிந்தா விளையாட்டு... இப்படியான கொண்டாட்டங்களை தன்னுள் வைத்திருப்பதால் சாதாரண மனிதனுக்கு, கொண்டாட்டங்களுடன் கூடிய வாழ்க்கையை அனுபவிக்க ஏங்கிக்கொண்டிருக்கும் வெகுமக்களுக்கு இந்துமதத்தில் இம்மாதிரியான வடிகால்கள் இருக்கின்றன.

பவுத்தத்தில் புத்தபூர்ணிமா, அம்பேத்கர் ஜெயந்தி தவிர்த்து கொண்டாட எதுவுமில்லை. ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையை கொண்டாட்டங்களுடன் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவே விரும்புகிறான். அந்த உளவியலை மிகவும் சரியாகப் புரிந்து கொண்டதால் மட்டுமே இந்துமதம் இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி இன்றும் மக்களைக் கவர்ந்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

பவுத்தம் ஒரு மதம் அல்ல, அது ஒரு வாழ்வியல் முறை, அறிவியல் சார்ந்த பகுத்தறிவு சார்ந்த ஒரு வாழ்க்கை முறை. பவுத்தத்தில் புத்தபகவானிடம் நீங்கள் வரமெல்லாம் கேட்கும் வாய்ப்புகளே இல்லை! தனிமனிதன் கடவுளை நம்புவதும் கும்பிடுவதும் பேரம் பேசுவதும் எனக்கு நீ இதைக் கொடு நான் உனக்கு இந்தப் பூஜை செய்கிறேன் என்றெல்லாம் கேட்பதும் பவுத்தத்தில் சாத்தியமே இல்லை. தனிமனிதனை, அவனது சிந்தனைகளையும் மீறிய சில உளவியல் தாக்கங்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றன. இந்த இடத்தில்தான் வெகுஜனமும் அவர்களின் உளவியலும் பவுத்தம் போன்ற அறிவியல் சார்ந்த பகுத்தறிவு வாழ்வியலுக்கே சவாலாக அமைந்துவிடுகிறது. இதில் பார்த்தீர்கள் என்றால் இன்னொரு வேடிக்கை. என்னவோ விவரம் தெரியாத நம்வீட்டு பெண்களோ முதியவர்களோ மட்டும் இப்படி இருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. அறிவியலில் கரைகண்ட இன்றைய நம் இளைய தலைமுறையும் பவுத்தத்தைப் புரிந்துகொண்டும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று ஒத்துக்கொண்டும் தசரா கொண்டாட்டத்தில் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள்.. அம்மாதிரியான கொண்டாட்டங்கள் அவர்களுக்கும் பெரிதும் தேவைப்படுகிறது..

ஒருகாலத்தில் தலித்துகள் கும்பிட்ட சிறுதெய்வங்கள் காணாமல் போய்விட்டன. அவர்களைப் போலவே இருந்த அவர்களின் கோரமுக தெய்வங்களை அவர்கள் மறந்து பலகாலம் ஆகிவிட்டது. அலங்காரங்களுடன் கூடிய பெருந்தெய்வ வழிபாட்டுக்கு வந்து விட்டார்கள். உங்களுக்குத் தெரியுமா.. பத்துப்பதினைந்து வருடத்திற்கு முன் மும்பையில் சித்தி விநாயகர் கோவில் குறித்து யாருக்கும் தெரியாது. இன்று பாருங்கள் அந்தக் கோவிலுக்கு வந்திருக்கிற மவுசை!  (நான்: ஆமாம்.. அசோக்சவான்கூட முதலமைச்சரானவுடன் சித்தி விநாயகர் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்திருக்கிறாரே.. பார்த்தீர்களா..?)

ஒரு மதமும் அது சார்ந்த கருத்துருவாக்கமும் பொதுமக்களிடம் பரவ அரசு எந்திரங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. சக்கரவர்த்தி அசோகர் பவுத்தம் தழுவிய பின் இந்திய மண்ணில் பெரும்பகுதி அவர் அரசாட்சியில் இருந்ததால் பவுத்தம் வேகமாகப் பரவியது.என்னதான் செக்குலர் பேசினாலும் இந்திய அரசும், ஊடகங்களும் இந்துத்துவா சார்ந்தே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இம்மாதிரியான புறம் சார்ந்த காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பல சமயங்களில் இதனால் தான் நான் அடிக்கடி சொல்வதுண்டு, இயக்க அரசியலையும் தனிமனித மத நம்பிக்கைகளையும் சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது. மதம் அகம்சார்ந்தும் அரசியல் புறம் சார்ந்தும் சமூகத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்றை இன்னொன்று ஆட்சி செய்யவோ அடக்கி ஆளவோ முயற்சிக்கும் போது கலவரங்கள் நடக்கின்றன.

எனில் அம்பேத்கரின் பவுத்த மதமாற்றம் தோல்வி அடைந்து விட்டதா?

இல்லை. அது அன்றைய தேவை. இன்று பவுத்தம் அடுத்தக் கட்ட நகர்வுக்கு/ மாற்றத்திற்கு உள்ளாக வேண்டிய தேவைவந்திருக்கிறது.

பவுத்தம் தழுவிய தலித்துகளை இன்றும் neo buddist என்று தனித்து தான் அடையாளப்படுத்துகிறார்கள். எனவேமதமாற்றம் தீர்வாக இருக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட சூழலில் தலித்துகள் எல்லா மத அடையாளங்களையும் துறக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளதா?

எல்லா மத அடையாளங்களையும் துறப்பது என்ற தீர்வு என்றைக்குமே வெகுஜனத்திற்கான தீர்வாக இருக்கவே முடியாது. எனவேதான் தலித்துகள் அனைவரையும் நாத்திகராக்காமல் பாபாசாகிப் அறிவியலும் பகுத்தறிவும் சார்ந்த வாழ்வியல் தத்துவங்களைப் போதித்த பவுத்தம் தழுவினார்.

நீங்கள் பவுத்தம் ஏற்றபின் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் கண்டீர்கள்? உங்களை நியோ புத்திஸ்ட் என்றுதானே அழைக்கிறார்கள்?

50 வருடங்களில் மிகப்பெரிய மாற்றங்களை, நம்பிக்கையை, சுயமரியாதையை, உத்வேகத்தை ஆற்றலை எங்களுக்கு பவுத்தன் என்ற அடையாளம் கொடுத்திருக்கிறது. உலக வரலாற்றில் இந்த மாதிரி ஒன்றை உங்களால் சொல்ல முடியாது. அதனாலேயே எல்லா கொடுமைகளும் முடிவு பெற்றுவிட்டது என்று நாங்கள் நினைத்து எங்களை ஏமாற்றிக்கொள்ளவில்லை. பவுத்தம் ஏற்ற கயர்லாஞ்சி பய்யாலால் கதை உங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்காக அவர்களுக்காகப் போராடும் உத்வேகத்தை அறிவாற்றலை எங்களுக்கு பவுத்தம் கொடுத்திருக்கிறது.

சாதியொழிப்பு சாத்தியம்தானா? அல்லது அதை ஒரு தொலைதூர லட்சியமாக வைத்துக் கொண்டு சாத ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பதில் தலித்துகளின் ஆற்றல் கழியுமா?

புத்தர் காலத்திற்கு முன்பே சாதி அமைப்பும் தீண்டாமையும் சமூகத்தில் வந்துவிட்டது. 2500 ஆண்டுகால ஒரு சமூக அமைப்பை மாற்றுவதும் மக்கள் அடிமனதில் ஊறிப்போன சாதிய வேர்களை அறுப்பதும் அவ்வளவு எளிதான காரியமல்ல. இது ஒரு தொடர்போராட்டம்தான். சரி, நீங்கள் கேட்பது போல இப்படியான தொடர் போராட்டங்களில் நம் ஆற்றல் கழியுமா என்றால் இல்லை. இந்தப்போராட்டங்கள் தான் நம் மக்களைத் தூக்கிப்பிடித்து தாங்கி நிற்கும் தூண்கள். இவை சரிந்துவிட்டால் ஏறிய உயரத்தைவிட வேகமாக அதல பாதாளத்தில் மீண்டும் நாம் தள்ளப்படுவோம். மொரிஷியஸ் தீவுக்குப் போனவர்கள் இன்று தங்கள் மூதாதையரின் சாதிஅடையாளத்தைத் தேடி அலைவதாக வாசித்திருக்கிறேன். இந்துமதம் இருக்கும்வரை இந்தியாவில் சாதியும் இருக்கும்.

III

தலித் இலக்கியம் புழக்கத்திலிருந்த மையநீரோட்டத்தில் இணைந்து விட்டதா? அல்லது தனித்துவத்தோடு வளர்நிலையை எட்டியிருக்கிறதா?

தலித் இலக்கியம் மைய நீரோட்டத்தில் இணைந்துவிட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் தலித் இலக்கியம்இலக்கியத்தின் ஒருவகை. மராட்டிய இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் அதில் தலித் இலக்கியம் என்பது மராட்டிய இலக்கியத்தின் ஒருவகை. மற்ற இலக்கியங்களில் ஏற்பட்டிருக்கும் இசம், உத்தி மாற்றங்கள் தலித் இலக்கியத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

தலித் இலக்கியம் வடிவத்திலும் பேசுபொருளிலும் அடைந்துள்ள மாற்றங்கள் என்று எவற்றை அவதானிக்கிறீர்கள்?

மராத்தி இலக்கியத்தை உலகத்தரம் வாய்ந்த இலக்கியமாக்கியதில் தலித் படைப்பாளர்களின் பங்கு மகத்தானது. ஆரம்பகாலங்களில் எடு துப்பாக்கியை, வெடிக்கட்டும் தோட்டா, குண்டுமழை, ரத்தம், காயம் என்று எழுதிக் கொண்டிருந்தோம். இன்றுஅப்படி எழுதுவதில்லை. இலக்கியத்தின் அனைத்து உத்திகளையும் தலித் இலக்கியம் தனக்குள் வாங்கி செரித்து நிற்கிறது. மத்தியவர்க்கம், உயர்தர மத்திய வர்க்கம், கூட்டுக்குடும்பச் சிதைவு, உலகமயம் என்று பல்வேறு தடங்களில் கிளை பரப்பி நிற்கிறது. பெண்கவிஞர்களின் பங்களிப்பு பெருமை சேர்த்துள்ளது. சத்யா பவார், ஊர்மிளா பவார் எழுத்துகளை எல்லாம் குறிப்பிட்டு சொல்லலாம். இன்னொரு பெரிய மாற்றம் அன்று எழுதியவர்கள் இயக்கம் சார்ந்த களப்பணியாளர்கள். இன்று அப்படியில்லை.

தலித் இலக்கியத்தை பௌத்த இலக்கியமாக நீங்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை?

தலித் இயக்கம் தலித் இலக்கியம் என்பது ஓர் உணர்வு, சமூக மாற்றத்தை விரும்பும் ஓரியக்கம். இதற்குள் பௌத்த இலக்கியமும் இடம் பெறலாமே தவிர தலித் இலக்கியத்தை பௌத்த இலக்கியமாக அடையாளப்படுத்தமுடியாது.

தலித் படைப்புகள் ஒரே சாயலில் - ஸ்டீரியோ டைப்- ஆக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு பொதுவாக வைக்கப்படுகிறதே?

ஆரம்பகாலங்களில் இப்படி எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். இன்றைக்கு மகர்களின் படைப்புகளை வாசித்துவிட்டு மராத்தாக்களும் தங்கள் யதார்த்த வாழ்க்கையை எழுதத் துணிந்தார்கள் என்பதுதான் உண்மை. புதிய சொல்லாக்கங்களை, பழைய சொற்களுக்குப் புதுப்புது அர்த்தங்களை எங்கள் படைப்புகள் தான் மராத்திய மொழிக்கு கொடுத்திருக்கிறது. இன்றைக்கு மராத்திய அரசு தலித் இலக்கிய சொல்லாடல்களுக்கு தனி அகராதியே கொண்டுவரப் போகிறது என்றால்.. அந்தளவுக்கு இந்த மொழியை நாங்கள் வசப்படுத்தியிருக்கிறோம்!

நாராயண் சுர்வேயின் கவிதைகள் ஃபக்தா சிறுபத்திரிகையில் வெளிவந்தன. சிறுபத்திரிகைகளின் பங்களிப்பையும் மராத்திய இலக்கியத்தில் ரொம்பவும் முக்கியமானதாகச் சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?

உண்மைதான் சிறுபத்திரிகைகளின் பங்களிப்பு அதிகம். நான்கு நண்பர்கள் சேர்ந்தால் உடனே ஒரு சிறுபத்திரிகை ஆரம்பிப்பது, சிலகாலம் வரும் பிறகு நின்று போவது எல்லாம் நடந்தது. கோபங் கொண்ட இளம் தலைமுறையினரால் ஆரம்பிக்கப்பட்ட சிறு பத்திரிகைகள் நாளடைவில் தனிநபர் ஆதிக்கத்துக்குட்பட்டன. அதனால் அந்த இயக்கம் தோற்றுப்போனது என்று வைத்துக் கொண்டாலும் சதீஸ் கலேஸ்கர், துளசிபரப், ராஜா தலே என்று பல எழுத்தாளர்களை அடையாளம் காட்டியதில் அதன் பங்கு மகத்தானது.

மூன்றுவகையான தலித் எழுத்தாளர்களை இன்று காணலாம். ஒன்று: கல்லூரி பேராசிரியர்கள். இரண்டாவது வொயிட் காலர் ஆபீஸ் மக்கள். மூன்றாவது தொழிலாளர்கள். சில சமயங்களில் எனக்கு அச்சம் ஏற்படுவதுண்டு. தலித் இலக்கியம் ரொம்பவும் (academic level) அகடெமிக் இலக்கியமாகிக் கொண்டிருக்கிறதோ என்று. தலித் இலக்கியம் தலித் இயக்கம் சார்ந்தே இருக்க வேண்டும் என்பதுதான் என் போன்றவர்களின் விருப்பம்.

தொடக்கத்திலிருந்த படைப்பு உத்வேகம் இப்போதும் உங்களிடம் இருக்கிறதா? தங்களின் சமீபத்திய படைப்பு முயற்சிகள் எவை?

நான் 1967களிலேயே இயக்கம் சார்ந்து செயல்படவும் எழுதவும் ஆரம்பித்துவிட்டேன். 67களில் ரிபப்ளிகன் ஐக்கிய பார்ட்டியுடன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன். என்ன அன்றுபோல உத்வேகத்துடன் ஓடிய ஓட்டம் இன்று களப்பணியில் சற்று குறைந்திருக்கலாமே தவிர எழுத்துப்பணி எப்போதும் போல தொடர்கிறது. அண்மையில் என் கட்டுரைகளின் தொகுப்பு நூல் (neh abivithi - blue underline) வெளிவந்துள்ளது.

நாடு தழுவிய அளவில் தலித் எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கான செயலூக்கம் கொண்ட ஒரு கூட்டமைப்பின் தேவையை உணர்கிறீர்களா? அதற்கான முன் முயற்சிகளைத் தங்களைப் போன்றவர்கள் ஈடுபடுவது தானே வலு சேர்ப்பதாக இருக்கும்?

பலமுறை இதைப்பற்றி நாம் பேசி இருக்கிறோம். ஒருமுறை தமிழகத்தில் பிரிந்துகிடக்கும் தலித்திய இயக்கங்களை ஒன்றிணைக்க நான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கூட நாம் பேசியிருக்கிறோம். நான் பேசுவது மட்டுமல்ல .. உங்களைப் போன்றவர்களும் முன்வர வேண்டும்.

மராத்தியில் தன்வரலாற்று இலக்கியவகை ரொம்பவும் பிரசித்தமானது. உங்களுடைய சுயசரிதையை எப்போது எதிர்பார்க்கலாம்?
 
(சிரித்துக்கொண்டே..) என் சுயசரிதம் என்பது நானும் என் குடும்பமும் என் எழுத்துகளும் மட்டுமல்ல. என் வாழ்க்கை ஓர் இயக்கம் சார்ந்தது. எங்கள் இயக்கம் குறித்தும், என் தோழர்கள் குறித்தும் நிறைய உண்மைகளை எழுத வேண்டியிருக்கும். அப்படி எழுதாமல் இருந்தால் அது சுயசரிதையாக இருக்கவும் முடியாது. என்ன.. அதனால்.. புனைவுகளின் ஊடாகப் பயணித்து ஒரு நாவல் எழுதலாம் என்ற எண்ணமிருக்கிறது.

***
(புதுவிசை, அக்டோபர் 2009)

Sunday, August 27, 2017

நேர்காணல் : அருந்ததி ராய் எழுத்து, போராட்டம் மற்றும் சீருடல் பயிற்சி...?

எழுத்தாளராகவும், சிந்தனையாளராகவும், அரசியல் செயல்பாட்டாளராகவும் அறியப்படும் அருந்ததிராய் அவர்களின் மனம்திறந்த பேட்டி எல் (ELLE)  என்ற ஃபேஷன் இதழில் வெளிவந்திருக்கிறது. காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ் மூலம் உலகப்புகழ் பெற்றிருந்த அருந்ததிராய், ஃப்ராஸ்ட் கவிதையின் 'குறைவான பேர் பயணித்த சாலையை' விரும்பி தேர்ந்தெடுத்தார். மாவோயிஸ்ட்களுடனும், பழங் குடி மக்களுடன் காடுகளில் நடந்தார். ஒரு வழக்கமான இலக்கியவாதியின் தந்திரத்தைக் கொள்ளாமல் அரசை விமர்சித்தார். அவருடைய தீவிரமான நிலைப்பாடுகளும், காத்திரமான விமர்சனங்களும் அரசை நிலைகுலையச் செய்தன. வழக்குகள், கைது, மிரட்டல், தாக்குதல், அவதூறு என்று சோதனைக்குள்ளானார். அதேநேரத்தில் இவை தவிர்க்கவியலாமல் இந்திய இடதுசாரி தரப்பின் முக்கிய ஆளுமையாக அவரை உயர்த்தியது. அருந்ததி ராயின் தனித்துவமான தனிவாழ்வு பேரவா ஏற்படுத்தும் ஒன்று. இப்பேட்டியின் பெரும்பகுதி அதைச் சுற்றியே சுழல்கிறது. தனதுதாய், சகோதரர், கணவர், குழந்தைகள், தோழிகள், பிடித்த எழுத்தாளர்கள், புதிய நாவல், விரும்பும் உடைகள், உடற்பயிற்சியக அனுபவங்கள் குறித்த தகவல்களை உற்சாகமாகப் பகிர்ந்திருக்கிறார். என்ன பேச நினைத்தாலும் அது அரசியலாகவே திமிறுகிறது. இந்த வித்தியாசமான பேட்டியை எல் இதழ் சார்பாக ஐஸ்வர்யா சுப்ரமணியம்  எடுத்திருக்கிறார்.  தமிழில்: ராஜ்தேவ்

***
எல் இதழின் அட்டைப்படத்தில் நீங்கள் எப்படி?

அது நரையின் செருக்கு! எல்லின் அட்டையில் பெண்கள் வருவதற்கான நேரம் வாய்த்திருக்கிறது. கண்ணாடி செருப்புகளை அணிந்துகொண்டு மிடுக்காக சுற்றிவரும் சின்ட்ரல்லாவின் தீய மூத்த சகோதரிகள் வெளிச்சத்துக்கு வரும்நேரம்வந்துவிட்டது. ஏன் குறிப்பாக எல்? ஏனெனில் கருப்புநிற பெண்களை யெல்லின் அட்டைப் படங்களில் பார்த்துள்ளேன். நான் அதை விரும்பினேன். நான் ஒரு கருப்புநிற பெண். நம்மில் பலரும் அந்த நிறம் தான். தொண்ணூறு சதவீதம் கருப்பு நிறமே. வெள்ளை நிறம் மீதும், நேர்முடி மீதும் இந்தியர்களுக்கு இருக்கும் பற்று என்னை வாட்டும் ஒன்று. நமக்கு ஒரு புதிய அழகியல் தேவைப்படுகிறது. எல் அதற்கு முயற்சிப்பதை பார்க்கிறேன். அது விந்தையானது. நான் அந்த நோக்கத்தை உயர்த்திப் பிடிக்க இங்கு வந்துள்ளேன்.

இது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. ஆனால், மற்றவர்கள் உங்களை எப்படி பார்ப்பார்கள், உங்கள் நம்பகத் தன்மை போன்றவற்றை மோசமாக மதிப்பிடமாட்டார்களா?

ஓ! எனது நம்பகத்தன்மை முதலியவை. ஆமாம் ஆமாம். ஆனால் நான் விமர்சனங்களை எதிர்கொள்ள துணிந்து விட்டேன். அச்சுறுத்தக்கூடிய, நரைத்த தலைமுடி உடைய வயதான பெண்மணிக்குள், பரவசம் நிறைந்த கறுத்த தலைமயிர் கொண்ட 22 வயதின் வேட்கை ஒன்று வெளிவரத் துடிப்பதை நான் இந்த உலகுக்கு தெரியப்படுத்த விழைகிறேன்.

எனக்கு தெரிந்ததுதான் அது. ஸ்நோடெனுடன் உங்கள் சந்திப்பை முன்வைத்து ‘சொல்லக்கூடியவையும், சொல்லக் கூடாதவையும்’(Things That Can And Cannot Be Said)  என்ற தலைப்பில் இப்போது ஒரு புத்தகம் உங்களிடமிருந்து அடுத்தமாதம் (ஜூலையில்)  வெளிவர இருக்கிறதே.

அது ஒரு சிறிய புத்தகம். ஜான் கசாக்குடன் இணைந்து எழுதியது. ஸ்நோடெனை ரஷ்யா சென்று சந்திக்கும் ஆலோசனையை ஜான் கசாக்தான் வழங்கினார். பல வகைகளில் ஸ்நோடென் தனித்துவமானவர். முழுமை யான வாக்கியங்களுடன் மிகவும் தொடர்ச்சியாக பேசக் கூடிய சிலரை மட்டுமே பார்த்துள்ளேன். ஒரு புஷ் ஆதரவாளராக வலதுசாரி முகாமிலிருந்து, இராக் போருக்கு ஆதரவாக கையெழுத்தும் இட்டிருந்த அவர் இன்று வந்திருக்கும் இடம்- திகைக்க வைக்கும் ஒரு பயணம். நாங்கள் இரண்டு நாட்களை முழுமையாக அவருடன் கழித்தோம். ஜான் கசாக், டேனியல் எல்ஸ்பெர்க் மற்றும் நான். பென்டெகன் தொடர்பான தகவல்களை கசிய செய்து டேனியல் 60களின் ஸ்நோடென் என்று பெயர் பெற்றவர். அது ஒரு வசீகரிக்கும், நெகிழ்ச்சியான உரையாடல்.

ஏதாவது பதிவு செய்ய முடிந்ததா?

ஸ்நோடென் எங்களை பதிவு செய்ய அனுமதித்தார். பின்னர் அவற்றை எழுத்துப்பூர்வமாக வடித்து, தொகுத்து அனுப்பியபோது அதனை அவர் பதிப்பிக்க விரும்ப வில்லை. பரிகாசம் மற்றும் கேலிமிகுந்து இருந்தது கூட காரணமாக இருக்கலாம். அவருடைய நிலை மிகவும் கடினமானது. எனவே அவர் கவனமாக இருக்கவேண்டும். ஆனால் அதுவல்ல அந்த உரையாடலின் தன்மை. அது கொஞ்சமும் மதிப்பு பெறவில்லை. ஆனால், துர திருஷ்டவசமாக, ‘சொல்லக்கூடியவையும், சொல்லக் கூடாதவையும்’ நூல் ஸ்நோடெனின் நேர்ச்சொல்லாக எதையும் கொண்டிருக்கவில்லை. அது மிகவும் சங்கடமானது. இணையம், கண்காணிப்பு மற்றும் அதை நடை முறைப்படுத்தும் முறை போன்று அவர் நன்கறிந்த வற்றை சொல்லும் போது நம்மை வாய்பிளக்கச் செய்யும் அளவுக்கு அறிவுக்கூர்மையுடன் இருக்கிறார். கேலி மற்றும் நையாண்டிக்கு அப்பால் அந்த நூல் தேசியம், ஏகாதிபத்தியம், போர், முதலாளித்துவம், கார்ப்பரேட் உதவி மற்றும் கம்யூனிசத்தின் தோல்வி போன்ற தீவிர மான பிரச்சினைகள் பற்றிய எண்ண அலைகள் எனலாம். நூலின் இறுதிப்பாகம் மிகவும் அதிர்ச்சிகரமானது. அணு ஆயுதப்போட்டியில் அமெரிக்க அரசு ஈடுபடுவது பொய் தகவல்களின் அடிப்படையில் என்றார் எல்ஸ்பெர்க்.

நீங்கள் ஒழுங்குமுறையை கடைபிடிக்கும் ஓர் எழுத்தாளரா?

நான் கொஞ்சம் ஒழுங்குமுறையை கடைபிடிப்பேன். இப்போது மிகக்கடுமையாகக் கடைபிடிக்கிறேன். ஏனெனில் ஒரு புதிய புத்தகத்தை எழுதிவருகிறேன். நான் ஒவ்வொரு நாளும் வீட்டில் எனது மேசையில் எழுதி வருகிறேன். சிலநேரங்களில், நாள்போவதே தெரியாமல் இருந்திருக்கிறேன். திடீரென சுற்றிப் பார்க்கும்போது இருண்டிருக்கும். கணினித்திரையில் இருந்து மட்டுமே வெளிச்சம் வந்துகொண்டிருக்கும். கடந்தவாரம் வேக வைக்க நினைத்த முட்டையை இரும்புச்சட்டியில் கருகவிட்டு விட்டேன். சமையலறையில் புகை சூழ்ந்தது. இந்த வாரம் மறுபடியும் முட்டை கருகிவிடுமோ என்று பயந்துபோய் ஓடிச்சென்று தீயை அணைத்தபோது தான் தெரிந்தது இரும்புச்சட்டியில் முட்டை இல்லை என்று. கொஞ்சம் பைத்தியம் பிடித்தது போன்றுதான்.

புதிய நாவல்! நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம். எப்போது வெளிவருகிறது?

அடுத்த வருடம் வந்துவிடும் என்று நினைக்கிறேன். 

சின்ன விசயங்களின் கடவுள் வெளியாகி இருபது வருடங் கள் கழித்து புதிய நாவல் வெளிவருகிறது. எதிர்பார்ப்புக்குரியதாக என்ன இருக்கிறது?

என்ன வேண்டுமானாலும் கற்பனை செய்துகொள்ளுங்கள். இது சின்ன விசயங்களின் கடவுள் II.

ஏன் இப்போது எழுதத் தீர்மானித்தீர்கள்?

நான் முடிவு செய்யவில்லை, அது முடிவு செய்துகொண்டது. சிலவருடங்களாகவே அதனை சுற்றி நான் சிந்தித்து கொண்டிருக்கிறேன். புனைவு என்று வரும்போது நான் அவசரப்படுவதில்லை. கடந்த 20 வருடங்களாக நான் அதிகமான பயணத்தையும், எழுத்தையும் மேற்கொண்டி ருக்கிறேன். அவை ஒரு பாறையாக என்னுள் படிந்துள்ளதை உணர்கிறேன். உங்களுக்குத் தெரியுமா? அந்தப் புரிதல்கள் பல அடுக்குகளாக படிந்துள்ளன. அவற்றை புனைவாக அல்லாமல் வேறு எப்படியும் கூறிட இயலாது. நீங்கள் அங்கே அமரவேண்டும். பல அடுக்குகள் கொண்ட அந்த அனுபவம் அவிழ்ந்து உங்கள் மரபுப் பொருளின் ஒரு பகுதியாக மாறவேண்டும். பின்னர் அது உரைநடையாக வியர்த்து வெளியேற வேண்டும்.

உங்கள் புனைவு சுயவரலாற்றுத்தன்மை கொண்டதா?

சுயவரலாறு என்று எதை சொல்கிறீர்கள்? எது எதார்த்த வகைப்பட்டதாகும்? நீங்கள் கற்பனை செய்துகொள்ளும் ஒன்று சுயவரலாறு ஆகுமா? உங்கள் கற்பனையில் நீங்கள் அனுபவத்த ஒன்று? உங்கள் கற்பனையில் இன் னொருவரின் வலியையோ, மகிழ்ச்சியையோ உணர்வது சுய வரலாறா? எனக்கு தெரியவில்லை. அடையாளம் மற்றும் பிரதிநிதித்துவம் பற்றி பெரும் விவாதம் நடந்தி ருக்கும் நிலையில் இது மிகப்பெரிய கேள்வியாகவும், ஒரு புனைவெழுத்தாளருக்குப் பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது.

நீங்கள் எழுதும் முறை என்ன?

நான் அதைப்பற்றி பேசமுயன்றால், என்னுடைய பேச்சு சிறிது தொடர்பற்றதாகிவிடுகிறது. ஏனெனில், நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று என்னால் முழு மையாக உணரமுடியவில்லை. என்னுடைய கதையாடல் கட்டவிழ்கின்ற முறை எனக்கு மிக முக்கியமானது. இதோ என்னிடம் ஒரு வசீகரக் கதை இருக்கிறது. நான் அதை சொல்லப்போகிறேன் என்பதை போன்றல்ல. நான் அதுபோன்று எழுதுவதில்லை. அதிலும் குறிப்பாக நான் எழுதிக்கொண்டிருக்கும்போது, என்னால் அதை ஒரு கோட்பாட்டுக்குள் கொண்டுவர இயலாது. நான் அதை புரிந்துகொள்ளவும், விளக்கவும் சிரமப்படுவேன். நான் உட்கார்ந்து எழுதுவது மிக முக்கியம் என்று சொல்வேன். மேலும் அது புத்தகமாக எப்போதுமே  அங்கு இருக்கி றது என்று சொல்வேன். உங்களுக்கு தெரியுமா? உங்கள் மண்டைக்குள் இசை ஓடுவதைப் போன்று. ஏதாவது ஒருவகையில் அதுபற்றி சிந்திக்காத ஒரு பொழுதில்லை. அது அங்கு இல்லாத ஒரு நொடிப்பொழுதும் இல்லை. அது ஒருவகையான ஆட்கொள்ளல் என நினைக்கிறேன்.

இது ஒருவகை ஆட்கொள்ளல் போலுள்ளதே.

நீங்கள் ஒரு கதையை உடமையாக்குவதல்ல; உங்களை ஒரு கதை உடமையாக்குவதை உணரவேண்டும். பின்னர் அது எப்படி சொல்லப்பட வேண்டுமென்று அது சொல்ல நீங்கள் காத்திருக்கவேண்டும். அது என்னுடைய அனைத்து அறிதிறன்களுடனும் உறவாடும். நான் அதை தடுக்காமல் நன்றியுடன் இருப்பேன். அது மிக அழகா னது. அது நீங்கள் ஏதோ அற்புதமான ஒன்றை செய்கி றீர்கள் என்று பொருளில்லை. அப்படி இல்லாமலும் இருக்கலாம். ஆனால், ஏதோவொன்று வாழ்க்கையில் உங்களை முழுமையாக ஆட்கொள்ளும். அது ஒரு கொடை. இந்த உலகில் புனைவு எழுதுவதை போன்று என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கும், ஆட்கொள்ளும், வருத்தும் ஒன்று வேறெதுவும் இல்லை. ஆனால், பெரும்பாலான நேரம் நான் உணர்வது என்னவென்றால், என்னுடைய பணி என்பது கவனம் குவித்து புத்தகம் தன்னை எழுத விடுவதுதான்.

கட்டுரைகள் பற்றி?

எனது கட்டுரைகள் ஒரு அவசரத்தன்மையுடனும், சிறிது கோபத்துடனும் எழுதப்படுபவை. ஒவ்வொரு முறை அரசியல் கட்டுரை எழுதும்போதும், இன்னொரு கட்டுரை நான் எழுதமாட்டேன் என்று நான் சொல்லிக் கொள்வேன்.

பிறகு இன்னொன்றை எழுதிவிடுவீர்கள்.

ஆம். அது எப்படியென்றால், வேறொருவர் அதைப் பற்றி எழுதவேண்டும் என்று எப்போதும் விரும்புவேன். உங்களுக்கு தெரியுமா? ஆனாலும் நான் எழுதுவதற்கு காரணம், என்னால் அதைக் கட்டுப்படுத்த இயலாததை உணர்வதால்தான். நான் அதை எழுதத் துவங்கிவிட்டால், நாளொன்றிற்கு 20 மணிநேரம் வெறித்தனமான ஈடுபாட்டுடன் எழுதுவேன்.

நீங்கள் 17 வயதில் வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளீர்கள். அம்மாவுடன் ஏதும் பிரச்சினையா?

என்னால் வீட்டில் வாழமுடியவில்லை. அது பெரும் மனவேதனையாக அப்போதிருந்தது. ஆனால், வீட்டை விட்டு வெளியேறியதை பல வழிகளில் அதிர்ஷ்டமாக உணர்கிறேன். எனது தாய்தான் எனது ஆக்கச்சக்தியும், அழிப்புச்சக்தியுமாக இருந்தார். அவர் முன்னிலையில் நான் நொறுக்கப்பட்ட ஒரு ஈரல். அவர் ஓர் அழகான பள்ளியைத் துவக்கினார். அதன் மூலம் அங்கு படிக்கும் மாணவர்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டு வந் தார். பல தலைமுறைகளாக இது நடந்துகொண்டிருக்கி றது. அவர் அவராக இருப்பதை மெச்சுகிறேன். அதே நேரத்தில் அந்த உணர்ச்சியில் நான் கருகிப் போய்விடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறேன். நாங்கள் இருவரும் இரு அணுஆயுதச் சக்திகள். மிக அருகாமை யில் நாங்கள் நீண்டநாட்களுக்கு இருக்க முடியாது.

இப்போது அவருடன் உங்களுக்கு ஒட்டுறவு இருக்கிறதா?

நாங்கள் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அதனை மதித்து நடக்கிறோம். ஆனால், ஒரு போர் ஏற்பட்டுவிட்டால், நான் தெளிவாகவும், ஐயத்துக்கு இடமின்றியும் சொல்லிவிடுகிறேன்- எனது தாய் தான் வெற்றி பெறவேண்டும். நான் அவரை தோற்கடிக்க விரும்பவில்லை.

இது ஒரு விசேடமான உறவாக தெரிகிறதே.

உண்மைதான். ஆனால் எந்தக் கோணத்திலிருந்து பார்த் தாலும் அது அழகற்ற ஒன்று. இப்படி சொல்லலாம். நேர் திசை என்றாலும், எதிர்திசை என்றாலும் அல்லது, வாய்ப்புள்ள எந்த வழியாக இருந்தாலும் நான் இருப்ப தன் மையம் அம்மாதான். அவள் விசேடமான பெண். மணி. பெண்களுக்கு இருக்கும் எந்த தாய்மைக்குணமும் அவருக்கு இருந்ததில்லை. ஒருவேளை தாய்மைக்குணம் இல்லாதது தான் நான் வியக்க காரணமா என்றும் தெரிய வில்லை. அல்லது சிலநேரங்களில் ‘கொஞ்சம் விநோதம் குறைவாக இருக்கக்கூடாதா?' என்று நினைத்துக்கொள் வேன். ஆனால், இல்லை, இல்லை. அது உண்மை இல்லை.

வேறு என்ன வகையான பண்புநலன்கள்?

ஒருமுறை என்னை தொலைபேசியில் அழைத்து ‘நான் வெளியே சென்றிருந்தபோது, என்னை அருந்ததி ராயின் அம்மாவா என்று கேட்டார்கள். கன்னத்தில் அறைந்தது போன்று உணர்ந்தேன்!' என்றார். எனது பாதி மனநிலை சிரித்துக்கொண்டது. மீதி பாதி, ‘அப்படி கேட்டது என்ன ரொம்ப தப்பா?' என்று சொல்லிக்கொண்டது.

ஆ! அம்மாக்கள்.

அம்மா நீண்டகாலமாகவே உடல்நிலை சரியில்லாதவர். கடும் ஆஸ்துமாவால் பீடிக்கப்பட்டவர். ஆஸ்துமா  உள்ளவர்களின் இயக்கத்தை மூச்சுதான் கட்டுப்படுத்தும். அதுபோல தான் என்னையும் அவரது மூச்சு கட்டுப்படுத் தியது. அம்மா இறந்துவிடுவாரோ என்ற அச்சத்துடனே வளர்ந்தேன். ஒவ்வொரு மூச்சிலும் அவர் அனுபவிக்கும் வலியையும், மீட்சியையும் கண்ணுற்றேன். பலநாட்கள் அம்மாவுடன் மருத்துவமனையில் எனது நேரம் கழிந் தது. சிலமாதங்களுக்கு முன்னர் அவர் நோய்வாய்ப்பட் டார். காற்றூட்டக் கருவி பொருத்தும் அளவுக்கு உடல் நிலை மோசமடைந்தது. இப்போது மீண்டெழுந்து மறுபடியும் தனது வேலைகளில் மும்முரமாக உள்ளார். அவர் ஆட்சிப்பகுதி மறுபடியும் அவர் கைகளுக்கு வந்துள்ளது. அடிப்படையில் அவர் ஒரு ஹூடினி- தப்பிக்கும் கலைஞர். எனது அம்மாவைப் பற்றி சொல்ல ஒரு புத்தகம் தேவைப்படும். என்னால் மட்டுமே எழுத முடியும். அது வேறெவராலும் முடியாது.

நான் அதை படிக்க விரும்புகிறேன். உங்களை பாதித்த வேறு பெண்கள் யார்?

என் அம்மா என் அப்பாவை விட்டு பிரிந்தபோது அசாமி லிருந்து ஊட்டிக்கு வந்தார். அப்போது பணமில்லாம லும் நோய்வாய்ப்பட்டும் இருந்தார். எழுந்திருக்க இயலா மல் படுக்கையிலே சும்மா படுத்துக் கிடப்பார். வீட்டில் நான் மற்றும் சகோதரருடன் மூன்று அல்லது நான்கு பேர் உண்டு. எங்களை கடைவீதிக்கு ஒரு கூடையுடனும் ஒரு குறிப்புடனும் அனுப்புவார். அந்த குறிப்பை படித்து விட்டு கடைக்காரர்கள் பொருள்கள் மற்றும் காய்கறி களை கூடையில் போடுவார்கள். அதன் பிறகு குருசம் மாள் என்ற பெண் எங்களுடன் இணைந்தார். அவர் எங் களை கவனித்துக்கொண்டார். அவர் எங்கிருந்து வந்தார் என்று எனக்குத் தெரியாது. அதன்பிறகு நான்கு வருட காலம் அம்மாவுடனே அவர் இருந்தார். சமீபத்தில் அவரை பார்க்கச் சென்றிருந்தேன். இருவரும் கட்டிப் பிடித்து கூக்குரலிட்டோம். ஒரு தாயின் ‘வழக்கமான' அனைத்து பணிவிடைகளையும் எனக்குச் செய்தவர். நான் அவரை காதலித்தேன். சில நாட்களுக்கு முன்பு மரணித்தார். 96 வயது. அவரைப் பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

உங்கள் சகோதரருடன் நீங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தீர்களா?

ஆம். நாங்கள் மிகவும் நெருக்கமானவர்கள். அவர் கொச்சியில் வாழ்கிறார். கடலுணவு சார்ந்த தொழில் அவருடையது. இறால் தரகர் அவர். எனக்கு இறால் பிடிக்காது. ஒத்துக்காது.

தன்னிறைவு அமைதி கொண்ட ஒரு வாழ்க்கையை வாழ்பவர் நீங்கள், இல்லையா? அது தனிமையுணர்ச்சியை கொண்டு வராதா?

தனித்து வாழும் மிக அற்புதமான மற்றும் விசித்திரமான ஒரு சமூகத்தின் பகுதியானவள் நான். தனிமையுணர்ச்சி என்று அதனை புரிந்துகொள்ளக்கூடாது. எனக்கு ஆழ மான மற்றும் நீடித்த நட்புகள் உள்ளன. இந்த பூமியின் கடைசி முனைவரை ஒருவர் மற்றவருக்காக இணைந்து நடக்கத் தயாராக இருப்பவர்கள். எனவே ஆம், நான் தனியே வாழ்பவள். ஆனால் என் வாழ்வு முழுமையான அன்பால் நிறைந்து இருப்பது. எனது முன்னாள் கணவர் பிரதீப் மற்றும் தங்கள் தாயை மிகச்சிறுவயதிலே இழந்த எனது குழந்தைகள் மித்வா மற்றும் பையா ஆகியோரு டனான உறவு விந்தையானது. நான் தனியே வாழ்வதன் காரணம் மற்றவர்களின் மீது எனது தனிப்போக்குகளை சுமத்தக்கூடாது என்பதற்காகத்தான். மட்டுமின்றி, நான் எழுதுவதால் ஏற்படும் விளைவுகளை - அவ்வப்போது அவை மிக மோசமானவை- மற்றவர்கள் அனுபவிப்ப திலும் எனக்கு விருப்பமில்லை. நான் தனியே வாழ விரும்பவில்லை என்றால், நான் வாழமாட்டேன். எந்த குறையும் இல்லாததாக... 

குறை இல்லாததாக...? அந்த வாக்கியத்தை முடியுங்கள்.

ஓ, ஹா! ஹா! 

ஏன் போராடுகிறீர்கள்?

நாம் இப்படி சொல்வோம். அதிகாரத்தின் பக்கவாட்டில் எளிதாக சாய்பவர்கள் மற்றும் அதனுடன் இயல்பான பகைமை பாராட்டும் மக்கள். இந்த இருபிரிவினரின் மோதல்தான் உலகின் சமநிலையைக் குலைக்கிறது என்று கருதுகிறேன். இந்த கோட்டின் அடிப்படையிலே என்னை நான் நிறுத்துகிறேன். நமது சுதந்திரங்களை உருவாக்க நீண்ட மற்றும் குறிப்பிடத்தக்க பல போர் களை நிறைய பேர் இட்டுள்ளனர். நாம் அந்த வெளி களை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறோம்? ஏதாவ தொரு இயற்கை சக்தி நமக்கு இந்த சுதந்திரங்களை கொடையளித்ததாக கருதுவது சரியா? இல்லை. அவை ஒவ்வொன்றாக அடையப் பெற்றவை. சில உணர்ச்சியற்ற இளம்பெண்கள் ‘நான் ஒரு பெண்ணியவாதியல்ல' என்று சொல்வதை கேட்கும்போது மிகவும் எரிச்சலுறுகிறேன்.

என்னை சொல்ல வைக்காதீர்கள்.

நான் சொல்வது, என்ன போர்கள் நடைபெற்றுள்ளன என்பதை அவர்கள் அறிவார்களா? இன்று நாம் பெற்றிருக்கும் ஒவ்வொரு சுதந்திரமும் பெண்ணியவாதிகள் பல ரால் கிடைத்தவை. இன்றைய நமது நிலைக்காக பெண் கள் பலர் பெருவிலையை கொடுத்திருக்கிறார்கள். நமது பிறவித்திறத்தாலும், திறமையாலும் அவை வரவில்லை. பெண்களின் வாக்குரிமை சம்பந்தப்பட்ட எளிய விசயத்தையே எடுத்துக்கொள்வோம், யார் அதற்கு போராடினார்கள்? பெண் வாக்குரிமைப் போராளிகள் அல்லவா. பெரும் போராட்டமின்றி எந்த சுதந்திரமும் நமக்கு கிடைக்கவில்லை. நீங்கள் பெண்ணியவாதி இல்லையென்றால், திரைச்சீலைக்குள் மறுபடியும் புகுங்கள். அடுக்களைக்குள் சென்று கட்டளைகளை பெறுங்கள். அதை செய்ய நீங்கள் விரும்பவில்லை அல்லவா? அப்படியெனில், பெண்ணியவாதிகளுக்கு நன்றி சொல்லுங்கள்.

மேலும் சுதந்திரங்கள் நிலையற்றவை.

இந்தியாவில் எழும் பெண்விடுதலை வியக்கத்தக்கதாக இருக்கிறது. ஆனால், அதேநேரத்தில், இந்தப் புரட்சிக்கு இணையாக பழமைவாதத்தின் இருளும் உள்ளோட்டத் தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆஃப்கானிஸ்தான் பெண் களை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் வளர்ந்துகொண்டி ருந்தபோது மருத்துவர்களாகவும், அறுவைச் சிகிச்சை நிபுணர்களாகவும் இருந்தார்கள். விரும்பிய உடை அணிந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந் தார்கள். இப்போது? நமது ஆபத்துகள் பற்றிய எச்ச ரிக்கை உணர்வு அவசியம். கணநேரத்தில் பல நூற்றாண் டுகளுக்கு பின்னால் நாம் கொண்டு செல்லப்படலாம்.

விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

நான் இயல்பான உணர்வெழுச்சி கொண்ட ஒரு எழுத்தா ளர். என்னுடைய எழுத்துக்களுக்கு வரும் விமர்சனங் களை எனது பித்தப்பை வேடிக்கை உருவாக இருக்கிறது என்று சொல்வதைப் போன்று கருதுவேன்.

ஆங். உங்கள் அபுனைவு எழுத்து பற்றி?

என்னுடைய அபுனைவு எழுத்துக்கு வருகின்ற அறிவார்ந்த விமர்சனத்தை சலித்தறிவது எளிதான செயல் இல்லை. பெரும்பாலனவை இணையத்தில் பரவுகின்ற உடனடி முட்டாள்தனங்களும்  வெறிக்கூச்சல்களும் ஆனவை. ஆனால் எனக்கு வேண்டியது கிடைத்துவிடும். அடிக்கடி மக்கள் சொல்வார்கள், ‘அருந்ததிராய் ஒரு சர்ச்சைக்குரிய எழுத்தாளர்' என்று. வாதங்களுக்கு முகம் கொடுக்க மறுக்கும் தன்மை கொண்டது அது. ‘அருந்ததி ராய் சர்ச்சைக்குரியனவற்றை எழுதுகிறார்' என்பது சரி யான கூற்றாக இருக்கலாம். சர்ச்சை அங்கிருக்கிறது. அணைகள் நல்லதா? அனைத்தையும் தனியார்மயமாக்க வேண்டுமா? பஸ்தர் முழுவதையும் கார்ப்பரேட்களுக்கு கையளிக்க வேண்டுமா? நான் அவை குறித்து எழுதுகி றேன். அவற்றைச் சீர்தூக்கி மதிப்பிடுகிறேன். பின்னர் ஒரு நிலைப்பாடு எடுக்கிறேன். ஆனால், சர்ச்சைகளை நான் உருவாக்குவதில்லை என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும்.

உங்கள் நூல்களுக்கு வரும் விமர்சனங்களில் ஏதும்  பொருட்படுத்தத் தகுந்ததை பார்த்துள்ளீர்களா?

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவள் என்று எப்போதுமே நான் இருந்ததில்லை இருக்கவும் முடியாது. இவை விவாதிக்கப்படவேண்டும். அது சரி அல்லது தவறு என் பதாக அல்ல. எனக்கு வருகின்ற விமர்சனத்துக்கு என்னு டைய நூல்கள் பரிணமித்தமுறை சில வழிகளில் உகந்த எதிர்வினையாக இருக்கலாம். ஆனால், எனது பார்வை களை மாற்றிக்கொள்ள நான் உடன்பட்டதில்லை.

நீங்கள் சொல்வதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டுமா?

நாம் இன்றொரு காலனியாக அல்லாமல் சுதந்திர நாடாக கருதப்படுகிறோம். ஆனால், அம்பேத்கர் 1936ல் சொன் னதை நம்மால் இன்று சொல்லமுடியுமா? ‘இந்துமதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பேரச்சம் ஏற்படுத்தும் அகன்ற அறை' என்று அவர் அன்று சொன்னதை போன்று இன்று நாம் சொல்லமுடியுமா? அதைச் சொன்னால் என்ன நடக்கும் நமக்கு? நாம் இன்று மிக ஆபத்தான இடத்தில் இருப்பதாகக் கருதுகிறேன். நாம் இன்று மிக கவனத்துடனும், முன் ஆலோசனையுடனும் பேசவேண் டியது முக்கியம் என்று கருதுகிறேன். அதேநேரத்தில், நாம் பின் வாங்கக் கூடாது என்பது மிக முக்கியம். நமது எண்ணங்களை நாம் கண்டிப்பாக பேசவேண்டும். இப்போது நேரம் வாய்த்திருக்கிறது. இல்லையெனில், மிகவும் தாமதித்துவிடுவோம்.

ஒரு நாள் சிறைவாசம் எப்படி இருந்தது?

ஞாபகார்த்தமானது அது. என்னுடைய சாகச  உணர்வை யும் கடந்து என் பின்னால் கதவுகள் மூடப்பட்ட போது நடுக்கமூட்டியது. ஒரு குற்றவாளியாக உள்ளே சென் றேன். தோழர்களுடன் இணைந்து சிறைநிரப்பும் போராட்டமல்ல அது. சுதந்திரமும், சிறைவாசமும் இரண்டு தனித்த பிரபஞ்சங்கள். ஒருநாள் சிறை என்பது பெரிய விசயமல்ல. தாங்கள் செய்யாத குற்றத்துக்கு ஆயிரக்கணக்கான பேர் தற்போது சிறையில் வாடுகிறார்கள். அவர்கள் ஏழைகள், தலித்கள், முஸ்லிம்கள் மற்றும் மிக முக்கியமாக ஆதிவாசிகள். ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு எதிராக போரை ஏவியிருக்கும் நாடு நம்முடையது.

நீங்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவீர்களா? நான் ஒரு கை பார்ப்பதுண்டு.

நான் மாட்டிறைச்சி, பன்றிக்கறி ஆகியவற்றை உண்பேன். நமது நாட்டில் இப்போது தலையெடுக்கும் உணவு பாசிஸம் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்.

தினமும் உடற்பயிற்சிக்கூடம் செல்வீர்களா?

ஆம். தினமும் செல்வேன்.
ஒவ்வொரு நாளும்?

ஒவ்வொரு நாளும் தான்.

பாருங்கள். இது எனக்கு ஒரு அன்னிய கருத்தாக்கமாக படுகிறது.

நன்று. ஒரு பழக்க அடிமையின் மரபுக்கூறுகள் உள்ளவள் நான். என்னுடைய தந்தை ஒரு குடிகாரர், தெரியுமா. ஒரு விஸ்கி குப்பியை அவருடையை கல்லறையின் மேல் வைத்துவிட்டு கவனியுங்கள். நல்லூழாக அவரு டைய பழக்க அடிமைத்தனத்தின் மரபணு என்னுள் தங்கிக்கொண்டது.

உடற்பயிற்சி சம்பந்தமாக நீங்கள் எப்பவுமே இப்படித்தானா?

எனது குழந்தைப்பருவம் தொந்தரவான ஒன்றாக இருந்ததே தவிர துயரார்ந்ததாக இல்லை. நான் ஓடிக் கொண்டே இருந்தேன். ஓடிக்கொண்ட சமாளித்தேன். வீட்டைச் சுற்றி, பள்ளி மைதானத்தைச் சுற்றி... நான் சமீபத்தில் என்னுடைய பழைய உடற்பயிற்சி ஆசிரியர் திரு.செல்வபாக்கியத்தை சந்தித்தேன். அவர் பையன் களுக்கு மட்டும்தான் பயிற்சி கொடுப்பார். ஆனால், நான் அவருடனே எப்போதும் திரிந்ததால் எனக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுத்தார். நானொன்றும் நட்சத்திர விளை யாட்டு வீரர் இல்லை. உடற்பயிற்சியகத்துக்கு நான் என்னை வருத்தச் செல்வதில்லை. தம்மை வருத்தும் எண்ணம் கொண்டு ஒப்படைக்கும் நபர்களை நான் ஐயுறுகிறேன். நான் ஒரு முழுமையான சந்தோசத்துக்காக செல்கிறேன்.

நீங்கள் சொல்வது ஒன்றும் விளங்கவில்லை.

இங்கே பாருங்கள், நாங்கள் பழைய வட்டம் ஒன்றின் நண்பர்கள் மற்றும் பயிற்சியாளர்கள். அங்கு அவ்வள விற்கு அன்பு உண்டு. என்னுடைய நாள் ஒன்றின் உச்ச நிலை அது. என்னை நிதானமிழக்காமல் தொடரச்செய் வது. காதல், நட்பு, சிரிப்பு மற்றும் வியர்வை நிறைந்த இடம்.

நீங்கள் ஒரு சீருடல் பயிற்சியாளராக இருந்தீர்கள், இல்லையா?

ஆம். மனமுடைந்திருந்த நாட்களில் நான் சீருடல் பயிற்சி யாளராக இருந்தேன். நானும் சுஷ்மா என்ற அழகான பெண்மணியும் பயிற்சியாளர்களாக இருந்தோம். அவர் பளுதூக்கும் வீராங்கனை. அற்புதமான, கட்டுறுதி கொண்டவர். உடற்பயிற்சி உடையில் அங்குள்ள பெண்களைப் பார்க்க இந்த லாலாஜிக்கள் வருவதுண்டு. நாங்கள் அவர்களை சீண்டுவோம். ஒருமுறை ஒருவர் மிகவும் தளர்ச்சியுற்று வீழ்ந்தார். வகுப்பின் கடைசியில் படுத்துக்கிடந்தார். நான் நடுக்கமுற்றேன். அவர் இறந்து விட்டதாகவே கருதினேன். இது அடுத்த நாளின் பத்திரிகையில் எப்படியான செய்திப்பதிவாக இருக்கும் என்பது எனது மனக்கண்ணில் ஓடியது.

ட்விட்டரில் இருக்க வேண்டியவர் நீங்கள். ஏனில்லை?

ஏனெனில் நான் என்னை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் உள்ள அனைத்தையும் ஒரு நாவலாக திறக்க முயற்சிக்கிறேன். நான் ஒரு ரகசியமாக இருக்க விரும்புகி றேன். ட்விட்டரில் என்னால் என்னை சிதறடித்துக் கொள்ள முடியாது.

சரி நாம் ஃபேஜன் குறித்து பேசுவோம். நீங்கள் பெரோ மற்றும் ஈகா உடைகளை அதிகம் அணிவீர்கள் அல்லவா?

நான் அவற்றை வெறும் முத்திரையாக கருதுவதில்லை. சின்ன விசயங்களின் கடவுளை என்னிலிருந்து வேறாக கருதாதது போன்று எனக்கு அவை. நான் அவற்றை அனீத் (அரோரா) மற்றும் ரீனா (சிங்)- ஆகவே கருதுகிறேன். அவர்கள் எனது நண்பர்கள். அனீத்தின் உழைப்பை பல்லாண்டுகளாக அறிவேன். பெரோ என்றழைப்பதற்கு முன்பிருந்தே அவரை தெரியும். என்னால் அந்த உடை களை வாங்கும் வசதி வந்த உடனே அவற்றை வாங்கி விட்டேன். அவற்றில் சில 15  வருடங்கள் பழையவை. அவற்றை நான் தொடர்ந்து அணிந்துவருகிறேன். என்னு டைய சிறந்த உடைகளைத் தயாரித்தவர்கள் அனீத்தும், ரீனாவுமே. அவர்கள் இருவரும் நவீனப் பெண்களாக நம்மை மாற்றும் புதிய அழகியலை வடிவமைக்க முயற்சிப்பதாக எண்ணுகிறேன்.
அது அழகாக சொல்வதாக இருக்கிறது.

அது மிக முக்கியமானது. நவீனத்துவத்தை தனித்த பாரம் பரியமிக்க துணியிலும், பாணியிலும் எப்படி கொண்டு வருவீர்கள்? சிறிய கருப்பு உடைகளை அணிந்து கொண்டு வெளியே செல்பவர்கள் அல்ல நாம் (எனக்கு அப்படி செல்வதில் எந்தப் பிரச்சினையுமில்லை என்றா லும்). புடவை அணிவதை நான் விரும்புகிறேன் என்றா லும் புடவையையும், சுடிதாரையும் எப்போதும் அணிவதும் விரும்பக்கூடியது அல்ல. எனவே எப்படி நாம் உடை உடுத்துவது? நாம் என்ன அணியவேண்டும்? உடைகள், நான் அணியும் முறையில் அவை கேளிக்கை யாக இருக்கின்றன. மிகுதியான மகிழ்ச்சியை வழங்கு கின்றன. மேலும் அரசியலும் அதிலுள்ளது.

அரசியல் எங்ஙனம்?

நான் கட்டிடக்கலை பயின்று கொண்டிருந்தபோது இந்த கேள்விதான் - மரபு மற்றும் நவீனத்துவத்துக்கு இடையே யான விளையாட்டு- எனது மனதில் எப்போதும் இருந்தது. 

ஒரு நேர்மையான நவீனத்துவ கட்டிடக்கலை இந்த உல கில் எப்படி இருக்கவேண்டும்? என்னுடைய இளமைக் காலங்களில் எனக்கு வேண்டியதெல்லாம் மரபின் பிடியி லிருந்தும் அது எனக்கு வைத்து இருந்ததிலிருந்தும் தப்பிப்பதாக இருந்தது. அதன்பிறகு பிரியமான நவீனத்து வத்தின் விகாரமான பேருருவுக்கு எதிராக வந்தீர்கள். பிறகு அதனிலிருந்தும் திரும்பி பறந்துவிட்டீர்கள். எனவே நான் என்ன அணிகிறேனோ, அது இந்த மாற்றத் தின் கதையை கூறும் என்று கருதுகிறேன். ஒயில் மிக முக்கியமானது. யாரும் இல்லையென்று சொல்ல முடி யாது. ஆம், இது சற்று இனிமையான மிகை. அதை பெறுவது நன்றிக்குரியது. நல்லூழாக நகைநட்டுகள் மீது எனக்கு ஆர்வமில்லை... எனது மொத்த ஆடை அலமாரி யும் ஒரு ஜோடி வைரத்தோடுகளுக்கு இணையாகாது. எனது ஆடைகள் அழகான அனுபவத்தை தருவன. சில இன்ப நுகர்வுகளுக்கு கண்டிப்பான தேவை என் வாழ்வில் இருக்கிறது.

கையில் மிக நீண்டகாலத்துக்கு பணம் ஏதுமில்லாமல், இறுதியில் பணம் வந்து சேர்ந்தது மிகப்பெரிய ஆசுவாசமாக இருந்ததா?

ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உண்மைதான். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள எனது மனதிற்கு நீண்டகாலம் ஆனது. நான் அது குறித்து தீவிர குற்றஉணர்ச்சி அடைந்தேன் . மேலும் மனம் சிக்கலானது.

ஆனால் ஏன்? நீங்கள் சம்பாதித்ததுதானே.

ஆம். ஆனால் அதற்கொரு எல்லை உண்டு. எனக்கு அந்த சிறிய, சந்தோச, வெற்றிகர மற்றும் உவகை உணர்ச்சிகள் இருந்ததில்லை. உங்களுக்குத் தெரியுமா, நான் இன்று உலக அழகி. நான் என்னுடைய தாய் மற்றும் முகவர் மற்றும் இயேசுநாதருக்கு நன்றி சொல்லவிரும்புகிறேன். நீண்டகாலத்துக்கு அது மனப்புணர்ச்சியாக இருந்தது. நான் சிறிது சம்பாதிப்பது தேவையாக இருந்தது. ஆனால், எனக்கு கிடைத்தது... மிக அதிகம். அது நான் கொஞ்சம் கூட கற்பனை செய்துகொள்ளாதது, தெரியுமா? அந்தளவுக்கு புகழ். அந்தளவுக்கு பணம். அதாவது எனது தரத்தின் மூலம் பெற்றது. ஒரு ரூபாய் வாடகைக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு வேலைக்குப் போனவருக்கு கிடைத்தவை அவை.

நீங்கள் சிறந்த நாவல் ஒன்றை எழுதினீர்கள்.

புக்கர் விருது கிடைத்தபோது நான் கிளர்ச்சியுற்றேன். ஆம், அதுதான் உண்மை. ஆனால், இந்த விருது எனக்கு கிடைத்த நாளின் இரவில் நான் விநோதமான கனவு ஒன்றை கண்டேன். மெலிந்த, மரகதக் கை ஒன்று நான் நீந்திக்கொண்டிருந்த நீரில் என்னை நோக்கி வந்தது. நான் ஒரு மீனாக இன்னொரு மீனுடன் நீந்திக்கொண்டிருந் தேன். பின்னர் அந்தகை என்னை நீரிலிருந்து தூக்கி வெளி யேற்றியது. பின்னர் ஒரு குரல், ‘நான் உனக்கு எதையும் தருவதற்கு தயாராக இருக்கிறேன். என்ன வேண்டும் உனக்கு?' என்று கேட்டது. நான் சொன்னேன், ‘என்னை மறுபடியும் பழைய நிலைக்கு திரும்ப வை' என்று. எனது வாழ்க்கை மாறிவிடும்... வெடித்துவிடும் என்று திகிலடைந்தேன். அது நடந்தது. என்னிடமுள்ள தீவிர மான அரசியல் நபர் வெளியே வரவேண்டியிருந்தது. அவள் ஒளிந்துகொள்ள வேறிடமில்லை. எனது சொந்த வாழ்க்கையில் பெருவிலை அதற்காகக் கொடுக்க வேண் டியிருக்கும். அது நடந்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அதை எப்படி கையாள்வது மற்றும் என்ன செய்துகொள்வது என்பதை கற்றுக்கொண்டேன். எனவே இப்போது எனக்கு அது அதிர்ச்சியில்லை. ஆனால், நான் ஒத்துக்கொள்கிறேன்- முன்பிருந்தேன் என்று.

மேலும் அந்த புகழ்? விமான நிலையங்களில் நீங்கள் சூழ்ந்துகொள்ளப்பட்ட அனுபவம் உண்டா?

ஆம், அது எப்பவுமே மரியாதைக்குரிய தன்மையில் நடைபெறுவதுண்டு. ஆனால், அது சோர்வடையச் செய்கிறது. நான் அதுகுறித்து எந்த புகாரையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், செல்ஃபீ மோகம் பெருகியி ருக்கும் இந்த நாட்களில் உங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள எல்லோருக்கும் ஒரு உரிமை இருக்கிறது. இது வொரு தொற்றுநோய். நான் மிகவும் பயந்த நேரங்களும் உண்டு. இந்த ஜெ.என்.யூ விசயம் நடந்து கொண்டிருந்த போது, சத்தமிடும் ஊடக நெறியாளர்கள் தொலைக்காட்சிகளில் என்னை நோக்கி கத்திக் கொண்டிருந்தார்கள். அது ஆபத்து ஏற்படுத்தக்கூடியது.

நீங்கள் தேசவிரோதியா?

நான் தேசவிரோதிகள் பட்டியலின் அ-பிரிவில் இருப்பவள்.

உங்களுக்கு மதநம்பிக்கை உண்டா?

இல்லை. சாதாரணப் பொருளில் நான் மதநம்பிக்கை உள்ளவள் அல்ல. ஆனால், நான் அனைத்தையும் வர்க்கக் கண்ணோட்டத்தில் விளக்கும் ஒரு தீவிர மார்க்சிஸ்டும் அல்ல. அதேநேரத்தில், சமூகத்தை ஆய்வு செய்யும் மிக முக்கியமான வழிமுறை அது என்பதை நான் நம்புகி றேன். ஆனால், அதுவே அனைத்துக்கும் என்பதை ஏற்க முடியவில்லை. ப்ரவுஸ்டை போன்று நான் அனைத்தின் சாத்தியத்திலும் நம்பிக்கை கொண்டவள். அனைத்துக் கும், உயிரற்ற பொருட்களிலும் ஆன்மா இருப்பதாக நம்புகிறேன். புனைவு எழுதுவது நான் பிரார்த்தனைக்கு மிக அருகாமையில் வருமிடம். என்னுடைய கவனத்தை ஒன்றின்மீது மிக தாராளமாக செலுத்தவும், ஒன்றிருக்கி றது என்ற நன்றியுணர்ச்சியுடன் இருப்பதும், என்னிடம் ஒன்றிருக்கிறது, நான் அதன் மீது முழு கவனத்தையும் கொடுத்து அதை ஆராதிப்பேன் என்பதும் ஒரு உயர்ந்த சக்தி ஒன்றின்மீது கொள்ளும் பிரார்த்தனை போன்றது.

மரணம் உங்களை அச்சுறுத்துவது உண்டா?

மரணம் அல்ல. ஆனால் நோய்களும், பலகீனங்களும் அச்சுறுத்துவதுண்டு. மருத்துவமனைகள், சுகவீனம் மற்றும் மற்றவர்களின் நோய்களுடனும் பெரும்பகுதி நேரத்தை செலவிட்டிருக்கிறேன். ஒரு அசைந்தாடும் நாற் காலி இங்கிருக்கிறது. வீட்டின் உணர்ச்சிப்பூர்வ பொருள் இது. என்னுடைய மிகவும் இனியதோழி ஒருவர் கொடுத்தது. அவள் புற்றுநோயால் மாண்டாள். புற்று நோய் அவள் மூளையை அடைந்தபோது எங்கள் இருவ ருக்கும் முடிவு நெருங்கியது தெரிந்துவிட்டது. முடிவு எப்படி ஏற்படும் மற்றும் அதை எப்படி சிறந்தமுறையில் எதிர்கொள்வது என்பதை தெரிந்துகொள்ள நான் அவளுடன் மருத்துவமனைக்குச் சென்றேன். இன்னும் சிலவாரங்களில் மூளை செயலிழந்துவிடும் என்று மருத் துவர் கூறினார். எனவே அடுத்தநாள் எனது வீட்டுக்கு கையில் இந்த அழகான நாற்காலியுடன் மதிய உணவுக்கு வந்தார். நான் அதை விரும்பியதை அவள் அறிவாள். அவள் சொன்னாள், 'இது உன்னுடையது. அது இங்கே இருக்கட்டும்' என்றார். மேலும் அவள், ‘இதில் நீ அமர்ந்து உன்னுடைய புதிய புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை என்னுடைய மூளை செயல்படும் இப்போது படித்துக்காட்டவேண்டும். நான் எங்கு செல்கிறேனோ அந்த இடத்துக்கு உன்னுடைய நூலின் ஒரு துணுக்குடன் செல்ல விரும்புகிறேன்' என்றார். அவர் இறந்தார். மரணம் குறித்த எனது பயம் அதன் பிறகு குறைந்துவிட்டி ருந்தது. அவளால் அது முடியும் என்றால், என்னாலும்.. என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் நோய்வாய்ப் படுதல் கொடுமையானது.

எதைப் பற்றி நாமெல்லோரும் பயப்படவேண்டும்?

உள்நாட்டுப் போர்.1925 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதன் ஒரே நோக்கம் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றவேண்டும் என்பதுதான். அரசாங்கத்தின் திட்டங்களை வழிநடத்தும் அமைப்பாக இன்று அது தன்னை நிலைநிறுத்தியிருக்கி றது. பாகிஸ்தான் அதனை இசுலாமியக் குடியரசாக அறி வித்த பிறகு அதற்கு நேர்ந்ததைப் பாருங்கள். எது ‘உண்மையான இசுலாம்' எது உண்மையானதில்லை என்று முடிவு செய்ய பலரும் முயன்றதில் அந்தநாடு சின்னாபின்னமாகி இருக்கிறது. இந்தியா பாகிஸ்தானை விடவும் மிகவும் சிக்கலான, பன்முக நாடு. இந்து ராஷ்டி ரம் இங்கு ஏற்படவே முடியாது. நமது தொண்டைக் குழிக்குள் அவர்கள் தள்ளினால், நாம் நொறுங்கி விழுவோம்.

என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள்?

ஸ்வெத்லனா அல்க்ஸிவிச் எழுதிய செர்னோபில் பிரார்த் தனை என்ற நூலைத்தான் படித்துக்கொண்டிருக்கிறேன். மிகவும் அழகாக எழுதப்பட்டுள்ள புத்தகம். ஒரு அழகான உரைநடையை அளியுங்கள்;  உங்கள் பின்னே எங்கும் வரத் தயாராக இருக்கிறேன்.

பிடித்த இலக்கியவாதிகள்?

ஷேக்ஸ்பியர், கிப்ளிங், ரில்க்... பாடப்படக்கூடிய வாக்கி யங்களின் குருக்கள் இவர்கள். அழகான உரைநடையின் வசீகரத்துக்கு மயங்கும் வேசி நான். இசைக்கப்படும் உரைநடையாக இருக்கவேண்டும். ஷேக்ஸ்பியரின் எந்த வரியாக இருப்பினும் என்னை புல்லரிக்கச் செய்யும். அல்லது நபொகவ். மேலும் ஜான் பெர்கர். என்ன ஒரு வனப்பு!  ஜேம்ஸ் பால்ட்வின் மற்றும் டோனி மோரிசன்.

அனைவரும் அவசியமாக படிக்கவேண்டியது?

இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் மற்றும் ஜோதிராவ் பூலே ஆகியோருடைய எழுத்துக்களை அனைவரும் படிக்கவேண்டும் என்று சொல்வேன். இந்தியச் சமூகத் தில் சாதி ஒரு புற்றுநோய் என்பேன். நாம் அதை கருத்தில் கொள்ளவில்லை என்றால், நமது சமூகம் தொடர்ந்து அழுகிய நிலையிலேதான் இருக்கும்.

கன்னையா குமார் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவர் சொன்ன பலவற்றுடன் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், அவர் சொன்ன விதம் என்னை கவர்ந்தது. அவர் வெளியே வந்தபிறகு வழங்கிய உரை என்னை மிகவும் ஈர்த்தது. அது உற்சாகமூட்டியது. பலரிடம் கவிந்திருந்த பயத்தின் புகைப்படலத்தைப் போக்கியது. அவருடைய உயிர்ப்பு பிடித்தது. எல்லோருமே என்னை பின் தொடர்ந்து நான் சொல்வதை திரும்ப சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. அதுபோலவே நான் நம்புவ னவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறுவதில்லை. இதைத்தான் எதிர்ப்பின் பன்முகத் தன்மை என்கிறேன்.

இந்த உலகை மாற்ற நாம் என்ன செய்யவேண்டும்?

உங்களை எங்கே பொருத்திக்கொள்வது என்று முடிவெடுங்கள். யுத்தங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா?

நம்பிக்கை எப்போதும் ஆதாரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டியதில்லை என்று கருதுகிறேன். சில நேரங்களில் மகிழ்ச்சிதரும் அடுத்தவரியை எதிர்நோக்கி இருப்பேன். பெருங்காட்சிகள் இங்கே அரங்கேறுகின்றன- காலநிலைமாற்றம், அணுஆயுதப் போர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். பின்னர் சிறுகாட்சிகள் வருகின்றன. பெரிய சித்திரத்தின் இருள் என்னை அடையத் துவங்கும் போது நான் கீழிறங்குவேன். ஒரு தவளையாக மாறி பாரவண்டிகள் செல்லும் நெடுஞ் சாலையில் குதித்து கடப்பேன். அதுவே சாத்தியமானது. வலப்பக்கம் பார், இடப்பக்கம் பார்... செல்! செல்! செல்! இன்னொரு நாள் போராட வாழு.

புதுவிசை 47